Wednesday, April 14, 2004

சின்னத் தவறு

நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் என் எழுத்தைப் பற்றி சொல்லுகிற கணம் நெஞ்சுக்குள் சந்தோஷத்துடன் பயத்தையும் கொணர்கிறது. மேலும் எழுதிக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வு பிறக்கிறது. அத்தோடு எழுதுவதை விட்டுவிட வேண்டும் என்கிற பொறுப்பையும் சுயதிருப்தியையும் அளிக்கிறது. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டு அதைக் குறித்து அலட்டிக் கொள்ளாமல் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று புரிபடுகிறது. ஆனாலும், வழக்கம்போல மீண்டும் என் எழுத்தைத் திரும்ப வாசிக்கும்போது ஏற்படுகிற திருப்தியின்மை எழுதத் தூண்டுகிறது. எவ்வளவு நாள்களுக்குப் பழைய படைப்புகள் கொணர்கிற பாராட்டில் வாழ்வது. ஏதேனும் புதிதாக எழுத வேண்டும் என்று இன்று உந்தியது. வரும் என்றால் நிறுத்த முடியாது. வராவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது. மனிதனின் இயற்கை உபாதையிலிருந்து எழுத்துவரை இப்படித்தான். மனமும் உளவியலும் சேர்ந்து நிகழ்த்துகிற இயற்கை உபாதை எழுத்து. ஆனாலும், பழைய கவிதைகளுக்குக் கிடைத்தப் பாராட்டைத் தூண்டிலாக்கிக் காத்துக் கொண்டிருந்தபோது கிடைத்தது இந்தக் கவிதை. எப்படியிருக்கின்றது என்று தெரியவில்லை. நன்றாக இருப்பதாக யாரும் நினைத்தால் அந்தப் பாராட்டு என் குழந்தைகளைச் சாரும்.

சின்னத் தவறு

- பி.கே. சிவகுமார்

எண்பத்தொன்பது மதிப்பெண்கள்
என்றான் மகன்
நூறு வாங்கவேண்டும்
என்றேன் நான்
ஒரு பதிலில்
சின்னத் தவறாகிவிட்டது
என்றான் மகன்
நூறு இல்லை அப்பா
ஒரு நூறு என்றாள் மகள்
சின்னத் தவறுகள்
எப்படி ஏற்படுகின்றன என்று
தெரிந்துபோனது எனக்கு

Written On: April 14, 2004

No comments: