இது தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரத்தில் கேஷ¤வலாகச் சிலவாரங்கள் முன்னர் பகிர்ந்து கொண்டது. அதில் கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் மாற்றி இங்கே சேமித்து வைக்கிறேன்.
உடல்நிலை சரியில்லாமலோ தளர்வாகவோ இருக்கிற நேரங்களில் நான் புத்துணர்வுக்கும் சலிப்பைத் தொலைக்கவும் சுவாரஸ்யம் நிறைந்த புத்தகங்களையே படிப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு பொழுதில் - மீனின் சிறகுகளைக் கூட - அதில் இருக்கிற பாலியல்ரீதியான விவரணைகள் பற்றி முன்னமே அறிந்திருந்ததால்தான் - அந்த சுவாரஸ்யத்திற்காகப் - படித்தேன். பால்யப் பருவத்தில் காமம் தெரியாத வயதில் (உண்மையைச் சொன்னால், காமத்தைக் கடக்கிற செயற்முறை வழிகள் இல்லாத நிலையில் என்று சொல்வது சரியாக இருக்கும்) இளைஞர்கள் நீலப்படம் பார்த்து ஆதங்கத்தைக் கனவுகளை ஓரளவு தீர்த்துக் கொள்வார்கள். அப்படி தளர்ந்தும் சோர்ந்தும் இருக்கிற நேரங்களில் நான் சுவாரஸ்யமான புத்தகங்களைப் படித்து என்னையும் சுவாரஸ்யமாக்கிக் கொள்வது வழக்கம். வாழ்க்கையும் சுவாரஸ்யமும் போல, இலக்கியமும் சுவாரஸ்யமும் நல்ல ஜோடி என்பது என் எண்ணம். சுவாரஸ்யம் என்றால் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்கத் தோணாத புத்தகம் என்று நான் வரையறுக்கிறேன். என்னால் பல நேரங்களில் சிற்றிதழ்களையும் இலக்கியப் புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க முடிவதில்லை. என் மனஒருமையின்மை அதற்குக் காரணம் என்று சொல்லி வைக்கிறேன். இந்த இடத்தில் நேநோ என்ற சாரு நிவேதிதாவின் கதைத் தொகுதிக்கு அசோகமித்ரன் எழுதிய முன்னுரை கலங்கலாக நினைவுக்கு வருகிறது. சாருவின் நல்ல கதைகளைப் புகழ்ந்த அ.மி, அவருடைய மற்ற கதைகளைத் அவர் புரிதலுக்கு மிஞ்சிய கதைகள் என்ற பொருளில் அடக்கத்துடன் சொல்லியிருப்பார். ஆனால் அந்த அடக்கத்தினூடே தெரியும் அசோகமித்ரனின் நுட்பமான கிண்டலை வாசகர் புரிந்து கொள்ள முடியும். என் மனஒருமையின்மை என்கிற வரியின் அங்கதம் உங்களுக்குப் புரியவேண்டுமே என்று நானோ இங்கே உதாரணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், பலநேரங்களில் முக்கியமாக வாசிக்கிற வழக்கம் இடையில் விட்டுப் போயிருந்தாலோ குறைந்து போயிருந்தாலோகூட அதை மீண்டும் முழுஅளவில் தொடங்குவதற்கு முன் நான் சுவாரஸ்யமான புத்தகங்களுடனேயே ஆரம்பிக்கிறேன். அந்தப் புத்தகத்தை ஏற்கனவே படித்திருந்தாலும் படிப்பது உண்டு. அப்படியே படிப்படியாக சீரியஸான புத்தகங்களுக்கு மீண்டும் செல்ல எனக்கு அது உதவுகிறது.
எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கான புத்தகங்களைத் தமிழில் எழுதுகிறவர்கள் என் ரசனையின்படி வெகுசிலர்தான். பெயர் சொன்னால், ஏன் இந்தப் பெயரைச் சொல்லவில்லை, ஏன் இந்தப் பெயரைச் சொன்னேன் என்ற விவாதங்கள் நீளுமோ என்று பயமாக வேறு இருக்கிறது. ஆனாலும் என் ரசனைப்படி என்ற தப்பித்தலை இட்டுவிட்டதால் பெயர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா, சரோஜாதேவி. சரோஜாதேவியுடன் மற்றப் பெயர்களை இணைத்து அவர்களைத் தாழ்த்திவிட்டேன் என்று என் வீட்டருகில் யாரும் வந்து போராட்டம் நடத்தப் போகிறார்களோ என்று பயமாக வேறு இருக்கிறது. அதுமட்டுமில்லை, சரோஜாதேவி புத்தகங்களுக்கு வாசக அனுபவங்கள் எழுதச்சொல்லி வேண்டி எத்தனை தனிமடல்கள் வரப்போகின்றனவோ என்று கவலையாகவும் இருக்கிறது. இங்கே சரோஜாதேவி என்பது நீலக்கதைகளுக்கு ஒரு குறியீடு. கொச்சையான மொழியில். அவ்வளவுதான். பெரியார்கூட கொச்சையான (ஆபாசமாக அல்ல) பேச்சுமொழியில்தான் கூட்டங்களில் பேசுவாராம். விடுதலையில் அவர் பேச்சின் கொச்சை நீக்கப்பட்டு உரைநடை வடிவம் வெளிவருமாமே. எனவே, சரோஜாதேவி என்ற பெயரை நேரடியாக அப்படியே எடுத்துக் கொண்டு, அப்படிப்பட்ட கதைகளில் தெறிக்கும் முறையற்ற வார்த்தைகள், பெண் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்செயல்களை நான் ஆதரிக்கிறேன் என்று சுவாரஸ்யத்திற்காகச் சேர்த்த வார்த்தை என் மீதே பூமராங்காகப் பாய்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், "ஷகீலா" என்ற வார்த்தையைக் கூகுள் தேடுஇயந்திரத்துள் தேடியவர் என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தெரிந்தது. ஷகீலா பற்றி நாம் ஏதும் எழுதவில்லையே, பாவம் வந்து ஏமாந்து போயிருப்பாரே என்று நினைத்தேன். எதிர்காலத்தில் அப்படி வருகிறவர்களை ஏமாற்றுகிற பாவம் நமக்கெதற்கு என்றும் தோன்றியது. அதனால் கொஞ்சநாள் கழித்து மீனின் சிறகுகள் பற்றி எழுதியபோது, நாவல் ஷகீலா படம்போல சுவாரஸ்யமாகப் போகிறது என்று சொல்லியிருந்தேன். உடனே, அறிவுஜீவி நண்பர் ஒருவரிடமிருந்து எனக்குத் தனிமடல். அந்த வாக்கியம் உங்கள் எழுத்துத் தரத்திற்கு ஏற்ற மாதிரி இலலை, மாற்றிவிடுங்கள் என்று. நான் என்ன எழுதவேண்டும் என்றுகூட நண்பர்கள் சொல்கிறபடி ஆகிவிட்டதே என் சமூக சுதந்திரம் என்றாகிப் போனது. எந்த ஷகீலா படத்தையும் நான் பார்த்ததில்லை. கவனிக்கவும், ஷகீலா நடித்த படத்தை மட்டுமே பார்த்ததில்லை என்றே சொல்கிறேன். மற்றபடிக்கு, ஷகீலா என்கிற வார்த்தை அங்கே ஒரு குறியீடு என்பதைக் கூட என் அறிவுஜீவி நண்பர் அறியவில்லையே என்ற கவலையே இங்கே இவ்வளவு இதை நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள், ஒரு தமிழ் எழுத்தாளன் நாலுவரி எழுதுவதற்கும் எதைப் பற்றியெல்லாம் பொலிடிகலி கரெக்ட்டாக யோசிக்க வேண்டியிருக்கிறது. அதையும் மீறித் தமிழன்னையின் மீதான காதலால் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து பாராட்டுவீர்களாக.
அப்படித்தான் சலிப்பும் தளர்வுமாக இருந்த இந்த ஒரு மாதத்தில் வாத்தியாரிடம் (சுஜாதா) திரும்பப் போனேன். யவனிகாவையும், நிலா நிழலையும் படித்தேன். நிலா நிழல் தினமணி கதிரில் தொடராக வந்தபோது ஏற்கனவே படித்ததுதான். இருக்கையின் நுனியில் உட்கார்ந்து திகில் படம் பார்க்கிற மாதிரி, அடுத்து என்ன என்ன என்று காக்க வைக்கிற கலையில் வாத்தியார் வாத்தியார் பட்டத்துக்குத் தகுதியானவர். யவனிகா நன்றாக ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் வேறு. சுவாரஸ்யத்திற்குக் கேட்கவா வேண்டும், ஜுரவேகத்தில் ஓடுகிறது. ஆனால், கடைசியில் திசைமாறி ஜவ்வு ஜவ்வென்று இழுத்து (வாத்தியார் தமிழ் சினிமாக்களுக்குத் திரைக்கதை/வசனம் என்று போனதால் அங்கிருந்து வந்த தாக்கமோ.) திருப்பத்திற்கு மேல் திருப்பம் என்று எப்போடா முடியும் என்று ஆகிவிடுகிறது. தமிழ்ச்சினிமா மாதிரியே வில்லனுக்கு கடவுள் - சரி வேண்டாம் இயற்கை - தண்டனை தருகிறது. தேஜ்மயி என்ற நடிகையும் பாத்திரமும் கதையில் வருகிறார்கள் பாதிக்குப் பாதி. அதற்கும் முக்கியக் கருவான யவனிகா என்ற சோழகாலத்துச் சிலை காணாமல் போனதற்கும் என்ன சம்பந்தம் என்று இறுதிவரை புலப்படவில்லை. தமிழ்ச்சினிமாவில் காமெடியை கதைக்கு வெளியே தனிடிராக்கில் ஓட்டுவதுபோல இது ஒரு டிராக் என்று வாத்தியார் ஓட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இந்த நாவலைத் தொடராக எழுதிக் கொண்டிருந்தபோது வாத்தியாருக்கு உடல்நலம் சரியில்லாதுபோய், மீதி அத்தியாயங்களை அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதினாராம். வாத்தியார் அதைக் கொஞ்சூண்டு சிலாகித்துச் சொல்லியிருந்தார். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவார் என்று சொல்லப்படுகிற தி.ஜானகிராமனும், தன்னுடைய பல கதைகளை/நாவல்களை வார்த்தை பிசகாமல் தான் சொல்ல மற்றவர்களை எழுதவைத்த ஜெயகாந்தனும் நினைவுக்கு வந்தார்கள். ஆனாலும் வாத்தியார் என்றைக்கும் இளமையானவர் என்பதே அவர் எழுத்துகளின் ரகசியம். அது இந்தப் புத்தகத்திலும் தெரிகிறது. எனக்கோ இப்போதே என் குழந்தைகளுடனான தலைமுறை இடைவெளி தெரிய ஆரம்பித்துவிட்டது போல இருக்கிறது. இவர் என்னடாவென்றால், மனதை இளமையாக வைத்திருப்பதால் அந்த இளமையை எழுத்தில் கொண்டு வருகிறார்.
நிலா நிழல் யவனிகாவைவிடப் பிடித்திருந்தது. அதில் ஒரு அத்தியாயம் முதல் பதிப்பில் பிரசுரமாகாமல் போய்விட்டதாம். இந்தப் பதிப்பின்போது தொடராக வந்ததிலிருந்து தேடி எடுக்க முடியாமல், வாத்தியார் அந்த அத்தியாயத்தைத் திரும்ப அப்படியே எழுதிவிட்டாராம். எழுத எழுத ஞாபகம் வந்துவிட்டதாம். நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தினரின், இளவயதினரின் வாழ்க்கையையும் மனநிலைகளையும் சிறப்பாகச் சொன்னவர்களில் ஆதவனுக்கு முன்னதாக வைக்கப்பட வேண்டியவர் வாத்தியார் என்று நான் சொல்வது உண்டு. அப்படி யாருடனாவது சம்பாஷிக்க செய்ய வேண்டி வருமானால், உதாரணமாக நிலா நிழலையும் காட்டலாம்.
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் அ. முத்துலிங்கம் தொகுத்த 20 எழுத்தாளர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். சா. கந்தசாமியின் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது அசோகமித்ரன் சொல்கிறார். "மிகப்பெரிய விபரீதங்கள் அரைவாக்கியத்தில் கூறப்பட்டுவிடுகின்றன. மிகச்சாதாரண சம்பவங்கள் என்று நினைக்கக் கூடியவை மிக விரிவாகக் கூறப்படுகின்றன. இந்த நோக்கு ஒரு ஆன்மீக இலக்கைத்தான் சுட்டுகின்றன" என்று. எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள் என்று தலைப்பு வைத்துவிட்டு, அதைப்பற்றி அரைகுறையுமாக எழுதிவிட்டு, மற்றவற்றை நான் வியாக்கியானப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு எழுமானால், என்னுடைய ஆன்மீக இலக்கை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்று பொருள். :-)
அ. முத்துலிங்கம் முன்னுரை எழுதியிருக்கிறார். சுஜாதாவுக்கு இணையாக/அடுத்தபடியாக தமிழில் சுவாரஸ்யமாக எழுதுகிறவர் அ. முத்துலிங்கம் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர்களை அவர்களுக்குப் பிடித்த புத்தகம் பற்றி எழுதச் சொன்னவுடனேயே முன்னுரை எழுத ஆரம்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார்கள், எவ்வளவு ஒத்துழைப்புத் தந்தார்கள் என்று டைரிக் குறிப்பு மாதிரி சுவாரஸ்யமாக நீள்கிறது முன்னுரை. கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் சூத்ரதாரியின் மணல்கடிகை பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் தலைப்பே புத்தகத்தின் தலைப்பு. "இயல்புவாதம் உலகம் முழுக்க மனிதனின் சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது. இயல்புவாதம் உண்மையில் சற்று முதிர்ந்த மனம் கொண்டவர்களுக்கான அழகியல்" என்கிறார் ஜெயமோகன். முதிர்ந்த மனமே சிறுமையையும் வீழ்ச்சியையும் குரூரத்தையும் அவற்றின் விவரிப்பையும் உள்வாங்கி ரசிக்க முடியும் என்பது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால், எனக்கு இன்னமும் டிராஜடியில் முடிகிற திரைப்படங்களைப் பார்க்கப் பிடிப்பதில்லை. காதல் என்ற திரைப்படத்தை அதனாலேயே பார்க்கவில்லை. ஆனால், சிறுமையும் வீழ்ச்சியும் குரூரமும் நிறைந்த வாழ்க்கைகள் பொதுவாக சந்தோஷத்தையும் வாழ்க்கையையும் கொண்டாடுகிற வாழ்க்கையாகவும் இருக்கும். உதாரணமாக, சுனாமி தாக்கியபோதும், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள் குடித்தும் பழைய துணிகள் வேண்டாமென்று மறுத்தும் நன்றாகச் சாப்பிட்டும் நேரத்தைக் கழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு சில பத்திரிகைகளில் வந்தது. எந்தச் சிறுமையிலும் வீழ்ச்சியிலும் வாழ்க்கையின் சந்தோஷங்களை, கொண்டாட்டங்களைக் கைவிடாத தன்மைக்கு அடையாளமாக நான் அதைப் பார்த்தேன். அதுதான் சரியென்றும் தோன்றியது. அதனால் இயல்புவாதம் என்பது சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது என்ற வாக்கியம் என்னளவில் கொஞ்சம் அதிரடியான வாக்கியம்தான். இயல்புவாதம் என்பது சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் சொல்லக் கூட ஏன் இருக்கக் கூடாது, இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கட்டுரைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. புத்தக விமர்சனங்களையும் வாசக அனுபவங்களையும் தேடிப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வம் ஒரு கூடுதல் காரணமாக இருக்கலாம்.
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
Monday, November 26, 2007
Wednesday, November 21, 2007
அ. முத்துலிங்கம்
[அ. முத்துலிங்கத்தின் மஹாராஜாவின் ரயில் வண்டி சிறுகதை தொகுப்பிற்கான மதுமிதாவின் வாசக அனுபவத்திற்கு (http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/9be0579a649319be) எழுதிய பதில் இது. இங்கே சேமித்து வைத்துக் கொள்கிறேன்.]
வாசக அனுபவத்திற்கு நன்றி. மஹாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பைப் படித்த நாட்களை உங்கள் கட்டுரை நினைவுபடுத்திவிட்டது. இதே தொகுப்பைப் பற்றி உஷாஜி எழுதிய வாசக அனுபவத்தையும்தான். அ.மு. எழுத்துகள் பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சனக் கட்டுரை திண்ணையில் இருக்கிறது. ஜெயமோகன் முக்கியமான படைப்பாளிகளைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பிலும் இருக்கிறது.
அ.மு. தொகுப்பின் முன்னுரையில் உண்மையான கதைகள் கூடாது, உண்மைத்தனமான கதைகள் எழுத வேண்டும் என்பதற்குச் சொல்கிற கதையும் கருத்தும் முதலில் படித்ததுமே பிடித்ததாலேயே அத்தொகுப்பைத் தொடர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது.
'நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார், என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும், அப்படி நம்பிக்கை, இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த உலகத்துக்கு.' என்று அ.முத்துலிங்கம் போலவே கவிஞர் சுகுமாரனும் ஒரு தொகுப்பில் குறிப்பிட்டிருந்தார். எல்லா எழுத்தாளர்களின் ஆதார நம்பிக்கையும் இதுதான் என்று நினைக்கிறேன்.
ரொட்டியும் இரு சிறுவர்களும் அந்த நாயும் இன்னமும் நினைவிலிருக்கிறார்கள்.
அ.முத்துலிங்கத்தின் கதைகள் வெகுசுவாரஸ்யமானவை. ஜெயமோகன் அவரைக் கதைசொல்லி என்கிறார். கி.ரா. வரிசையில் வைக்கிறார். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிலேயே சிறந்த எழுத்தாளர் என்றுகூட ஜெயமோகன் அ.மு.வைப் பற்றி எழுதிய ஞாபகம். சு.ரா. இங்கே வந்திருந்தபோது அ.மு எழுத்துகள் பற்றிய அவர் அபிப்பிராயத்தைக் கேட்டேன். பெரிய அபிப்பிராயம் ஒன்றும் இல்லை என்று தாண்டிச் சென்றுவிட்டார். அ.மு.வின் கதைகள் பெரும்பாலும் தன்மையிலும் (First Person), கதை சொல்லியாகவும், சிறுகதையின் இலக்கணங்களைப் பூர்த்தி செய்யாதவையாகவும் இருக்கும். பல சிறுகதைகள் நடைச்சித்திரம் போன்றும் தெரியலாம். சு.ரா.வுக்கு அ.மு. எழுத்துகள் முக்கியமாகத் தெரியாததற்கு இது காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு படைப்பு வாசிப்பவரின் மனதில் உண்டாக்கும் உணர்வுகளை வைத்தே அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த விதத்தில் அ.மு. என்னைப் பொருத்தவரையில் ஒரு முக்கியமான படைப்பாளி. ஆனால், கி.ரா. வரிசையில் அவரை வைக்க முடியுமா என்பது இன்னொரு கேள்விக்குறியும் கூட. அ.மு.வின் கட்டுரைகள்/நேர்காணல்கள் ஆகியவற்றை அவரின் கதைகளைவிட முக்கியமான பங்களிப்புகளாக நான் பார்க்கிறேன்.
வலைப்பதிவு வாசகர்களுக்காகப் பிற்சேர்க்கையாக சில சுட்டிகள்:
மஹாராஜாவின் ரயில் வண்டி பற்றி உஷா எழுதியதன் சுட்டி:
http://www.maraththadi.com/article.asp?id=458
புன்னகைக்கும் கதைசொல்லி என்று அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றி ஜெயமோகன் எழுதியவற்றின் சுட்டிகள்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302022&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302096&format=html
அ. முத்துலிங்கம் எழுதியவையும் அ. முத்துலிங்கம் எழுத்து பற்றியவையுமான இன்னும் பல படைப்புகள் திண்ணை.காமில் தேடக் கிடைக்கும்.
வாசக அனுபவத்திற்கு நன்றி. மஹாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பைப் படித்த நாட்களை உங்கள் கட்டுரை நினைவுபடுத்திவிட்டது. இதே தொகுப்பைப் பற்றி உஷாஜி எழுதிய வாசக அனுபவத்தையும்தான். அ.மு. எழுத்துகள் பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சனக் கட்டுரை திண்ணையில் இருக்கிறது. ஜெயமோகன் முக்கியமான படைப்பாளிகளைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பிலும் இருக்கிறது.
அ.மு. தொகுப்பின் முன்னுரையில் உண்மையான கதைகள் கூடாது, உண்மைத்தனமான கதைகள் எழுத வேண்டும் என்பதற்குச் சொல்கிற கதையும் கருத்தும் முதலில் படித்ததுமே பிடித்ததாலேயே அத்தொகுப்பைத் தொடர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது.
'நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார், என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும், அப்படி நம்பிக்கை, இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த உலகத்துக்கு.' என்று அ.முத்துலிங்கம் போலவே கவிஞர் சுகுமாரனும் ஒரு தொகுப்பில் குறிப்பிட்டிருந்தார். எல்லா எழுத்தாளர்களின் ஆதார நம்பிக்கையும் இதுதான் என்று நினைக்கிறேன்.
ரொட்டியும் இரு சிறுவர்களும் அந்த நாயும் இன்னமும் நினைவிலிருக்கிறார்கள்.
அ.முத்துலிங்கத்தின் கதைகள் வெகுசுவாரஸ்யமானவை. ஜெயமோகன் அவரைக் கதைசொல்லி என்கிறார். கி.ரா. வரிசையில் வைக்கிறார். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிலேயே சிறந்த எழுத்தாளர் என்றுகூட ஜெயமோகன் அ.மு.வைப் பற்றி எழுதிய ஞாபகம். சு.ரா. இங்கே வந்திருந்தபோது அ.மு எழுத்துகள் பற்றிய அவர் அபிப்பிராயத்தைக் கேட்டேன். பெரிய அபிப்பிராயம் ஒன்றும் இல்லை என்று தாண்டிச் சென்றுவிட்டார். அ.மு.வின் கதைகள் பெரும்பாலும் தன்மையிலும் (First Person), கதை சொல்லியாகவும், சிறுகதையின் இலக்கணங்களைப் பூர்த்தி செய்யாதவையாகவும் இருக்கும். பல சிறுகதைகள் நடைச்சித்திரம் போன்றும் தெரியலாம். சு.ரா.வுக்கு அ.மு. எழுத்துகள் முக்கியமாகத் தெரியாததற்கு இது காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு படைப்பு வாசிப்பவரின் மனதில் உண்டாக்கும் உணர்வுகளை வைத்தே அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த விதத்தில் அ.மு. என்னைப் பொருத்தவரையில் ஒரு முக்கியமான படைப்பாளி. ஆனால், கி.ரா. வரிசையில் அவரை வைக்க முடியுமா என்பது இன்னொரு கேள்விக்குறியும் கூட. அ.மு.வின் கட்டுரைகள்/நேர்காணல்கள் ஆகியவற்றை அவரின் கதைகளைவிட முக்கியமான பங்களிப்புகளாக நான் பார்க்கிறேன்.
வலைப்பதிவு வாசகர்களுக்காகப் பிற்சேர்க்கையாக சில சுட்டிகள்:
மஹாராஜாவின் ரயில் வண்டி பற்றி உஷா எழுதியதன் சுட்டி:
http://www.maraththadi.com/article.asp?id=458
புன்னகைக்கும் கதைசொல்லி என்று அ.முத்துலிங்கம் படைப்புகள் பற்றி ஜெயமோகன் எழுதியவற்றின் சுட்டிகள்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302022&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302096&format=html
அ. முத்துலிங்கம் எழுதியவையும் அ. முத்துலிங்கம் எழுத்து பற்றியவையுமான இன்னும் பல படைப்புகள் திண்ணை.காமில் தேடக் கிடைக்கும்.
Tuesday, November 20, 2007
அயலகத் தமிழ் இலக்கியம் - 2
[ரெ. கார்த்திகேசுவின் இன்னொரு தடவை சிறுகதைத் தொகுதிக்கான வாசக அனுபவம். மித்ர வெளியீடு. விலை ரூபாய் 75.]
ஜென் குரு-சீட உறவில் ஒரு பழக்கம் உண்டு. சீடர் குருவுடன் பத்து ஆண்டுகள் தங்கியபின்னர் தானும் ஓர் ஆசிரியராகத் தனியே பிரிந்து செல்கிற தகுதி பெறுகிறார் என்று சொல்வார்கள். அதேபோல, ஓர் எழுத்தாளர் எத்தனை ஆண்டுகள் எழுதிய பின்னர் நன்றாக எழுதிய திருப்தியைப் பெறுகிறார் என்ற கேள்விக்கு magicwand பதில்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாக எழுதிய திருப்தி வந்துவிட்டால் அதற்குமேல் எழுதுவதை நிறுத்திவிடக் கூடும் என்று சொல்லலாம். ரெ.கார்த்திகேசு ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக எழுதிவருகிறார். ஆனால், அவர் இதுவரை எழுதியவற்றுள் "அழகிய அழுத்தமான அர்த்தமுள்ள படைப்புகள்" எவை என்று தீர்மானிப்பதில் தனக்குள் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவதாகவே சொல்கிறார். எனக்கெல்லாம் ஒரு புத்தகம் வெளிவந்ததுமே புத்தக வடிவில் எழுத்துகளைப் பார்க்கிற ஆசை போய்விட்டது. இத்தனைக்கும் என்னுடைய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி, ஒரு சிறுகதையை எழுத அவருக்குத் தூண்டுதல் தந்ததாக ரெ.கா. அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து எழுதுகிற "கங்கை" என்னால் ஊதி நெருப்பாக வைத்துக் கொண்டிருக்கவே முடியவில்லை.
ஆனால் ரெ.கா. எழுதிக் கொண்டிருக்கிறார் - "வாழ்க்கைத் தளங்களில் நிகழ்வுகளின் சதுரங்க நகர்வுகளைக் கண்டு அவற்றின் அர்த்தங்களை அசைபோடுகிற தியானமாக". 1974-ல் வெளிவந்த சிறுகதைத் தொகுதியில் ஆரம்பித்தால், 2001-ல் வெளியான "இன்னொரு தடவை" அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுதி. இடையில் இரண்டு நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள். ஆனால் தன்னுடைய எழுத்துகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிகம் பெருமைப்படக் கூடாது என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார். ஆனாலும், எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவரல்ல அவர். இது இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகம் அவருக்குள் இருப்பதைக் காட்டுகிறது. புதியதாக எழுத வருகிறவர்களும், என்னைப் போன்றவர்களும் பல ஆண்டுகள் படைப்பூக்கத்தை இவரைப்போல தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே மலேஷியத் தமிழர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியவை. மலேஷியத் தமிழர் வாழ்வு முறையும் சித்திரங்களும் அழுத்தமாகவும் விவரமாகவும் பதியப்பட்டுள்ளதா என்றால், கதைக்கேற்ற அளவுக்குப் பதியப்பட்டுள்ளன என்று சொல்லலாம். சுற்றுச் சூழல், கதைக்களன் ஆகியவற்றை விவரிக்கிற வர்ணனைகளைவிட ஆசிரியருக்கு நேரடியாகக் கதையில் நுழைந்து விடுவதும், கதை மாந்தரைப் பற்றிப் பேசுவதும், கதை மாந்தரைப் பேசவைப்பதன் மூலம் கதையை முன்னகர்த்திச் செல்வதும் பிடித்திருக்கிறது.
இந்தத் தொகுப்பின் பல கதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அதனாலேயே எல்லாக் கதைகளையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆசிரியராகப் பணிபுரிந்ததாலோ என்னவோ கதாசிரியருக்குக் குழந்தைகள்பால் இருக்கிற வாத்சல்யம் கதைகளில் தெரிகிறது. நாளைக்குக் கதையில் வருகிற பன்னிரண்டு வயது சிறுமி பத்மா, நல்லவராவதும் தீயவராவதும் கதையில் வருகிற முத்தையா மற்றும் கேசவன், வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் கதையில் வருகிற ஆறுமுகம், பாக்கியம் பிறந்திருக்கிறாள் கதையில் வருகிற கைக்குழந்தை புஷ்பலதா என்கிற பாக்கியம், கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையில் வருகிற செல்வி, தங்கச்சிறகுகள் கதையில் வருகிற பதின்ம வயது இளைஞர்கள் செந்தில்குமார் மற்றும் சுல்தான், ஒட்டுப்புல் கதையில் வருகிற காயத்ரி என்று இவர் கதைகளில் விதவிதமானக் குழந்தைகள், விதவிதமான குணாதிசயங்களோடு வளைய வருகிறார்கள். அப்பாத்திரங்கள் எவ்வளவு கலைநயத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதைவிட, அப்பாத்திரங்களை ஆசிரியர் ஒரு தகப்பனுக்கேயுரிய அக்கறையுடனும் வாஞ்சையுடனும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பின் சிறந்த கதைகளாக கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையையும் அடுத்து, ஒரு சுமாரான கணவன் கதையையும் சொல்லலாம்.
மலேஷியாவில் வாழ்கிற தினசரிக் கூலிகள், நடுத்தர வர்க்க மாந்தர்கள் ஆகியோரே ரெ.கா.வின் கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். தன் கணவனையும் மாமியாரையும் எதிர்த்துச் சிறையிலிருந்து விடுதலையாகிற பதின்ம வயது தங்கையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிற தமக்கை, அலுவலக மேலதிகாரியுடன் சாப்பிடப் போவது தவறில்லை என்று அம்மாவிடமும் தாய்மாமனிடமும் வாதிடுகிற கல்யாணமாகாத இளம்பெண் என்று தைரியமான பெண்கள் வருகிற கதைகளிலிருந்து, அம்மா சொல்லித் தந்த மதிப்பீடுகளுக்கு எதிரானது என்பதற்காக தான் விரும்பும் ஆணுடன் சாப்பிடப் போவதைத் தவிர்த்து அந்த உறவைத் தொலைத்துவிட்டு நிற்கிற அகிலாவரை பெண் பாத்திரப் படைப்புகள் உள்ளன. ஆனாலும் தொகுப்பை முழுவதுமாகப் படிக்கும்போது மலேஷியாவின் நடுத்தரத் தமிழ்க் குடும்பங்களில் - உறவுகள், சமுதாயப் பார்வை, பெண்விடுதலை ஆகிய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு நவீனம் பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
எல்லாக் கதைகளுமே தமிழ்க் குடும்பங்களைப் பற்றியன. அங்கங்கே சீனர்களும் மலாய்க்காரர்களும் நடத்துகிற உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால், எந்தக் கதையிலும் தமிழரல்லாத சீனரோ, மலாய்க்காரரோ முக்கியமானப் பாத்திரப் படைப்பாக வரவில்லை. பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கிற ஒருநாட்டில் அந்த இனக்குழுக்களுக்கிடையேயான உறவுகள், சிக்கல்கள், நெருக்கடிகள், தீர்வுகள் ஆகியவற்றை ஆசிரியர் எதிர்காலத்தில் கதைகளாக்கினால், கதைகளின் அடர்த்தியும் வீச்சும் அதிகமாகும் என்பது என் எண்ணம்.
மலேஷிய தமிழ் வாழ்க்கைக்கேயுரிய பிரத்யேகமான நிறை குறைகளையும் வாழ்வின் சிக்கல்களையும் விவரமாக அறிய முடியாவிட்டாலும், மலேஷியத் தமிழர்களின் பிரச்னைகளுக்கும் தமிழ்நாட்டில் வசிக்கிற ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் பிரச்னைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம் அறிய முடிகிறது. தான் எடுத்துக் கொண்ட பாத்திரப் படைப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளையும் எண்ணங்களையும் விவரிப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
முற்றும்.
ஜென் குரு-சீட உறவில் ஒரு பழக்கம் உண்டு. சீடர் குருவுடன் பத்து ஆண்டுகள் தங்கியபின்னர் தானும் ஓர் ஆசிரியராகத் தனியே பிரிந்து செல்கிற தகுதி பெறுகிறார் என்று சொல்வார்கள். அதேபோல, ஓர் எழுத்தாளர் எத்தனை ஆண்டுகள் எழுதிய பின்னர் நன்றாக எழுதிய திருப்தியைப் பெறுகிறார் என்ற கேள்விக்கு magicwand பதில்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாக எழுதிய திருப்தி வந்துவிட்டால் அதற்குமேல் எழுதுவதை நிறுத்திவிடக் கூடும் என்று சொல்லலாம். ரெ.கார்த்திகேசு ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக எழுதிவருகிறார். ஆனால், அவர் இதுவரை எழுதியவற்றுள் "அழகிய அழுத்தமான அர்த்தமுள்ள படைப்புகள்" எவை என்று தீர்மானிப்பதில் தனக்குள் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவதாகவே சொல்கிறார். எனக்கெல்லாம் ஒரு புத்தகம் வெளிவந்ததுமே புத்தக வடிவில் எழுத்துகளைப் பார்க்கிற ஆசை போய்விட்டது. இத்தனைக்கும் என்னுடைய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி, ஒரு சிறுகதையை எழுத அவருக்குத் தூண்டுதல் தந்ததாக ரெ.கா. அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து எழுதுகிற "கங்கை" என்னால் ஊதி நெருப்பாக வைத்துக் கொண்டிருக்கவே முடியவில்லை.
ஆனால் ரெ.கா. எழுதிக் கொண்டிருக்கிறார் - "வாழ்க்கைத் தளங்களில் நிகழ்வுகளின் சதுரங்க நகர்வுகளைக் கண்டு அவற்றின் அர்த்தங்களை அசைபோடுகிற தியானமாக". 1974-ல் வெளிவந்த சிறுகதைத் தொகுதியில் ஆரம்பித்தால், 2001-ல் வெளியான "இன்னொரு தடவை" அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுதி. இடையில் இரண்டு நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள். ஆனால் தன்னுடைய எழுத்துகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிகம் பெருமைப்படக் கூடாது என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார். ஆனாலும், எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவரல்ல அவர். இது இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகம் அவருக்குள் இருப்பதைக் காட்டுகிறது. புதியதாக எழுத வருகிறவர்களும், என்னைப் போன்றவர்களும் பல ஆண்டுகள் படைப்பூக்கத்தை இவரைப்போல தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே மலேஷியத் தமிழர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியவை. மலேஷியத் தமிழர் வாழ்வு முறையும் சித்திரங்களும் அழுத்தமாகவும் விவரமாகவும் பதியப்பட்டுள்ளதா என்றால், கதைக்கேற்ற அளவுக்குப் பதியப்பட்டுள்ளன என்று சொல்லலாம். சுற்றுச் சூழல், கதைக்களன் ஆகியவற்றை விவரிக்கிற வர்ணனைகளைவிட ஆசிரியருக்கு நேரடியாகக் கதையில் நுழைந்து விடுவதும், கதை மாந்தரைப் பற்றிப் பேசுவதும், கதை மாந்தரைப் பேசவைப்பதன் மூலம் கதையை முன்னகர்த்திச் செல்வதும் பிடித்திருக்கிறது.
இந்தத் தொகுப்பின் பல கதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அதனாலேயே எல்லாக் கதைகளையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆசிரியராகப் பணிபுரிந்ததாலோ என்னவோ கதாசிரியருக்குக் குழந்தைகள்பால் இருக்கிற வாத்சல்யம் கதைகளில் தெரிகிறது. நாளைக்குக் கதையில் வருகிற பன்னிரண்டு வயது சிறுமி பத்மா, நல்லவராவதும் தீயவராவதும் கதையில் வருகிற முத்தையா மற்றும் கேசவன், வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் கதையில் வருகிற ஆறுமுகம், பாக்கியம் பிறந்திருக்கிறாள் கதையில் வருகிற கைக்குழந்தை புஷ்பலதா என்கிற பாக்கியம், கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையில் வருகிற செல்வி, தங்கச்சிறகுகள் கதையில் வருகிற பதின்ம வயது இளைஞர்கள் செந்தில்குமார் மற்றும் சுல்தான், ஒட்டுப்புல் கதையில் வருகிற காயத்ரி என்று இவர் கதைகளில் விதவிதமானக் குழந்தைகள், விதவிதமான குணாதிசயங்களோடு வளைய வருகிறார்கள். அப்பாத்திரங்கள் எவ்வளவு கலைநயத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதைவிட, அப்பாத்திரங்களை ஆசிரியர் ஒரு தகப்பனுக்கேயுரிய அக்கறையுடனும் வாஞ்சையுடனும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பின் சிறந்த கதைகளாக கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையையும் அடுத்து, ஒரு சுமாரான கணவன் கதையையும் சொல்லலாம்.
மலேஷியாவில் வாழ்கிற தினசரிக் கூலிகள், நடுத்தர வர்க்க மாந்தர்கள் ஆகியோரே ரெ.கா.வின் கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். தன் கணவனையும் மாமியாரையும் எதிர்த்துச் சிறையிலிருந்து விடுதலையாகிற பதின்ம வயது தங்கையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிற தமக்கை, அலுவலக மேலதிகாரியுடன் சாப்பிடப் போவது தவறில்லை என்று அம்மாவிடமும் தாய்மாமனிடமும் வாதிடுகிற கல்யாணமாகாத இளம்பெண் என்று தைரியமான பெண்கள் வருகிற கதைகளிலிருந்து, அம்மா சொல்லித் தந்த மதிப்பீடுகளுக்கு எதிரானது என்பதற்காக தான் விரும்பும் ஆணுடன் சாப்பிடப் போவதைத் தவிர்த்து அந்த உறவைத் தொலைத்துவிட்டு நிற்கிற அகிலாவரை பெண் பாத்திரப் படைப்புகள் உள்ளன. ஆனாலும் தொகுப்பை முழுவதுமாகப் படிக்கும்போது மலேஷியாவின் நடுத்தரத் தமிழ்க் குடும்பங்களில் - உறவுகள், சமுதாயப் பார்வை, பெண்விடுதலை ஆகிய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு நவீனம் பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
எல்லாக் கதைகளுமே தமிழ்க் குடும்பங்களைப் பற்றியன. அங்கங்கே சீனர்களும் மலாய்க்காரர்களும் நடத்துகிற உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால், எந்தக் கதையிலும் தமிழரல்லாத சீனரோ, மலாய்க்காரரோ முக்கியமானப் பாத்திரப் படைப்பாக வரவில்லை. பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கிற ஒருநாட்டில் அந்த இனக்குழுக்களுக்கிடையேயான உறவுகள், சிக்கல்கள், நெருக்கடிகள், தீர்வுகள் ஆகியவற்றை ஆசிரியர் எதிர்காலத்தில் கதைகளாக்கினால், கதைகளின் அடர்த்தியும் வீச்சும் அதிகமாகும் என்பது என் எண்ணம்.
மலேஷிய தமிழ் வாழ்க்கைக்கேயுரிய பிரத்யேகமான நிறை குறைகளையும் வாழ்வின் சிக்கல்களையும் விவரமாக அறிய முடியாவிட்டாலும், மலேஷியத் தமிழர்களின் பிரச்னைகளுக்கும் தமிழ்நாட்டில் வசிக்கிற ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் பிரச்னைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம் அறிய முடிகிறது. தான் எடுத்துக் கொண்ட பாத்திரப் படைப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளையும் எண்ணங்களையும் விவரிப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
முற்றும்.
Monday, November 19, 2007
அயலகத் தமிழ் இலக்கியம் - 1
அடுத்த பத்தாண்டுகளில் அயலகத்தமிழர்களின் எழுத்தே தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போடப்போகிறது என்கிற ஆருடங்களில் எனக்கு நம்பிககையில்லை. வலியும் வேதனையும் அதனூடே எழுகிற எழுச்சியும் இல்லாமல் எதையும் புரட்டிப்போட முடியாது. புரண்டு வேண்டுமானால் படுக்க முடியும். இலங்கை தவிர மற்ற நாடுகளில் வாழுகிற அயலகத் தமிழர்கள் வாழ்க்கை வசதிகளுடன் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். அதனால் புரட்டிப் போடுகிற இலக்கியப் புரட்சிகள் அயலகத் தமிழர்களிடமிருந்து வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும், அயலகத் தமிழர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான பங்களிப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு நேருகிற வாய்ப்பு இருக்கிறது. இலங்கையின் அமைதியின்மை தவிர கணினியுகமும் தொழில்நுட்பமும் உலகளாவியவாதமும் பல தமிழர்களைச் சமீபகாலங்களில் பலநாடுகளில் குடியேற்றியுள்ளது. அவர்களிடமிருந்தெல்லாம் அந்தந்த நாட்டைப் பற்றிய வாழ்க்கைமுறை, மக்கள் ஆகியோரை அறிந்து கொள்ள முடிகிற படைப்புகள் இன்னும் அதிகமாக வெளிவரும். என்னுடைய கட்டுரைத் தொகுதியில் கூட, அமெரிக்கா என்ற தலைப்பின்கீழே அமெரிக்க வாழ்க்கை பற்றிய் நான் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பது நினைவுக்கு வருகிறது.
படைப்புகளில் வடிவ முக்கியத்துவமும் குறைந்து வருகிற நாளிது. நல்ல சிறுகதை ஒன்று உருவாக்கக்கூடிய உணர்வையும், மனவெழுச்சியையும் இப்போது ஒரு நல்ல கட்டுரை உருவாக்கி விடுகிறது. ஆதலால், அயலகத் தமிழர்கள் வடிவம், செய்நேர்த்தி ஆகிய கட்டுப்பெட்டி வாத்தியார்களின் அளவுகோல்களைப் பற்றிக் கவலைப்படாமல் பங்களிக்க முடியும். இந்தச் சுதந்திரமே, நிறைய அயலகத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன். தமிழில் வட்டார இலக்கியத்தில் இவையும் ஒரு பகுதியாகி அங்கீகரிக்கப்படுகிற நாள் தூரமில்லை. ஐம்பதுகளிலிருந்தே இலங்கைத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியானபோதும், சிங்கைத் தமிழ் இலக்கியம், மலேஷியத் தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம் என்று தற்போது நாம் கேள்விப்படுகிற சொற்கள் பொதுவானப் புழக்கத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வருகிற சாத்தியங்களை நேரடியாகப் பார்த்து வருகிறேன்.
இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. மலேஷியத் தமிழ் இலக்கியத்தில் நானறிந்த ஒரே எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுதான். அதற்கு முன்னரோ பின்னரோ பீர்முகம்மது என்ற மலேஷிய எழுத்தாளரின் பெயரைக் கேள்வியுற்றிருந்தபோதிலும் பீர்முகம்மதுவின் எழுத்துகளைப் படித்ததில்லை. ரெ.கார்த்திகேசு எழுத்தைக்கூட இணையம் இல்லாவிட்டால் அறிந்திருக்க மாட்டேன். இணையக் குழுமங்களில் அவர் எழுத்தைப் பார்த்தபின்னரே தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டு இலக்கியப் போக்கின் வரலாற்றில் பெருமளவு எழுத்தாளர்களைப் பற்றிய பெயர்ப் பரிச்சயமாவது பெற்றிருக்கிற, ஓரளவு இலக்கிய விஷயஞானம் உள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிற நான், மலேஷிய எழுத்தாளர் ஒருவரைப் பற்றி மட்டுமே அறிந்திருப்பதில் பாதிப்பங்கு எனக்கும் உண்டு என்றாலும், மீதிப்பாதிப் பங்கு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கும் உண்டு. கருணாகரமூர்த்தி, அ. முத்துலிங்கம் உள்ளிட்ட சிலரைத் தவிர இலக்கியக் குத்தகை எடுத்திருக்கிற தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மற்ற அயலக எழுத்தாளர்களுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. (இந்த இடத்தில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைப் பற்றி நான் பேசவேயில்லை. காரணம், அவற்றின் நோக்கம் பணமென்று தெரியும். ஆனால், அவைகூட உலகமயமாகிவருகிற சூழலில் அயலகத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் கொடுக்கலாம்.) தமிழ்நாட்டு இலக்கிய ஸ்கேலிலேயே அயலகத் தமிழர்களின் இலக்கியத்தையும் அளக்கிறார்கள். அதுவும் சரியில்லை. தலித் இலக்கியத்துக்கும் பெண்ணிய இலக்கியத்துக்கும் கொடுக்கிற ஒரு நெகிழ்வான பார்வையுடனேயே அயலகத் தமிழ் இலக்கியத்தையும் அணுக வேண்டும். ஏனென்றால், அயலகத் தமிழனுக்கு இலக்கியத்தைத் தமிழில் படைக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. நினைத்தால் அந்த நாட்டு மொழியிலேயோ பிரபஞ்ச மொழியான ஆங்கிலத்திலேயோ எழுதி எழுதுவதன்மூலம் தமிழில் கிடைக்கக் கூடிய பெயரைவிட பெரிய பெயரை வாங்குகிற வாய்ப்புகள் அயலகத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனாலும் தமிழின் மீது இருக்கிற ஆர்வத்தால் தமிழில் எழுத வருகிறார்கள் அயலகத் தமிழர்கள்.
இலக்கிய விமர்சனத்தில் தயவுதாட்சண்யம் கூடாது என்று சொல்கிற ஒரு கட்சி உண்டு. எதிரிக்கே தயவுதாட்சண்யம் காட்டிய மரபு நம்முடையது. இன்று போய் நாளை வா என்ற மரபு வேறு என்ன மரபு? ஆதலால், வாழ்க்கையில் காட்டுகிறோமோ இல்லையோ அறத்தையும் அதன் உணர்வெழுச்சியையும் சொல்லக்கூடிய இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது தயவுதாட்சண்யம் காட்டுவது சரிதான் என்று நான் நினைக்கிறேன். தயவுதாட்சண்யம் என்றவுடன் "ஆஹா ஓஹோ அருமை" என்று அனைத்தையும் பாராட்டச் சொல்லவில்லை. இலக்கண அளவுகோல்களிலும், ஒப்பீட்டு ஆய்வுமுறைகளிலும் ஒரு படைப்பின் தனிப்பட்ட அழகையும் இருப்பையும் ஒரேயடியாகப் புறக்கணிக்க வேண்டாம் என்றே சொல்கிறேன். அயலகத் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும்போது இந்த இலக்கிய விமர்சன அளவுகோல்களிலும் மாற்றங்கள் வரும் என்பது நான் ஆவலுடன் எதிர்நோக்குகிற ஒரு விஷயம். ஏற்கனவே, சுவாரஸ்யமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற வாதம் தமிழில் அடிபட்டுப் போயிருக்கிறது. அதற்கு பிறமொழி அயலக எழுத்தாளரகளின் சுவாரஸ்யமான படைப்புகள் பெற்றிருக்கிற வெற்றிகளைத் தமிழ் வாசகர்கள் அறிய நேர்ந்தது ஒரு காரணம். சண்டைகளை வேடிக்கை பார்க்கிற ஆர்வமும், அறிந்து கொள்கிற ஆர்வமும் எல்லா மனிதராசிகளுக்கும் இருப்பதுபோல, அயலகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு இலக்கியச் சண்டைகளை அறிந்துகொள்கிற ஆர்வம் இருந்தாலும், சண்டைகளுக்கு அப்பால் படைப்புகளை அதன் உள்ளடக்கம் குறித்தே மதிப்பிடுவதில் தமிழ்நாட்டு வாசகர்களைவிட அயலகத் தமிழர்கள் மேலானவர்கள் என்பது என் இன்னொரு தாழ்மையான அபிப்பிராயம். அதனாலும் தமிழிலக்கிய மதிப்பீடுகளில் குறிப்பிடட்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிற காரணிகளாக அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
வேரும் மனமும் இன்னமும் தமிழ்நாட்டில் உன்றியிருக்கிறபோதும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் ஓர் அயலகத் தமிழன். இனிவரும் காலங்களும் அப்படியே இருக்கக்கூடிய சாத்தியங்களையே நான் இதுவரை பார்க்கிறேன். ஆதலால், அயலகத் தமிழர்களின் எழுத்துகளை நான் ஆசை, பரிவு, ஆனந்தம், உற்சாகம் என்ற பல கலவையான உணர்வுகள் மேலெழப் பார்க்கிறேன். அது நான் எழுதுகிற புத்தக விமர்சனங்களிலும் வாசக அனுபவங்களிலும் தென்படலாம். ஆனால், அந்தக் காரணத்தினால் என் எழுத்துகளும் பார்வைகளும் நிராகரிக்கப்பட்டாலும் அந்த அயலகத் தமிழர்களின் எழுத்துகளை வாசிக்கிற பழக்கத்தையும், உங்கள் ஊடகங்களில் அவர்களுக்கு இடம்கொடுக்கிற பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதே என் தாய்நாட்டுத் தமிழர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள்.
அடுத்ததாக - ரெ. கார்த்திகேசுவின் "இன்னொரு தடவை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் வாசக அனுபவத்திற்குள் போவோம்.
(தொடரும்)
படைப்புகளில் வடிவ முக்கியத்துவமும் குறைந்து வருகிற நாளிது. நல்ல சிறுகதை ஒன்று உருவாக்கக்கூடிய உணர்வையும், மனவெழுச்சியையும் இப்போது ஒரு நல்ல கட்டுரை உருவாக்கி விடுகிறது. ஆதலால், அயலகத் தமிழர்கள் வடிவம், செய்நேர்த்தி ஆகிய கட்டுப்பெட்டி வாத்தியார்களின் அளவுகோல்களைப் பற்றிக் கவலைப்படாமல் பங்களிக்க முடியும். இந்தச் சுதந்திரமே, நிறைய அயலகத் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன். தமிழில் வட்டார இலக்கியத்தில் இவையும் ஒரு பகுதியாகி அங்கீகரிக்கப்படுகிற நாள் தூரமில்லை. ஐம்பதுகளிலிருந்தே இலங்கைத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியானபோதும், சிங்கைத் தமிழ் இலக்கியம், மலேஷியத் தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம் என்று தற்போது நாம் கேள்விப்படுகிற சொற்கள் பொதுவானப் புழக்கத்திற்கும் அங்கீகாரத்திற்கும் வருகிற சாத்தியங்களை நேரடியாகப் பார்த்து வருகிறேன்.
இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. மலேஷியத் தமிழ் இலக்கியத்தில் நானறிந்த ஒரே எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுதான். அதற்கு முன்னரோ பின்னரோ பீர்முகம்மது என்ற மலேஷிய எழுத்தாளரின் பெயரைக் கேள்வியுற்றிருந்தபோதிலும் பீர்முகம்மதுவின் எழுத்துகளைப் படித்ததில்லை. ரெ.கார்த்திகேசு எழுத்தைக்கூட இணையம் இல்லாவிட்டால் அறிந்திருக்க மாட்டேன். இணையக் குழுமங்களில் அவர் எழுத்தைப் பார்த்தபின்னரே தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டு இலக்கியப் போக்கின் வரலாற்றில் பெருமளவு எழுத்தாளர்களைப் பற்றிய பெயர்ப் பரிச்சயமாவது பெற்றிருக்கிற, ஓரளவு இலக்கிய விஷயஞானம் உள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிற நான், மலேஷிய எழுத்தாளர் ஒருவரைப் பற்றி மட்டுமே அறிந்திருப்பதில் பாதிப்பங்கு எனக்கும் உண்டு என்றாலும், மீதிப்பாதிப் பங்கு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கும் உண்டு. கருணாகரமூர்த்தி, அ. முத்துலிங்கம் உள்ளிட்ட சிலரைத் தவிர இலக்கியக் குத்தகை எடுத்திருக்கிற தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மற்ற அயலக எழுத்தாளர்களுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. (இந்த இடத்தில் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைப் பற்றி நான் பேசவேயில்லை. காரணம், அவற்றின் நோக்கம் பணமென்று தெரியும். ஆனால், அவைகூட உலகமயமாகிவருகிற சூழலில் அயலகத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் கொடுக்கலாம்.) தமிழ்நாட்டு இலக்கிய ஸ்கேலிலேயே அயலகத் தமிழர்களின் இலக்கியத்தையும் அளக்கிறார்கள். அதுவும் சரியில்லை. தலித் இலக்கியத்துக்கும் பெண்ணிய இலக்கியத்துக்கும் கொடுக்கிற ஒரு நெகிழ்வான பார்வையுடனேயே அயலகத் தமிழ் இலக்கியத்தையும் அணுக வேண்டும். ஏனென்றால், அயலகத் தமிழனுக்கு இலக்கியத்தைத் தமிழில் படைக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. நினைத்தால் அந்த நாட்டு மொழியிலேயோ பிரபஞ்ச மொழியான ஆங்கிலத்திலேயோ எழுதி எழுதுவதன்மூலம் தமிழில் கிடைக்கக் கூடிய பெயரைவிட பெரிய பெயரை வாங்குகிற வாய்ப்புகள் அயலகத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனாலும் தமிழின் மீது இருக்கிற ஆர்வத்தால் தமிழில் எழுத வருகிறார்கள் அயலகத் தமிழர்கள்.
இலக்கிய விமர்சனத்தில் தயவுதாட்சண்யம் கூடாது என்று சொல்கிற ஒரு கட்சி உண்டு. எதிரிக்கே தயவுதாட்சண்யம் காட்டிய மரபு நம்முடையது. இன்று போய் நாளை வா என்ற மரபு வேறு என்ன மரபு? ஆதலால், வாழ்க்கையில் காட்டுகிறோமோ இல்லையோ அறத்தையும் அதன் உணர்வெழுச்சியையும் சொல்லக்கூடிய இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது தயவுதாட்சண்யம் காட்டுவது சரிதான் என்று நான் நினைக்கிறேன். தயவுதாட்சண்யம் என்றவுடன் "ஆஹா ஓஹோ அருமை" என்று அனைத்தையும் பாராட்டச் சொல்லவில்லை. இலக்கண அளவுகோல்களிலும், ஒப்பீட்டு ஆய்வுமுறைகளிலும் ஒரு படைப்பின் தனிப்பட்ட அழகையும் இருப்பையும் ஒரேயடியாகப் புறக்கணிக்க வேண்டாம் என்றே சொல்கிறேன். அயலகத் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும்போது இந்த இலக்கிய விமர்சன அளவுகோல்களிலும் மாற்றங்கள் வரும் என்பது நான் ஆவலுடன் எதிர்நோக்குகிற ஒரு விஷயம். ஏற்கனவே, சுவாரஸ்யமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற வாதம் தமிழில் அடிபட்டுப் போயிருக்கிறது. அதற்கு பிறமொழி அயலக எழுத்தாளரகளின் சுவாரஸ்யமான படைப்புகள் பெற்றிருக்கிற வெற்றிகளைத் தமிழ் வாசகர்கள் அறிய நேர்ந்தது ஒரு காரணம். சண்டைகளை வேடிக்கை பார்க்கிற ஆர்வமும், அறிந்து கொள்கிற ஆர்வமும் எல்லா மனிதராசிகளுக்கும் இருப்பதுபோல, அயலகத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு இலக்கியச் சண்டைகளை அறிந்துகொள்கிற ஆர்வம் இருந்தாலும், சண்டைகளுக்கு அப்பால் படைப்புகளை அதன் உள்ளடக்கம் குறித்தே மதிப்பிடுவதில் தமிழ்நாட்டு வாசகர்களைவிட அயலகத் தமிழர்கள் மேலானவர்கள் என்பது என் இன்னொரு தாழ்மையான அபிப்பிராயம். அதனாலும் தமிழிலக்கிய மதிப்பீடுகளில் குறிப்பிடட்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிற காரணிகளாக அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
வேரும் மனமும் இன்னமும் தமிழ்நாட்டில் உன்றியிருக்கிறபோதும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் ஓர் அயலகத் தமிழன். இனிவரும் காலங்களும் அப்படியே இருக்கக்கூடிய சாத்தியங்களையே நான் இதுவரை பார்க்கிறேன். ஆதலால், அயலகத் தமிழர்களின் எழுத்துகளை நான் ஆசை, பரிவு, ஆனந்தம், உற்சாகம் என்ற பல கலவையான உணர்வுகள் மேலெழப் பார்க்கிறேன். அது நான் எழுதுகிற புத்தக விமர்சனங்களிலும் வாசக அனுபவங்களிலும் தென்படலாம். ஆனால், அந்தக் காரணத்தினால் என் எழுத்துகளும் பார்வைகளும் நிராகரிக்கப்பட்டாலும் அந்த அயலகத் தமிழர்களின் எழுத்துகளை வாசிக்கிற பழக்கத்தையும், உங்கள் ஊடகங்களில் அவர்களுக்கு இடம்கொடுக்கிற பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதே என் தாய்நாட்டுத் தமிழர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள்.
அடுத்ததாக - ரெ. கார்த்திகேசுவின் "இன்னொரு தடவை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் வாசக அனுபவத்திற்குள் போவோம்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)