Sunday, March 28, 2004

நன்றி மறப்பது நன்றன்று

உஷா, பரி, மதி என்று பல நண்பர்கள் பலமுறை நீங்கள் ஏன் வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை என்று கேட்டது, இப்பதிவை நான் ஆரம்பித்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பது என் பதிலாக அப்போது இருந்தது; இப்போதும் இருக்கிறது.

இந்த வலைப்பதிவை முழுவதுமாய் வடிவமைத்துத் தந்து உதவியவர் நண்பர் சந்திரமதி. அவருக்கு நன்றிகள். வலைப்பதிவின் அமைப்புப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் வலைப்பதிவை மாதிரியாகத் தந்து வேண்டுமானால் இதை மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளூங்கள் என்று சொன்னவர் அருண். blogspot வேலை செய்கிற விதத்தை விளக்கியவரும் அவரே. அவருக்கு நன்றிகள். அப்புறம் நான் சிரமமேபடாமல் என் வலைப்பதிவை வடிவமைத்துக் கொடுத்தவர் மதி.

****** ***** *****

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அ·தே துணை


அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர். ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது. - மு.வரதராசன்

கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி


கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். - மு.வரதராசன்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை - மு.வரதராசன்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.


பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக் கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும். - மு.வரதராசன்

என் நண்பர் முனைவர் முருகானந்தம் காலை எழுந்ததும் ஒரு பக்கமாவது படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அவரிடம் என்ன படிப்பீர்கள் என்று கேட்டேன். தாயுமானவர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஐன்ஸ்டீன், ரஸ்ஸல், திருக்குறள் ... ... என்று ஒரு பக்க அளவுக்குப் படிப்பேன். பின், அதைப் பற்றி நாளெல்லாம் யோசிப்பேன் என்றார். நல்ல பழக்கமாய்த் தெரிகிறது, நாமும் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனாலும், என்னால் தினமும் முடிவதில்லை. இன்றைக்கு முடிந்தபோது படித்த திருக்குறள்கள் மேலே உள்ளவை. இவை குறித்து இன்றெல்லாம் யோசிப்பதாக உத்தேசம்.

1 comment:

மாரியப்பன்.சி said...

ரெம்ப கடமை உணர்வு ஜாஸ்தியா சார் ...? அட நம்ம ஆளு .
தோஸ்த் படா தோஸ்த்து...!