Tuesday, January 24, 2006

ஒற்று மிகும் மிகா இடங்கள்

(முன்குறிப்பு: எனிஇந்தியன்.காம் பதிப்புத் துறையில் இறங்கியபோது, தமிழில் ப்ரூப் ரீட் செய்ய வேண்டிய தேவை வந்தது. ஒற்று மிகும் மிகா இடங்களைப் பற்றி நினைவில் வைத்துக் கொள்ளச் சுலபமாக ஒரு பட்டியலைத் தயாரித்தேன். இந்தப் பட்டியல் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இருக்கிற சில விதிகள், மறைமலையடிகள் சொல்லியுள்ளதற்கு மாறாக இருப்பதாக ஹரன் பிரசன்னா சொன்னார். எனவே, இவைதான் சரியான ஒற்று மிகும், மிகா விதிகளா என்று தெரியாது. என்னுடைய தேவைக்குப் புத்தகத்தில் இருந்ததைச் சுருக்கமாக எழுதி வைத்திருந்தேன். இப்போது மரத்தடியில் பாபா ஒற்று மிகுமா என்று கேட்ட கேள்வியைப் பார்த்ததும் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். இதில் விட்டுப் போனவைகளை சேர்ப்பவர்களுக்கும், இதில் இருக்கிற பிழைகளைத் திருத்துபவர்களுக்கும் என் முன்கூட்டிய நன்றிகள். இது யாருக்கும் பயன்பட்டால் மகிச்சியே. - பி.கே. சிவகுமார்)

குறிப்பு: வல்லின எழுத்துகளில் ட், ற் என்பன சந்தி எழுத்துகளாக வரவே வராது. க், ச், த், ப் என்பவையே சந்தி எழுத்துகளாக வரும்.

வருமொழியின் முதலெழுத்து க், ச், த், ப் ஆகியவற்றின் வர்க்க எழுத்துகளில் ஒன்றாக வந்தால் வல்லின ஒற்று சில இடங்களில் மிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்:

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

8. இரண்டாம் வேற்றுமை விரி அல்லது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில், வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: அவனைக் காப்பாற்று)

9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும் (உதாரணம்: நீர்க்குடம். நீரை உடைய குடம் என்று விரியும்)

10. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும். (உதாரணம்: வெள்ளித் தட்டு - வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு என்று விரியும்.)

11. நான்காம் வேற்றுமை விரி (அல்ல்லது நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: தந்தைக்குக் கடமை)

12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: வேலிக் கம்பி - வேலிக்குக் கம்பி என்று விரியும்)

13. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் - நிலைமொழி அ·றிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: கூலிப்படை - கூலிக்குப் போர்புரியும் படை என்று விரியும்)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அ·றிணையாயின் பெரும்பாலும் வல்லினம் மிகும். (உதாரணம்: புலமைச் சிறப்பு - புலமையது சிறப்பு என்று விரியும்)

15. ஏழாம் வேற்றூமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்ப்பாம்பு - நீர்க்கண் வாழும் பாம்பு என்று விரியும்.)

16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)

17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)

18. இருபெயரொட்டு பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மழைக்காலம், செவ்வாய்க் கிழமை, சாரைப் பாம்பு)

19. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மலர்க்கண் - மலர் போன்ற கண், சர்க்கரைத் தமிழ்)

20. போல என்னும் உவம உருபின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: பாம்பு போலச் சீறினான்)

21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

22. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: தேடிச் சென்றான், நாடிப் போனான்)

23. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: காணக் கூடாது, படிக்கப் பயப்படாதே.)

24. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாய்க் கூறினான், போய்ப் பார்)

25. ஆக, போக என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாகக் கேள், போகக் கூடாது.)

26. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: கேளாக் கொடு, காணாச் சிரித்தான்.)

27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

28. சித்திரை முதலான மாதங்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

29. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து வரின் வல்லினம் மிகும். ஓரெழுத்து ஒரு மொழிக்கும் இது பொருந்தும். (உதாரணம்: கல்விக் கடல், அறிவுச் சுடர், தீப் பற்றியது, கைப்பிடி)

30. இனி, என என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

31. எழுவாய்த் தொடரானாலும் நிலைமொழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழி முன் வல்லினம் பெரும்பாலும் மிகும். (உதாரணம்: தீச்சிறியது, நாக்குழறியது)

32. எழுவாய்த் தொடரில் குறில் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: இராப் பகல்)

33. எழுவாய்த் தொடரில் இரு நெடில்களில் பின் வல்லினம் மிகும். (தாராப் பறந்தது, ஆமாத் துரத்தினான்)

34. கடு, விள என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும். (கடுச் சிறிது, விளத் தீது)


வல்லின ஒற்று மிகா இடங்கள்:

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

3. அவை, இவை, எவை, அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

4. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

5. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

6. அன்று, இன்று, என்றூ என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.

8. எண்ணுப் பெயர்களான, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

9. ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது.

10. முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்.)

11. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: நீர் குடித்தான்)

12. மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கை தட்டினான்)

13. மூன்றாம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகாது. (உதாரணம்: தந்தையோடு சென்றான்.)

14. சிறு, சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

15. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது. (உதாரணம்: தங்கை பெண், கண்ணகி கேள்வன்)

16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் உயர்திணையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தக்கோர் சால்பு)

17. ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)

19. ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கண்ணனது கை)

20. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தரை படுத்தான்.)

21. எட்டாம் வேற்றுமை என்னும் விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தலைவா கொடும், நாடே தாழாதே.)

22. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தாழ்குழல், காய்கதிர்)

23. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கபிலபரணர், செடிகொடி, வெற்றிலை பாக்கு)

24. வினைமுற்றுத் தொடர்களில் வல்லினம் மிகாது. (உதாரணம்: ஓடின குதிரைகள், போயின பசுக்கள்)

24. படி என்னும் இறுதியுடைய சொல் வினையுடன் சேர்ந்து வரும்போது வல்லினம் மிகாது. (உதாரணம்: வரும்படி சொல், போகும்படி சொல்லாதே.)

25. பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: வந்த கன்று, சென்ற தாய், ஓடிய சிறுவன்)

26. உகர ஈற்று வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: சென்று கண்டான், தின்று கொழுத்தான்)

27. ஆ என்னும் எழுத்தை இறுதியில் கொண்டுள்ள வினாச்சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: அவனா சொன்னான், அப்படியா சொன்னான்)

28. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

29. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

30. நனி, கடி, மா என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

31. ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

7 comments:

Boston Bala said...

எனக்கு உபயோகமாகும். நன்றிகள்.

சின்ன விலாபம் ஒன்னு...
தங்களின் 'ரெஃபரன்ஸ்' சுட்டிகளை, முதல் பக்கத்திலேயே தொடுப்புக் கொடுங்களேன். இந்தப் பதிவு, பிஏகே குறிப்பு என்று நிறைய மனசிலாடுகிறது.

எப்பொழுது தேவையோ, அப்பொழுது சட்டென்று செல்ல முடியுமே.

PKS said...

Baba,

Thanks. No time for me now to focus on my blog template now. Earlier, friends used to help a lot. Now a days, they are busy too. :-)

Thanks and regards, PK Sivakumar

Voice on Wings said...

'என்ற' என்பதற்குப் பிறகு வல்லினம் மிகுமா? உ-ம், "xxx என்ற(?) பெயர் / திரைப்படம் / செடிவகை / கல்விக்கூடம்", etc etc. தெளிவுப்படுத்தினால் உதவியாக இருக்கும்.

மு. சுந்தரமூர்த்தி said...

Here is another easily accessible source.
http://www.thedmk.org/ilak/index.html

Disclaimer: I am not a card carrying member

PKS said...

Sundaramoorthi,

Thanks for the link.

//Disclaimer: I am not a card carrying member //

Appo, "card carry pannaatha" member-aa? :-) {Kidding}

Thanks and regards, PK Sivakumar

எம்.கே.குமார் said...

உபயோகமான குறிப்புகள்
மிக்க நன்றி.

எம்.கே.

Anonymous said...

i have a doubt and i couldnt find out the proper rule in this as i dont know what is "vetrumai viri", "vetrumaith thogai" etc... can u pls clear my doubt?

"pazhayana[] kazhithalum
puthiyana[] puguthalum"

ivviru idangalil valinam miguma? migatha?
entha vithippadi?