Wednesday, May 25, 2005

தேசிய நியாயங்கள் - மற்றவரை வெளியேற்றுவோம்

ஏப்ரல் 2005 மாத உயிர்மை இதழில் அ.மார்க்ஸ் தேசிய நியாயங்கள் - மற்றவரை வெளியேற்றுவோம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (கம்ப்யூட்டருக்குப் இப்போதுதான் அறிமுகமாகியிருப்பார்களுக்கு: முன் வாக்கியத்தில் இருக்கிற கட்டுரையின் தலைப்பைச் சொடுக்குவதன் மூலம் அ.மார்க்ஸின் கட்டுரைக்குப் போக முடியும்.)

தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. படிப்பது மட்டுமில்லை, படித்துவிட்டு விவாதிக்க வேண்டிய ஒன்றுமாகும்.

1. ஹிட்லருக்காவது ஒரு தேசிய நோக்கம் இருந்தது என்கிறார் பெ.மணியரசன்.

2. மற்றவரை வெளியேற்றுவோம் என்று மாநாடு நடத்துகிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

3. ரொம்பவும் பெருந்தன்மையோடும் நிபந்தனையோடும் வீட்டில் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்களை ஏற்றுக் கொள்வோம் என்று அபயம் அளித்திருக்கிறாராம் பெ.மணியரசன். அப்துல் ஜப்பார் போன்று தமிழ் தேசியம் பேசுகிற இஸ்லாமிய அன்பர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமா இல்லையா என்று பெ.மணியரசனிடம் கேட்டு வைத்துக் கொள்வது நல்லது.

4. தெலுங்குப் பேசுவோரைப் புவியியல் ரீதியிலும் முஸ்லீம் மக்களை மொழி ரீதியிலும் பிளவுபடுத்தி அடையாளத்தைச் சிதைக்கிறது தமிழ் தேசியம் என்கிறார் கட்டுரையாசிரியர்.

5. தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியாவது தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக வைக்கிறது. மற்றவர்கள் இம்மாதிரியான நுண்மையான விஷயங்களில் காட்டுகிற மவுனம் ஆபத்தானது என்கிறார் அ.மார்க்ஸ். தமிழ் மொழி வெறியர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மொழியின் மீதுள்ள அன்பினால், தனித்தமிழ் எழுத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு தருகிற தளத்தில் இயங்குகிற அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இராம.கி. போன்றவர்கள் இதைப் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை. தமிழ் அழிந்துபோய்விடுகிற அபாயமிருக்கிறது என்கிற பழைய பல்லவியுடன் கச்சேரியை முடித்துக் கொள்கிறார்கள். தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது என்கிற ஒத்த கருத்து, தமிழ் தேசியம் பேசுகிறவர்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதே ஒரு சிக்கல். இதையெல்லாம் விவாதிக்காமல் எப்படி மூன்றாம் மொழிப் போரை ஆதரித்துவிட முடியும் என்ற கேள்வியை யாரும் கேட்கவே கூடாது என்றும் பலர் எதிர்பார்க்கிறார்கள்.

6. சாதி அடையாள அரசியலில் தம் ஆதரவு குறுக்கப்படும் சிக்கலிலிருந்து மீண்டு அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாக ராமதாஸ¥ம் சேதுராமனும் தமிழ்ப் பாதுகாப்புப் பேரவை நடத்துவதாகவும் கட்டுரையாசிரியர் அடையாளம் காட்டுகிறார். தலித் பிரச்னைகளைக் காட்டிலும் தமிழ்ப் பிரச்னைகளைத் தோளில் சுமந்து திரிவதாக திருமாவளவனையும் சொல்கிறார். தலித் பிரச்னை வேறு, தமிழ்ப் பிரச்னை வேறு என்று சரியான அடையாளம் கண்டிருக்கிற அ.மார்க்ஸ¥க்குப் பாராட்டுகள்.

7. சுயதரிசனம் செய்துகொள்ள விரும்புகிற எந்த அறிவுஜீவியும் சிந்தனாவாதியும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளை இக்கட்டுரை எழுப்புகிறது. இக்கேள்விகளுக்கு ஒவ்வொருவர் ஒரு பதில் அளிக்கலாம். அ.மார்க்ஸ¥டன் உடன்படலாம். உடன்படாமல் போகலாம். ஆனால், இத்தகைய கேள்விகளையே கேட்காமல் தமிழ் தமிழ் என்று தவளைக் கூச்சல் போடுகிறவர்களுக்கு இருக்கிற உள்மனத் திட்டங்கள்/கனவுகள் பற்றித் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

8. அ.மார்க்ஸின் இக்கட்டுரையின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். அவர் சொல்கிற பிற கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரியார் பெயரை முன்னெடுத்துச் செல்கிறவர்களில் அவருக்காவது பெரியார் பாணியில் மொழியை அணுகுகிற பாங்கு இருக்கிறது என்பது குறித்து சந்தோஷமே. மேலும், அ.மார்க்ஸ் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தவர். இன்றும் கூட, இந்திய தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிக்கிறவராக அவர் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒருவர் எழுப்புகிற கேள்விகளை இந்துத்துவா என்று சொல்லியோ பார்ப்பனீயம் என்று சொல்லியோ ஒதுக்கிவிட முடியாத தர்மசங்கடத்தில் மூன்றாம் மொழிப்போரை முன்மொழிகிற கிணற்றுத் தவளைகள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்.

9. அ.மார்க்ஸ் எழுதிய "கலாசாரத்தின் வன்முறை" என்கிற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முடித்ததும் நேரம் இருக்கும்போது ஒரு வாசக அனுபவம் எழுத வேண்டும் என்கிற ஆவலை அப்புத்தகம் ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்!

5 comments:

ROSAVASANTH said...

அ.மார்க்ஸ் ரொம்ப காலமாய் தமிழ் தேசியம் குறித்து விமர்சனமாய் எழுதிவருகிறார். ஆனால் அதை வரதனும், சிவக்குமாரும் (வசதிக்கு ஏற்ப) முன்வைப்பதை போல, அவர்களின் இந்திய தேசிய வெறிக்கு சார்பானது அல்ல. தமிழ் தேசியத்தை விட இன்னும் தீவிரமாய் இந்திய மற்றும் இந்து தேசியத்தையும் அ.மார்க்ஸ் எதிர்த்து வருகிறார். அ. மார்க்ஸின் கருத்துக்கள் வரதனுக்கும், சிவக்குமாருக்கும் உவப்பாய் இருக்க வாய்பில்லை. இப்படி வசதிக்கு ஏற்ப பேச மட்டுமே பயன்படும். (அ. மார்க்ஸின் இந்திய தேசியத்தின் மீதான விமர்சனத்தையும் இங்கே குறிப்பிடும் அளவிற்கு சிவக்குமாருக்கு நேர்மை இருக்காது என்பதை நான் குறிப்பிட்டு பலர் அறியவேண்டியதில்லை.)

ROSAVASANTH said...

அ.மார்க்ஸின் கட்டுரையை படித்தேன். அதை பற்றி ஒரு பதிவு எழுதும் சிவக்குமாரின் உத்வேகம்தான் புல்லரிக்க வைக்கிறது.

என் கருத்துக்களை அணுவளவும் பிசகாமல் நிருபித்து வரும் அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னலும் தகும்.

பெரியாரை தாக்க ரவிக்குமார் சிவகாமியை முன் வைக்கலாம். இன்னும் குணாவைகூட துணைக்கு கூப்பிடலாம். 'தமிழ் எதிரி' பெரியாரை கவனித்த பின், தமிழ் தேசியவாதிகளையும், திருமா போன்றவர்களுக்கும் முடிவு கட்ட அ.மார்க்ஸை துணைக்கழைக்கலாம். பேஷ், பேஷ்!

-/சுடலை மாடன்/- said...

(தவறுதலாக சிவக்குமாருடைய புதிய பதிவில் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை அளித்து விட்டேன், மன்னிக்கவும்.)

அ.மார்க்ஸ் இந்திய (இந்து மத - பார்ப்பனிய) தேசியத்தின் பாசிஸத்தையும், அதற்கு எதிர்வினையாகத் தோன்றிய தமிழ் தேசியத்தின் பாசிஸத்தையும் பற்றி பல ஆண்டுகளாக எழுதி வருபவர். சிவக்குமார் தன்னுடைய குருநாதர் ஜெயகாந்தனைப் போல ஒருபக்க மட்டையடி மட்டுமே செய்பவர் என்பதால் நேர்மையின்றி தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டேயிருப்பார். இதையும் ஏற்கனவே ரோசா வசந்த் பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.

பி.கே.சிவக்குமாரின் நேர்மையின்மைக்கு இன்னும் ஒரு உதாரணம் இங்கே - அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, இரவிக்குமார் ஆகியோர் சேர்ந்து நடத்திய நிறப்பிரிகை என்ற சிற்றிதழ் தொன்னூறுகளின் தொடக்கத்தில் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் பல அறிவுப் பூர்வமான விவாதங்களை நடத்தியது. அப்பத்திரிகையில் "தமிழக வரலாறு - சில குறிப்புகள்" என்ற தலைப்பில் அவர்கள் சேர்ந்து ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தனர். நேரமின்மையால், அதன் முன்னுரையில் அ.மார்க்ஸ் எழுதிய இரு பத்திகளை மட்டும் இங்கு தருகிறேன்:


"கடந்த பல பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற திராவிட இயக்கங்களின் மூல முன்னோடிகள் பார்ப்பனரல்லாத உயர் ஆதிக்க சக்திகளாகவே இருந்தனர் என்பது வெளிப்படை. பார்ப்பனியத்திற்கும், ஆரியமயப் பொற்காலத்திற்கும் எதிராக ஆரியமயத்திற்கு முற்பட்ட திராவிடப் பொற்காலத்தை இவர்கள் முன் வைத்தனர். இதற்காகத் தமிழின் தொன்மையை முற்றிலும் விஞ்ஞான விரோதமாகவும் முட்டாள்தனமாகவும் கொண்டு சென்றனர். கோடானு கோடி அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பார்ப்பன - சைவ இந்துமயப் பரவலையும் அந்தப் பண்பாட்டையும் தமிழகத்தின் பொற்காலமாய் முன் வைத்தனர். தங்களின் உள்நோக்கம் நல்லதாயினும் இத்தகைய விஞ்ஞான விரோத தொன்ம உயிர்ப்புகளுக்குப் பலியான பல அடித்தட்டு வர்க்க சாதிகளைச் சேர்ந்த தனித் தமிழறிஞர்களும் இதற்கு விதி விலக்காய் அமையவில்லை. பாவாணர், குணா போன்றோரை இவ்வகையில் அடக்கத் தோன்றுகிறது. இத்தகைய உயிர்ப்பித்தல்கள் உண்மையில் பார்ப்பனியத்தின் வேரை அறுக்கவும் பயன்படாது என்பதை உணராதிருந்தனர்.

தமிழகத்தில் பார்ப்பனியம் உயிர் பெற்றுள்ள சூழலில், திராவிட இயக்கங்கள் தோலுரிந்து கிடக்கும் நிலையில், 'வேள்விக்குடி சாசனக்' காலத்திற்குத் தமிழகம் திரும்பியுள்ள தருணத்தில் புதிய எழுச்சியுடன் உருவாகும் இயக்கங்கள் தமிழக வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதில் ஆர்வம் காட்டுவதை நிறப்பிரிகை நல்ல அறிகுறியாகப் பார்க்கிறது."


இந்த பத்திரிகை அ.மார்க்ஸ் - இரவிக்குமாருக்குள் ஏற்பட்ட விரிசலையும், அதன் பிறகு அவர்களின் கொள்கை வெளிப்பாடுகளும், எழுத்துக்களும் புதிய நட்புகளும் அவர்களுடைய மோதலின் அடிப்படையிலேயே அமைந்தன என்பதையும் சிற்றிதழ் அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவர். பின்னர் 'காலச்சுவடு' இரவிக்குமாரை அரவணைத்துக் கொண்டதும் இந்த மோதலின் அனுகூலமே. தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் 'உலகத் தமிழர்' இதழில் தொடர் எழுதி வரும் இரவிக்குமாரை மனத்தில் கொண்டு (காலச்சுவடின் எதிர்ப் பத்திரிகையான) உயிர்மையில் அ. மார்க்ஸ் தமிழ் தேசியத்தை எதிர்த்து தற்பொழுது எழுதுவதும் கூட அந்த அரசியலின் தொடர்ச்சியே. இந்த எழுத்தாளர்களும், சிற்றிதழ்களும் நடத்தும் அரசியல் பல நேரங்களில் அவர்களது சமூகத்தின் சுயனலம் சார்ந்தவையாகவும், சில நேரங்களில் தனிநபர் விறுப்பு வெறுப்பு சார்ந்தவையாகவும் உள்ளன.

ஆனால் அப்படிப்பட்ட அரசியலையும் தாண்டி - இப்பத்திரிகைகளும், எழுத்தாளர்களும் பல விவாதங்களை, அதன் அடிப்படையில் எழும் ஆழமான புரிதலை அளிக்கின்றன. சாதாரண வாசகர்கள் எந்த ஒரு எழுத்தாளரோடும், பத்திரிகைகளோடும், எப்பொழுதும் உடன் பட இயலா விட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவையனைத்தையும் படிப்பது நம்மை நாமே அறிவுக்கண்ணாடியில் பார்த்து விமர்சித்துக் கொள்ள, புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் ஆரியமயமான பார்ப்பனிய தேசியத்தையும், அதற்கு எதிர்வினையாகத் தோன்றிய திராவிட, தமிழ்த் தேசியத்தையும் பற்றியும், அவர்கள் இட்டுச் செல்லக் கூடிய பாசிஸ வழிகளையும் அ.மார்க்ஸும், இரவிக்குமாரும், இன்னும் பலரும் எழுதிக் கொண்டிருக்கின்றனர், மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதற்காக பயன் படுத்திக் கொண்டாலும் கூட.

ஆனால் பி. கே. சிவக்குமார் தன் அரசியலைத் தொடர்வதற்கு எழுத்தாளர்களின் ஒரு பாதி விமர்சனத்தை மட்டும் பயன் படுத்திக் கொள்வது நேர்மையற்றது. அதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு என்றாலுங்கூட. அடுத்து எஸ். வி. இராஜதுரை புலிகளை விமர்சித்து எழுதிய கட்டுரையைப் போடுவேன் என மிரட்டியிருந்தார். எஸ். வி. இராஜதுரை இந்திய அரசின், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய ஆசையையும், அதற்காக ஈழமக்களின் வாழ்க்கையைப் பலி கொடுப்பதையும் புத்தகமாக வெளியிட்டுள்ளார். நேர்மையற்ற சிவக்குமார் அதைப் பற்றி மவுனமே சாதிப்பார், அதுவும் அவரது ஜனநாயக உரிமையே.

நன்றி - சொ. சங்கரபாண்டி

(பி.கு. - நான் அவருடைய பதிவில் பின்னூட்டமிடக் கூடாது என்று சொன்னார் சிவக்குமார் . வரதனுக்காகவும், பாலாவுக்காகவும் திறந்து வைக்கப் பட்ட பின்னூட்டப் பெட்டியை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய பின்னூட்டத்தை நீக்கி விட மாட்டார் என நம்புகிறேன்.)

PKS said...

இந்தப் "பகுத்தறிவுஜீவிகள்" நான் எழுதுவதைப் படிக்கிறார்களா என்றே தெரியவில்லை. படிக்காமலேயே அடுத்தவரை நேர்மையில்லாதவர் என்று சொல்வது எந்தத் தர்க்கமோ?

நான் என் கட்டுரையில் எழுதிய வரிகள் பின்வருமாறு:

"மேலும், அ.மார்க்ஸ் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தவர். இன்றும் கூட, இந்திய தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிக்கிறவராக அவர் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒருவர் எழுப்புகிற கேள்விகளை இந்துத்துவா என்று சொல்லியோ பார்ப்பனீயம் என்று சொல்லியோ ஒதுக்கிவிட முடியாத தர்மசங்கடத்தில் மூன்றாம் மொழிப்போரை முன்மொழிகிற கிணற்றுத் தவளைகள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்."

மேலே தெளிவாக இருக்கிறது. இந்திய தேசியமா, தமிழ் தேசியமா என்று வந்தால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிப்பவராக அ.மார்க்ஸ் இருக்கக் கூடும் என்று.

இதைக்கூடப் புரிந்து கொள்கிற சிந்தனா சக்தி இல்லையென்றால் என்ன செய்வது? தமிழ் தமிழ் என்று கத்துகிற இவர்களால் தமிழைப் படிக்க முடியுமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சரி, நான் நேர்மையில்லாதவன், மோசமானவன் blah blah என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அதற்காக என் கேள்விகளைப் புறந்தள்ளி விடலாமா? இவர்களைக் கேள்வி கேட்கிறவர்கள் இவர்களைவிட மேலானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பட்டமான சனாதன புத்தியில்லாமல் வேறென்ன? தன் சிந்தனையின் பிற்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்ட இம்மாதிரி இவர்கள் எழுதுகிற கமெண்ட்டுகள் உதவுகின்றன என்ற அளவிலே சந்தோஷம்தான்.

நீ யார், நான் யார், உன் நோக்கம் என்ன, என் நோக்கம் என்ன, உன் ஜாதி என்ன, என் ஜாதி என்ன, உன் ஆதரவு என்ன, என் ஆதரவு என்ன, நீ நேர்மையா, நான் நேர்மையா, உன் யோக்கியதை என்ன, என் யோக்கியதை என்ன, உன் சிந்தனை எப்படி, என் சிந்தனை எப்படி இந்த இத்யாதிகள் எல்லாம் இங்கே யாருக்கும் முக்கியமில்லை. அப்படி அவற்றை முக்கியமென்று நினைக்கிறவர்கள் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். எனவே, எந்த விவாதம், எந்தக் கேள்வியென்றாலும் இவற்றுள் மீண்டும் புகுந்து ஜல்லியடிக்காமல், பேசப்படுகிற விஷயத்தைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இருந்தால் சொல்லலாம். இல்லையென்றால், அடுத்தவர் உளறுகிறார் என்று போய்க் கொண்டிருக்கலாம். இரண்டையும் செய்யாமல், மாற்றுக் கருத்துகளைச் சொல்பவர் மீது சாணியடிப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். அதை என் பதிவில் வந்து கழிந்து அசுத்தமாக்க வேண்டாம்.

எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரையை நான் உடனே இடவில்லையென்றால் என்ன? அது ரொம்ப முக்கியமென்றால் நீர் இடலாமே. ரவி ஸ்ரீனிவாஸ் விரும்பினால் அவருக்காக அதை இடுகிறேன் என்று சொன்னேன். இடச்சொல்லி அவர் கேட்கவில்லை. உண்மையிலேயே பகுத்தறிவு உள்ள மனிதருக்கு இதெல்லாம் புரியாதா என்ன? எதை வைத்து அடுத்தவனைப் பழி சொல்வது என்று அலைகிற கும்பல். காலையில் காலைக்கடன் வரவில்லையென்றாலும் கூட பழி சொல்வதற்கு யாரும் அகப்படுவார்களோ என்று அலைவார்கள் போலிருக்கிறது. அவர் என்னுடைய உதவி கேட்டு எழுதிய மடல் எனக்கு வந்ததா என்பதைக்கூட சரிபார்க்க முனையாமல் அதை அரசியலாகத் திரித்து பழி சொல்ல முனைந்த அற்ப மனிதர் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வருவது ஜனநாயகத் தன்மையை அதிகரிக்கும் என்று எழுதிவிட்டு, ஈழம் என்று வரும்போது மட்டும் விடுதலைப் புலிகளின் ஏக ஆட்சிக்குக் கொடி பிடிக்கிற சுயமுரண்பாடுகளின் மூட்டை, அடுத்தவரை நேர்மையில்லாதவர் என்று சொல்வது என்ன தர்க்கம் என்பதை வாசகர்களின் முடிவுக்கே விடுகிறேன்.

ROSAVASANTH said...

//இந்தப் "பகுத்தறிவுஜீவிகள்" நான் எழுதுவதைப் படிக்கிறார்களா என்றே தெரியவில்லை. படிக்காமலேயே அடுத்தவரை நேர்மையில்லாதவர் என்று சொல்வது எந்தத் தர்க்கமோ?

நான் என் கட்டுரையில் எழுதிய வரிகள் பின்வருமாறு:

"மேலும், அ.மார்க்ஸ் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தவர். இன்றும் கூட, இந்திய தேசியம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை அதிகம் ஆதரிக்கிறவராக அவர் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒருவர் எழுப்புகிற கேள்விகளை இந்துத்துவா என்று சொல்லியோ பார்ப்பனீயம் என்று சொல்லியோ ஒதுக்கிவிட முடியாத தர்மசங்கடத்தில் மூன்றாம் மொழிப்போரை முன்மொழிகிற கிணற்றுத் தவளைகள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லி வைக்கலாம்."//

நான் சங்கரபாண்டி எழுதியதை படிக்கவில்லை. இப்போது முடியாது. சிவகுமார் எழுதியதை படித்தேன். மேலே சிவக்குமார் எழுதியதையும் கணக்கில் கொண்டே என் வரிகள் எழுதப்பட்டுள்ளது. ஒரு தகவலுக்காக இது. மேலும் நான் தமிழ் தமிழ் என்று பேசுபவனல்ல. தமிழ் தேசியம் குறிப்பாய் புலிகள் குறித்த என் விமர்சனங்கள் இணையத்திலேயே உள்ளது. அதை சிவக்குமார் படித்திருப்பார் என்றும் தெரியும். தெரிந்தே இப்படி எழுதகூடியவர் என்றும் தெரியும்.

முதன் முதலாக நான் எழுதிய ஒன்றை எதிர்கொள்ள முயன்ற சிவக்குமாருக்கு பாரட்டுக்கள். அவருக்கு வசதியாக இருப்பதால்தான் இதை செய்திருக்கிறார் என்று தெரியும் என்றாலும்.