Friday, April 23, 2004

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் ஏப்ரல் 24. நாளை அவர் 70 வயதை நிறைவு செய்கிறார். அவருக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். ஜெயகாந்தனின் நண்பர் சிற்பி பாலசுப்ரமணியமும் பிற கோவை நண்பர்களும் ஏப்ரல் 26 அன்று கோவையில் அவர் பிறந்தநாளை ஒட்டி ஜெயகாந்தனுடன் ஒரு மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சிலநாள்களுக்கு முன் நானறிந்த தகவல்களின்படி, கே.எஸ்.சுப்ரமணியம், சிற்பி, பி.ச.குப்புசாமி உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள். தமிழில் ஜெயகாந்தன் உக்கிரமாக எழுதிய காலகட்டம் அவருடைய யுகம் என்றழைக்கப்படும் வகையில் பெருமை வாய்ந்தது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றவர் அவர். எழுதத் தெரிந்ததைப் போலவே எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும் எழுத்தாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தவர் அவர். தமிழில் சுயமாக சிந்தித்தவர்களில் அவரும் ஒருவர். காலம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிற இலக்கியப் பெயர்களில் ஜெயகாந்தன் என்றும் இருப்பார். இந்த நேரத்தில் அவரை, இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்துகிறேன்.

No comments: