Thursday, April 15, 2004

பாட்டியின் மரபீரோ

(சிறுபிராயத்து நினைவுகள், தாத்தா பாட்டிகள், குழந்தைப் பருவம் ஆகியவை குறித்து எழுதுவதெல்லாம் பழகிப்போன சாதாரண நிகழ்வுகள். கவிதை அதையெல்லாம் மீறி வித்தியாசமானக் கருப்பொருள்களைப் பேச வேண்டும் என்று கவிஞர்கள் சொல்வதுண்டு. ஆனாலும், பழகிப்போன விஷயங்களையும் புதிதாகத் தரவல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். இந்தக் கவிதை குறித்து எனக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை. அம்மாவுக்குப் பாட்டியின்மீது மதிப்பில்லை என்கிற பொருளைக் கவிதை சுட்டுகிறதோ என்று தோன்றுகிறது. நான் சொல்ல வந்தது அதில்லை. மாறுகிற உலகத்தில் மதிப்புகள் மற்றவர்கள் ஆண்ட பொருள்களைச் சேமிப்பதில் இல்லை என்கிற முதிர்ச்சி வயதான அம்மாவுக்கும் வந்திருக்கிறது என்பதைச் சொல்ல விரும்பினேன். அதனாலேயே, எழுதி நாளானாலும் எங்கும் இடாதிருந்தேன். ஆனாலும், என் மனைவிக்குப் பிடித்துவிட்டக் காரணத்தால் அவர் சிபாரிசில் இக்கவிதை இங்கே இடம் பெறுகிறது.)

பாட்டியின் மரபீரோ

- பி.கே. சிவகுமார்

மரபீரோ
கல்யாணச் சீராய்
பாட்டி கொணர்ந்தது

இரண்டு அடுக்குகள்
உண்டு அதற்குள்
மேலடுக்கில்
செத்துப்போன தாத்தாவின்
இரண்டு சட்டை வேட்டிகள்
கீழடுக்கில்
பாட்டியின் புடவை ரவிக்கைகள்

பின்பக்க காலின் குமிழ்
வயதாகி உடைந்துவிட்டது
அட்டை கொடுத்து
நிறுத்தி வைத்திருந்தாள் பாட்டி
ஒருபக்க கதவும் கூட
எப்போதும் வந்துவிடுமென்பதுபோல்
சரியாக மூடாது

பாட்டி சொத்துகளுக்கு
பீரோதான் பேங்க்
பார்க்க வருகிறவர்கள்
கொடுக்கிற பணத்திலிருந்து
பதார்த்தங்கள் வரை
அங்கே
அவள் ஸ்பரிசத்துக்காகக்
காத்திருக்கும்

வெளுக்கத் துணி வாங்க வந்தவள்
நடைக்குப் பெயர்ந்திருந்த பீரோவைப் பார்த்து
நான் எடுத்துக்கட்டுமா எனக் கேட்க
கொஞ்ச நேரம் யோசித்த அம்மா
சரியெனச் சொல்லிப் போனாள்

பூஜையறையில்
மேலே விளக்கெறிய
ப்ரேம் போட்ட போட்டோவில்
பாட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாள்

No comments: