Monday, November 29, 2004

தமிழ் வார்த்தைகள்

கடந்த வெள்ளிக்கான வார்த்தை: பேத்துதல். பொருள்: பிதற்றுதல் (to talk incoherently). உதாரணம்: பெண்ணுடல் பற்றிய வசந்த்தின் கோட்பாடுகளைக் கேட்ட கணேஷ், "பேத்தாதே" என்றான்.

சனிக்கான வார்த்தை: புயவலி. பொருள்: தோள்வலிமை. பீமனின் புயவலி பிரசித்தி பெற்றது.

ஞாயிறுக்கான வார்த்தை: போரெதிர்தல். பொருள்: போர் செய்தலை மேற்கொள்ளுதல் (to set out to fight). உதாரணம்: பாண்டவர்களுக்கு ஆதரவாக போரெதிர சாத்யகி புகுந்தான்.

இன்றைக்கான வார்த்தை: மழறுதல். பொருள்: 1. மென்மையாதல் (to be soft and gentle), 2. தெளிவில்லாதிருத்தல் (to be indistinct, as speech). உதாரணம்: குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த பதில்கள் மழறுதலாக இருந்தன. (இந்த உதாரணம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. சரியா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று விடுகிறேன்.)

நாளைக்கான வார்த்தை: பேடுமூஞ்சி. பொருள்: பெண் முகம் (Feminine face). உதாரணம்: செய்தியைக் கேட்டதும் மழறிய குரலையுடைய அவரின் பேடுமூஞ்சி (பேடுமுகம்) குப்பென வியர்த்தது.

புதனுக்கான வார்த்தை: மீனுணங்கல். பொருள்: கருவாடு (salted, dried fish). உதாரணம்: அகநானூற்றுப் பாடல் ஒன்றில் கருவாடு மீனுணங்கல் என்று குறிப்பிடப்படுகிறது.

வியாழனுக்கான வார்த்தை: புறம்புல்குதல். பொருள்: பின்புறத்தைக் கட்டித் தழுவுதல் (to clasp or embrace a person from behind, as a child in play). உதாரணம்: ஓடிவந்த குழந்தை, தாயை புறம்புல்கிக் கொண்டது.

ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று: பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து. பல மரணஸ்தர் என்று தலைப்பிடப்பட்டது.

இருமுறை பிறப்பதாய் சொல்லப்படுகின்ற
அந்தணர் கூட ஒருமுறைதான் இறப்பார்.
ஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.
எல்லோரையும்போல் ஒருமுறை. மற்றவர்
படிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை - ஞானக்கூத்தன்

No comments: