Thursday, January 16, 2014

விஜய் தொலைகாட்சி, சிவகார்த்திகேயன், பொங்கல்

(ஃபேஸ்புக்கில் பேசுகிறவற்றையும் இங்கே சேமிக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது இது.)

அந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். பொங்கலன்று விஜய் தொலைகாட்சியில் "எங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற தலைப்பில் நடிகர் சிவகார்த்திகேயனை நாயகராக்கி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன் பூர்வாசிரமத்தில் விஜய் தொலைகாட்சியில் குப்பை கொட்டி, இப்போது கோலிவுட்டில் குப்பை கொட்டுமளவு வளர்ந்திருப்பதால் நிகழ்ச்சிக்கு அந்தத் தலைப்பாம். அந்நிகழ்ச்சியில் படித்த இளவயது பெண்கள் சிவகார்த்திகேயனிடம் தங்களுக்கு இருக்கும் கேள்விகளையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தினர். அவருக்கு பொங்கல் ஊட்டுவது, பதிலுக்கு அவர் கையால் பொங்கல் ஊட்டச் சொல்வது, அவர் தன்னைத் தூக்கிக் கொண்டு அரங்கைச் சுற்ற வேண்டும் அல்லது தன் லிப்ஸ்டிக் உதடுகளால் முத்தமிட்ட கறையுடன் இருக்கும் டிஷர்ட்டை அவர் அணிய வேண்டும், அவர் கன்னங்களைக் கிள்ள வேண்டும் என்பதுமாதிரியான சரித்திர முக்கியத்துவம் உள்ள அபிலாஷைகள். பெரும்பாலானவற்றை, ஐயோ இதுவா என்ற பொய்யான சலிப்புடன், சந்தோஷமாக சிவகார்த்திகேயன் செய்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு பற்றியும் அது திரைப்படமாக சில ஆண்டுகளுக்கு முன் வந்தது குறித்தும் பேச்சு. நண்பர் சொன்னார், சினிமாவுக்குப் போன சித்தாளு ஒரு பீரியட் நாவல். அந்த நாவலுக்கான பீரியட் முடிந்துவிட்டது. சினிமா நடிகர்கள் பின்னால் போகிற அளவுக்கு இங்கே இப்போது பெண்கள் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வி, விழிப்புணர்வு என்று பெண்கள் முன்னேறியுள்ளனர். சினிமாவிலும் சினிமா நடிகன் மீதும் பெண்கள் பைத்தியமாக அலைவதாகச் சித்தரிப்பது இக்காலத்துக்குப் பொருந்தாது என்றார்.

விஜய் தொலைகாட்சியின் இந்நிகழ்ச்சியைப் பார்த்தபோது நண்பர் சொன்னது எவ்வளவு தவறு என்றும், ஜெயகாந்தன் எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படி அக்கதையை எழுதியிருக்கிறார் என்றும் தெரிந்தது. ஜெயகாந்தனின் சித்தாளாவது படிக்காத நாயகி. இங்கே நம் வாழ்வின் படித்த நகர்ப்புறத்து சித்தாளுகள் நடிகர்கள் பின்னால் இன்னமும் போய்க்கொண்டிருக்கிற அவலத்தைச் சொல்ல இன்னொரு நாவலை யாராவது எழுதினால் தேவலை.

No comments: