
கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
“ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எழுதிச் செல்லலாம். ஆனால் அந்தப் புற அடையாளம் மட்டுமே இலக்கியச் சிறப்பை அளிப்பதில்லை. உடை, உணவு, பழக்க வழக்கங்களைச் சார்ந்திருப்பதைத் தாண்டி, வாழ்புலத்தின் அக அடையாளத்தைச் சுட்டும்வகையில் எழும் எழுத்துதான் இலக்கியம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையின் நடைச்சித்திரத்துக்கு அப்பால், நிரந்தர மதிப்பீடுகளை விசாரணை செய்ய வாழ்புலத்தின் புற அடையாளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, அதே நேரத்தில் அதைக் கடந்து செல்வதுதான் நல்ல இலக்கியத்தின் குணாம்சம். அதனால் ஈழ இலக்கியத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் ஜெயமோகன் ஸ்ரீலங்கா தமிழர்களின் வாழ்க்கைப் பதிவுகளை எந்த இலக்கியவாதி கவனமாய்ப் பதிவு செய்திருக்கிறார் என்று பட்டியலிடவில்லை. அதற்குப் பதிலாக, காத்திரமான இலக்கியத்தைப் படைத்தளித்த இலக்கியவாதிகளை இனம் காட்டி ஏன் இவர்கள் பொருட்படுத்தி,பொக்கிஷமாய்ப் போற்றப்படவேண்டியவர்கள் என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசுகிறார். தேர்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்றே நிராகரிப்புக்கும் காரணம் காட்டத் தவறவில்லை.”
ஜெயமோகனின் முன்னுரையிலிருந்து:
”ஈழ இலக்கியம் குறித்து எனக்கு எப்போதுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்துள்ளது. இரண்டையும் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறேன். எதிர்பார்ப்புக்கான காரணங்கள் பல. தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஈழம் பலமடங்கு கல்வி வசதியும், பொருளியல் வசதியும் கொண்டதாகவே முன்பு இருந்திருக்கிறது. சராசரித் தமிழர்களைவிட அறிவுக்கூர்மையும் தீவிரமும் கொண்டவர்களாகவே ஈழத்தமிழர் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் ஈழ இலக்கியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டைவிட காலத்தால் முந்தையது. தமிழ்நாட்டைவிடவும் தீவிரமானது.
ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எனக்கு ஈழ இலக்கியத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அதைப் பதிவு செய்தமையால் நான் பழிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும் அது என்னுடைய மனப்பதிவு மட்டுமல்ல, தொடர்ந்து வலுப்பெறும் விமரிசனக் கருத்தும்கூட. தொடர்ந்து சந்திக்க நேர்ந்த வரலாற்றுச் சவால்களைப் படைப்புத்தளத்தில் ஈழத்தவர் சந்திக்கவில்லை. அவ்வனுபவத்தின் தீவிரங்கள் இலக்கியத்தில் வெளிப்பட்டது மிகமிகக் குறைவேயாகும்.
அதற்கான காரணங்கள் பல. வரலாற்றுக் காரணங்கள், பண்பாட்டுக் காரணங்கள். ஆனால் இலக்கியப் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது ஆழ்ந்த, அந்தரங்க அனுபவங்களுக்குள் செல்லாமல் புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் ஒரு போக்கு அங்கு வலுவாக இருந்ததே முக்கிய காரணம் என்று எனக்குப் படுகிறது. படைப்பூக்கம் கொண்ட எழுத்துக்கள் அந்தக் கோட் பாட்டுப் பெருமுரசின் ஒலியில் மறைந்தும் போயின. இன்றும்கூட அங்கு அந்நிலையே நிலவுகிறது.”
மு. தளையசிங்கம், கா. சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை, அ. முத்துலிங்கம், வில்வரத்தினம், சேரன் ஆகியோரின் படைப்புகள் குறித்த ஜெயமோகனின் திறனாய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.
மொத்த பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com
No comments:
Post a Comment