Wednesday, December 22, 2004

டிசம்பர் 22, 2004 - புதன்

வார்ததை: கெங்காதீரம். பொருள்: கங்கைக்கரை. உதாரணம்: கங்காதீரத்தில் அலைந்து திரிந்து ஞானம் தேடுகிற முனிவர்கள் உண்டு.

வேற்றுமைகளின் வகைகள்:

நிலைமொழி, வருமொழி என்றால் என்னவென்று குற்றியலுகரம் பற்றிப் பார்க்கும்போதே பார்த்தோம். இன்னொரு முறை வேகமாகப் பார்ப்போம்.

அவரைப் பார்த்ததும் கைகுவவித்து வணங்கினான் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.

முதல் இரண்டு வார்த்தைகளில் அவரைப் என்பது நிலைமொழி. பார்த்ததும் என்பது வழிமொழி. இரண்டாம் மூன்றாம் வார்த்தைகளை எடுத்துக் கொண்டால் பார்த்ததும் நிலைமொழி, கைகுவித்து வருமொழி. மூன்றாம் நான்காம் வார்த்தைகளை எடுத்துக் கொண்டால், கைகுவித்து நிலைமொழி, வணங்கினான் என்பது வருமொழி.

ஒரு வாக்கியத்தின் நிலைமொழிகளையும் வழிமொழிகளையும் இவ்வாறே கணக்கிட வேண்டும்.

ஒரு சொற்றொடர் என்ன வேற்றுமை என்பதைக் கண்டுபிடிக்க எப்போதும் நிலைமொழியைத் தான் நோக்க வேண்டும். வருமொழியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

நிலைமொழி என்ன வேற்றுமைத் தொடர்புடையதோ, அச்சொற்றொடர் அவ்வேற்றுமைத் தொடர்புடையது எனப்படும்.

சொற்றொடர்கள் அமையும் விதத்தைப் பொறுத்து வேற்றுமைத் தொடர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,

1. வேற்றுமை விரி அல்லது தொகநிலைத் தொடர்
2. வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்
3. உருபும் பயனும் உடன்தொக்க தொகை
4. அல்வழித் தொடர்

வேற்றுமை விரி அல்லது தொகாநிலைத் தொடர்:

இத்தொடர்களில் வேற்றுமை உருபு கண்ணுக்குப் புலப்படுமாறு வெளிப்படையாக அமைந்து வரும்.

உதாரணங்கள்:

அவரைப் பார்த்தான், அவரால் உந்தப்பட்டான், தசரதனுக்கு மகன், மலையின் வீழருவி, ராமனது வில், நீர்க்கண் குளித்தான்.

மேற்கண்ட உதாரணங்களில், ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வந்திருப்பதைக் காணலாம். முதல் உதாரணம், இரண்டாம் வேற்றுமை விரி என்றும், இரண்டாம் உதாரணம், மூன்றாம் வேற்றுமை விரி என்றும் இப்படியாக அழைக்கப்படும்.

வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்:

இத்தொடர்களில் வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வரும்.

உதாரணங்கள்:

நீர்க் குடித்தான் (இது நீர் + ஐ + குடித்தான் என்ற பொருள்படும், ஐ என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

கல்லெறிந்தான் (இது கல் + ஆல் + எறிந்தான் என்ற பொருள்படும். ஆல் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

தசரதன் மகன் (இது தசரதனுக்கு மகன் என்ற பொருள்படும். கு என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

மலைவீழருவி (இது மலை + இன் + வீழருவி என்ற பொருள்படும். இன் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

இராமன் வில் (இது இராமன் + அது + வில் என்ற பொருள்படும். அது என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

நீர்க்குளித்தான் (இது நீர் + கண் + குளித்தான் என்ற பொருப்படும். கண் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.)

வேற்றுமை விரி அல்லது தொகாநிலைத் தொடர்களில் வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரிவதால் அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்களை இப்படிப் பிரித்துப் பார்த்தே கண்டுபிடிக்க முடியும். எனவே, வேற்றுமைத் தொகைகளைக் கண்டுபிடிக்க சற்று அதிகப்படியான முயற்சி தேவை.

உருபும் பயனும் உடன் தொக்க தொகை:

சில சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.

உதாரணங்கள்:

நீர்க்குடம். இது நீர் + ஐ + உடைய + குடம் என்று விரியும். எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

பொன் குடம். (பொன் + ஆல் + செய்யப்பட்ட + குடம்)
தக்கோர் பண்பு (தக்கோர் + கு + தகுந்த + பண்பு)
கள்ளிப்பால் (கள்ளி + இல் + இருந்து வரும் + பால்)

ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டாகச் சொற்றொடர் இல்லை.

நீர்ப்பாம்பு (நீர் + கண் + வாழும் + பாம்பு)

வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்களை விட உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளைக் கண்டுபிடிக்க நிறைய முயற்சி தேவை.

ஒவ்வொரு வேற்றுமைத் தொகைக்கும், உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கும் பல உதாரணங்களை எழுதிப் பார்ப்பது உதவும். (நானே, இதை இன்னும் செய்யவில்லை :-). இந்த மாதிரி பயிற்சிகள் கொடுப்பதற்கு ஜெயஸ்ரீ சிறந்த நபர். அவர் விரும்பினால், இந்தப் பயிற்சி கொடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)

அல்வழித் தொகை:

சில சொற்றொடர்களில் வேற்றுமை உருபுகள் இல்லாமல், பண்பு முதலான சொற்கள் அமைந்து வரும். இஅவற்றை அல்வழி என்பர். அல்வழியில் ஐந்து தொகைநிலைத் தொடர்களும் ஒன்பது தொகாநிலைத் தொடர்களும் உண்டு. அல்வழிப் புணர்ச்சியைப் பார்க்கும்போது இவற்றை விரிவாக ஆராயலாம்.

உதாரணங்கள்: செந்தாமரை, கருங்குதிரை, பனைமரம்.

வேற்றுமைத் தொடர்களின் வகைகளை நன்றாகப் புரிந்து கொள்ளுதல் வேற்றுமை உருபுகள் வரும்போது ஒற்று மிகும் மிகா இடங்களை அறிய உதவும். இந்தப் புரிதல் இல்லாமல் வேற்றுமைத் தொடர்களில் ஒற்றுமிகும் மிகா இடங்கள் பற்றிய விதிகள் புரியா. எனவே, வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத்தொடர் மற்றும் உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று சிந்தனையும் முயற்சியும் தேவைப்படுகிற தொடர்களை நன்றாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. வேற்றுமை விரித் தொடரில் வேற்றுமை உருபு வெளிப்படையாக வருவதால் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

நாளைக்கு வேற்றுமைத் தொடர்களில் ஒற்று மிகும் இடங்களைப் பார்ப்போம். ஜெயஸ்ரீ வேற்றுமைத் தொடர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினால், ஒற்று மிகும் இடங்களைப் பார்ப்பதை டிசம்பர் 27 வரை தள்ளியும் போடத் தயார். உதாரணமாக, தினமும் 25 வேற்றுமைத் தொடர்களைத் தந்து அவை எந்த வகையான வேற்றுமைத் தொடர் (உ-ம், இரண்டாம் வேற்றுமை விரி, மூன்றாம் வேற்றுமைத் தொகை) என்று கண்டுபிடிக்கச் சொல்வது நல்ல பயிற்சியாக இருக்கும்.

2 comments:

Sivakumar said...

மிக்கநன்றி. தொகைநிலைத்தொடரை கூகுலிற்தேடியபோது உங்கள் பக்கத்தைக்காட்டியது. நன்று.
தொகாநிலைத்தொடர், தொகைநிலைத்தொடர் இவை சொற்றொடராகும். சொற்றொடர்களை சேர்த்தேவெழுதவேண்டும். எந்நிலையிலும் பிரித்தெழுதவேகூடாது. பிரித்தெழுதினால் அது சொற்றொடரல்ல அது வாக்கியமல்லவா.
ஆக, ’நீர்குடித்தான்’ (இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலிமிகாது), ’தசரதன்மகன்’, ’ராமன்வில்’, ’பொற்குடம்’ எனவெழுதுவதே சரி.

Sivakumar said...

நன்று சிவக்குமார். மிக்கநன்றி.
சொற்றொடரரென்றால் சொற்கள் ஒன்றோடுன்றுசேர்ந்து ஒரேசொல்லாகவொலிப்பதுதானே சொற்றொடர். சொற்றொடர்களை பிரித்தெழுதுதற்கூடாதல்லவா, அவை தொகைநிலைத்தொடராகயிருந்தாலுஞ்சரி, தொகாநிலைத்தொடராகயிருந்தாலுஞ்சரி.
சொற்களை சேர்த்தெழுதுவதற்காக வலிமிகுந்தபின் எதற்காக சொற்களை பிரிந்தெழுதவேண்டும். அவை சேர்ந்தேவரவேண்டும்.

‘வேற்றுமைத்தொகை’ என்றேவரவேண்டும்.
‘நீர்குடித்தான்’(இரண்டாவேற்றுமைத்தொகையில் வலிமிகாது)
’தசரதன்மகன்’ ‘தசரதன் மகன்’ எனவந்தால், ’தசரதனும் மகனும்’ எனப்பபொருட்படும்.
‘இராமன்வில்’
’பொற்குடம்’
இவ்வாறுவருவதே சரி.