Friday, June 04, 2004

மரம்

மரத்துக்கு உயிர் உண்டென்று அறிவோம்
வசந்தத்தில் துளிர்த்தும் மலர்ந்தும்
கோடையில் செழித்து நின்றும்
இலையுதிரில் துகிலுரித்தும்
மரம் உணர்வுகளும் காட்டும்

மரத்துக்குப் பேசத் தெரியும்
மரத்தின் மொழி
உடலின் மொழி
பாடி லாங்வேஜ் என்கிற பதமே
மரம் தந்ததுதான்

சில மரங்கள் ஜீவிதமானவை
தலைமுறைகள் கண்டவை
என்றபோதினும்
வீரியத்திலும் விளைச்சலிலும்
இளைக்காதவை

மரத்துக்குப் பேதங்கள் இல்லை
தன் நிழலில் உறங்குபவனும்
தன்னருகே சிறுநீர் கழிப்பவனும்
அதற்கு ஒன்றுதான்

மரத்துக்குக் கட்சிகள் இல்லை
எல்லா கட்சிக் கொடிகளுக்கும்
பேனர்களுக்கும் இடம் தருகிற
சமத்துவபுரம் அது

மரத்துக்கு அழத் தெரியாது
கிளை வெட்டும்போதுகூட
கைபற்றித் தடுப்பதில்லை

மரத்துக்குப்
பங்காளிச் சண்டைகள் இல்லை
வெவ்வேறு மரத்தின் வேர்கள்
இணைந்தும் பிணைந்தும்
எல்லை தாண்டியும் ஓடுவதுண்டு

மரத்துக்கு அசூயை இல்லை
அதன்
இலையோடும் கிளைகளில்
பட்சிகளும் எறும்புகளும்
வேரோடும் பூமிக்கடியில்
புழுக்களும் பூச்சிகளும்
ஒட்டி உறவாடுவதுண்டு

மரத்துக்கு
வாழ்க்கை அலுப்பதில்லை
காலம் பூராவும்
ஒரே இடத்தில்
நின்று கொண்டிருக்கிறபோதிலும்

மரத்துக்குத் தேவை அதிகமில்லை
மழையில்லா வறட்சிக்கும்
கொளுத்துகின்ற கோடைக்கும்
அரசாங்க உதவியெதுவும்
அது எதிர்பார்ப்பதில்லை

மரத்துக்கு
ஜீவகாருண்யம் அதிகம்
அதன் சேவைகளைப்
பயன்படுத்திக் கொள்வோரிடம்
கட்டணம் வசூலிப்பதில்லை

மரம்
யாருடனும் எதற்கும்
சண்டைக்குப் போவதில்லை
"ஏன் மரம் மாதிரி நிற்கிறாய்" என்று
யாரும் யாரையேனும் திட்டினாலும்
மவுனமாய்ப் பார்த்தலன்றி
ஆட்சேபணை செய்வதில்லை

"ஏன் மனிதன் மாதிரி செய்கிறாய்" என்று
யாரையும் கேட்காத
அறிவும் கொண்டது மரம்

No comments: