Friday, April 30, 2004

ராணுவ அத்துமீறல்கள்

எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும். பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்கொலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது. ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும். இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப் பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.

உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும். தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன. இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன. காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.

ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல. அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.

எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

No comments: