Wednesday, March 22, 2006

தோல்விகள்

1970-இல் வெளியான ஞானரதம் இதழொன்றில் சந்திரமௌலி என்ற புனைபெயரில் பி.ச. குப்புசாமி எழுதிய கவிதை இது.

வாரா திருந்திட்ட நாட்களுக் காக
வசைபாடச் சென்றிருந்தேன்! - அவள்
நேரா திருந்த நிகழ்ச்சிக ளெல்லாம்
நிகழ்ந்திடச் செய்துவிட்டாள்!

பிணக்கு வளர்ந்தினி பேசா திருக்கப்
பிடிவாதம் கொண்டிருந்தேன்! - அவள்
உனக்கும் எனக்கும் பகையும் உறவென்றோர்
உண்மை உணர்த்திவிட்டாள்!

பார்த்துப் புறக்கணித் தேகிய நாட்களின்
பட்டியல் வைத்திருந்தேன்! - அவள்
சேர்த்துப் பிடித்துச் சிரித்தத னாலந்தச்
சீட்டைக் கிழித்துவிட்டாள்!

பித்தம் பெரிதாய்ப் பிறர்வீட்டு வாசலில்
பிச்சைக்குட் கார்ந்திருந்தேன்! - அவள்
முத்தம் கொடுத்து முலையும் கொடுத்து
முழுதுந்தெ ளியச்செய்தாள்!

நன்றி: ஞானரதம்

No comments: