Friday, April 23, 2004

பதில்களும் பார்வைகளும்

என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம் தீட்டுவதிலும் மகிழ்கிறார். ஆனாலும், பகிர்தல், பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், கூடி விளையாடுதல், மரியாதையும் பண்புகளும் கற்றல் என்று சமூகப் பழக்கங்களைப் பயில்வதற்கு அது மிகவும் உதவுகிறது. ஆனாலும், வீட்டில் அண்ணா, அம்மா உதவியோடு ABCD, One Two Three எல்லாம் கற்றுக் கொண்டாயிற்று. நான் ஹன்ட்ரட் என்று சொன்னபோது, அவர் "ஹன்ட்ரட் இல்லை டாடி, சே ஒன் அன்ட்ரட்" என்று திருத்தியதைக் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன். பேனா எடுத்தவர் கை சும்மா இருக்காது என்பதுபோல கற்றுக் கொள்கிற மனம் சும்மா இருக்குமா? வீடுகளின் சுவர்களிலிருந்து பார்க்கிற இடமெல்லாம் என் மகள் தன் கைவண்ணத்தைக் காட்டுவார். ABCD, எண்கள், சித்திரம் என்று மனம்போன போக்கில் எழுதுவார். என் மகன் சிறுவயதில் இதையே செய்து வாடகை வீட்டைக் காலி செய்யும்போது வெள்ளையடிக்க தண்டம் ஏதும் அழ வேண்டுமோ என்று என் மனைவி வருந்தியதுண்டு. நான் பொதுவாக எதுவும் சொல்வதில்லை. எழுதப் படிக்க மாட்டேன் என்று சொல்லாமல், ஏதோ ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறார்களே என்று விட்டுவிடுவதுண்டு. ஆனாலும், பழைய வீட்டைக் காலி செய்யும்போது பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதால், இப்போது தைரியத்தில் என் மகள் வீட்டுச் சுவர்களில் வரைந்து விளையாடுவதை அதிகம் கண்டு கொள்வதில்லை. அப்படியே என் மனைவி எவ்வளவு முறை சொன்னாலும், அவர் கவனிக்காத சில நிமிடங்களில் என் மகள் எங்காவது எழுதிவைத்து விடுவார். அம்மா பேப்பரில் எழுத வேண்டும் என்று சொல்கிறார் என்பதும், வேறு இடங்களில் எழுதக் கூடாது என்பதும் என் மகளுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் ஆர்வமும் விருப்பமும் அவரை எழுத வைக்கிறது போலும்.

நேற்று காலை, படுக்கையின் மீது விரித்திருந்த அழகான வெளிர்நிற படுக்கை விரிப்பில் ABCD, அப்புறம் மாடர்ன் ஆர்ட் போல கோடுகள் நிறைந்த சித்திரங்களைப் பார்த்தேன். ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது. என் மகளை அழைத்து அவற்றைக் காட்டியபடி கேட்டேன்.

"இது என்னமா?"

என் மகளுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர் அங்கே எழுதியிருப்பதை நான் விரும்பவில்லை என்று. ஆனால், இங்கெல்லாம் எழுதக் கூடாது என்று பொதுவாக நான் சொல்வதில்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமாளிக்கிறார். "தட் இஸ் ABCD டாடி"

"அது சரிம்மா, அது எப்படி படுக்கை விரிப்பில் வந்தது"

சற்றும் தளராமல் சிரித்தபடி, "தட் இஸ் ABCD டாடி"

"ஆமாம்மா, ABCDயுடன் நான் இன்னும் டிராயிங்கும் பார்க்கிறேன்."

சிரிப்பைச் சற்றுக் குறைத்தபடி, "தட் இஸ் ABCD டாடி"

"அது எப்படி இங்கு வந்தது"

சற்று இறுகிய குரலில் - "தட் இஸ் ABCD டாடி"

"ஆமாம்மா, இதை யார் வரைந்தது"

உடைந்துபோய் அழுகை எந்நேரமும் வந்துவிடக் கூடும் என்று தெரிகின்ற குரலில் "தட் இஸ் ABCD டாடி"

இதற்குமேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. "சரிம்மா, போய் விளையாடு" என்று சொல்லிவிட்டேன்.

என் மகளின் பதிலைப் பார்த்தீர்களேயானால் - அதில் பொய் என்று எதுவும் இல்லை. அவர் சொன்னது உண்மைதான். ஆனால், கேள்விக்கேற்ற சரியான பதிலா என்றால் இல்லை. திரும்பத் திரும்ப பிரச்னை இல்லை என்று தெரிகிற ஓர் உண்மையைப் பதிலாக வைப்பதனால், மேற்கொண்டு தர்மசங்கடமானக் கேள்விகள் வருவதைத் தடுக்க இயலும் என்பதையும், தனக்கு பலவீனமாய்ப் போய்விடக் கூடிய பதில்களைத் தவிர்க்க முடியும் என்பதையும் அந்தக் குழந்தை மனம் மூன்று வயதிலேயே அறிந்திருக்கிறது.

எனக்கு ஏனோ என் மகளுடனான இந்த உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஞாபகம் வந்தது. ஈராக் மீதான போர் பற்றிய தர்மசங்கடம் அளிக்கிற கேள்விகளுக்கெல்லாம் புஷ் "இன்று அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது. இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்." என்கிற ஒரே பதிலின் பல்வேறு வடிவங்களை உபயோகப்படுத்தி பதிலளிப்பார். அமெரிக்கர்களும் ஒரு கேள்விக்கு அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லையென்றால், ஓரிரண்டு முறைக்கு மேல் துருவித் துருவிக் கேட்காமல், அப்படியே விட்டுவிடுவர். இது அமெரிக்கர்களின் பழக்கம். இன்றைக்கு புஷ் மட்டுமில்லை அவர் கட்சியினர் அனைவருமே ஈராக் போர் பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தியே பதிலளித்து வருகின்றனர். இதற்கு "ஒருவரின் வலிமையானக் கருத்துகளை உபயோகப்படுத்தி வெல்வது" (Playing to one's strength) என்றுவேறு பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே, வெல்வதுதான் முக்கியம். உண்மை முக்கியமில்லை. வெல்வதற்கான வியூகங்களும் உபகரணங்களுமே பதில்களும் செயல்பாடுகளும் என்று வாழ்க்கை ஆகிவிட்டது. இந்த இடத்தில் உண்மையைத் தேடுவது உண்மைக்கும் தேடுபவர்க்கும் இடைஞ்சல் ஊட்டுகிற விஷயமாகவே முடியும்.

சற்று இதையே யோசித்துப் பார்க்கும்போது, இதைச் செய்வது புஷ் மட்டுமில்லை, மனிதர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளிலும் இணையத்திலும் இன்னும் நம்மைச் சுற்றிலும் நடக்கிற விவாதங்களைப் பாருங்கள். கேள்வி கேட்பவர்களும் பதில் சொல்பவர்களும் இருவேறு அலைவரிசைகளில் பேசிக் கொண்டிருப்பார்கள். இடையில் கிடைக்கிற வார்த்தைகள், வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு சமாளிப்புகள், திசைதிருப்பல்கள் ஆகியவை நிறைய நேரங்களில் நடைபெறும். இப்படிப் பேசுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி போல சமூக மதிப்பிலும் பதவியிலும் அந்தஸ்திலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது நமக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பாட்டு பாடுபவர்கள்தான் இருக்கிறார்களே யொழிய, பதில்களின் உண்மையை, பதில் சொல்பவரின் அறிவொழுக்கத்தை, அந்தப் பதில் நேர்மையானதா என்று காணுகிற பார்வையைப் பெரும்பாலோர் கொண்டிருப்பதில்லை. அல்லது பிடிக்காத ஆளா, நிறைய தொந்தரவு செய்கிற கேள்விகள் கேட்பவரா, நம்மைவிட வேறு நம்பிக்கைகள், வேறு சித்தாந்தங்கள் உடையவரா, அவர் சொல்வதற்கெல்லாம் விவரமான அல்லது அறிவுபூர்வமான பதில்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு சார்பானவர் என்று மேம்போக்கில் சொல்லிவிட்டுப் போனாலே போதுமென்று நினைக்கிறோம். தமிழில் மட்டுமில்லை எந்த இடத்திலும் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்த விரும்புபவர்களும், கருத்தைச் சொல்ல விரும்புபவர்களும் சந்திக்கிற பிரச்னைதான் இது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற நான் - என் மகள் அவர் செய்த தவறை ஒத்துக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொள்வதற்கோ கேள்விகளுக்குச் சரியான பதில் தரவில்லை என்று வருந்துவதற்கோ என்ன நியாயம் இருக்க முடியும்? அவரைப் பற்றியாவது நிறைய நம்பிக்கை இருக்கிறது. மூன்று வயதுதான் ஆகிறது. அவருக்கென்று அறிவும் புரிதலும் வருகிறபோது அவர் மாறிவிடக் கூடுமென்று.

No comments: