Tuesday, May 17, 2005

மாநிலத்திலும் கூட்டாட்சி!

இந்த இடைத்தேர்தல் தருகிற பாடத்தைக் கற்றுக் கொண்டு, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்வதே வெற்றி தேடித் தரும் என்ற விவேகத்தைப் பெற்று, அதற்கேற்ற வியூகத்தை அமைக்கக் கருணாநிதி கற்றுக் கொள்வாரேயானால், அடுத்த தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைகிற வாய்ப்பு இருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். மு. கருணாநிதி முதல்வர். அவர் தலைமையிலான ஆட்சியில் நல்லகண்ணு, வரதராஜன், E.V.K.S. இளங்கோவன், வை.கோபால்சாமி, திருமாவளவன், கிருஷ்ணசாமி, காடுவெட்டி குரு அல்லது ராமதாஸ் உள்ளிட்ட பலர் அமைச்சர்கள். எவ்வளவு நன்றாக இருக்கிறது! மனத்தடைகளை விட்டு வெளிவந்து கருணாநிதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலிலும் பணநாயகம் வென்று விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். (அப்படித் தி.மு.க. கூட்டணி அரசுக்கு ஒத்துக் கொண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெல்லுமானால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீண்டும் ஒரு பொறுப்பற்ற தவறை இழைக்கிறார்கள் என்றே என்னைப் போன்ற இடதுசாரிகளின் அபிமானிகள்கூட பொரும வேண்டியிருக்கும்!)

அதற்கு முதல் கட்டமாக அடுத்த தேர்தலில் தி.மு.க. 80 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடாமல், பிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அவற்றின் பலத்துக்கேற்ப பிரித்துக் கொடுக்க வேண்டும். இதன்படி பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் - அதிகத் தொகுதிகளில் வென்ற தனிக்கட்சியாக அது இருக்கும். அதன் அடிப்படையில் தி.மு.க.வின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்.

மாறாக - வழக்கம்போல் தேர்தலில் உழைக்கவும், ஓட்டு போட்டுத் தன்னை ஜெயிக்க வைக்கவுமே கூட்டணி கட்சிகள், ஆட்சியிலும் அதிகாரத்திலும் அவற்றுக்குப் பங்கில்லை என்று கருணாநிதி தொடர்ந்து நினைப்பாரேயானால், கூட்டணி கட்சிகளும் பொதுமக்களும் அவருக்கு அடுத்த தேர்தலிலும் பெப்பே காட்டி விடுவார்கள்.

இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா அவருடைய செல்வாக்கினாலும், ஆதரவினாலும் அல்லது பணத்தினாலும் ஜெயித்தார் என்று நிஜமாகவே நினைக்கிறீர்களா? எனக்கென்னவோ, என்னதான் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தி.மு.க. வெற்றிக்காக உழைத்தாலும், கூட்டணி கட்சிகளைத் தி.மு.க நடத்துகிற விதம் குறித்தும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் தி.மு.க.வுக்கு எப்படி பாகற்காயாய்க் கசக்கிறது என்பதைக் குறித்தும் பார்த்துப் பார்த்து நொந்து போன தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் அடிமட்ட அப்பாவித் தொண்டர்கள் தி.மு.க.வுக்கு வைத்த ஆப்பாகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெரிகின்றன. ஏன் இப்படிச் சொல்கிறேன். அடிப்படைக் கணக்கினால்தான். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கிற வாக்கு வங்கி அப்படியே இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு விழுந்திருந்தால் அம்மா ஜெயித்திருக்க முடியுமா? முடியவே முடியாது. அப்போது என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகளின் தொண்டர்களே தி.மு.க. தங்களை நடத்துகிற விதத்தால் நொந்துபோய் தி.மு.க.வுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்க ஆரம்பித்தபின், அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதியால் எவ்வளவு முயன்றும் தமிழக முதலமைச்சர் ஆக முடியவில்லை. நான்முடிச் சோழன் ஆனதெல்லாம் எம்.ஜி.ஆர் இல்லை என்று தெரிந்தபின்தான். அதேபோல, அ.இ.அ.தி.மு.க பிரிந்து இரண்டு அணிகளாக நின்ற போதும், 1996-ல் ஜெயலலிதா எதிர்ப்பு அலையும், ரஜினி ஆதரவு அலையும் (ரஜினி ஆதரவு அலை என்று ஒரு அலை இருந்ததா? இல்லையென்றால் இந்த வாக்கியத்தைக் கண்டு கொள்ளாதீர்கள்! ஆனாலும், அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு ரஜினியின் பங்கு கணிசமானது.) வீசியபோது தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடிந்ததே தவிர தன் சொந்த பலத்தால் ஜெயிக்கவில்லை. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாதது இல்லை. தெரிந்தும் அடுத்த தேர்தலில் தி.மு.க. மட்டுமே தனிப்பெரும்பான்மை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்புவாரேயானால், அந்த நம்பிக்கைக்கு என்ன ஆகும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் உதாரணம்.

மத்தியில் மட்டுமல்ல கூட்டாட்சி! மாநிலத்திலும் இனி கூட்டாட்சிதான்! அந்தக் கூட்டாட்சிக்குத் தலைமை தாங்க தி.மு.க.வைக் கூட்டணி கட்சிகள் பெருந்தன்மையுடன் அழைக்கின்றன. அதற்குத் தி.மு.க. ஒத்துக் கொள்ளவில்லையென்றால், கருணாநிதிக்குத் தமிழக மக்கள் இந்த இடைத்தேர்தல் முடிவின் மூலம் பின்வருவதைத்தான் சொல்கிறார்கள்:

"தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வழி நடத்துங்கள்! அல்லது, கூட்டணி ஆட்சிக்கு வழி விடுங்கள்!"

அதிகாரமும் பணமும் கள்ளவோட்டும் விளையாடாத தேர்தல் இல்லைதான். ஆனால், எதிர்க்கட்சி ஜெயித்தவுடனேயே பணநாயகத்தால் மட்டுமே அது ஜெயித்தது என்று கருணாநிதி போன்ற மூத்த தலைவரே ஜல்லியடிப்பது, அதுவும் 50 வருடங்களுக்கு மேல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து தேர்தலில் பங்கு பெற்று வருகிற கட்சியைச் சார்ந்தவர் சொல்வது, ஜனநாயகத்தையும் அதில் நம்பிக்கை வைத்து வாக்களித்த பெரும்பான்மையான மக்களையும் இழிவுபடுத்துவது ஆகும். இந்த மாதிரி ஜிகிர்தண்டா ஸ்டேட்மெண்ட்களை கருணாநிதி என்றைக்கு நிறுத்தப் போகிறாரோ? தோல்வி எதன் பொருட்டு வந்தபோதும் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கிற தைரியத்தையும் நேர்மையையும் நம் அரசியல்வாதிகளுக்கு இறைவன் அருள வேண்டும். (உடனே, இந்த விஷயத்தில் ஜெயலலிதா யோக்கியமா என்று கேட்காதீர்கள். அவர் மட்டுமில்லை, இன்னும் நிறைய அரசியல்வாதிகளும்கூட தோல்வி என்றால் பழியை அடுத்தவர் மீது போடுகிறவர்கள்தான்.)

இந்த இடத்தில் CPI-இன் தமிழ் மாநிலச் செயலர் தோழர். தா. பாண்டியன் முதிர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும், "தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். ஏன் தோற்று விட்டோம் என்பது குறித்து இனிதான் ஆராய வேண்டும்" என்ற பொருளில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க இரண்டின் மீதும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. இரண்டுமே கொள்கையளவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இரண்டுமே மதச்சார்பின்மை பேசிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கொஞ்சிக் குலாவியவைதான். இரண்டுமே சாதியற்ற சமத்துவம் பேசிக் கொண்டு சாதிக்கட்சிகளுடன் கூட்டணியும் ஜாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வும் நடத்துபவைதான். ஆனாலும், ஏன் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி வேண்டும் என்று சொல்கிறேன்?

அம்மா ஏற்கனவே ஓர் தறிகெட்ட குதிரையாகச் செயல்பட்டு வருகிறார். அவரே இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பது என்பது, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல. கேரளா போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு மாற்றுக் கூட்டணி (சென்ற முறை எதிர்க்கட்சியில் இருந்த கூட்டணி) ஆட்சி அமைக்கிற நிலை தமிழகத்துக்கு வேண்டும். அது தமிழ்நாட்டுக்கு நல்லது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு தமிழகத்தில் நடைபெறும்போது, அந்த அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிற சரியான வழியில் செலுத்துகிற கடிவாளமாகக் கூட்டணி கட்சிகள் செயல்படுகிற வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் நடைமுறைப்படுத்துவதுபோலவே, மாநிலத்திலும் ஒரு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரைந்து கொண்டு அதை அமுல்படுத்த முயலலாம். மேலும் மத்தியிலும் தி.மு.க ஆட்சியில் இருப்பதால் மத்திய மாநில நல்லுறவுக்கும் அதனால் தமிழகம் பயன் பெறுவதற்கும் தமிழகத்தில் அதே கூட்டணி ஆட்சியில் இருப்பது பெயரளவிலாவது உதவக் கூடும். பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்ற விஷயங்களில் கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தி.மு.க. திரும்பவும் செய்யாது என்று நான் நம்புகிறேன். அந்தத் தவறுகளுக்கான விலையைத் தி.மு.க. செலுத்தியிருக்கிறது. பிரிவினைவாதமும் தீவிரவாதமும் பேசினால் தமிழக மக்களிடம் டெபாஸிட் கிடைக்காது என்பதைத் தி.மு.க. இப்போது நன்கறிந்திருக்கிறது. தி.மு.க. பேசுகிற தமிழ்வாதமும் தமிழ்ப் பற்றும் "அண்ணா நாமம் வாழ்க" என்று அது சொல்வதைப் போல ஒரு கோஷம்தான். அதைக் கூட தி.மு.க செய்யவில்லை என்றால் அந்தத் தமிழ்க் கோஷத்தைத் திருடிக் கொள்ள பிற கட்சிகள் தயாராக இருப்பதால், தி.மு.க. அதைச் செய்கிறது. மற்றபடிக்கு, ஒவ்வொரு மாநில மொழியிலும் ஒரு தொலைகாட்சி சேனல் வைத்துக் கொண்டுத் தி.மு.க. என்றைக்கோ தேசிய நீரோட்டத்தில் (முற்றிலும் கலக்க வில்லை என்றாலும்) அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டது என்றே நம்புகிறேன்.

அம்மா தேர்தல் கணக்குகளிலும் கூட்டணிகளிலும் அய்யாவைவிடப் புத்திசாலி. ஓட்டு வங்கி கூட்டணியை அமைத்து முதலில் வெற்றி ஈட்டிக் காட்டியவர் அம்மாதான். அந்த விதத்தில் கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளத் தயங்குவதுபோல இல்லாமல், அம்மா புத்திசாலித்தனமாக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்கிற சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அம்மாதான் அடுத்து என்ன செய்வார் என்றே தெரியாதே. இதைச் செய்யமாட்டார் என்று சொல்ல முடியுமா? இரண்டு பார்லிமெண்ட் தொகுதிகள் கூட பா.ம.க.வுக்குத் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் பிடித்தபோது, பா.ம.க.வை அழைத்து ஐந்து பார்லிமெண்ட் தொகுதிகளை ஒதுக்கியவர் அவர். அப்படித் திடீரென்று தி.மு.க. வரவே கூடாது என்பதற்காகக் கூட்டணி ஆட்சிக்கு அம்மா முன்வந்தால் தி.மு.க. பாடு திண்டாட்டம்தான். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், தி.மு.க. கூட்டணி அதுமட்டுமே இருக்கிற ஒரு கட்சி கூட்டணி ஆகிவிடும். ராமதாஸிலிருந்து இளங்கோவன் வரை அம்மா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு லாலி பாடுவார்கள்.

அத்தகைய ஒரு lose lose சூழ்நிலைக்குக் கருணாநிதி தன்னையும் தன் கட்சியையும் தள்ளப் போகிறாரா? அல்லது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொண்டு win win சூழ்நிலையில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? காலம் பதில் சொல்லும்.

(பின் குறிப்பு: ஓர் விவரமான அலசலாக நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போதைக்கு இவ்வளவுதான் முடிந்தது. விட்டுப் போனவற்றைப் பற்றியும், தெளிவாகச் சொல்லாதவை ஏதுமிருப்பின் அவை பற்றியும் பின்னர் நேரமிருப்பின்.)

3 comments:

-/சுடலை மாடன்/- said...

//கேரளா போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு மாற்றுக் கூட்டணி (சென்ற முறை எதிர்க்கட்சியில் இருந்த கூட்டணி) ஆட்சி அமைக்கிற நிலை தமிழகத்துக்கு வேண்டும். அது தமிழ்நாட்டுக்கு நல்லது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு தமிழகத்தில் நடைபெறும்போது, அந்த அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிற சரியான வழியில் செலுத்துகிற கடிவாளமாகக் கூட்டணி கட்சிகள் செயல்படுகிற வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் நடைமுறைப்படுத்துவதுபோலவே, மாநிலத்திலும் ஒரு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரைந்து கொண்டு அதை அமுல்படுத்த முயலலாம். //

இடையிடையே சில கருத்துக்களில் உங்களோடு உடன்பாடு இல்லையெனினும் (அல்லது எதிரான கருத்துக்கள் உடையவன் என்றாலும் :-)) இந்த ஒட்டுமொத்தக் கருத்துடன் முழுக்க உடன் படுகிறேன். இதையே நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. பல இனங்கள், மொழியினர், பண்பாடுகள் கொண்ட இந்தியாவில் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியல் ஒரளவுக்கு ஜனநாயகப் படுத்தப்பட்டுள்ளது, இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலுங்கூட. இங்கு ஊழலுக்கும் வாய்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். குடும்ப அரசியல் நடத்திய காங்கிரஸும் கடந்த தேர்தலுக்குப் பிறகுதான் இதை உணர்ந்திருக்கின்றனர். எனவே தமிழ் நாட்டிலும் இந்த நிலை வந்தால் நல்லது. குடும்ப அரசியல் நடத்தி வரும் தி.மு.கவினரும் விரைவில் உணர்வார்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

மயிலாடுதுறை சிவா said...

தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வருமா என்று எனக்கு தெரியவில்லை.

கலைஞரும் அவ்வளவு எளிதாக ஓத்துக் கொள்வார் என்று நம்பிக்கை இல்லை.

ஆனால் கூட்டணி ஆட்சியால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் நன்மையே.

எல்லாவற்றிக்கும் மேலாக தலித் மக்களுக்கு இதனால் முன்னேற்றம் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சியே!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

மாயவரத்தான் said...

//"தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வழி நடத்துங்கள்! அல்லது, கூட்டணி ஆட்சிக்கு வழி விடுங்கள்!"//

ஆம்.. அதனால் தான் தனியொரு கட்சியாக இடைத் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க.வுக்கு வெற்றியை பரிசாக அளித்தார்கள்.

சிவகுமார் சார், நெஜம்மாவே நீங்க சொன்ன அமைச்சர்கள் பட்டியல் படித்தேன். 'நெஜம்மாவே' சொல்றீங்களா?!

அது சரி.. 'திருமா' அம்புட்டுதானா?!