Sunday, November 14, 2004

தீம்தரிகிட கட்டுரையின் தொடர்ச்சி

(இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே காணலாம்.)

- கட்சிப்பத்திரிகை என்றால் திரித்தும் மறைத்தும்தான் எழுதும். சங்கராச்சாரியார் அப்படிப்பட்டவர் அல்ல

- என்பதுதான் சோவின் நம்பிக்கை என்றால்,

- எதிரொலிக்குப் போன் செய்து

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா?" என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன?

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பி விட்டீர்களா?" என்று நம்மிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன?

சரி, சங்கராச்சாரியார் அப்படி எல்லாம் சொல்லக் கூடியவர் அல்ல என்று உண்மையாகவே அவர் நம்பும் பட்சத்தில் சங்கராச்சாரியரிடம் போய் "நீங்கள் அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

- கட்சிப் பத்திரிகை என்றாலே அப்படித்தான் திரித்து எழுதும் என்று எழுதுகிற "சோ" யோக்கியரானால்,

"எதிரொலிக்கு டெலிபோன் செய்து 'நீங்கள் நம்பிவிட்டீர்களா?' என்று கேட்டிருக்க மாட்டார்.

அதுபோலவே, "ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அப்படி ஏற்பட நியாயமில்லை" என்று இப்போது விளக்கம் எழுதும் சோ நாணயம் வாய்ந்த மனிதர் என்றால்,

சங்கராச்சாரியாரைச் சந்தித்து "நீங்கள் அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்டிருக்க மாட்டார்.

ஆனால், சோ எப்படிப்பட்டவர்?

இந்த மாதிரி பிறருக்காக உளவு பார்ப்பது - காட்டி கொடுப்பது போன்றவற்றில் இவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.

சங்கராச்சாரியாருக்காக வீரமணியிடம் வேவு பார்த்தது முதல் முறையாக நடந்தது அல்ல.

அ.தி.மு.க. மந்திரிசபையிலிருந்து விலகிய சவுந்திர பாண்டியன் "சோ என்னுடைய நடவடிக்கைகளை சி.அய்.டி. மாதிரி கண்காணிக்கிறார்; உளவு பார்க்கிறார்"

- என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது - சோ துக்ளக் ஏட்டின் முதல் பக்கத்திலேயே "அப்படி சி.அய்.டி. வேலை பார்த்தது உண்மை" என்று ஒப்புக் கொண்டார்.

"ஒரு பெரிய மனிதருக்காக, ஒரு நல்லவருக்காக, நான் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டியது ஆயிற்று" என்று பகிரங்கமாக தமது ஒட்டுக் கேட்கும் வேலை - உளவு பார்க்கும் வேலை - பற்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று சோ நம்மிடம் கேட்டபோது, நாம் "நம்பவில்லை" என்றே தெரிவித்தோம். அதுமட்டுமல்ல.

"இப்போதே மறுப்பு எழுதி அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் "சங்கராச்சாரிமீது சோ கடும்தாக்கு" என்று போட்டுவிடுவீர்கள். அதனால்தான் யோசிக்கிறேன்" என்று சொன்னபோது கூட "வேண்டாம்; நீங்கள் துக்ளக்கிலேயே போடுங்கள்" என்று பதில் சொன்னோம்.

சங்கராச்சாரியார் சொன்னது என்ன?" என்பது குறித்து - சங்கராச்சாரியைச் சந்தித்த மறுநாளே வீரமணி அவர்களைச் சந்தித்து நாம் சொன்னோம். அப்போது சோ பற்றி சங்கராச்சாரி சொன்னது குறித்து சொல்லி இருக்கிறோம்.

அத்தனைக்கும் பிறகுதான் சோவை வீரமணி அவர்கள் பெரியார் கல்விச்சாலைக்கு அழைத்துப் பேசவைத்து, விடுதலையில் சோவின் முழுப் பேச்சையும் பிரசுரித்தார்.

பெரியார் சீடர்களின் பெருந்தன்மை, பரந்த மனோபாவம், காழ்ப்புணர்ச்சி அற்ற தன்மை ஆகியவைகளுக்கு வீரமணியின் இந்தச் செய்கை சாட்சியம் கூறி நிற்கிறது.

ஆனால்,

"சொல்லவில்லை" என்ற பொய்பேசும் சங்கராச்சாரிகளும், அதற்கு சப்பைக்கட்டு கட்டும் சோக்களும் எதற்கு சாட்சியம் அளிக்கிறார்கள்?

பிராமணர்கள் அது சங்கராச்சாரியாக இருந்தாலும், நகைச்சுவை நடிகர் சோவாக இருந்தாலும், இனம் என்று வரும்போது எப்படி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பதற்கே சாட்சியமாக இருக்கிறது.

ஞாநியின் பதில்:

("எதிரொலி"யில் வெளியான சங்கராச்சாரி சின்னக்குத்தூசி சந்திப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்பாக துக்ளக் பத்திரிகையின் 15-4-83 இதழில் ஒரு வாசகர் கடிதமும், ஆசிரியர் சோவின் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தன. இதில் கூறப்பட்டிருந்த பொய்களை மறுத்து 15-4-83 அன்றே ஞாநி சோவுக்கு ஒரு கடிதம் எழுதியும் அதை அவர் துக்ளக்கில் இதுவரை வெளியிடவில்லை. எனவே கடிதவிவரம் இங்கே வெளியிடப்படுகிறது.)

டியர் மிஸ்டர் சோ,

காஞ்சி சங்கராச்சாரியார் - சின்னக் குத்தூசி பற்றி "எதிரொலி"யில் வெளியான கட்டுரையை ஒட்டி எழுந்துள்ள ஒரு சர்ச்சை பற்றி 15-4-83 துக்ளக்கில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

இந்த விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டுள்ளவிதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி 3-4-83ல் சின்னக் குத்தூசியும், 4-4-83 அன்று நானும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த ஓரிரு நாட்கள் கழித்து புகைப்படக்கார நண்பர் சுபா சுந்தரம் போன் செய்ததையும் அதையடுத்து நானும் சின்னக் குத்தூசியும் உங்களுக்கு போன் செய்து பேசியதையும் உங்களுக்கு நினைவுபடுத்தவும் உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்புகிறேன்.

சுபா சுந்தரம் போனில் என்னிடம் "சோ பலமுறைகள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். 'சுவாமிகள் தியாகராஜனிடமும் (சின்னக் குத்தூசி) ஞாநியிடமும் அப்படித்தான் சொன்னாரா' என்று ரொம்ப அப்செட் ஆகிக் கேட்டார். நீங்கள் அவரோடு பேசுங்கள்" என்று சொன்னார். உடனே நான் போன் செய்து உங்களோடு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினேன். ஸ்வாமி சொன்ன மாதிரி நீங்கள் யாரும் தயார் செய்து அனுப்பக் கூடிய ஆளல்ல. உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் நானும் தியாகராஜனும் நிச்சயம் சுவாமிகள் சொன்னதை இப்போதும் நம்பவில்லை. வி நோ அபவுட் யுவர் இண்டிபெண்டண்ட் ஆட்டிட்யூட் என்று நான் சொன்னதற்கு நன்றி தெரிவித்தீர்கள். "இப்போது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன்" என்றீர்கள். "என்ன செய்வது? உண்மைதான் முக்கியம்" என்று நான் சொன்னேன். "உங்களையும் தியாகராஜனையும் தவிர யாராவது அதை எழுதியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்" என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு தியாகராஜனிடமும் இதுபற்றிப் பேசினீர்கள்.

இப்போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உங்களிடம் தெரிவித்த பொய்யை வெளியிட்டிருக்கிறீர்கள்.

அது அவருடைய ஸ்டேட்மெண்ட். வெளியிடுவது முறைதான். அதைத் தொடர்ந்து, உங்கள் கமெண்ட் வேறு. நானும் தியாகராஜனும் பொய் சொல்ல மாட்டோம் என்று நீங்கள் நினைப்பதாக போனில் எங்களிடம் சொல்லிவிட்டு, நாங்கள் பொய் சொல்லியிருப்பதாக அர்த்தம் வரும்படி பத்திரிகையில் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ரெஸ்பெக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் மேலோங்கியதில் உண்மை இரண்டாம் பட்சமாகிவிட்டது.

ஆசாரிய சுவாமிகளைச் சந்தித்தபோதே கட்டுரையை வெளியிடாமல் திடீரென்று கலாச்சார விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன் என்று அவர் சார்பில் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை அன்றைக்கு நாம் போனில் பேசியபோதே தியாகராஜன் உங்களிடம் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த ஓரிரு தினங்களில் தியாகராஜன் ஏஜென்ஸி விஷயமாக டூர் போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் சென்னையில் இல்லை. அதனால்தான் அப்போதே வெளியிட முடியாமல் போயிற்று.

தவிர, சுவாமிகள் நடத்திய விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் காளிமுத்து செல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த நாளே சுவாமிகள் திடீரென்று மறுநாள் முதலமைச்சர் (அழைப்பிதழில் குறிப்பிடப்படாதவரோ) வரப்போவதாக நிருபர்களிடம் அறிவித்தார். இப்படியாக சுவாமிகள் பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற நிலையில் அவர் எங்களோடு பேசியவற்றை எம்.ஜி.ஆர். விழாவுக்கு வரும் நாளன்று வெளியிடுவது பொருத்தமென்பதால் 3-4-83 அன்று சின்னக்குத்தூசியின் கட்டுரை வெளியிடப்பட்டது. நடத்தது அவ்வளவுதான்.

"பிரசுரத்துக்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார்" என்று எழுதியிருக்கிறீர்கள். இது சுத்தப் பொய். பிரசுரிப்பதற்காக அல்ல என்று எதையும் சுவாமிகள் சொல்லவில்லை. அவருடைய தூதர் கார்ப்பரேஷன் பேங்க் சீனிவாசன் இதை அறிவார்.

குண்டுராவ் அருண்ஷோரியை சாப்பாட்டுக்கு அழைத்தபோது சாப்பிடும் வேளையில் இருவரும் சம்பாஷித்ததை அருண்ஷோரி சண்டே இதழில் வெளியிட்டபோது யாரும் ப்ரைவேட் கான்வர்சேஷன் என்று எதிர்த்துப் பேசவில்லை. குண்டுராவ் மடாதிபதியாக இருந்தால் பேசி இருப்பார்களோ என்னவோ? அவ்வளவு ஏன்? ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் காண திருப்பூர் கிருஷ்ணனும் வலம்புரி ஜானும் பரணீதரனும், மணியனும்(!) போகிற வேளைகளில் யார் யாரோ பக்தர்கள் சுவாமிகளைச் சந்திக்க வருவதையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதையும் அவற்றுக்கு சுவாமிகள் கூறும் அருளாசிகளையும் அப்படியே கண்டு மெய்சிலிர்த்து, நெகிழ்ந்து நெஞ்சுருகி எழுதுகிறபோது பக்தர்களின் ப்ரைவேட் பிரச்சனைகள் அச்சில் எழுதுவதை யாரும் விமர்சிப்பது இல்லை. சுவாமிகளைப் பாராட்டி அவரது இமேஜை பம்ப் வைத்துக் காற்றடித்து உயர்த்தும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மெடர்னிடி டாக்டரும் அபத்தம் என்று உடனடியாகச் சொல்லக் கூடிய விதத்தில் பிறக்கும்போதே கைகளைக் கூப்பியவாறு பிறந்த குழந்தை ஜெயேந்திர சரஸ்வதிகள் என்று உங்கள் சகோதர ஏடு எழுதுவதும் இமேஜூக்கு பம்ப் அடிக்கிற சமாசாரம்தான். இதைப்பற்றி உங்கள் பேனா எழுதாது. ஆனால் சுவாமிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும்போதும் மட்டும் "பிரசுரத்துக்காக அல்லாமல்" என்று புதுக்கரடி விடுகிறது.

3-4-83 எதிரொலியில் சின்னக் குத்தூசியின் கட்டுரை வெளியான மறுநாள் சுவாமிகளின் தூதர் சீனிவாசன் போன் செய்தார். கட்டுரையாளர் தியாகராஜனுடன் பேசினார். "என்ன இப்படி திடீர்னு பப்ளிஷ் பண்ணீட்டிங்க" என்று கேட்டார். "பேசினதைத்தானே போட்டிருக்கிறது. பேசாததைப் போடவில்லை அல்லவா" என்றார் தியாகராஜன். "ஆமாமா பேசினது தான் வந்திருக்கு. தப்பா எதுவும் இல்லை. மைல்டாதான் இருக்குன்னு பெரியவா சொன்னா. ஞாநியோட கட்டுரை எப்படி இருக்கும்? அதுவும் மைல்டாதானே இருக்கும்?" என்று சீனிவாசன் கேட்டார். "எனக்குத் தெரியாது. நான் அதை இன்னும் படிக்கல" என்று தியாகராஜன் சொன்னார். என் கட்டுரை வந்தபிறகு சீனிவாசன் தொடர்பே கொள்ளவில்லை.

"வீணாக அவருடைய (சுவாமிகளுடைய) பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்" என்று நீங்கள் தீர்ப்பு வேறு வழங்கி இருக்கிறீர்கள்.

அவரை நாங்கள் எங்கே சர்ச்சைக்கு இழுத்தோம்?

கடந்த 6 மாத காலமாக எதிரொலி நிர்வாக இயக்குநர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனிடம் அவர் கணக்கு வைத்துள்ள கார்ப்பரேஷன் பேங்க் மேனேஜர் சீனிவாசன், எதிரொலியில் சங்கராச்சாரியார்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை தேவராஜன், சின்னக் குத்தூசியிடம் சொல்லிவிட்டு, "தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்" என்பார். முதல் நான்குமாத காலம் இப்படி நடந்தது. பிறகு சுவாமிகளின் தூதர் சீனிவாசன் தன் அப்ரோச்சை மாற்றினார்.

"சின்னக்குத்தூசியை ஒருதடவை பார்த்து பேசச் சொல்லிப் பெரியவர் கேட்டுண்டார். கொஞ்சம் அவரை கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லுங்க" என்று தேவராஜனிடம் சொல்ல ஆரம்பித்தார். இது 2 மாத காலம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சின்னக்குத்தூசி ஜெயேந்திரரை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை.

பிறகு தேவராஜன் ஒருநாள், "சார், போய்ப் பார்த்துவிட்டு வந்துடுங்க. பிரஷர் தாங்க முடியலே. நம்ம இருக்கிற இருக்கப் போகிறோம்; பார்க்கிறதுனாலே ஒண்ணும் தப்பில்லே" என்றார். இதன் பிறகே சின்னக் குத்தூசி ஒப்புக் கொண்டார்.

அதன்படி அவரை சீனிவாசன் அழைத்துச் சென்றபோதுதான் நான் தற்செயலாக உடன் சென்றேன்.

ஆக, சர்ச்சைக்கு சுவாமிகளை இழுத்தது யார்? அவர்தான் தன்னைப் பற்றிய விமர்சனங்களை விரும்பாமல் விமர்சகரின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.

அப்படிப்பட்ட ஒரு துறவிதான், உங்களைப் பற்றிச் சொன்னதை, இப்போது இல்லை என்று மறுக்கிறார். அவர் கூறியவிதம் கூட இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.

"மத்த மதங்களை ஏன் டி.கே. விமர்சனம் பண்றது இல்லே? இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ? அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே!" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச் சொன்ன வாக்கியங்கள் இவைதான். "நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன். அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே!"

இவ்வாறு தான் சொன்னதை, இல்லை என்று, இப்போது மறுக்கிற சுவாமிகள், 3-4-83 முதல் இன்றுவரை எதிரொலிக்கு மறுப்பு அனுப்பவில்லை. தூதனுப்பத் தெரிந்தவருக்கு நேரடியாக மறுப்பனுப்பத் தெரியாதது ஏன்? உங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்?

இப்படிப்பட்ட ஒரு மனிதர், உங்களிடம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வேறு கூறியிருக்கிறார். நீங்கள் அதை அப்படியே வெளியிட்டு, அதன் அடிப்படையில் உங்கள் மேலான தீர்ப்புகளையும் வழங்குகிறீர்கள்.

அவர் சொல்லாதவற்றைச் சேர்த்தோமாம். சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டோமாம். சம்பாஷணைகளின் சில பகுதிகளை முற்றிலும் விட்டுவிட்டோமாம்.

இந்த மூன்றில் முதல் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அவர் சொல்லாதவை என்னென்னவென்று விவரமாக தெரிவிக்கட்டும். அடுத்த இரண்டு குற்றங்களை செய்திருப்பது உண்மைதான். ஒப்புக் கொள்ளுகிறேன்.

அவர் சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டது உண்மைதான். அவை என்ன தெரியுமா? மணியனைப் பற்றி அவர் கூறின அசலான வாக்கியங்கள்தான். "அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவுக் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி. அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில்! பொது மேடையில் கூற மறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார்? இந்தப் பகுதியை நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளியிடவில்லைதான்.

இதேபோல, உண்மையான பிராமணன் யார் என்ற சர்ச்சையை சின்னக்குத்தூசி எழுப்பியபோது சுவாமிகள் அருகிலிருந்த சீனிவாசனைக் காட்டிப் பேசியதை நாங்கள் வெளியிடவில்லை. "இவன் மீசையும் கிராப்பும். இவனை யார் பிராமணன்னு ஒத்துப்பா? 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னால வர முடியுமோ? எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அப்படித்தான் இருக்கும்" என்றார் சுவாமிகள். உடனே சீனிவாசன் வெட்கத்தோடு நெளிந்தார். இந்தப் பகுதியை நாங்கள் வெளியிடவில்லை.

இதேபோல வெளியிடாமல் விட்ட இன்னொரு பகுதி சின்னக்குத்தூசி தியாகராஜனை சுவாமிகள் எதிரொலி விஸ்வநாதன் என்பவரோடு குழப்பிக் கொண்டது பற்றியது. தமிழ் எழுத்தாளர்களை, சுவாமிகள் தர்ம பிரகாஷில் சந்தித்தபோது எதிரொலியிலிருந்து ஒருவர் வந்து தம்மிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார். "எதிரொலின்னு விக்கிரமன் மைக்ல சொன்னதும் எல்லோரும் ஒரு செகண்ட் ஆச்சரியமா பார்த்தா" என்று சுவாமிகள், எதிரொலிக்காரர் ஒருவர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றிய பெருமிதத்தோடுச்சொன்னார். "நீங்கதான் அவர்னு நெனச்சேன். ஆனா அவர் வேற மாதிரியிருந்தாரே" என்று சின்னக் குத்தூசியிடம் கேட்டார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். "அப்படி எதிரொலி பத்திரிகைக்காரர் யாரும் அங்கே சுவாமிகள் காலில் விழவில்லையே" என்று சொன்னேன். சுவாமிகள் "எதிரொலி விஸ்வநாதன்" என்று பெயரைச் சொன்னார். அவருக்கும் எதிரொலி பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று விளக்கியபோது, சுவாமிகள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இதெல்லாம்தான் நாங்கள் வெளியிடாத பகுதிகள்.

வெளியிட்ட பகுதிகளில் உங்களைப்பற்றி சொன்னதை சுவாமிகள் இப்போது மறுத்திருக்கிறார்.

இன்னும் எதை எதையெல்லாம் மறுக்கிறார் என்றும் நீங்கள் கேட்டிருந்தீர்களானால் நன்றாயிருந்திருக்கும்.

1. எல்லோரையும் 'அவன் இவன்' என்று பேசியதை மறுக்கிறாரா?

2. கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றதாகச் சொன்னதை மறுக்கிறாரா?

3. மணியனைப் பற்றிச் சொன்னதை மறுக்கிறாரா?

4. தமிழ் அர்ச்சனை, அரிஜன அர்ச்சகர்கள் இரண்டையும் இவர் ஆதரித்தாலும் இவர் பக்தர்கள் அவற்றை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவதைத் தடுக்காதது ஏனென்று கேட்டபோது, வெறுமே சிரித்தாரே, அதை மறுக்கிறாரா?

5. எல்லா மனிதர்களைப் பற்றியும் கவலைப்படாமல் மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்று நான் சொன்னபோது, "எனக்கு எல்லா மனுஷனைப் பத்தியும் கவலையில்லை. இந்துக்களைப் பற்றித்தான் கவலை" என்று சொன்னாரே, அதை மறுக்கிறாரா?

6. திராவிடர் கழகம் இந்து மதத்தை விமர்சிப்பதால் முஸ்லீம்கள் பலம் பெருகுவதாகக் கவலை தெரிவித்தாரே. அதை மறுக்கிறாரா?

7. "முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை" என்று சொன்னதை மறுக்கிறாரா?

8. ஒரேயடியாக - எதிரொலிக்கு சீனிவாசனைத் தூதனுப்பியதையும், சின்னக்குத்தூசியைச் சந்திக்க விரும்பியதையும், அதன்படி அவரும் அவரோடு நானும் சுவாமிகளை வசந்த மண்டபத்தில் சந்தித்ததையும், அப்போது பேசியதையும், கடைசியில் எங்களுக்குப் புரசை இலையில் கல்கண்டு கொடுத்ததையும் - எல்லாவற்றையுமே கூட "அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை" என்று மறுக்கிறாரா?

கேட்டுச் சொல்லுங்கள். சுவாமிகளிடம் மட்டுமல்ல; இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும் போய்க் கேளுங்கள். மனசாட்சியின் நெருடலை காவி உடை சாகடித்து விடலாம். ஆனாலும், சாதாரண மனிதர்களின் மனசாட்சிகள் அவ்வளவு சுலபத்தில் சாவதில்லை என்று நம்புகிறேன்.

"நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காதது போல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

எதிரொலி தி.மு.க. சார்புள்ள பத்திரிகைதான். ஆனால், நான் தி.மு.க.வையோ தி.க.வையோ சார்ந்தவன் அல்ல. அவர்களுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடும், சிலவற்றில் மாறுபாடும் உண்டு. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. உங்கள் துர்வாசரைப் போல் நானும் (துக்ளக் உட்பட) எல்லா இடங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். அவ்வளவுதான்.

நீங்கள் கட்சி சார்புள்ளவர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். ஸ்ரீசங்கராச்சாரியார் இந்து முன்னணியையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் ஆதரிப்பவர். முஸ்லீம் லீக்கைப் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு கட்சிதான் என்பதே என் கருத்து. எனவே, கட்சி சார்புள்ளவர்களுக்கு நடந்ததை நடக்காததாகவும், நடக்காததை நடந்ததாகவும் காட்டும் அவசியம் ஏற்படலாம் என்ற உங்களுடைய வியாக்கியானம் உங்கள் இருவருக்கே பொருந்தும். அந்தத் தியரியே எனக்கு உடன்பாடல்ல. (சரியான தத்துவம் உள்ள கட்சிக்கு அந்த அவசியமே வராது.) அந்தத் தியரி எனக்குப் பொருந்தவும் இல்லை.

மனிதர்களை நேசிப்பதும், வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளோடு வாழ்வதும், மனிதர்கள் எல்லாரும் சமமாய் வாழும் சுருதி சுத்தமான ஒரு உலகம் அமையக் கண்ட கனவை நனவாக்க உழைப்பதும், இதற்கெல்லாம் எதிரான சக்திகளோடு தொடர்ந்து யுத்தம் செய்வதும்தான் சரியென்று நான் நம்புகிறேன்.

அன்பு, ஆன்மீகம், நெறி, நல்லொழுக்கம் இவற்றைத் தயவுசெய்து கடவுள், காவி, மதம், மடாதிபதிகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு. சத்தியத்தைத் தேடுபவர்களில் ஒருவராக, நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள் என்பதனால்தான் (தொடர்ந்து ஒருவேளை இருக்கவும் கூடும் என்ற நம்பிக்கையினாலும் தான்) உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.

அன்புள்ள, ஞாநி
15-4-83

இந்தக் கடிதத்தை 1.5.83 துக்ளக் இதழில் சோ வெளியிடாததன் வாயிலாக அவருடைய பத்திரிகை தர்மம் என்னவென்று தெரிந்துவிட்டது.

கடந்த மூன்று இதழ்களாக, துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்பவர் தமிழில் மலிந்திருக்கிற தரங்கெட்ட எழுத்துக்களை (சரியாகவே) விமர்சித்து எழுதி வருகிறார். இதுபற்றி 1-5-83 துக்ளக் இதழில் சோ வ்ளியிட்ட அறிவிப்பைப் பார்க்கலாம்.

"கவலையில்லை

குறிப்பு: திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் பிரசுரமாகும். வாசர்களில் மிகச்சிலர் எழுத்தாளர்கள் சிலரை ஆதரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவையும் பிரசுரமாகும். இது பற்றிய எல்லா வாதங்களுக்கும் பதில் தர துக்ளக் தயாராக இருக்கிறது. இன்றைய பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலர் சேர்ந்து ஓட விட்டிருக்கும் சாக்கடையைச் சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் அச்சாக்கடையில் இறங்குவது என்ற தீர்மானத்தை நன்றாக யோசித்தே செய்தோம். விடுவதாக இல்லை.

- ஆ.ர்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் சோ தெரிவித்திருக்கிறார். துர்வாசர் கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் எழுதினாலும் கவலையில்லை. சமாளிக்கலாம். ஏனென்றால் துர்வாசர் சத்தியத்தின் பக்கம் நிற்பதுதான் அந்த பலத்தைத் தருகிறது.

ஆனால், சங்கராச்சாரி விவகாரம் பற்றி, சோ எழுதியதற்கு எதிராக ஒரு கடிதத்தைக் கூட அவரால் வெளியிட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய, சங்கராச்சாரியுடைய பொய்கள் அப்போது அம்பலமாகி விடுகின்றன.

ஆபாசப் பத்திரிகைகள் ஆபாசமாகத் தொடர்ந்து இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், கருத்துலகில் ஆரோக்யமான மாற்றங்களுக்காக உழைப்பதாக ஒரு இமேஜை மூலதனமாக்கிக் கொண்டு இயங்கும் துக்ளக், அந்தக் கருத்துலக நேர்மை இல்லாத பத்திரிகையாக இருப்பது ஒரு சாதாரண விஷயமல்ல. மக்களின் மூளையை இன்னொரு வடிவத்தில் திசை திருப்பும் வேலையாக இதுவும் ஆகிவிடுகிறது.

எல்லாப் பத்திரிகைகளையும் விமர்சித்து சாக்கடையை சுத்தப்படுத்தும் வேலையில் துர்வாசரை இறக்கியுள்ள துக்ளக், தன்னையும் சுய விமர்சனம் செய்து கொள்ளும் நேர்மை அதற்கு இருக்குமா என்பது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் சந்தேகத்துக்குரியதாகி விட்டது. அப்படி செய்தால் அதுவும் ஒரு கண்துடைப்பு வேலையாக மட்டுமே மேற்கொள்ளப்படலாம்.

இங்கேதான் ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!

இந்த சூழ்நிலையில் உண்மையே உன் நிலை, விலை என்ன?

- ஞாநி.

(நன்றி: எதிரொலி 3,4,24-4-83, 3-5-83. இதை சிறுபிரசுரமாக 1983ல் உண்மை நுகர்வோர் வெளியீடு வெளியிட்டது. பிரதி தந்து உதவிய பெரியார் நூலகத்துக்கு நன்றி).

இத்துடன் ஏப்ரல் 2003 தீம்தரிகிடவில் வெளிவந்த இக்கட்டுரை நிறைவுறுகிறது. ஞாநிக்கும் தீம்தரிகிடவுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446. மின்னஞ்சல்: dheemtharikida@hotmail.com

4 comments:

Anonymous said...

அன்பு பி.கே. சிவகுமார்,

மிக நீண்ட கட்டுரையை தட்டச்சி உள்ளிட்டதற்கு மிக்க நன்றி. .

¦ஐயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கட்டுரை ஒரு முக்கியமான பதிவாக இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் இன்னும் பல தகவல்களை தெளிவுபடுத்திக் கொள்ள இயலுகிறது. எத்தனை சாமியார்களின் முகமூடிகள் கழண்டு அம்பலமானாலும் மக்கள் புதுப்புது சாமியார்களின் பின்னால் சென்று கொண்டிருப்பது வேதனை. இதில் நிரம்ப படித்த, உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும் இருப்பதை காண சிரிப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. மனிதனிடம் கடவுளை தேடுவது முடிவிற்கு வரை இந்த மாதிரியான சாமியார்களின் பிழைப்பு படு§ஐ¡ராகத்தான் இருக்கும்.

- சுரேஷ் கண்ணன்.

Meyyappan Meyyappan said...

பி.கே.எஸ்,
இப்பொழுதுதான் நீங்கள் இட்டிருக்கும் இந்த இரண்டு பதிவுகளையும் படித்தேன். இந்த நீண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்து இட்டமைக்கு நன்றி.

Anonymous said...

P.K.Sivakumar,
I enjoy reading your web logs. Thanks for posting this interview published earlier in Gnani's Dheem Thari Kida. It reveals so much about the deviant mind set of the so called
" sanniyasi".

R.Kumarasamy

Unknown said...

its very informative... by the way, where is veeramani- cho inteview....வீரமணி சோ பேட்டி
It would be more informative i think....