Sunday, April 11, 2004

வார விடுமுறையில் வாசித்தது

இந்த வார விடுமுறையில் படித்த புத்தகம் "அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ்". ரிச்சர்ட் கிளார்க் எழுதியது. அமெரிக்காவின் பயங்கரவாத சமாளிப்பு/எதிர்ப்புத் துறையின் தலைவராக இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியவர் கிளார்க். அவரை அரசியல்வாதியின் சாதூர்யம் கொண்டவர் என்று இங்கே பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், புத்தகத்தைப் படிக்கும்போது அரசியல் பேசுகிறார், தன் சொந்த நலன்களுக்காக எழுதியிருக்கிறார் என்கிற எந்த எண்ணமும் வாசகர் மனதில் தோன்றாமல், அவர் எழுதியிருப்பதைச் சராசரி வாசகர் பெருமளவு நம்பச் செய்கிற விவரங்களுடனும் நடையுடனும் புத்தகம் இருப்பது கிளார்க்கின் வெற்றி. சமீபத்தில் அவர் அளித்த வாக்குமூலமும் செப்டம்பர் 11-ல் உயிரிழந்தவர்களிடம் கடமையில் தவறிவிட்டேனென்று மன்னிப்புக் கேட்டதும் நீங்கள் அறிந்ததே.

புத்தகம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று காலையில் வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுகிற முதல் அத்தியாயம் (ஏறக்குறைய 34 பக்கங்கள்) பல புதிய தகவல்களையும், அந்தத் துயர் நாளின் பரபரப்பையும் அந்தச் சோகத்தை அமெரிக்க அரசாங்கம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒரு துப்பறியும் கதையின் அல்லது சுவாரஸ்யமான வரலாற்று நாவலின் வேகத்துடன் புத்தகம் பேசுவது அதை ஒரே மூச்சில் தொடர்ந்து படித்து முடித்துவிட உதவுகிறது. ஏறக்குறைய 275 பக்கங்கள். நான் நேரமின்மையால் முதல்நாள் 70 பக்கங்களும், இரண்டாம் நாள் மீதியும் படித்தேன். அமெரிக்கர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தார்களேயானால், புஷ் மீண்டும் ஜெயிப்பது கஷ்டம். இந்தப் புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைத்தால் விவரமாக எழுத வேண்டும். சுருக்கமாக வாசக அனுபவம் எழுதச் சொன்னால் ஒரு வார்த்தையில் சொல்லலாம். படியுங்கள்.

No comments: