Friday, December 31, 2004

பக்தனாய்ப் பாட மாட்டேன்

ஒரு புத்தாண்டுப் பிரார்த்தனை:

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்.
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்-
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும். தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
"பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக. துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க!" என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
"அங்ஙனே யாகுக" என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே!

- மஹாகவி பாரதியார்.

பி.கு.: பக்தனாய்ப் பாட மாட்டேன் என்பது தேவாரப் பாடலொன்றின் ஆரம்ப வரி.

No comments: