Saturday, November 13, 2004

சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

((ஞாநி நடத்தும் தீம்தரிகிடவில் ஏப்ரல் 2003ல் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்காக தட்டச்சு செய்ய ஆரம்பித்துப் பின்னர் அப்படியே விட்டுப் போனது. சமீபத்தில் வீடு மாற்றியபோது பழைய தீம்தரிகிட இதழ்களைப் பெட்டியில் அடுக்கி எங்கேயோ வைத்தேன். எங்கே என்று தேடிக் கண்டுபிடித்ததும் மீதிக் கட்டுரையைத் தட்டச்சு செய்து இட முயல்கிறேன். தீம்தரிகிடவுக்கும் ஞாநிக்கும் நன்றிகள் சொல்லி இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தட்டச்சுப் பிழைகள் இருப்பின் அவை என்னுடையவை. மன்னித்து பொறுத்துக் கொள்ளவும். ஜெயேந்திரரைப் பற்றிய மாற்றுக் கருத்துகளும் அறியப்பட வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படித்து முடித்துவிட்டு இதை எடுத்துக் கொள்வதும் தள்ளுவதும் அவரவர் விருப்பம். சின்னக்குத்தூசி பற்றி தனிப்பட்ட அளவில் எனக்கு அதிகம் தெரியாது. அவர் இயற்பெயர் முதலிய சில விவரங்களைத் தவிர அதிகம் அறிய மாட்டேன். ஆனால், ஞாநி சொல்கிற கருத்துகளுடன் எனக்கு அவ்வப்போது வேறுபாடுகள் இருப்பினும் நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றில் சோவைவிடவும் ஞாநியை நம்புகிறேன். தன் கருத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர், நேர்மையாளர், தனிப்பட்ட லாபங்களுக்குக் கூட பொது விஷயங்களில் பொய் சொல்லாதவர் என்று ஞாநியை நான் உட்படப் பலரும் நம்புகிறோம். எனவே, எனக்கு இந்தக் கட்டுரை முக்கியமானது. சோவின் அறிவுஜீவித்தனம், கருத்துகளை முன்வைக்கும் திறமை ஆகியவற்றின் மீது எனக்கு என்றும் மதிப்பு உண்டு. - பி.கே. சிவகுமார்)

சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடி வருகிறார்கள். "அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது" என்று கல்கி இதழ் எழுதுகிறது. ஒருவர் துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப் போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்கு உரியதுதானே! கல்கி வர்ணிக்கிற 'அரசியல் பாணி துறவறம்' எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ 'சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர் அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் 'எதிரொலி'யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு 'சோ'வின் மறுப்பு, மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:

'தவறாமல் விடுதலை படிக்கிறேன்'

- சின்னக்குத்தூசி கட்டுரை

"ஆச்சார்ய ஸ்வாமிகள் - உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன்.

நமக்கு அதிசயமாக இருந்தது.

கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார்.

அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின் அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் - வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.

வசந்த மண்டபத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார்.

உடனடியாக நாங்கள் சுவாமிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ - சமுக்காளமோ விரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார்.

நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம்.

ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு ஊழியர் - கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் - ஸ்வாமிகளும் மட்டுமே இருந்தோம்.

"என்ன இதெல்லாம்" என்றார்.

"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் - பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன" என்றோம்.

"இதெல்லாம் எதற்காக?" என்றார் ஸ்வாமிகள்.

"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறான மனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்" என்றோம்.

ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

பின்னர்,

"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் 'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு,

"என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே..." என்றார்.

சின்னக்குத்தூசி: "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல"

ஸ்வாமிகள்: "ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடி காட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்."

சி.கு.: "தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் - தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்காது."

ஸ்வாமிகள்: "திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப் பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்."

சி.கு.: "தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் வைத்துக்கொண்டு, "எல்லாமும் வன்முறைதான்" என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறை இயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?"

நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச் சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒரு பிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது. தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் - பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.

ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி - இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகு எத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு, புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.

இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் - கலவரங்கள் - மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும் நடந்ததில்லை.."

- பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டார்.

நண்பர் ஞாநி சொன்னார்:

"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறோம்.

'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்' என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்."

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சி.கு.: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.

எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.

கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

ஸ்வாமிகள்: "யார் சொன்னது நாங்கள் தீண்டாமை அனுஷ்டிக்கிறோம் என்று; என்னோடு வந்து பாருங்கள் நான் ஒவ்வொரு ஊரிலும் சேரிகளுக்குச் செல்வதையும் சேரி ஜனங்களுக்கு நன்மை செய்வதையுமே பெரிய பணியாக ஏற்று நடத்தி வருகிறேன்."

சி.கு.: "அய்யா சொல்வதைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ஸ்வாமிகள் சேரிக்கு போவதாலும், சேரி ஜனங்களுக்கு சில நன்மைகள் செய்வதாலும் என்ன பெரிய மாறுதல் வந்துவிட முடியும்?

காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை விடவா? ஆலயப் பிரவேசம் என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலை சமூகத்தில் உயர்ந்துவிட்டதா? இப்போதும் மாலை நேரங்களில் எல்லாக் கோயில்களிலும் போய்ப் பார்க்கலாம். எத்தனை அரிஜனங்களை தங்களோடு மற்ற மக்கள் சமமாக நடத்துகிறார்கள். மேல்சாதி அமைப்புகள் - உயர்சாதி மனோபாவம் ஆகியவைகளை அப்படியே போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு சேரி ஜனங்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஏன் தங்களையே எடுத்துக் கொள்வோம்; அரிஜனங்களுக்கு நன்மை செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால் அதே அரிஜனங்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் குறுக்கே நிற்கிறீர்கள்."

ஸ்வாமிகள்: "நான் எங்கே குறுக்கே நிற்கிறேன்; யாரோ வழக்குப் போட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பு?"

ஞாநி: "வழக்குப் போட்டவர்கள் யார்? உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே; நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!"

ஸ்வாமிகள்: "ஏன் சொல்ல வேண்டும்? அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு அப்படி வந்தால் - அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

சி.கு.: "இந்து லா என்பதுதானே பெரும்பான்மை மக்களின் உரிமைக்கும் விருப்பங்களுக்கும் எதிராக இங்கே இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் வேதம், ஆகமம், சாஸ்திரம் என்ற பேரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட அக்கிரமங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது."

ஸ்வாமிகள்: "நாம் என்னதான் அரிஜனங்களுக்காக பாடுபட்டாலும் சில இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளூம் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான் தமிழ்நாட்டை சொல்லவில்லை. வடக்கே பம்பாய் போன்ற இடங்களில் தலித்பந்தர் போன்ற இயக்கங்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றன. அது தேவை அற்றது."

சி.கு.: ஸ்வாமிகள் இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். வடக்கே பெரியார் தோன்றாததாலும் - ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் இல்லாததாலும் - இன்னமும் அங்கு சாதிவெறி கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே அங்கு வன்முறையும் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சமூக மாறுதல் இவ்வளவு அமைதியாக நடந்து வருகிறதே; அதற்குக் காரணம் யார்? பெரியார்தான். பெரியாரின் அய்ம்பது ஆண்டு காலத்திற்கும் மேலான சாதி ஒழிப்புப் பணிகளால்தான் தமிழகத்தில் இவ்வளவு பெரிய மாறுதல், வன்முறை துளியும் இன்றி ஏற்பட்டிருக்கிறது."

ஸ்வாமிகள்: "அது வாஸ்தவம்தான். பெரியாரைப் பற்றி எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவர் யாரிடமும் துவேஷம் பாராட்டினதில்லை. ரொம்ப நாகரீகத்தோடு நடந்து கொண்டார். ஆனால், இப்போது அவரைப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளூங்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும். எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!"

சி.கு.: கருணாநிதி தங்களையோ - தாங்கள் சார்ந்துள்ள காமகோடி பீடத்தையோ தனிப்பட்ட முறையில் எதுவும் தாக்கிப் பேசவே இல்லை.

தாங்கள் தவறாகச் சொன்ன ஒரு கருத்துக்கு பதிலளித்துத்தான் அவர் பேசினார். தாங்கள் சொன்னீர்கள் 'தமிழர்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் போன்றவை. தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி' என்று.

இது எப்படி சரியாகும்? வழக்கு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் - யதார்த்தத்திலும் தாங்கள் சொன்னது பொருந்தவே பொருந்தாத ஒன்று. தாய்மொழி என்றுதான் இருக்க முடியுமே தவிர தந்தை மொழி என்று ஒன்று ஏது?

அப்படியே தாங்கள் சொல்வது போல தமிழர்களுக்கு சமஸ்கிருதம் தந்தை மொழி என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டே பேசுவோம்!

தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால் 97% பேரான மக்கள் அந்த மொழியைப் பயின்று பாண்டித்யம் பெற்றால்கூட கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்கிறீர்களே!

தமிழன் தனது தாய்மொழியான, தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது; புரியாது என்கிறீர்களே!

அப்புறம் எப்படி தமிழர்களுக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்பானேன்? எந்தத் தகப்பன் 'எனது மூன்று குழந்தைகள் மட்டுமே உயர்வானவர்கள். பாக்கி 97 பேர் மட்டம்' என்பான்?

ஸ்வாமிகள்: "நீங்கள் சொல்வது சரி அல்ல. இப்போதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூஜை செய்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழில்தான் பூஜை நடத்துகிறார்கள்; அவர்களில் ரொம்பப் பேருக்கு தமிழ்கூட சரியாகத் தெரியாது..."

சி.கு.: "தமிழே தெரியாதவர்கள் - ஆயிரக்கணக்கான கோயில்களில் பூஜை நடத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழை நன்றாகத் தெரிந்தவர் மீதமிருக்கிற கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு?"

ஸ்வாமிகள்: "இன்னும் பத்துப் பதினைந்து வருடம் போனால் நிலைமை அப்படித்தான் ஆகப் போகிறது. இப்போதே பல கோயில்களில் உள்ள படாச்சாரியார் - சிவாச்சாரியார்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் குழந்தைகளை படிக்க வைத்து - வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இந்த வேலைக்கு யார் வரப் போகிறார்கள்?"

சி.கு.: பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்! அப்படியானால் பிராமணன் என்று நீங்கள் குறீப்பிடுகிற ஜாதியினருக்கும் பிராமணரல்லாதார் என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பிராமணன் பிரம்மத்தை அறிந்தவன்; காசு பணம் சம்பாதிக்க ஆசைப்படாதவன்; சமூகத்திற்கே வழிகாட்டியாக - உயர்ந்த ஒழுக்க சீலங்களை தனது சொந்த வாழ்க்கையில் அனுஷ்டித்து சமூகத்திற்கே உதாரணமாக இருப்பவன் என்று பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' புத்தகம் கூறுகிறது.

ஸ்வாமிகள் சிரிக்கிறார்! "பெரியவாள் புஸ்தகங்களை எல்லாம் நன்றாக படித்திருக்கிறார்" என்று சீனிவாசனிடம் கூறுகிறார்.

நாம் தொடர்ந்து சொல்கிறோம் -

"இன்றைக்கு பிராமணர்கள் எல்லாம் பெரியவாள் தொகுத்துக் காட்டியிருக்கிற இலக்கணப்படிதான் இருக்கிறார்களா? நீங்களே சொல்லுகிறீர்கள்; பிராமணர்கள் வேறு வேலைக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று!

அப்படியானால் 'பிராமணன்' என்று ஏன் அவர்கள் தங்களை இன்னமும் அழைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம் என்று ஒன்று?"

ஸ்வாமிகள்: "நாடார் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம் எல்லாம் இல்லையா? அதுபோல பிராமணர்களும் தங்களுக்கு என்று சங்கம் வைத்துக் கொள்வதில் என்ன தவறு?

சி.கு.: "தவறு என்று நான் சொல்லவில்லை. நாடார் குலப் பெருமக்கள் சங்கம் வைத்து என்ன கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் மொத்த ஜனத்தொகையில் இத்தனை சதவீதம் பேர் இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இத்தனை சதவீத இடங்களை கல்வித்துறையிலும் உத்தியோகத் துறையிலும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். வன்னியர்கள் ஆனாலும், நாயுடுகள் ஆனாலும், எல்லோருமே மக்கள் தொகை அடிப்படையில் - எங்கள் விகிதாச்சாரத்துக்கு ஒதுக்கீடு கொடு என்றுதான் கேட்கிறார்கள்.

ஆனால் ஜனத்தொகையில் 3 சதவீதத்தினர் பிராமணர்கள் சங்கம் வைத்து என்ன கேட்கிறார்கள். ஒதுக்கீடு என்பதே கூடாது; எல்லா இடங்களையும் திறந்து விடுங்கள். தகுதி - திறமை பேரால் நாங்களே வந்துவிடுகிறோம் என்கிறார்கள் இது எப்படி நியாயம் ஆகும்?

கருணாநிதியும் வீரமணியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள பொதுஇடத்தில் ஒரு பத்து சதவீத இடத்தை முற்பட்டோருக்கு என்று ஒதுக்கீடு செய்யலாம் என்ற அளவிற்குக் கூறுகிறார்களே. அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மறுத்து "ஒதுக்கீடே கூடாது, தகுதி, திறமைதான் அடிப்படை" என்றூ பேசுகின்றவர்கள், "மற்ற சாதியினர் சங்கம் அமைக்கவில்லையா?" என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா? மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீடு கேட்ட்கும் மற்ற சாதி சங்கங்களும், "ஒதுக்கீடே கூடாது; எல்லாம் எங்களுக்கே" என்று கூறும் பிராமணர் சங்கமும், அடிப்படையிலேயே வேறுபட்டவை ஆயிற்றே!

ஸ்வாமிகள்: "நீங்கள் என்னதான் சொன்னாலும் வெறும் பிராமணர் எதிர்ப்பு - பிராமணர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது."

ஞாநி: "ஸ்வாமிகள் அப்படி நினைப்பது தவறு. வீரமணி, கருணாநிதி போன்றவர்களையே அழைத்து ஸ்வாமிகள் பேசலாம். ஸ்வாமிகள் சொல்கிற சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற காரியங்களில் அவர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவார்கள்."

ஞாநியின் இந்த யோசனைக்கு ஸ்வாமிகளிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

சி.கு.: "சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகளில் கூட ஸ்வாமிகள் கருத்துக்கும் சீனியர் ஸ்வாமிகள் பெரியவாள் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பெரியவாள் "சாதிகள் ஒழியவேண்டியதில்லை". வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட சாதிகள் அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். ஆனால், தாங்களோ - சமீப காலமாக சாதி ஒழிப்புப் பணிகள் பற்றியும் பேசி வருகிறீர்கள்"

உரையாடல் நீண்டுகொண்டே போனது. ஒண்ணே கால் மணிநேரம் போனதே தெரியவில்லை.

வெளியே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. நிறைய பேர் கதவருகே நின்று உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு மேலும் ஸ்வாமிகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆகவே, -

"அய்யா! தங்களை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம்; இன்னொரு சமயம் மறுபடியும் வந்து சந்திக்கிறோம்" என்று சொல்லி எழுந்தோம்.

ஸ்வாமிகள் ஒரு ஊழியரை பெயர் சொல்லி அழைத்தார். அவரிடமிருந்து 'கல்கண்டு' வாங்கி எங்களுக்கெல்லாம் புரசை இலையில் வைத்து பிரசாதமாக வழங்கினார். பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.

காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய தலைவரான ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்திக்க நண்பர் சின்னக்குத்தூசி சென்றபோது நானும் தற்செயலாக உடன்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

தன்னை, தன் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்களை ஒருவர் சந்திப்பதோ, அளவளாவுவதோ தவறானதல்ல. எனினும், தன்னைப் பற்றி விமர்சித்து எழுத வேண்டாம் என்று மடாதிபதி - ஒரு துறவி சொல்லியனுப்புவதும், அதற்குப் பயன் இல்லாது போன நிலையில் குறைந்தபட்சம் சந்திக்கவாவது வரச் சொல்லுங்கள் எனத் தூதனுப்பியதும் - இன்றைய கலாச்சார, அரசியல், சமூக சூழ்நிலையில் எனக்கு சாதாரண விஷயங்களாகத் தோன்றவில்லை.

வாளால் அறுப்பினும், தாளில் பணியினும் ஒரே நிலையோடு இருக்க வேண்டிய பற்றற்ற சுவாமிகள், விமர்சனங்களுக்காக மனம் பதைப்பதும் விமர்சகரின் மனம்மாற்ற (கொள்கை ரீதியாக அல்ல) வழிகள் தேடுவதும் மதமும் அரசியலும் இணைய ஆரம்பித்திருக்கிற காலத்தின் கோலம்தான்.

சுவாமிகளைக் காணச் சென்றபோது அவரையும் தற்போது மடத்தின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிப் போய்விட்ட முந்தைய மடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் ஒப்பிட்டு உலாவி வரும் கருத்துக்கள் என் மனதில் உலா வந்தன.

"பெரியவர் விளம்பரம் தேடாதவர். சின்னவர் பப்ளிசிடிக்கு அலைகிறார். பெரியவரோட ஞானம் சின்னவருக்கு வராது. பெரியவர் எங்கு போனாலும் நடந்து போவார். இவர் கார்ல போறார். பெரியவர் அனாசாரமா சேரிக்கெல்லாம் போகமாட்டார். சின்னவர் ஆகம விரோதமா சேரிக்கெல்லாம் போறார். பெரியவர் காலத்துல அவரோட ஒரு உறவினரைக்கூட மடத்துப் பக்கம் அண்டவிட்டதில்லை. இவர் நேர்மாறு. பெரியவர் இளைஞர்களை அட்ராக்ட் பண்ண முடியல. சின்னவர் இளைஞர் படையையே திரட்டியிருக்கார்."

இப்படி எத்தனை எத்தனையோ கருத்துக்கள். இச்சூழ்நிலையில் ஜயேந்திர சரஸ்வதிகளை சந்தித்து உரையாடச் செல்வதில் ஒரு பெரிய ஆவல் எனக்கு இருந்ததில் வியப்பில்லை.

மடாதிபதிகள் பொதுவிவாகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்த காலம் மாறிவிட்ட நிலையில் - இதில் முன்னணியில் இருக்கிற இந்த சங்கராச்சாரி - எப்படிப்பட்ட மனிதர், ஜாதியும் மதமும் எதற்காக இன்னமும் தேவை என்று கருதுகிறார் என்றெல்லாம் அறிய விரும்பினேன்.

நேரில் சந்தித்து உரையாடியபோது, அவருடைய பல கருத்துக்கள், அவரும், அவருடைய மடமும் காலங்காலமாக சார்ந்து நிற்கும் கருத்துக்களின் வெளிப்பாடாகவே அமைந்தன. அவை எனக்கு எந்த விதத்திலும் வியப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், அவருடன் சின்னக் குத்தூசியும் (ஓரளவு) நானும் நடத்திய விவாதத்தில் நான் உணர நேர்ந்த ஒரு சில விஷயங்கள் மட்டுமே இன்னும் என்னை நெருடிக் கொண்டிருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன், இவன் என்றெல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதைக் கூட முக்கியமானதல்ல என்று ஒதுக்கிவிடலாம்.

குன்றக்குடி அடிகளார் மார்க்சியம் பேசுவதற்கு ஜயேந்திர சுவாமிகள் கண்டனம் தெரிவித்ததைக் கூட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி சுவாமிகளுக்கு அக்கறையில்லை என்பதாக விட்டுவிடலாம். மார்க்சியத்தின் அடிப்படையே மனித நேயம்தான் என்று நான் சுட்டிக்காட்டியபோதும் சுவாமிகள் அதை ஏற்கவில்லை.

கலைஞர் கருணாநிதி காமகோடி பீடத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், அதனால் தான் கோபமுற்றதாகவும் கூறிய சுவாமிகள் "என் பக்தி சுத்தமானதாக இருந்தால் (கருணாநிதிக்கு) ஏதாவது உடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன். அதேமாதிரி (கருணாநிதியை) படுக்கப் போட்டுடுத்து" என்று சொன்ன போது நானும் சின்னக் குத்தூசியும் ஒருகணம் அதிர்ந்து போனோம். ஒரு துறவி செய்கிற பிரார்த்தனையாக இது இல்லையே என்று அதிர்ச்சியடைந்தபோதும், விவாதத்தை ஆரோக்கியமாக நடத்த வேண்டும் என்ற அக்கறையோடு சின்னக்குத்தூசி தன் கருத்து ரீதியான கேள்விகளைத் தொடர்ந்தார். சுவாமிகளின் அருவருக்கத்தக்க பிரார்த்தனை அவரது மனித பலவீனத்துக்கு அடையாளமாய் நிற்பதைக் கூட ஒதுக்கிவிட்டு மேலே போவோம்.

எங்களிடம் பேசும்போது மணியனின் முரண்பாடுகளை பற்றி ஒப்புக்கொண்ட சுவாமிகள், மணியன் மதத்தையும் ஆன்மிகத்தையும் வியாபாரமாகவே நடத்துவதாகக் கருத்து தெரிவித்த சுவாமிகளிடம் - இதை நீங்கள் பொதுமேடையில் பகிரங்கமாகச் சொல்ல வேண்டாமா? அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல வேண்டாமா? என்று நான் கேட்டபோது,

பதில் சொல்லாமல் சிரித்தார். "இதை வெளியில் சொல்ல நீங்கள் மறுத்தால், மணியன் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்" என்று மீண்டும் நான் சொன்ன போது,

அப்போதும் சிரிப்பையே பதிலாக்கினார் சுவாமிகள்.

இதே போல் தமிழ் அர்ச்சனை பற்றியும் அரிஜனங்கள் அர்ச்சகராவது பற்றியும் பேசியபோது என் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்வது சிக்கலாகிவிட்ட போது சிரிப்பையே உதிர்த்தார். அந்தச் சிரிப்பை தெய்வீகச் சிரிப்பு என்று மெய்சிலிர்த்து ஒருபோதும் எழுதிவிட முடியாது. அதில் தெய்வீகம் இல்லை. விஷமத்தனம் தான் இருந்தது.

எங்களைத் திருப்திப்படுத்த சில பதில்களைத் தருவதும் அதே நேரத்தில் அவற்றைப் பகிரங்கமாகப் பேசமறுப்பது என்ற போக்கும் விருப்பு வெறுப்பற்ற துறவிகளுக்கு சரியானதல்ல... சில குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக அப்படியெல்லாம் நடந்துகொள்வது, சில பல அரசியல்வாதிகளுக்கே உரிய குண இயல்பு.

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு நெருடலாக நின்ற மற்றொரு விஷயத்துக்கு வருவோம்.

தன்னை பிராமணர்களின் தலைவர் என்று கூறுவதை வன்மையாக ஆட்சேபித்த சுவாமிகள், அந்தக் குறுகிய வட்டத்தில், தன்னை அடைப்பதை விரும்பவில்லை. அதைவிடப் பெரிய இன்னொரு வட்டமான இந்து வட்டத்துக்குள்ளே தன்னை குறுக்கிக் கொள்வதையே விரும்பினார்.

இந்துமதத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை எல்லோரும் அடையாளம் காண்பதையே சுவாமிகள் அவாவுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. மதங்கள், சாதிகள், கடவுள் முதலியவற்றின் மீதான பற்றுக்கள் முற்றாக நீங்கும் காலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியின் விளைவாக வரும்வரையில், - மதத்தலைவர்கள் நம் சமூகத்தில் இருந்தே தீருவார்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.

ஆனால், ஒரு மதத்தின் தலைவர்கள் இன்னொரு மதத்தின் மீது துவேஷம் பாராட்டுவதையோ, அதன் விளைவாக மக்களிடையே பிளவுகளூம் மோதல்களும் ஏற்படுவதையோ ஒருபோதும் சகிக்கலாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவராயினும் சரி, அற்றவராயினும் சரி, மதம் ஜாதி முதலியவற்றின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சின்னக்குத்தூசியை சந்திக்க விரும்பியதன் இரண்டு அடிப்படை நோக்கங்களை எனக்கு அந்த விவாதத்தில் உணர முடிந்தது.

தன்மீதான விமர்சனங்களை நிறுத்தக் கோருவது ஒன்றாகும்; அதை தனிப்பட்ட பலவீனமாக விட்டுவிடலாம். இன்னொரு நோக்கமே முக்கியமானதாகிறது.

"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும்.

எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது."

- என்பதுதான் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து வலியுறுத்திய விஷயம்.

அப்போது நான் குறுக்கிட்டு, "எல்லா மனிதரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே மதங்களின் நோக்கம்! இந்துவானால் என்ன முஸ்லீமானால் என்ன" என்று கேட்டேன்.

"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு இந்துக்களை பற்றித்தான் கவலை. எல்லா மனுஷங்களைப் பத்தியும் கவலையில்லை" என்று ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடித்து சொன்னார்.

"அதெப்படி சொல்லலாம்? இது சரியாக இல்லையே என்று நான் மீண்டும் சொன்னேன்.

"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஹிண்டுஸ் பத்திதான் அக்கறை எடுத்துக்க முடியும்" என்று மீண்டும் சுவாமிகள் சொல்லி விட்டார்.

இந்த இரண்டு விஷயங்களும்தான் என்னை நெருடின. அன்பு, சமரசம், மனிதநேயம் இவற்றையே மதம் போதிப்பதாக கூறுவதும், இப்படி போதிக்கிற மதத்தின் தலைவர்களாக உள்ளவர்கள் வெளியில் ஒன்றும் உள்ளே வேறொன்றுமாகப் பேசும் நிலை இருக்குமானால் -

மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை என்பதும் ஜாதி நம்பிக்கை என்பதும் சமூக விஷயங்கள். எனவே, நம்மிடையே மோதல்களை உருவாக்க மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்துவதை எதிர்க்க கடவுள் நம்பிக்கையுள்ளவராயினும் அற்றவராயினும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அமைதியான தமிழகத்தில் மதக் கலவரங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அண்மைக் காலத்தில் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றின் விளைவாக 1983 மீண்டும் 1948 ஆக மாற்றப்பட்டு மனிதர்கள் ரத்த ஆறு ஓடுமானால் - அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பானவர்களின் பட்டியலில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இருப்பார் என்றே என்னால் இப்போதைக்கு என்னால் அனுமானிக்க முடிகிறது.

ஏனென்றால் துறவியைச் சந்திக்கப்போன நான் தரிசித்தது காவியுடையில் இருந்த ஒரு "பூர்ஷ்வா" அரசியல்வாதியைத்தான்.

இது குறித்து நாம் எல்லோரும் வருத்தப்படவும், சிந்திக்கவும் கடமைப்பட்டவர்களாவோம்.

"சோ" மறுப்பு:

(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்கை இது)

அன்புடையீர், வணக்கம்.

தாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய கலந்துரையாடல் - அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின் போராகவே இருந்தது.

ஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில் சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்" என்று கூறியுள்ளார்.

இது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்' என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர் போன்றவர் என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை. ஏனென்றால், 'துக்ளக்' படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை கூறியுள்ளீர்கள்.

எனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார் கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அறிய என் போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.

காஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.

- அ.மகிமை, வேலூர் - 63

(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)

டியர் மிஸ்டர் வாசகரே!

ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும் படித்தேன்.

ஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

பிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான் சொல்லாதவற்றை ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும், சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும் 'எதிரொலி' கட்டுரை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

துக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'ஹிந்து மத நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்ற மதங்களைப் பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை' என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம்.

ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில் ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம் போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆசார்ய சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்?

வீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்.

- சோ.

சின்னக்குத்தூசி எழுதிய பதில்

காஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது.

ஏழெட்டு தடவைகள் அவர் சொல்லி அனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க ஒப்புக் கொண்டோம்.

சங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத - நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம்.

ஜீனியர் சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத் தூள்தூளாக்கி விட்டார்.

- பொய்யர்

கடைந்தெடுத்த பொய்யர்

என்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர் சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு உதாரணம் காட்டி விடலாம்.

அந்த அளவுக்கு - அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று - துக்ளக் சோ மூலம் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர் சாட்சியம் உண்டு. ஒருவர் - பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.

- மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன் பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.

காஞ்சி ஜீனியர் - நம்மிடம் உரையாடியபோது - "நான் தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்"

என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்றூ மறுப்புத் தெரிவித்து விட்டார்.

சங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் -

அவரைப்போல - ஒரு கடைகெட்ட பொய்யரை - துறவி என்று நம்பி - சந்திக்கச் சென்றதற்காக - வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரிடும்.

நம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர் தரக்குறைவாகப் பேசினார்.

"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ் பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்கு கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால் போய்விடுவான்"

என்று ஜீனியர் கூறியதை எல்லாம் - நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக் கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.

அது மட்டுமல்ல;

பெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர் சொன்னார்.

அப்போது நாம் ஜீனியரிடம்,

"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன் வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில் சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப் போன தலைவர்.

பெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம் சொல்லும்படியாக - ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறை யோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர் பெரியார்.

பெரியர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - அப்படிப்பட்ட பெரியார் - மக்கள் தமக்கு தந்த பொருள் எதையும் - தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதி வைத்து விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.

ஆனால் பெரியாரின் சமகாலத்தில் - திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமண மகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.

அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத் தந்தார்கள்.

அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா?

தனது தம்பியின் பெயருக்கு - உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார்.

ஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்" என்று ஒரு நீண்ட பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.

ஜீனியர் சங்கராச்சாரி உடனே -

"கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொன்னேன். கொள்ளை அழகு என்று சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்"

- என்று தம்மைத் திருத்திக் கொண்டார்.

நாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும் விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு - அதை ஏன் எழுத வேண்டும் என்ற நாகரீகம் கருதி - பிரசுரிக்காமல் விட்டோம்.

அது போலவே,

"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை! சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின் என்றூ போய்விடுவார்" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று பிரசுரிக்கவில்லை.

இப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.

எனினும் நாகரிகம் கருதி - நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தனம்.

ஆனால் - சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை படித்தபிறகு

- இந்த மாதிரி பொய்யர்களிடம்

- நாகரீகமாவது - புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.

"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்"

- என்று சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.

சங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ - அந்த அளவுக்கு -

சோ - ஒரு நாணயங்கெட்ட - யோக்கிய தன்மை இல்லாத நபர்

என்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.

" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்து விட்டார்"

- என்று எழுதியிருந்தால் சோவை நம்மால் மதிக்க முடியும்!

'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ - அதற்கு மறுநாளோ, சோ - 'எதிரொலி'க்கு போன் செய்து

- ஞாநியிடமும்

- நம்மிடமும்

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா? அதைப் படித்ததிலிருந்து ரொம்ப வேதனையா இருக்கின்றது"

- என்றெல்லாம் பிரலாபித்தார் சோ!

அதுமட்டுமல்ல;

"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று வேறு திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்ன எழுதுகிறார்?

- நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை"

என்று எழுதி இருக்கிறார் சோ.

எதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டி இருக்கிறார் சோ.

இந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர் - யோக்கியத்தன்மை இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

(தொடரும்)

நன்றி: தீம்தரிகிட - ஏப்ரல் 2003

3 comments:

Anonymous said...

நண்பர் சிவகுமார்:

எது எப்படியோ...உங்கள் விரல்களுக்கு எதாவது பற்று போடுங்கள்..எப்படி இவ்வளவு பொறுமையாக தட்டச்சு செய்தீர்கள்..?

இன்னும் 1 1/2 மணி நேரத்தில்,2 வருடம் கழித்து நியு மெக்சிக்கொ தமிழர் சங்கம்(?!) கூட்டம் நடக்கவிருக்கிறது.

உங்களுடைய இப்பதிவை எடுத்துப் போகிறேன்..

மிக்க நன்றி.

அனுப்புநர்: வாசன்

Mookku Sundar said...

Dear PKS,

Thank you so much for posting this Interview. It clearly expresses and establishes how reliable Mr.Jeyendrar is..!!!

Thanks again.

Arun Vaidyanathan said...

Only one word..Gr8 Job!