Saturday, May 21, 2005

நண்பர் சுவாமிநாதனுக்கு அளித்த பதில்

(என்னுடைய "ஓர் இந்தியப் பயணம்" பதிவை மரத்தடி இணையக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது, நான் மதிக்கிற எல்.ஏ. சுவாமிநாதன் அவர்கள், ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று நீங்கள் சொல்லுங்களேன் என்று மரத்தடியில் என்னைக் கேட்டார். அவருக்கு மரத்தடியில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய பதிலின் திருத்திய வடிவம் இது. மரத்தடியில் எழுதாத சில விஷயங்களும் இதில் உள்ளன. என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் விளங்கிக் கொள்ள விரும்பாதவர்களும் முடியாதவர்களும் எங்கும் சிறுபான்மையே. எதை எழுதினாலும் அதில் தர்க்கபூர்வமாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் ஏதும் இருக்கும் என்று எண்ணுகிறவர்கள் எங்கும் மௌனப் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக என்னுடைய இந்தப் பதிலை என் வலைப்பதிவில் சேமிக்கிறேன்.)

அன்புள்ள சுவாமிநாதன்,

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின் ஒளிப்பதிவு என்னிடம் இருக்கிறது. அதில் பங்கு கொண்ட அனைவரின் பேச்சையும் (சிற்பி, வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் சந்திரன், பாலசந்தர், ஏ.எம்.கோபு (ஜனசக்தி ஆசிரியர், CPI-ல் முக்கிய தலைவர்), இளையராஜா உள்ளிட்ட பலர்) வலையேற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன். அம்முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் தாங்களே அவ்வுரைகளைக் கண்டும் கேட்டும் மகிழ முடியும். அம்முயற்சி வெற்றியடையும்போது அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

மற்றபடிக்கு - ஜெயகாந்தன் சபையில் நான் இப்போதும் முன்னரும் கேட்டவற்றையெல்லாம் தொகுத்து ஒருநாள் "ஜெயகாந்தன் - என் குறிப்புகள்" என்று எழுதுகிற ஆசை உள்ளது. இன்ஷா அல்லாஹ்! பார்ப்போம்!

சமஸ்கிருத சமிதி கூட்டம் நான் சென்னை செல்வதற்கு ஒருநாள் முன்னதாக நடைபெற்றது. எனவே, அதில் நான் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டவர்களிடமிருந்து அறிந்தது இதுதான். ஜெயகாந்தன் "சமஸ்கிருதமும் தமிழும்" என்று அந்தக் காலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் கட்டுரைத் தொகுப்பில் அக்கட்டுரை இருக்கிறது. அக்கூட்டத்தின்போது அக்கட்டுரையின் நகல் வந்திருந்தவர் அனைவருக்கும் கூட்ட நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட்டது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பொற்கோ, அவருக்குத் தெரியாமல் இப்படிப்பட்ட விநியோகங்கள் எப்படி நடக்கலாம் என்று கூட்டத்தில் வருத்தப்பட்டதாக செய்தி.

ஜெயகாந்தன் பேசும்போது பின்வருமாறு பதில் சொன்னார் என்று அறிகிறேன். "அந்தக் கட்டுரையை விநியோகித்தவர்கள் பொற்கோ சொல்வது மாதிரி அவருக்குச் சொல்லிவிட்டு விநியோகித்து இருக்கலாம். சொல்லாமல் செய்திருக்க வேண்டியதில்லை. ஆனால், அக்கட்டுரையில் இருக்கிற கருத்துகளுக்கு இன்னமும் நான் பொறுப்பு. அதைப் பற்றி நாம் விவாதிக்கலாம். வேண்டுமானால் இன்னொரு கூட்டம் போட்டுக் கூட அதைப் பற்றிப் பேசலாம்" என்ற பொருளில் ஜெயகாந்தன் பதில் சொன்னார் என்று அறிகிறேன்.

மற்றபடிக்கு - அவர் சொன்ன நாய் உதாரணம் எல்லாம் மற்றவர்களால் மிகைப்படுத்தப்பட்ட அரசியல் என்றே நான் நம்புகிறேன். அந்த உதாரணத்தை தாய்மொழியை நேசிப்பது போல பிற மொழிகளையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தச் சொன்னார். ஆனாலும், அது மற்றவர்களைக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே, அவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அதைப் பற்றியும் விரித்துச் சொன்னார். மேலும் அவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில், கழுகு என்ற பெயரில் ஜீனியர் விகடனில் வெளிவந்தது உண்மையா இல்லையா என்பது பற்றியும், நிஜமாகவே என்ன நடந்தது என்றும் சொன்னார்.

அவரின் நாய் உதாரணத்துக்குக் கண்டனம் தெரிவிப்பவர்கள் பலரும் இணையத்தில் அதைவிட மோசமாகப் பேசியும் எழுதியும் வருபவர்களே. அப்படியெல்லாம் எழுதுவது தவறு என்று யாரும் குரல் கொடுத்தபோதும் கூட, என்னை ஒருவர் திட்டும்போது, நான் அப்படி இல்லையென்றால், அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என்கிற பெருந்தன்மையான வியாக்கியானங்கள் தந்தவர்கள். என்னைப் பொருத்தவரை, தமிழ் தமிழ் என்று மொழியைப் பற்றிய அறிவுபூர்வமான பிரக்ஞை எதுவுமின்றி உணர்வுபூர்வமான தளத்தில் மொழியைக் கிளிஷே ஆக்கி வைத்துள்ளவர்களுக்கு இத்தகைய உவமைகள் வலிக்கத்தான் செய்யும். தமிழை வைத்துப் பிழைப்பும் அரசியலும் நடத்துபவர்களைப் பார்த்து பார்த்து நொந்துபோன என்னைப் போன்ற பிறமொழிகளையும் நேசிக்கிற தமிழர்களுக்கு நாய் உவமையில் எந்தத் தவறும் தென்படவில்லை. சொல்லப்போனால், பிறருக்கு வலிக்கிறதே என்று ஜெயகாந்தன் உவமையைச் சிங்கத்துக்கு மாற்றிய போதும், எவரும் அதன் பின்னால் இருக்கிற கருத்தை வழக்கம்போல கண்டு கொள்ளாமல் ஜல்லியடிக்கிற அறிவுஜீவியாகவே இருக்கிறார்களே என்று தோன்றுகிறது.

ஜெயகாந்தனாவது தமிழை நேசிப்பதுபோல பிற மொழிகளையும் நேசியுங்கள் என்கிறார். பெரியார் தமிழே தேவையில்லை என்றவர். தமிழுக்குப் பதில் அனைவரையும் ஆங்கிலம் படிக்கச் சொன்னவர். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று திரும்பத் திரும்பச் சொன்னவர். தமிழைப் படிப்பதால் ஒருவன் பின்புறமாகவே சிந்திக்கிறான் முன்புறமாகச் சிந்திப்பதில்லை என்றவர்.

1. தமிழ்நாட்டில் ஹிந்திக்கு வித்திட்டவர் பெரியார் என்கிறார்கள். (ஆதாரமாகத் திரு.வி.க. அதுபற்றி எழுதியதைச் சுட்டுகிறார்கள்)

2. தமிழ்ப் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது, தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியும் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்துவிட்டார்கள்.

3. நம் நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை.

4. மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காயப் புலவனும் இல்லை.

5. தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல வேறு எந்த மொழிக் கவிஞனும் அந்த மொழியைப் புகழ்ந்தது இல்லை.

6. தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழியென்று சொல்வதற்கில்லை.

7. தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே அல்லாமல், அறிவுவாதியாக ஆக முடிவதில்லை. அதுமாத்திரம் இல்லாமல், எவ்வளவுக்கெவ்வளவு தமிழ்ப் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப் பக்கம் சென்று, முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்க முடிகின்றதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை.

8. தமிழ்ப் படிக்காதவனுக்குத்தான் முன்பக்க பார்வை ஏற்படுகிறது. தமிழ்ப் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும் மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான்.

மேற்கண்ட திருவாக்கியங்களையெல்லாம் அருளியவர் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தனை இன்று விமர்சிக்கிறவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள். இதைப் பற்றிய முழுகட்டுரை ஏற்கனவே என் வலைப்பதிவில் வந்துள்ளது. சுட்டி இங்கே -->http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_07.html

ஜெயகாந்தனாவது தமிழைப் போல பிற மொழிகளை நேசிக்கச் சொன்னார். அதற்கு வெகுண்டெழுந்து அவரை இவ்வளவு திட்டுகிற அறிவுக் கொழுந்துகள், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிப்பதால் பின்பார்வைதான் ஏற்படுகிறது என்று சொன்ன பெரியாரைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அதைப் பற்றிக் கேள்வி கேட்டீர்கள் என்றால் அப்போது மட்டும் முன்ஜாக்கிரதையாக பெரியார் சொன்னதன் குலம், கோத்திரம், பின்னணி, காரணங்கள், நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றை ஆராய வேண்டும் என்று ஜல்லியடிக்கப் பார்ப்பார்கள். ஒரு நியாயவான் தனக்குப் பிடித்தவர்களுக்குத் தருகிற சலுகைகளையும் காரணங்களையும் தனக்குப் பிடிக்காதவர்களுக்கும் தரவேண்டும். அத்தகைய அறிவொழுக்க நேர்மை பெரியாருக்கு இருந்தது. இன்றைக்குப் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஜல்லியடிக்கிற பலருக்கு அந்த அறிவொழுக்க நேர்மை இருக்கிறதா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். மணி மு. மணிவண்ணனிலிருந்து சாபுவரை இந்த விஷயத்திற்காக ஜெயகாந்தனை விமர்சிக்கிற எவரிடமும் பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டுப் பாருங்கள். என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரிந்துவிடும். சொல்லப் போனால், தமிழைப் பற்றிய தன் கருத்துகளுக்காகப் பிறமொழிகளை நேசிக்கிற என்னைப் போன்றோராலும் கண்டிக்கத்தக்கவர் பெரியார். ஆனால், தமிழைச் சுவாசித்து, தமிழை வெளியேற்றித் தமிழை அடுத்தவர்மீது திணிக்கிற அறிவுஜீவிகள் எவரும் பெரியாரைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். தமிழைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியதும் பேசியதும் மோசமா, பெரியார் எழுதியதும் பேசியதும் மோசமா என்கிற திறந்தவெளி விவாதத்துக்கு இங்கே எவருக்கும் துணிவில்லை. ஜோக் என்னவென்றால், பெரியார் தமிழைப் பற்றி இவ்வளவு சொன்னபிறகும் அவரைத் தமிழர் தந்தை என்றும் பெரியார் என்றும் அவர்மீது விமர்சனமின்றி இவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், ஜெயகாந்தன் மட்டும் மோசம். படிப்பதற்கே நகைப்பாக இல்லை?

நாய் போன்ற உவமையை பயன்படுத்தியிருக்கிறாரே ஜெயகாந்தன்? சமஸ்கிருதத்திலா எழுதி பெயர் பெற்றார் என்று கேட்கிறார்கள். பெரியார் கூட என்ன அவர் தாய்மொழியான கன்னட மக்களாலா தந்தை என்றும் பெரியார் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்தவர்தானே அவர். அவர் எப்படித் தமிழே வேண்டாமென்று சொல்லலாம்? இதையெல்லாம் நீங்கள் கேட்பீர்களேயானால் நீங்கள் பார்ப்பன அடிவருடியாக ஆதிக்க சக்திகளின் ஆதரவாளராகவும் பார்க்கப்படுவீர்கள்.

அட்லீஸ்ட் பெரியாருக்காவது மொழி, மதம், இனம் என்ற பெயரில் மனிதர்களின் உணர்வுகளைக் கிளப்பி அவர்களை அடிமையாக்குகிறதன் அபத்தத்தனம் தெரிந்திருந்தது. அந்தக் காரணத்தினால் அவர் தமிழை எதிர்த்தார் என்று பெரியாரியவாதிகள் சமாளிப்புகள் செய்யலாம். அப்படியானால், இன்றைக்குத் தமிழ் தேசியம் பேசுகிற பெரியாரியவாதிகள் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் கொள்கைகளுக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.

இதில் அபத்தம் என்னவென்றால், வராகம் என்றும் நாய் என்றும் பேய் என்றும் சொல்லிக் கொள்பவர்களும் அத்தகைய புனைபெயர் வைத்துக் கொள்பவர்களும் நாய் என்ற உவமை மோசமென்று வெகுண்டெழுந்து ஜெயகாந்தனைத் திட்டியதுதான். இது எப்படியிருக்கிறது என்றால் - தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பரிந்து பேசுவதாக மார் தட்டிக் கொண்டு, நாய் பேய் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு (இது கலகமாம்!), ஆனால், அந்த உவமை இன்னொருவரால் பயன்படுத்தப்படும்போது அது கேவலம் என்று அவர்களையும் அறியாமல் அவர்கள் உள்மனது சொல்லிவிட, எகிறிக் குதிப்பது. எனவே, என்னதான் கலகக்காரப் பெயர் வைத்துக் கொண்டாலும் இவர்கள் எல்லாம் அடிமனதில் சனாதனிகளாகவே இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அந்தவரைக்கும் சந்தோஷமே. மண்ணுயிர் அனைத்தும் கடவுளின் வடிவம் என்ற மஹாகவியின் வரியை படித்தவர்கள் நாய் என்றால் தாழ்ந்துவிடப் போவதில்லை சிங்கம் என்றால் உயர்ந்துவிடப் போவதில்லை என்ற ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். எனவே, இவர்கள் எல்லாம் பாரதியைச் சரியாகப் படித்துச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்வோம்.

விஷயம் இதுதான். திராவிட இயக்கங்கள் குறித்தும், தமிழ் என்ற பெயரிலும் நடத்தப்படும் அரசியல் குறித்தும், தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தலையெடுக்கும் பயங்கரவாதம் குறித்தும் என்றென்றைக்கும் கடுமையாக விமர்சிப்பவராகவும், இந்திய தேசியத்துள் தமிழை அடையாளம் காண்பவராகவும் ஜெயகாந்தன் இதுவரை இருந்து வந்துள்ளார். அவ்விஷயத்தில் அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், நாய் உவமையை வைத்து இணையத்தில் தங்கள் மனவக்கிரங்களையும் அரிப்புகளையும் சில இடங்களில் சொந்தப் பெயரிலும் பல இடங்களில் அநாமதேயங்களாகவும் தீர்த்துக் கொண்டார்கள்.

ஓ.விஜயனை எடுத்துக் கொள்ளுங்கள். அவரின் கடைசி காலத்தில் அவர் மென்மையான இந்துத்துவவாதி ஆகிவிட்டார் என்று பால் ஸக்கரியா சொல்கிறார். ஆனால், அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்திருக்கிறாராம். எனவே, இணையத்துப் புலி ஆதரவாளர்களுக்கு ஓ.விஜயன் இந்துத்துவ ஆதரவாளராக இருந்தது பெரிதாகப் படவில்லை. புலிகளை ஆதரித்த காரணத்தினால் அவரைச் சிலாகித்தும் எழுதுகிறார்கள். ஏன் இவர்கள் பால் தாக்கரேவைக் கூட சிலாகித்து எழுதுவார்கள். காரணம் தெரியாதா? அவரும்கூட புலிகளை ஆதரித்திருக்கிறார். ஆனால், ஜெயகாந்தனை இவர்களால் என்றைக்கும் ஆதரிக்க முடியாது. இவையெல்லாம் தான் ஜெயகாந்தனை இவர்கள் திட்டுவதற்கான அடிப்படைக் காரணம்.

மனிதாபிமானம் பேசுகிற எவராலும் எதிரியைப் பற்றிக்கூட அவர் செத்தபின் அவருக்கு விருது கிடைத்தது என்று எழுத முடியுமா? ஆனால், இந்த மனிதாபிமானிகள் எழுதுகிறார்கள். அதன்மூலம் தங்கள் மன அழுக்குகளையே அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த அழுக்குகளும் அபவாதமும் ஜெயகாந்தனைத் தீண்டவே முடியாது. அழுக்குகள் தொட முடியாத, தொட அனுமதிக்காத தொலைவில் இருக்கிறார் அவர். அவர் இறந்தபின் அவருக்குக் கிடைத்த விருது இது என்ற விமர்சனத்துக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இறந்தும் உயிர்வாழ்வது சுவாரஸ்யமானது". இந்தப் பதிலின் மேன்மையையும் உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்வதற்கு ஒருவருக்குத் தமிழின் சித்தர் மரபும் சிந்தனையும் தெரிந்திருக்க வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

அப்படியே, அவர் ஞானபீடம் இல்லை, ஞானசூன்யம் என்று அழைத்து ஒரு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. கூட்டத்தில் அதற்கு ஜெயகாந்தனே பதிலும் சொன்னார். கூட்டம் முடிந்தபின் - சபையில் நண்பர்கள் முன்னிலையில், கூட்ட நிர்வாகிகளிடம் அவர் சொன்னது. "துண்டு பிரசுரத்தை விநியோத்த இளைஞர்களிடம் போய் நீங்கள் "உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் எல்லாப் பிரசுரங்களையும் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அப்படியே அதை எடுத்துக் கொண்டுபோய் மேடையில் இருக்கிற ஜெயகாந்தனிடம் கொடுக்கிறோம். அவரே அரங்கித்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் உங்கள் பிரசுரம் போக ஏற்பாடு செய்வார்" என்று சொல்லியிருக்க வேண்டும்." என்றார். இந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் இணையத்திலும் வெளியிலும் ஜெயகாந்தனை விமர்சிக்கிற எவருக்கும் இல்லை. ஜெயகாந்தனை நன்கு புரிந்து கொண்டிருக்கிற பெரியாரியவாதிகளும் உண்டு. கி.வீரமணி, சின்னக் குத்தூசி என்று பலரைச் சொல்லலாம். அவர்கள் யாரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும், நாகரீகமற்ற முறையிலும் ஜெயகாந்தனுடன் முரண்பட்டாலும் அவரை விமர்சிக்க மாட்டார்கள். அவரின் அறிவொழுக்கத்தையோ நேர்மையையோ கேள்வியும் கேட்க மாட்டார்கள். வன்முறையால் சித்தாந்தத்தை எப்பாடுபட்டாவது அடைந்துவிட முடியுமென்று - கொள்கையின்மீது வைக்காத நம்பிக்கையை வன்முறையின்மீது வைத்திருக்கிற கும்பலே எந்த அநாகரீக எல்லைக்கும் சென்று மாற்றுக் கருத்துடையோரை விமர்சிக்கும்.

ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏ.எம்.கோபு பேசினார். சிபிஐயின் மூத்த தலைவர் அவர். ஜெயகாந்தனுடன் கம்யூனில் ஒன்றாக வளர்ந்தவர். இப்போது ஜனசக்தியின் ஆசிரியர். ஜெயகாந்தனுடன் அவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்து வேற்றுமை உண்டு என்ற அவர் ஜெயகாந்தனை விமர்சிக்கவும் செய்தார். ஜெயகாந்தன் சொல்வதையெல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளவும் முடியாது, அப்படியே தள்ளிவிடவும் முடியாது என்றார். ஆனாலும், அவர் சொன்னார். "உழைப்பாளிகளையும் பெண்களையும் எதிர்த்து ஜெயகாந்தனின் பேனா ஒருவரிகூட இதுவரை எழுதியதில்லை" என்று அவர் சொன்னார். ஜெயகாந்தனை பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்னிறுத்த முனைகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. (அவரின் பேச்சையும் வலையேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் என்னைத் தவிர மரத்தடி நண்பர்கள் சுரேஷ் கண்ணன், ராஜ்குமார், ரஜினி ராம்கி, பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களும் தங்கள் கருத்துகளை விரும்பினால் எழுதலாம். முக்கியமாகப் பிரசன்னாவுக்கு ஜெயகாந்தனின் சில கருத்துகளில் உடன்பாடில்லை என்று அறிவேன். அதைப் பற்றி ஆரோக்கியமாக மரத்தடி நண்பர்களால் விவாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.)

எனவே, இதைப் பற்றியெல்லாம் உங்களைப் போன்ற நல்லவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாமே. நாகரீகத்தின் எல்லை தாண்டி ஜெயகாந்தனை விமர்சிக்கிறவர்களின் மனவக்கிரங்களும் நேர்மையற்ற போக்கும் பொருட்படுத்ததக்க பதிலுக்குக் கூட தகுதியில்லை. அதனாலேயே நான் அமைதியாக இருந்தேன். இப்போது என் வாயைக் கிண்டி பேச வைத்துவிட்டீர்கள்.

(பின்குறிப்பு: மரத்தடி நண்பர்களுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும்: இம்மடலின் ஒவ்வொரு வரிக்கும் கருத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பு. மரத்தடி பொறுப்பில்லை என்று நான் அறிவேன். இவ்விஷயத்தை இங்கே பேசக்கூடாது என்றே அமைதியாக இருந்தேன். ஆனாலும், சுவாமிநாதன் மரத்தடியில் கேட்ட கேள்விக்கு மரத்தடியில் பதில் சொல்வதே உசிதமென்று இதை மரத்தடியில் எழுதுகிறேன். இதுபற்றிய எந்த நாகரீகமான விவாதத்தையும், நிஜ முகத்துடனும் அடையாளத்துடனும் மரத்தடியில் யாரும் நடத்தலாம். அநாமதேயப் பெயரில் எழுதுபவர்கள் இப்போதெல்லாம் அந்தச் சௌகரியத்தை அதிகம் சேறு வாரிப் பூசவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால், தெரியாத பெயர்களில் எழுதுகிற அநாமதேயங்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. நிஜமுகத்துடன் எழுதுபவர்களின் கருத்துகளுக்குக் கூட நேரம் இருந்தால் பதிலளிக்க முயல்கிறேன். ஆனாலும், யாரை மறுத்துப் பதில் எழுதும்போதும், ஒருவரின் கருத்தை மறுத்துத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள் ஞானோபதேசம்போல மனதில் தோன்றுவதால், யோசித்து அவசியம் தேவை என்று தோன்றுகிற கணங்களில் மட்டும் பதில் எழுதப் போகிறேன். மரத்தடிக்கு இவ்விவாதம் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கும்பட்சத்தில் இந்த மடலுக்கு என்னை மன்னிக்கவும். இந்த மடலை மரத்தடியிலிருந்து நீக்கி விடலாம்.)

அன்புடன், பி.கே. சிவகுமார்

12 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஜெயகாந்தன் மீதான பக்திதான் உங்களால் பிற தரப்பிலுள்ள வாதங்களிலுள்ள நியாயங்களை புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.இடது என்பதில் பல போக்குகளும், நிலைப்பாடுகளும் உண்டு. ஜெயகாந்தன் அன்று சார்ந்திருந்த அல்லது முன்னிலைப்படுத்திய இடது காங்கிரசை சார்ந்திருந்த இடது.இது மட்டுமே இடது என்று கருதவே முடியாது.நான் இன்னும் அவர் உரையைக் கேட்கவில்லை.கேட்ட பின் சில வாரங்கள் கழித்து உங்களுக்கு ஒரு விரிவான பதில் தரமுடியும் என்று நினைக்கிறேன்.ஜெயகாந்தன் கூறியவற்றின் அடிப்படையில்தான் அவர் விமர்சிக்கப்படுகிறார். அவர் கூறாததை அவர் கூறியதாக அவரை விமர்சித்தால் அதை நீங்கள் குறை கூறலாம்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

சனி, ஏப்ரல் 09, 2005
கலைஞன், வாசகர்கள், காலமுரண் -ஜெயகாந்தனை முன் வைத்து ஒரு குறிப்பு

ஜெயகாந்தன் ஆனந்த விகடனுக்களித்த பேட்டியில் கூறியிருப்பவை வியப்பளிக்கவில்லை. அவரிடமிருந்து வேறெப்படிப்பட்ட பதில்களை நாம் எதிர்பார்க்கமுடியும்.

காங்கிரஸ் தொடர்ந்துபல ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலங்கள் பல எந்த அளவு பின் தங்கியுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். வட இந்தியாவில் 1947க்குப் பின் காங்கிரஸ் அதிக ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம்,பீகார் , இப்போதைய ஜார்க்கண்டையும் சேர்த்து, ராஜஸ்தான், ஒரிஸ்ஸாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு பலவற்றில் மிகவும் முன்னேறியிருக்கிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணிதான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது.அம்மாநில நிதி நிலைமை படு மோசம், ஊழலுக்கும் பஞ்சமில்லை. இதற்கு யார் பொறுப்பு.

1967க்குப் பின் தமிழ் நாட்டில் ஊழல் செழித்தது உண்மை தான், ஆனால் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் இன்னும் மோசம். ஏன், நேரு காலத்திலேயே ஊழல்கள் இல்லையா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏன் பதவி விலகினார். இந்திரா காலத்திலும் எத்தனையோ ஊழல் புகார் எழவில்லையா, ராஜிவ் காலத்தில் போபார்ஸ். நரசிம்ம ராவ் ஆடசியில் ஊழல்கள் இல்லையா.இன்னும் சொல்லப் போனால் 'சோசலிச' அரசில் இருந்த லைசென்ஸ், பெர்மிட் விதிமுறைகளும், அதிகாரக் குவிப்பும் ஊழலுக்கு உதவின.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் அதிகம் இல்லை என்றாலும் அது அப்படியே தொடர்ந்திருக்கும், ஊழல் அதிகரித்திருக்காது என்று கூற முடியாது. ஏனெனில் அரசின் வரவும், செலவும் அதிகரிக்க அதிகரிக்க ஊழல் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடுகின்றன, இது அனைத்து மட்டத்திற்கும் பொருந்தும் என்பதுதானே இந்தியர்களின் அனுபவம்.

கழகங்களின் ஆட்சியில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழ் நாட்டில் நிர்வாகம் மோசமில்லை. 1967க்குப்பின் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லை என்பதும், அது தனியாக நின்று ஆட்சியினைப் பிடிப்பது இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமே இல்லை என்ற யதார்த்தம் அவருக்கு எரிச்சல் தருகிறது. அந்த எரிச்சலே இப்படி வெளிவருகிறது. அவரது பிற பதில்களையும் அலசி ஆராய்ந்தால் இது போன்ற முடிவுகளுக்கே வர வேண்டியிருக்கும். ஜெயலலிதா பெண்மணி என்றால் பெரியார் மறைவிற்குப் பின் தி.க வினை வழி நடத்திய மணி அம்மையார் பெண்மணி இல்லையா. தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத அளவிற்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

1967ல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் தோற்றது, பதவியிழந்தது. காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் பதவி ஏற்ற போதெல்லாம் அவை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆளவிடாமல் காங்கிரஸ் சதி செய்யவில்லையா. காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு வலுவான கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இன்று காங்கிரஸ் தனித்து நின்று மத்தியில் ஆட்சியினைப் பிடிக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. காமராஜ் கால காங்கிரஸ் நினைவிலிருக்கும் ஜெயகாந்தன் நிகழ்காலத்தினை புரிந்து கொள்வாரா.

ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள். அவர் இப்படிப் பேசுவது புதிதல்ல.காலம் நிர்தாட்சண்யமாக அவரது பல கருத்துக்களை நிராகரித்துவிட்டது, சமூகமும்தான். அதனடிப்படையில் தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். இன்று அவரை எந்தவித விமர்சனமுமின்றி புகழ்வோரும், அவரும் என்றேனும் ஒரு நாள் இவற்றை உணரக்கூடும்.

http://ravisrinivas.blogspot.com/2005_04_01_ravisrinivas_archive.html

PKS said...

அன்புள்ள சங்கரன், ராமதாசைக் காடுவெட்டு என்று எங்கே முத்திரை குத்தினேன். ராமதாசுக்குப் பரிந்து வருகிற உங்களுக்கு அவர் கட்சியில் காடுவெட்டி குரு என்று ஒரு தலைவர் இருப்பதும் அவர் எம்.எல்.ஏ.வாக இருப்பதும் தெரியுமா? அவர் பெயர் காடுவெட்டி என்றால் அதைச் சொல்வதும் கூட தவறா? எனவே, முதலில் என் தமிழைப் புரிந்து கொண்டும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டும் படியுங்கள். பின்னர் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். :-)

காம்ரேட் ரவி ஸ்ரீனிவாஸ், ஆமாம் ஆமாம், இடதில் பல இடதுகள் உள்ளன. இதை நான் எங்கே மறுத்தேன். அப்படிப்பட்ட இடதுகளில் ராமதாசையும் அன்புமனியையும் ஆதரிக்கிற இடதும், சினிமாக்களில் புகைபிடிக்கிற காட்சியை அனுமதிக்கக் கூடாது என்கிற இடதும், வன்முறைக்கு வக்காலத்து வாங்குகிற இடதும் கூட உள்ளன. என்ன, இன்றைக்கு தமிழைப் போலவே இடதும் ஒரு கிளிஷே ஆகிவிட்டது. எல்லாரும் இடது என்று சொல்லிக் கொண்டால் யார் மறுக்க முடியும். ஜெயகாந்தனின் மீதான கருத்துரீதியான விமர்சனங்களுக்கு நான் என்றும் எதிரி அல்ல. உங்களின் ஜெயகாந்தன் பற்றிய கருத்துகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதும் கூட அதனால்தான். நீங்களும் பார்க்காமல் படிக்காமல் கருத்து சொல்கிற அணியில் சேர்ந்து விட்டீர்கள் போல. ஓங்குக உங்கள் அறிவுப் புரட்சி! இடதுசாரிகள் மீது எனக்கு கருத்துகளைத் தாண்டிய அபிமானமும் அன்பும் உண்டு. அந்த அன்பு உங்கள் மீதும் முழுமையாக உண்டு. ஆனாலும் நீங்கள் எந்த இடது என்று கேட்பதில்லை. :-)

ஏனென்றால் என்னைப் பொருத்தவரை இடது என்பது ஒரு மனோநிலை. கூடுவாஞ்சேரியில் இருக்கிற குப்பனும் சுப்பனும் உங்களையும்விட என்னையும்விட பல விஷயங்களில் மேம்பட்ட இடதாக இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் கூட மற்றவர்கள் ஜெயகாந்தன்மீது வைக்கிற விமர்சனங்களைவிட அவர் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் பாசறையில் இருந்து வந்தவர்கள் ஜெயகாந்தன் மீது வைக்கிற விமர்சனங்கள் எனக்கு உவப்பானவை. அவை ஜெயகாந்தனுக்கும் உவப்பானவையே என்பதை அவரை அறிந்தவர் அறிவர். அந்தக் காரணத்தினாலேயே ஜெயகாந்தனைப் பற்றிய விமர்சனங்கள் உங்களாலும் எனதருமை நண்பர் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களாலும் முன்வைக்கப்படும்போது அவற்றை நான் ஆர்வத்துடன் படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன். ஆனாலும் என்ன, நீங்கள் எப்போதும்போல புத்தகப்புழுவாக (இது புகழ்ச்சிதான். புழு என்று சொல்லிவிட்டேன் என்று அடுத்த சர்ச்சையை நீங்கள் ஆரம்பித்து வைக்க வேண்டாமே :-) வேண்டுமென்றால் புத்தகச் சிங்கமாக என்று வைத்துக் கொள்ளலாம்.) பேசுகிறீர்கள். யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் வைக்கிற விமர்சனங்களில் இருக்கிற ஆழமும் புரிதலும்கூட (அவருடன் நான் உடன்பட இயலாவிட்டாலும்கூட) உங்கள் இடதுசாரி விமர்சனங்களில் இல்லை என்பது என் தாழ்மையான 2 செண்ட்டுகள். ஆனாலும், உங்களைப் போன்றவர்கள் செயலாற்ற வேண்டியதன் கருத்து சொல்ல வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். சொல்லப் போனால், இந்தக் கமெண்ட்டை நான் எழுதியதே உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றுதான். இதிலிருந்தே உங்கள் மீது நான் வைத்திருக்கிற மரியாதை விளங்கும். நன்றாகப் பார்த்தீர்களேயானால், சில கருத்துகளுக்கெல்லாம் நான் பதில் சொல்வதே இல்லை. ஏனோ எவ்வளவுதான் அபத்தமாக இருந்தாலும் உங்கள் கருத்துகளை அப்படி ஒதுக்க எனக்கு மனம் வரவில்லை. இதற்குக் காரணம் கூட இடதுதானோ!

ஜெயகாந்தனைத் தாராளமாய் விமர்சியுங்கள். உங்களைப் போன்றவர்கள் விமர்சிக்கும்போது நாகரீகத்துடனும் தனிமனித வெறுப்பின்றியும் விமர்சிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த நம்பிக்கை நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்றே அறியாத உங்களின் எழுத்துகளை மட்டுமே படித்ததால் வந்த நம்பிக்கை அல்ல. நீங்கள் இடது என்று சொல்கிறீர்களே, அந்த இடது என்கிற சித்தாந்தத்தின் மீது நான் வைத்திருக்கிற நம்பிக்கையால் வந்த நம்பிக்கை. இடது என்று சொல்லிக் கொள்கிற எந்த நபரும் உடன்படாவிட்டாலும் கருத்து ரீதியாகவும் தனிமனித வெறுப்பின்றியுமே விமர்சனங்களை எதிர்கொள்வர் என்ற உறுதியால் வந்த நம்பிக்கை.

மற்றபடிக்கு - ஜெயகாந்தனை விமர்சிக்கிற தாங்கள் அப்படியே அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளைப் பற்றியும் கூட (உங்கள் அருமை நண்பர் எஸ்.வி.ராஜதுரைகூட வெளிப்படையாகப் புலிகளை எதிர்த்து இந்தியா டுடேவில் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். படித்தீர்களா? இல்லையென்றால் உங்களைப் போன்ற இடது நண்பர்களுக்காக வலைப்பதிவில் அதை எடுத்துப் போடுகிற சிரமத்தை மேற்கொள்கிறேன்.) விரிவாக எழுத வேண்டும். அது மட்டுமில்லாமல், தமிழ் தேசியம் என்ற பெயரில் மார்க்ஸிய லெனினிஸ்டுகள், ஹிட்லருக்காவது தேசிய லட்சியம் இருந்தது என்றும், தமிழ் தேசியம் கிடைத்தால் பிறமொழி பேசுகிற மக்கள் எப்படி அணுகப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் பேசியதைப் பற்றி விமர்சித்து உயிர்மையில் தோழர் அ.மார்க்ஸ் எழுதியிருந்தார். (அ.மார்க்ஸ் அவர்களுடன் நான் அரிதாக உடன்படுகிற விஷயங்களுள் இதுவும் ஒன்று. ஆனாலும், தமிழ் தேசியம் பாசிஸமாக வளர்கிற விதைகள் கொண்டது என்பதை அ.மார்க்ஸ் சரியாகப் புரிந்து கொண்டுள்ள்ளார் என்று சந்தோஷமாக இருக்கிறது.) எனவே, இதைப் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும். எப்போது எழுதப் போகிறீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். இல்லை, அதையெல்லாம் எழுதினால் இணையவுலகில் பிரயோசனமில்லை என்ற இடது முடிவுக்கு வந்துவிட்டீர்களா?

சமீப காலங்களில் உங்களைப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கூட்டத்துக்காக பேட் செய்கிற பேட்ஸ்மென் மாதிரியும், ரசிகர்களுக்காக டான்ஸ் ஆடுகிற ஹீரோ மாதிரியும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களோ என்று. ஓர் இடதாக இருப்பவர் கருத்துச் சொல்ல வேண்டிய இரு முக்கிய விஷயங்களை மேலே எழுதியுள்ளேன். சொல்லப் போனால், கவனம் பெற்ற விஷயத்தை விட கவனம் பெறத் தவறிய விஷயத்தையே முன்னெடுத்து வந்து ஓர் இடது விரிவாக அலச வேண்டும். அந்த வகையில் இப்படிப்பட்ட விஷயங்களை அலசுகிற இடதாக நீங்கள் மாற வேண்டுமென்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு அன்புடனும் தோழமையுடனும், எந்த இடதென்று தெரியாத ஆனால் இடது என்கிற பெயரில் அசட்டுத்தனமானக் கலகங்கள் செய்கிற புரட்சிகரத் துணிச்சல் அற்ற, பி.கே. சிவகுமார்

-/சுடலை மாடன்/- said...

ஒருநாள் வேறு பணிகள் நிமித்தமாக தமிழ் மணத்தைப் படிக்கவில்லை. அதனால் ஜெயகாந்தன் தொடர்பான முக்கியமான பதிவுகளையும் பின்னோட்டங்களையும் இன்னமும் முழுவதும் படித்து முடிக்கவில்லை. இருந்தாலும் சிவக்குமாரின் எதிர்வினையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியவற்றை மிகச் சுருக்கமாக ஆனால் புரியும் படியாகச ரோசா வசந்த் சொல்லி இருக்கிறார்.

ரோசா வசந்த் முன்னர் சிவக்குமாருடைய எழுத்துக்களின் நேர்மையின்மையை சொன்ன போதெல்லாம் அப்படியே புரிந்து கொள்ளவில்லை. திண்ணையில் சிவக்குமாருடன் ஒரு முறை விவாதம் செய்த போது கூட, "பொதுவாக எல்லோரிடமும் (நான் உள்பட) இருக்கும் சுயநம்பிக்கைகளை சரியென விவாதிக்கும் கர்வ மனநிலை" என்றுதான் எண்ணினேன். ஆனால் தற்பொழுது முழுமையாக அவருடைய நேர்மையின்மையை புரிந்து கொள்ள முடிகிறது. சுருக்கமாக காரணத்தைச் சொல்கிறேன்:

திண்ணையில் அவரிடம் முன்வைக்கப் பட்ட கேள்விகளின் போது அவர் சொன்னவை இரண்டு - ஒன்று ஜெயேந்திரரை ஜெயகாந்தன் ஆதரிக்கவில்லை, மாறாக விமர்சித்திருப்பார் என்றார். இரண்டு ஜெயகாந்தனுக்குச் சாதியில் நம்பிக்கையும் இல்லை, சாதியத்தை ஆதரித்தும் பேசவில்லை என்றார். அண்ணாவின் மறைவைப் பற்றியும், இந்திராவின் மறைவைப் பற்றியும் ஜெயகாந்தனின் முரண்பாடுகளைப் பற்றிய கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் தான் ஒரு படிப்பாளி, மேதாவி என்று சுயதம்பட்டம் அடிக்குமாறு எதையோ அள்ளி வீசி விட்டு காணாமல் போனார். ஆனாலும் எனக்கு அவருடைய படிப்பு மேல் இன்னும் பெரும் மதிப்பு உண்டு, ஆனால் அவர் படிப்பின் தொடர்ச்சியான சிந்தனை இருக்கிறதா என்பதில் பெரும் சந்தேகமும் உண்டு.

திண்ணையை விட்டு இப்பொழுது தமிழ் மணத்தில், ஜெயகாந்தனின் முரண்பாடான, ஒருபக்கச் சார்பான பேச்சுகளை தன்னுடைய தர்க்கமாக முன் வைத்த பொழுது, மறுபடியும் அதற்கான எதிர்க் கேள்விகளை வைத்த பொழுது, நானெல்லாம் சிவக்குமார் பதில் சொல்வதற்ககே அருகதையில்லாதவன் என்று முழக்கியிருக்கிறார். அவர் அப்படியே என்னைப் பற்றியும், என் கேள்விகளையும் அபத்தங்கள் என்று ஒதுக்கியிருந்தால் கூட வெறுமனே கோபப் பட்டிருப்பேன், அவரை நேர்மை தவறியவறாகக் கருதியிருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய கேள்விகளை அபத்தமானவை என்று சொல்லிக் கொண்டே, அவற்றைப் பற்றி மரத்தடி குழுமத்துக்கு (என்னுடைய பெயர் குறிப்பிடாமல்) எழுதியிருக்கிறார். ஏனென்றால், இந்த அபத்தங்களை யார், எங்கு சொல்லியது என்று குறிப்பிட்டால் அவற்றை மற்றவர்களும் படித்து விடுவார்களெ! இவருடைய திரிப்பு வேலையும் தெரிந்து போய் விடுமே! போதாதற்கு, அவருடைய குருநாதர்களின் (ஜெயகாந்தன், சோ) பாணியில் சம்பந்தமேயில்லாமல் புலிகளின் ஆதரவாளர்கள் என்று திசை திருப்புவது வேறு.

ரோசா வசந்திடம் கூட முன்பு ஒருமுறை சிவக்குமாரைப் பற்றி வாதிட்டிருந்தேன், அவர் எதிர்க்கப் பட வேண்டியவர் இல்லை, அவருடைய பிற்போக்கு சாதியச் சிந்தனைகளிலிரிந்து விடுவிக்கப் பட வேண்டியவர் என்று. அதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேண். சிவக்குமார் சோ. இராமசாமி போல சாதியத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் எதை வேண்டுமானாலும் நேர்மையில்லாம திரிக்கக் கூடியவர். சோ இராமசாமி போல, அவருடைய நேர்மையில்லாத பம்மாத்து வேலைகளை அடையாளங் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிடின், தங்களுடைய வேலையில் மற்றும் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளினால் எல்லாவற்றையும் தேடிப் பிடித்து படிக்க நேரமில்லாத நல்லவர்களை, வெளிப்பூச்சில் நியாமாகத் தோன்றும் ஒருபக்கத் தர்க்கத்தை முன்வைத்து மூளைச் சலவை செய்து கொண்டிருப்பர்.

சுந்தரமூர்த்தியின் வேண்டுகோளை புரிந்து கோள்ளுகிறென், ஆனால் ஜயகாந்தனுடைய உளரல்களை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் அவற்றை நிறுத்த வேண்டுமென்பதினால் அல்ல. அவருடைய உளரல்களில் உள்ள முரண்பாடுகளையும், ஒருபக்க நியாயத்தையும் கண்டு கொள்ளாமல், தங்களுடைய இழிந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சிவக்குமார் போன்ற கிரகங்களை எதிர்கொள்ளுவது மிக அவசியம். ஜெயகாந்தனுடைய இலக்கியப் பங்களிப்பைப் பெரிதும் மதிக்கும் நான் ஞானபீட பரிசு பெற்ற வேளையிலாவது அவர் கசப்புணர்ச்சிகளை மறந்து இருபக்கத்தினரையும் அணுகி உருப்படியான காரியங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவருடைய சாதிய அரசியலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அவருடைய இலக்கியப் படைப்புகளை எல்லாத் தமிழருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். வாசிங்டன் தமிழ்ச் சங்க இதழில் அவருக்கு பரிசு கிடைத்த நற்செய்தியை அறிவித்து அவருடைய சிறுகதைகளைப் படிக்க அழைத்திருக்கிறேன். அதில் ஜெயகாந்தனின் அரசியலை மறந்து அவருடைய இலக்கியச் சாந்தனைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன். அவருடைய இலக்கியத்தை படிக்காதவர்களிடம் போய் அவருடைய அரசியலைப் பற்றிப் பேசுவது அழகல்ல என்று நினைக்கிறேன். அவருடைய ஒரு சிறுகதையை மறுபதிப்பு செய்வதற்காக சிவக்குமாரின் இணையத் தளத்திலிருந்து இறக்கிக் கொள்ள அனுமதி வேண்டி சிவக்குமாருக்கே மூன்று வாரங்களுக்கு முன்னால் இருவரி மின்னஞல் ஒன்றை அனுப்பினேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவருக்கு நேரமில்லை என்று நினைத்திருந்தேன். அவருக்கு ஜெயகாந்தனின் இலக்கியம் மக்களிடம் எடுத்துச் செல்லப் படவேண்டும் என்பதை விட அவருடைய அரசியலை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென்பதெ நோக்கமோ என்று சந்தேகமாக இருக்கிறது.


நன்றி - சொ. சங்கரபாண்டி

பி. கு. - திண்ணையில் ஜெயகாந்தன் தொடர்பாக முன்பு நடந்த விவாதங்கள் இங்கே:

திரு.அண்ணாதுரை மரணத்தின்போது ஜெயகாந்தன் பேசியது - மறுபதிப்பு பி.கே.சிவக்குமார்

ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது விமர்சனம் - சொ.சங்கரபாண்டி

பி.கே.சிவகுமாரின் முதல் பதில்

சங்கரபாண்டியின் இரண்டாம் கட்டுரை

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப்பார்வை - பி.கே.சிவகுமார்

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள் - சொ.சங்கரபாண்டி

ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும் - பி.கே.சிவகுமார்

PKS said...

சொர்ணம் சங்கர பாண்டிக்கு,

நமஸ்காரம்.

உம் பெயரை சுடலைமாடன் என்று மாற்றிக் கொண்டதால் ஜாதியை ஒழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தீர் என்றால் நீவிர் நீடூழி வாழ்க. உம்முடைய பெயர் சொர்ணம் ... சங்கரபாண்டியாகவே தொடர்ந்திருந்தால்கூட உம்மை ஜாதி வெறியர் என்று சொல்கிற உம் தரத்துக்கு இறங்க எனக்கு விருப்பமில்லை. சுடலைமாடன் என்று பெயர் வைத்துக் கொண்டதால் நீர் உம்முடைய ஜாதீய சிந்தனையிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டீர் என்றால் அந்த சுலபப் புரட்சி உலகெங்கும் செழிக்க என் வாழ்த்துகள்! கருத்து வேறுபடுகிற அனைவரையும் நேர்மையற்றவர், பிற்போக்கு ஜாதி சிந்தனை உள்ளவர், ஜாதி வெறியர் என்று தூஷிக்கிற கலையில் நீரும் உம் தோழருமே வல்லுநர். அது எமக்கு ஒப்புதல் இல்லாதது.

மற்றபடி உமக்கு நான் திண்ணையில் எழுதியது பற்றிக் கேள்விகள் இருக்குமானால், அதைத் திண்ணையிலேயே கேளும். அந்தத் தைரியம் உமக்கு இருக்கிறது என்றே நான் திடமாக நம்புகிறேன். நீர் அபத்தமாய் உளறுவதை எல்லாம் நீர் உளறுகிற இடங்களில் வந்து தேடிப் படிக்க எனக்கு நேரமும் பொறுமையும் இல்லை. அப்படி நீர் திண்ணையில் கேட்பீரேயானால், அப்போது அவற்றுக்குப் பதிலளிக்க விருப்பமிருந்தால் முயல்கிறேன். மற்றபடிக்கு - உம்முடைய அபத்தங்களுக்குப் பதில் அளித்தால்தான் நேர்மை, புறங்கையால் ஒதுக்கினால் அநீதி என்றால், இந்த அறிவுபூர்வமான சிந்தனையை வேறு எங்காவது எடுத்துச் சென்று கொட்டும். உம்மையும் ஒரு சிந்தனாவாதியாகவும் எழுத்தாளராகவும் முன்மொழிகிற நண்பர்களுக்கு உம்முடைய தர்க்கங்களில் உருண்டு புரண்டு கொண்டிருக்க முடியலாம். உம்மைப் போன்றவர்களின் சமீபத்திய உளறல்களுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதுதான் சிறந்த பதிலென்று நான் அறிவேன். ஆனாலும், திண்ணையில் பட்ட அடி உமக்கு இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. திண்ணைக்கே இந்தக் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வாரும். அப்போது பார்க்கலாம்.

ஜெயகாந்தன் சிறுகதைகளை வெளியிட வேண்டும் என்று கேட்டு நீர் எழுதிய மின்னஞ்சல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அந்த மின்னஞ்சல் கிடைத்ததா இல்லையா என்று சரிகூட பார்க்காமல், என் மீது குற்றம் சுமத்துகிற ஜீஸஸ் கிரைஸ்ட்டாக நீர் மாறிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயகாந்தன் கதைகளை வெளியிடுவதற்கு உமக்கு அனுமதி வேண்டுமென்றால் அதை ஜெயகாந்தனிடம் கேளும். யார் கேட்டாலும் அனுமதி தருபவர் அவர். கேட்காமல் பிரசுரித்துக் கொண்டாலும் வருத்தப்படுபவர் அல்ல. ஜெயகாந்தன் கதைகளை வெளியிடுவதற்குப் பிறருக்கு நான் அனுமதி வாங்கித் தந்திருக்கிறேன். ஆனால், உமக்கு அப்படிப்பட்ட உதவிகள் ஏதும் செய்கிற விருப்பம் சமீபகாலங்களில் நீர் உமிழ்கிற விஷத்தைப் பார்த்தபின் போய்விட்டது. ஆஹா, ஜெயகாந்தன் இலக்கியத்தை மக்களிடம் எடுத்துச் செல்கிற ஆளைப் பார்த்தீர்களா? அழகுதான். இப்படி ஒரு கிரிடிட்டுக்கும் அலைகிறீரா? ஆச்சரியம்தான்.

உம்மைப் போன்ற அற்ப மனமுடையோர் அவரை இவ்வளவு தூற்றிவிட்டுப் பின்னர் அனுமதி கேட்டாலும் மற்றவர்க்கு என்ன செய்வாரோ அதையேதான் உமக்கும் செய்வார். எனவே, அவரையே போய்க் கேளும். நீர் எழுதுவது கிரகமா, நான் எழுதுவது கிரகமா என்கிற சாக்கடை வாதங்களுக்குள் நான் இறங்க விரும்பவில்லை. திண்ணையில் என் பதில்களில் அடிபட்ட உம்முடைய ஈகோவும் ஆங்காரமும் இன்னமும் உம்மை உறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பது உம் வரிகளில் புரிகிறது. அந்த உறுத்தலில் நீர் எறியப்போகும் சாக்கடைகளுக்கெல்லாம் நானும் பதில் சாக்கடை எறிவேன் என்று மட்டும் கனவு காணேதேயும்.

நீர் கழிப்பதையும் துப்புவதையும் உம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும். என் வலைப்பதிவு வீட்டில் வைத்துக் கொள்ளாதீர். துப்பாமல் இருக்க முடியவில்லை என்றால், திண்ணையில் துப்பும். நீர் திண்ணையில் துப்பும்போது, முடிந்தால் உம்முடைய வாதங்களிலே இம்மியளவும் தர்க்கம் இருக்கிறது என்று நினைத்தால் பதில் சொல்ல முயல்கிறேன்.

இல்லை, திண்ணையில் எழுத விருப்பமில்லை என்றால், கண்ட கண்ட இடங்களில் நின்று வழக்கம்போல கத்திக் கொண்டிரும். ஆனால், நான் பதில் சொல்வேன் என்று எந்த உரிமையிலும் எதிர்பார்க்கிற தகுதி உமக்கில்லை. என் பதில்கள் என் விருப்பத்தினாலும் என் உறுத்தல்களினாலும் வருபவை. உம் அரிப்புக்கு நான் சொரிந்து கொள்ள முடியாது.

உம் சார்பாக இங்கும் எங்கும் உருண்டு புரண்டு என் மீது சேறடிக்கப் போகும் ஜீவன்களுக்கும் என் முன்கூட்டிய நன்றி. கடவுள் உங்கள் அனைவருக்கும் நல்லதே செய்யட்டும்!

- ஓர் இந்தியத் தமிழன், பி.கே. சிவகுமார்

-/சுடலை மாடன்/- said...

PKS, உங்கள் கோபமும், ஆத்திரமும் எனக்குப் புரிகிறது.


இந்துப் பத்திரிகையும், துக்ளக்கும் முட்டாள்தனமான எதிர்வாதங்களை மட்டும் வாசகர்கள் கடிதங்களில் அனுமதித்து, தங்கள் நிலைப்பாட்டைப் புத்திசாலித்தனதாக, நியாயமுள்ளதாக பறை சாற்றிகொண்டிருந்த காலம் மலையேறுகிறது. ஜெயகாந்தனும், சோவும் விரும்புகிற, வேண்டுகிற தடா, போட்டா சட்டங்களின் மூலம் மக்கள் என்ன பேச வேண்டும் என்று தீர்மானித்த காலமும் மலையேறுகிறது. முதலில் கொஞ்சம் ஆத்திரமாகத்தான் இருக்கும், போகப் போக உங்களை உண்மையிலேயே ஜனநாயகப் படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒருவேளை இணையத்துக்கும் நீங்கள் விரும்பும் ஒரு சட்டம் கொண்டு வந்தால் பழைய படி ஒருபக்க வாதத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

மற்றபடி நான் அனுப்பிய மின்னஞ்சலைப் படித்திருப்பீர்கள் என நினைத்தேன். மின்னஞ்சலே கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை நம்புகிறென். அந்த ஒரு தவறுக்கு மட்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய பிற கருத்துக்களில் மாற்றமில்லை, நீங்கள் ஆத்திரத்தில் என்ன கத்தினாலும் கவலையில்லை எனக்கு.

மற்றுமொரு தொடர்புடைய செய்தி - என் மின்னஞ்சல் வேண்டுகோளுக்கு உங்களிடமிருந்து மறுப்பு வரவில்லையாதலால் ஜெயகாந்தன் சிறுகதையை உங்கள் தளத்திலிருந்து இறக்கி அச்சுக்கு அனுப்பியாகி விட்டது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

PKS
1,I hope you know that S.V.Rajadurai has written about periyar, in his name as well as with v.geetha. ihave not read his recent article on LTTE.what are your views on his as well as their writings on periyar, self respect movement and dravidian movement.have you ever written about them.if so where.
2,it is strange someone like you who did not protest when jayamohan in the pretext of answering your questions wrote lies about the left
today pretend to defend left.and of course you also accepted some of his views on left and hindutva and repeated them.
3,the whole world knows that jayakanthan supported emergency and at that time workers rights were denied along with fundamental writings.does not this action speak louder than all his words,
written and unwritten.
4,how can cpi invite JVP to their meeting and call it as a friendly left party when everyones knows that jvp stands for singhala chauvinism and is anti-tamil.how can jvp be termed be a left party.
5, you can defend the indefensible, i.e.jayakanthan. that is upto you. but it is better you stop with that.

PKS said...

Ravi Srinivas,

1. My views on Periyar are written whenever necessary. If you have not read them, please read them. I have read, Anniyamaathal by S.V. Rajadurai and have browsed Periyar Marabum Thiribum written by him too. In fact, I was thinking about using some pages from Periyar Marabum Thiribum book. But, right now I dont have the book.

2. a). Atleast I have the open heart to read from SV Rajadurai to A.Marx and take whatever I agree upon and not to blame/accuse them for their views. b) the great thing is not reading everything. If thats what matters, u would have been the highly celebrated writer and thinker instead of people like Jeyakanthan and Jeyamohan. But that did not happen right? So, the issue is, what you take and understand out of what you read by putting it in context with the life and environment we live on.

2. I am also told that there are some pure agmark leftists who visit Tirupathy and worship Lord Venkatachalaphy and get special dharishan there through the help of Jeeyar Swamikal. In fact, it seems those leftists wear even poonal and then write against parpaneeyam. I can understand the same and there is nothing wrong in it. In your terms, this is more hindutuva and bramaniyam :-) So, should we condem those people who talk secualarism, leftism and marxism etc and do these backdoor honeymoons with saints and religion?. Is it not better to be like Jayakanthan and do everything in the open (whether its right or wrong is a different matter) Also, has Jeeyar supported the arrest of Sankaracharya or condemned it? Please let me know since you may know more about all these.

3. The whole world knows that Communist Party of India supported Emergency too. So, during emergency Jayakanthan in fact took a party line stand though he was not in the party. But both CPI and Jayakanthan had the guts to correct that mistake and voice against emergency. If you have to celebrate someone for opposing Emergency from the beginning, you should be worshipping Cho now. Are you ready to do it. I feel pity about such logics of yours. Political mistakes are common. What matters is if one has the honesty and guts to admit it and change.

4. I need not depend Jayakanthan. He is his best defender. What I have been doing all along is bringing into focus, alternative views and what really happened and then leave the judgement to readers. A true left and a firm believer of democracy should welcome such things. Moscow la mazhai peithaal maduraiyil kudai pidikira marxistkalum, Vanniyil mazhai peithaal chennaiyil kudai pidikira aatkalukum thaan maatru karuthu solbarkalai ethir kollamal motives kaankira jalli varum. Who does not have a motive (if thats what u want to talk about?) Dont u have motives, people and policies to depend upon? I am a neutral enra jalli ellam engum ipothu sellupadi aakathu. In that scenario, whatever be one's motive and reasons, i would see if what he says makes sense and he has rationality for his views. If you cannot do it, please find more books on the subject and see what those books say. U can write detailed essays about the same later for others :-)

5. You have admitted you did not watch JK speech video. However, u feel its ethical, moral and right to comment about it. This is not the first time you do such things. So, I am not going to reply anymore to a person who is not even willing to open his eyes and then criticise if he does not like what he sees. U are criticising with closed eyes. I cannot do it. Atleast most others who criticise me or jayakanthan have watched the video and then do it.

6. Bringing Jeyamohan into an argument is the last straw you have. Please do something better next time. I have already replied to such non-senses to you through personal and public mails.

Thanks and regards, PK Sivakumar

Arun Vaidyanathan said...

Dear PKS,
Great write up and mind blowing arguments. Let people who highlight Tamil and Periyar in internet world open their views and debate with you instead of writing one liners saying 'This argument is written without understanding and some BS'. People who doesn't like you personally because you exposed some of them at appropriate times for proper reasons are trying to take revenge without any valid base or case with them. You do your work and keep writing some wonderful stuffs like this.

Regards,Arun

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Please read the letter by S.V.rajadurai in Tamil India
Today dated 25th May 2005.I dont want to argue with you when you dont even bother to read carefully
what I have written.I never wrote that I watched the speech.But you had cited what Gopu told and based on that I raised that point.I had written earlier on jayakanthan after reading his interview in vikatan.i wrote my response to that with an open mind.i did not want to reject jayakanthan totally on the basis of his views.that is why i wrote
ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள். அவர் இப்படிப் பேசுவது புதிதல்ல.காலம் நிர்தாட்சண்யமாக அவரது பல கருத்துக்களை நிராகரித்துவிட்டது, சமூகமும்தான். அதனடிப்படையில் தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். இன்று அவரை எந்தவித விமர்சனமுமின்றி புகழ்வோரும், அவரும் என்றேனும் ஒரு நாள் இவற்றை உணரக்கூடும்.

Whether i will be well known like x or y or z are irrelevant.i am not in any such race.nor i beleive in them.i do
what i want to do.and as jiddu krishnamurti once asked with whom you were comparing yourself, with God.
yes there is a motive in what i write.but that motive is not to promote myself or oppose someone for the sake of opposing.i will not stop writing about jayakanthan.the world is large enough to give some space to persons like me however much you dislike it.i may not be an emperor like jayakanathan but i can laugh at the emperors new clothes and those who admire the new clothes.

i dont know whether you will understand what i have written but i hope that atleast some of the readers of your blog will understand my views.

enRenRum-anbudan.BALA said...

அன்பில் பி.கே.எஸ்,
நல்ல பதிவு. மேலும், தாங்கள் திண்ணையில் ஜெ.கா மற்றும் ஜாதீயம் குறித்து எழுதிய கட்டுரைகளயும் படித்தேன். உங்கள் கருத்துக்களை திறம்பட தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

"மௌனப் பெரும்பான்மை" குறித்த கருத்தை ரசித்தேன். அது உண்மையும் கூட. ஆனால் சுடும் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Vanthiyathevan said...

பி.கே.எஸ்,

எழுதவேண்டுமென்று நினைத்தது காலதாமதமாகிக் கொண்டிருக்கின்றது. அருமையாக வாதத்தை முன் வைத்திருக்கின்றீர்கள். முழுமையாக பின்னூட்டங்களையும் உள்வாங்கிய பின்னர் எழுத முயற்சிப்பேன்.