Wednesday, April 21, 2004

அக்கினிப் பிரவேசம் கதை குறித்து ஜெயகாந்தன்

அக்கினிப் பிரவேசம் கதை குறித்து "சுயதரிசனம்" சிறுகதைத் தொகுப்பில் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை ஜெயகாந்தன் பக்கத்தில் இருக்கிறது. அதிலிருந்து சிந்தனையைத் தூண்டிய பகுதிகளை இங்கே இடுகிறேன்.

"இந்த அக்கினிப் பிரவேசம் பலரை என் விஷயத்தில் அத்து மீறிப் பிரவேசிக்கச் செய்திருக்கிறது. ஒரு விதத்தில் எனக்குச் சந்தோஷம்தான். எனது கதையின் விளைவாய் ஏதோ ஒன்று இவர்கள் மனத்தில் எங்கோ புகுந்து குடைய இவர்கள் எதையோ பிடித்துப் பிறாண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரொம்ப ரசமான விஷயம்தானே?

நான் எது குறித்து, எனது நெஞ்சம் புண்ணாகி எப்படிப்பட்ட விசால நோக்கில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் - 'அக்கினிப் பிரவேச' தாயின் ஸ்தானத்தில் இருந்தோ அல்லது அவளது சரியான சகோதரனின் ஸ்தானத்திலிருந்தோ விஷயத்தைப் பார்க்காமல் இதைத் தங்களது சொந்த வாழ்க்கையின் - தங்களது பெண்டாட்டிகளின் கடந்த காலப் பிரச்சனையாகக் கருதி - இவர்களில் சிலர் வயிற்றெரிச்சல் கொள்வதோ வதை படுவதோ நியாயமாகாது.

தங்களின் நியாயமில்லாத வயிற்றெரிச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மற்றொரு சாரார் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு கதை வேறு எழுதி விடுகிறார்கள். எனது அக்கினிப் பிரவேசத்தின் எச்சங்களாக அவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத பிள்ளைகளைப் பெற்றுத் திருப்தி அடைகிறார்கள். பேனா பிடித்து எழுத வந்துவிட்ட இவர்கள் எனது சுய சிருஷ்டியின் தலைப்பையும் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அப்படியே எடுத்துக் கையாளும்போது - என்னதான் இவர்கள் எனக்கு வாரிசுகளாக இருந்தபோதிலும் - அந்த சொந்தத்தை நிலை நிறுத்தவாவது 'இதன் விளைவு இது' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை நாகரிகம் கூட எழுதியவருக்கும் தெரியவில்லை; பிரசுரித்தவருக்கும் தெரியவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல நேருகிறது.

- சரி, போகட்டும். "

No comments: