Sunday, May 15, 2011

ஃபேஸ்புக் குறிப்புகள் - தமிழக தேர்தல் 2011


மே 14, 2011 (சனி):

இந்த அளவுக்குத் தோற்போம் என்று கலைஞரோ, இந்த அளவுக்கு ஜெயிப்போம் என்று ஜெவோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பது இருக்கட்டும். இந்த அளவுக்கு ஜெயிக்கும் என அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அந்த கணம் வாக்களித்தவர்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மே 15, 2011 (ஞாயிறு):


இது ஜெயலலிதாவின் அல்லது அதிமுக கூட்டணியின் வெற்றி அல்ல. இது கலைஞரின் (திமுக செயற்பாடுகளின்) தோல்வி. கூட்டணி குளறுபடிகளுடன், ஒன்றுமே செய்யாமல், கொடநாட்டில் ஓய்வெடுத்தபடியே ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதாவுக்குக் கலைஞர் குடும்ப அரசியல் பெரிதும் உதவியுள்ளது. ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம்தான். எம்ஜிஆர்கூட ஜெவை அரசியலுக்குத்தான் கொண்டுவந்தார். கலைஞர் மீண்டும் ஜெவை முதல்வராகவே ஆக்கியுள்ளார்.

வாழ்க்கை மும்முரங்களுக்கிடையே இம்முறை தமிழக தேர்தலைக் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. ஆனாலும் முடிவுகள் தெரிந்தபின்னர், எல்லாரையும்போல, நாமும் கருத்துகளை உதிர்க்க வேண்டும் என்ற உந்துதல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, இந்திய/தமிழக அரசியல் குறித்து, ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன என்ற விட்டேற்றி/விரக்தி மனபாவம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த அரசியலில் ராமர்கள் யாருமில்லை.

ஈழம் குறித்த நிலைப்பாட்டுக்காக திமுகவை மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்கிறார் பழ.நெடுமாறன். சிரிப்பு வருகிறது. ஈழ அரசியல் எரிந்து கொண்டிருந்த காலத்திலேயே திமுகவை பாராளுமன்ற தேர்தலில் இதேமக்கள் ஆதரித்துள்ளார்கள். இத்தேர்தலில் ஈழ அரசியலுக்காகக் குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள், பா.ம.க.வும் படுமோசமாக தோற்றுள்ளனவே. மேலாக, ஜெ என்றைக்கு ஈழ அரசியல் சார்ந்த விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளார்?

என் அவதானிப்பில், திமுக கூட்டணியின் தோல்விக்கு இவை இவ்வரிசைப்படி காரணங்களாக இருக்கலாம். 1. மின்வெட்டு, 2. விலைவாசி உயர்வு 3. திரை, ஊடகம் என வணிக முனைவுகளிலும் குடும்ப ஆதிக்கம் பிறரைச் செயல்படாமல் தடுக்குமளவு ஏகாதிபத்தியமாக மாற முயன்றது, 4. குடும்ப அரசியல் கட்சியில் கொண்டுவந்த குழப்பங்கள், 5. கூட்டணி கட்சிகளிடம் பெரிய அண்ணன் பாணியில் நடந்துகொண்டது, 6. ஊழல், 7. 2ஜி. (பின்குறிப்பு: 2ஜி தமிழக கிராமப்புறங்களில் ஈழப்பிரச்னை போலவே எத்தாக்கத்தையும் உண்டுபண்னவில்லை என இப்பிப்ரவரியில் நேரில் கண்டேன்.)

Saturday, August 14, 2010

ஆகஸ்ட் 15

இந்தியராக உணர்கிற அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Sunday, June 13, 2010

23 மணிநேரம் அடர்த்தியுடனும் ஆழத்துடனும் சிந்தித்து 1 மணி நேரத்தில் எழுதியவை

தினம் சில வரிகள் - 36

தமிழ்சினிமாவில் வெற்றிபெற என்னவழியென்று நண்பரைக் கேட்டேன்.யோசனைக்குப் பின்சொன்னார்.ஆணென்றால் சாரும்,பெண்ணென்றால் மேடமும் போடத்தெரியணும்.

தமிழ் எழுத்தாளனாய் வெற்றிபெற என்னவழியென்று கேட்டேன். உடனடியாக நண்பர் சொன்னார். நல்ல பதிப்பாளர் கிடைக்க வேண்டும்.

உலகஉதைபந்தாட்டம் முடியும்வரை அலுவல் விடுப்பு எடுக்க இயலாதென்ற வருத்தத்தில் விடுமுறை நாட்களிலும் ரெகார்டட் வர்ஷன் பார்க்கலாமென இருக்கிறேன்.

ரெஸ்யூமைமாற்றித் தருகிறேனெனச் சொன்னேன். செய்யலை.என்னை நானே புகழ்ந்தெழுத கூச்சமாக இருக்கிறது.காசுகொடுத்தால் சிறப்பாகச் செய்துதருகிறார்களாம்.

இந்த உலக உதைபந்தாட்டத்தில் அணிகள்,வெற்றி தோல்விக்கு இணையாக பத்திரிகைகளுக்கு வழக்கம்போல மாரடோனாவும் செய்தியாவார்.

நள்ளிரவில் மைக்ரோவேவில் தேநீர் தயாரிக்கும்போது அன்று இரண்டாம் ஆட்டத்துக்குப் பின் குடித்த தேநீர்க் கடைகளும் மனிதர்களும் உடனிருக்கிறார்கள்.

விளையாட்டுவீரர்கள் ரிடையர் ஆனபின் கோச்சுகளாகிறார்கள். எழுத்தாளர்கள் ரிடையர் ஆனபின் என்னவாகிறார்கள்?

ஆயில் ஸ்பில்லில் இருந்து சாரா பாலின் மார்பக உருமாற்று சிகிச்சை செய்துகொண்டாரா என்பதுவரை அமெரிக்கர்களுக்குத்தான் எத்தனை கவலை.

எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் எழுத்திலிருந்து ரிடையர் ஆனதும் எழுத ஆரம்பித்தார்.

இந்த வருடம் புல்வெட்டுகிறவரை மாற்றிப் பார்த்தேன். ஆனாலும் புற்கள் வளர்ந்தபடியேதான் இருக்கின்றன.

நடைபாதைக்குள் கிளைநீட்டிப் பூக்கும் தோட்டத்து ரோஜாவின் முட்கள் கிழித்துவிடுமோவென்று தள்ளி நடக்கின்றேன்.

டிவிட்டருக்குத் தமிழர்கள் நன்றி சொல்லவேண்டும். பல எழுத்தாளர்களை அது விழுங்கி, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவில் பின்னூட்டவசதியை எடுத்தபின், இயல்பாக எழுத முடிவதாக உணர்கிறேன். பிறர் படிக்கும் வசதியையும் எடுத்துவிட்டால் இன்னும் இயல்பாக எழுதவருமோ.

ஜெயமோகனின் இணைய இடைவெளியைப் பார்த்தால், எத்தனை புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

ஒருவாரமுழைத்து அலுவலில் பங்குதாரர்க்கு அறிக்கை தயாரித்தேன்.அதிலுள்ள புள்ளிவிவரத்துக்கு ஆதாரம் கேட்டார்கள். தரமுடியாது.தொழில்தர்மம் என்றேன்.

தமிழுக்கு உழைக்க வேண்டுமென்ற உந்துதலில் இப்போதெல்லாம் கனவிலும்கூட எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எஸ்.ரா.விடம் பிடித்தது. அமைதியாக எழுதிக் கொண்டு மட்டும் இருக்கிறார்.முக்கியமாக பின்னூட்டம்,வாசகர் கடிதம் வெளியிடுவதில்லை.

எனனைப் பதின்மவயதுக்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார். விளையாட்டுகளின்போது தொலைகாட்சியே பழியென்று கிடக்கும் மகன்.

நேற்று லாக்-அவுட் செய்தபின் ஒரு கவித்துவமான டிவிட் மனதில் தோன்றியது. காலை எழும்போது கவனித்தேன்.அது நாவலாக வளர்ந்திருப்பதை.

மனைவி,குழந்தைகள்,குடும்பம் பற்றி எழுதி விட்டேன்.பெரிய எழுத்தாளனாக ஒன்றே ஒன்றுதான் தடுக்கிறது. ஒருநாய் வாங்கி பின் அதைப்பற்றி எழுதவேண்டும்.

Saturday, June 12, 2010

ஒரு போஸ்டர்

தினம் சில வரிகள் - 35

தனிப்பட்ட கடிதங்களையும் போஸ்டர் ஒட்டினால்தான் தமிழ் எழுத்தாளன் ஆக முடியும். எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர் அருணாசலம் வெற்றிவேல் என் டிவிட்டுகளைப் படித்துவிட்டுக் குழுமத்தில் எழுதிய கடிதங்கள்.

கடிதம் - 2:

மற்ற ட்விட்டுகள் பற்றி தெரியவில்லை..ஆனால்..தங்களுக்கு இந்த form இயல்பாகவே , எளிதாகவே வருகிறது என்று நினைக்கிறேன்..ஆகவே தான் அற்புதமான வரிகள் அடிக்கடி தென்படுகிறது.. வாழ்த்துக்கள்.

- அருணாசலம் வெற்றிவேல்

கடிதம் - 1:

ட்விட்டர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது..பி.கே.எஸ்ஸின் ட்விட்டுக்கள் தான் எனக்கு முதல் அறிமுகம்.

பி.கே.எஸ்ஸின் ட்விட்டுகள் அருமை என்றால் சுகா கொடுத்த பின்னூட்டம் மிக அருமை..

என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு ட்விட் என்றால் என்ன என்று விரிவாக சொல்லவும்.

- அ.வெற்றிவேல்

என் பதில்

அருண் வெற்றிவேல் தமிழின் இலக்கியத்தையும் அரசியலையும் நன்கு அறிந்தவர். திறமை எங்கிருந்தாலும் பாரட்டக்கூடியவர். அவருக்கு என் அருமை தெரிவதில் ஆச்சரியமில்லை. அவரைப்போல, மனதில் நினைப்பதோடு நின்றுவிடாமல், இந்த மாதிரி நிறைய கடிதங்களை எனக்கு எழுதுகிறவர்களே நுட்பமான வாசகர்கள். அவர்களுக்காகவே நான் பல வேலைகளுக்கிடையிலும் விடாமல் எழுதுகிறேன்.

மீண்டும் டிவிட்டுவம்

தினம் சில வரிகள் - 34

அந்த எழுத்தாளரைப் பிடிக்குமென்றார் நண்பர்.எப்படி என்றேன்.வம்புகளை வாய்ப்பேச்சில் வைத்துக்கொள்கிறார்.எழுத்தில் கொணர்வதில்லை என்றார்.

புரியாவிடினும் ஸ்பானியமொழி உதைபந்து நேர்முகவர்ணனையாளர்கள், ஆட்டத்தின்மீதான உயிர்ப்பையும் உச்சத்தையும் ஆர்வத்தையும் உணரவைக்கிறார்கள்.

என் குடைக்கு வெளியே பெய்யும் மழையில் என் எழுத்துகள் நனைகின்றன.

படிச்சா புத்தி வரும். நல்லவனா இருக்கவும் வாழவும் படிப்பு அவசியமில்லை என்று இன்று வாழ்க்கை மீண்டும் சொல்லித் தந்தது.

கோடையின் கொடுமையை டிவிட்டரிலும் உணருகிறேன்.

சனி காலை மசாலோதோசை கிடைத்தும் சந்தோஷப்படாமல் வேர்க்கடலை சட்னி இருந்தால் நல்லா இருக்குமே என நினைக்கிற நான் நிச்சயம் ஆணாதிக்கவாதிதான்.

ஒருவாரமாக வலைப்பதிவுகளைப் படித்த அலுப்பு நேற்று மாலை அலுவலிலிருந்து வந்ததும் இரவு உணவைக்கூட அருந்தவிடாமல் தூக்கம் கண்களைத் தழுவிக்கொண்டது.

சனி காலை 5:45க்கே எழுந்துவிட்டேன்.நான் தேர்வெழுதுகிற பருவங்களில்கூட இப்படிச் செய்ததில்லை. மகன் தேர்வெழுதுகிறார்.

எனக்குப் பிடித்த சைனீஸ் உணவைச் சாப்பிடும் ஒவ்வொரு கணமும் மா சே துங்குக்கு என்னை நிச்சயம் பிடித்திருக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.

குடிக்கலாமா கூடாதா என்ற குழப்பத்தில் முடிவெடுக்கும்முன் வெள்ளியிரவு பல நேரங்களில் வீணாகிவிடுகிறது.

வெற்றுத்தாளில் இருந்தும் கதையோ கவிதையோ கண்டெடுக்க முடிந்தால் நீங்கள் நுட்பமான வாசகர் ஆகிவிட்டீர்கள்.

நள்ளிரவில் கேட்கும் தொலைதூர மின்வண்டி ஓட்ட சத்தத்தில் என் சிறுவயது ஊரின் புகைவண்டி நிலைய சித்திரம் நினைவுக்கு வருகிறது.

மின்விசிறியா குளிரூட்டப்பட்ட அறையா என்றுதான் கேள்வியெழுகிறது. ஜன்னலைத் திறக்கலாமென்பதை மறைக்கிறது திரைசீலை.

கொடுத்த வேலையை மட்டும் செய்யவேண்டுமென்ற ஞானோதயம் கூடுதலாய்ச் செய்த வேலை கவனிக்கப்படாமல் போகும்போதெல்லாம் வருகிறது.

கடைசி நிறுத்தத்தில் மின்வண்டியைத் தனியே விட்டுவிட்டு நடக்கும்போது பிரிவுத்துயரை தற்காலிகமாக உணர்ந்திருக்கிறீர்களா?

அறிவியல் இல்லாமல் அறிவியல் கதை எழுத முடியும். கதையே இல்லாமல் கதை எழுதுவதில்லையா. அப்படித்தான்.

கால்பந்தா செக்ஸா என்று கேட்டதற்குப் பலர் கால்பந்து என்றார்களாம். புரிகிறது.கால்பந்தை 90 நிமிடங்கள் அனுபவிக்கலாம்.

Monday, June 07, 2010

தினம் சில வரிகள் - 33

நேற்று இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் பார்த்தேன். இரண்டும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள். நாயகி, குணச்சித்திர நடிக நடிகையர் என்று பல தமிழ் முகங்கள். உருவாக்கத்தில் உழைத்தவர்களிலும் தமிழர்கள் இருந்திருக்கலாம். உதவி எழுத்துடன் (சப்-டைட்டில்) தமிழ்ப்படம் பார்த்தது மாதிரியே இருந்தது. இதில் ஒருபடம் பின்னர் தமிழ் நாயகனை வைத்துத் தமிழிலும் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஒரே கதையும் ஒரே நடிகர்களும் தென்னிந்திய மொழிகளில் வலம் வருவது கலாசாரப் பரிவர்த்தனையும் ஒருமைப்பாடுமென்று சொல்லுவதா? கதைப் பஞ்சத்திலும், கலைஞர்கள் பஞ்சத்திலும், அதைமீறி ஒரே மாதிரியான ரசனைகொண்ட ரசனை பஞ்சத்திலும் இருக்கிறோமென்று சொல்லுவதா? இவை எதுவுமில்லை. எது வெற்றி பெறுகிறதோ எது அந்த நேரத்தில் புகழில் இருக்கிறதோ அதை வைத்து வேகமாகப் பணம் பண்ண முடியுமா என்று பார்க்கும் உத்தி என்றே தோன்றுகிறது. வாயசைவு (டப்பிங்) உதவியுடன் தெலுங்கு பேசுகிற தமிழ்நாயகிகள் தமிழ்ப்படங்களில் தெரிவதைவிட கவர்ச்சிகரமாக தெரிகிறார்கள். இது நமக்குத் தெரியாத ஒன்றைப் பேசுகிறவர் (செய்கிறவர்) மீது வரும் இயல்பான கவர்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும், சுந்தரத் தெலுங்கை சுந்தரிகள் பேசக் கேட்பது சுகமே.

Thursday, June 03, 2010

தினம் சில வரிகள் - 32

40 வயதுக்குமேல் பலவருட இடைவெளிக்குப் பின் வேலை தேடுகிற நண்பர் சொன்னார். 18 வயது பெண்ணின் காதலை வெல்லும் பிரயத்தனம் தேவைப்படுவதாக.

டிவிட்டரில் எல்லா எழுத்துவகைகளும் வந்துவிட்டன. ரெஸ்யூம் (பயோடாட்டா) வந்திருக்கிறதா?

இந்த வாரம் நல்ல வெயில். எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்துக் கொள்கிறேன். கஷ்டங்களை இன்பமென ரசித்தெழுத அவரால் முடியும்.

எதிரணி மீது உளவியல்ரீதியான சீண்டல்களைத் தான் செய்யாமலேயே தன் அணியால் வெல்லமுடியுமென்பதை அறியாத பலவீனம் கோச் பில் ஜாக்சனுக்கு இருக்கிறது.

ராக்கிங் சேரிலிருந்து பார்க்கும்போது உலகமும் ஆடுவது தெரிகிறது.

என்னுடன் சண்டையிட்டவர்களே என்னை மன்னியுங்கள். அடுத்த சண்டையை இன்னும் சிநேகமான மனநிலையுடனும் கரிசனத்துடனும் போடுவோம்.

பேசியென்ன பலனென நினைக்கும்போது மௌனமாக இருக்கிறேன். பேசாமல் இருந்து என்ன பலனென நினைக்கும்போது பேசுகிறேன்.

என் மகன் விமர்சகராகி விடுவாரோ என பயமாக இருக்கிறது. ஷேக்ஸ்பியர் மொழியில் நவீனமே இல்லை என்கிறார்.

டிவிட்டெழுத்துக்குப் பொருத்தமான உவமை கேட்டார். எலவேட்டர் செக்ஸ் என்றேன்.

Monday, May 31, 2010

Outposts in Chess - Kavinayan Sivakumar

It's complicated

தினம் சில வரிகள் - 30

2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும். ஆனால், அப்படத்தைப் பார்தத் நாள் முதலாக மெரில் ஸ்ட்ரீப் எனக்குப் பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக ஆகிப்போனார். அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் எனக்குப் பிடித்துப் போயின. ஹாலிவுட்டில் ஜாக் நிக்கசன், மெரில் ஸ்ட்ரீப் என்று நடிக/நடிகைகளில் ஒரு புனிதப் பட்டியல் (revered list) இருக்கிறது என்று பின்னர் தெரிந்தது. அந்தப் பட்டியலுக்கு மெரில் தகுதியானவர்தான் என நினைத்துக் கொண்டேன்.

மெரிலுக்காகப் பார்க்க வேண்டுமென்று எடுத்து வைத்த It's complicated படத்தை இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து முடித்தேன். தியேட்டரைத் தவிர வீட்டில் ஒரே அமர்வில் என்னால் ஒரு படத்தை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆகையால் அதை இப்படத்தின் குறையாகச் சொல்ல முடியாது. மெரிலுக்கு வயதாகிவிட்டது என்பது படத்தில் தெரிகிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினருக்கிடையே மீண்டும் உறவு மலர்வதை நிஜவாழ்வில் கேட்டிருக்கிறேன். அதனால் மெரிலுக்கும் அவர் முன்னாள் கணவருக்குமான மீள்உறவு படத்தில் ஆச்சரியம் தரவில்லை. அதேநேரத்தில் மெரில் ஸ்டீவ் மார்ட்டினுடனான புது உறவையும் விரும்புகிறார். இந்தக் குழப்பத்தை மெரில் பாத்திரம் வெளிப்படுத்துகிற உடல்மொழி, சிரிப்பு, குறைவான வசனங்கள் ஆகியன பிடித்திருந்தன. உறவுச் சிக்கலும், குழப்பமும், சீரியசுமான ஒரு கதைக் கருவை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய கதைகளைச் சீரியஸாகச் சொல்லப்போனால் அபத்தத்திலும், தோல்வியிலும் முடியும் என்பது என் தனி எண்ணம். இத்தகைய படங்களை நகைச்சுவையே சிறப்பாக ஆக்குகின்றன. அலெக் பால்ட்வினுக்கும் ஸ்டீவ் மார்டினுக்கும் நகைச்சுவையில் சோபிக்க மெரில் முன்னாலும் கதையிலும் அதிக இடமில்லை. வயதுக்கு வந்த குழந்தைகள் உடையவர்களின் பிரச்னைகள், உறவுமுறை, காதல் ஆகியவற்றைச் சொல்லும்படியான படங்கள் அதிகம் இல்லை. அதிலும் இந்த வயதுடைய பெண்களின் பிரச்னைகளை அணுகும் படங்கள் அதிகம் இல்லை. அதனால் இயக்குநரின் மிகவும் தைரியமான முயற்சி இப்படமெனச் சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்படத்தில் மெரில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று படம் முடிந்தவுடன் தோன்றுகிறது. அதுவே அவர் சிறப்பு.அவரில்லாமல் வேறு ஒருத்தர் அவ்வேடத்தில் நடித்திருந்தால் மட்டுமே மெரிலின் சிறப்பை நம்மால் உணர முடியும். 6/10.