Wednesday, May 05, 2004

திரு. கருணாநிதியின் சன் டிவி பதில்கள்

திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மாலன் இப்படிப் பேசலாமா என்று கேட்கப்படுகிறது. எதற்காகத் திரு.கருணாநிதி சொல்வதை விளக்குவதுபோல ஜெயலலிதாமீது காட்டமான விமர்சனம் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப் படுகிறது.

ஏன் வைக்கக் கூடாதா என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மாலன் செய்தது தவறில்லை என்றே படுகிறது. மாலனுக்கென்று தனியே அப்படிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அதை அவர் சொன்னார் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். திரு. கருணாநிதியின் கருத்துகளும் மாலனின் கருத்துகளும் ஒத்துப் போவதாலேயே மாலனை விமர்சிப்பது சரியில்லை. தி.மு.க.வின் சில பல கொள்கைகளுடன் ஒத்துப் போகிற தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாலேயே மாலன் சன் டிவியில் பணிபுரியக் கூடும். அப்படி இருக்கக் கூடுமானால், அதில் தவறு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஒத்துபோகாத இடத்திலும் மனம் உடன்படாதக் கொள்கைகளிலும் யாரும் பணிபுரிய இயலாது என்று நான் நம்புகிறேன்.

நமது எம்ஜிஆரில் திமுகவைப் புகழ்ந்தோ முரசொலியில் அதிமுகவைப் புகழ்ந்தோ எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், அவற்றில் வருவன பற்றி விமர்சிக்கலாம். அப்படி, மாலன் ஏன் இப்படிச் சொன்னார் என்று கேட்பதைவிட, அவர் கருத்துகள் குறித்து யாருக்கேனும் எதிர்வினை இருந்தால் செய்வது நன்றாக இருக்கும். வரலாற்றை எடுத்துக் கொண்டால், அறிஞர்களும் கலைஞர்களும் தேவை ஏற்படும்போது அரசியலில் இறங்கியும் கருத்துகள் சொல்லியும் இருக்கிறார்கள். அப்படி மாலனும் அரசியல் கருத்துகளைச் சொல்வதாக எடுத்துக் கொண்டு, அவர் கருத்து பற்றிய எண்ணங்களை வேண்டுமானால் சொல்லலாம். எழுத்தாளர்களூம் அறிஞர்களும் இப்படி அரசியலில் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.

மாறன் மறைவிற்குப் பின் திமுகவில் நவீன மற்றும் அறிவுபூர்வமான சிந்தனையில் விழுந்திருக்கிற இடைவெளியை, மாலன் போன்றவர்கள் நிரப்ப முடியும். திமுகவின் உதவாதக் கொள்கைகளை மிதப்படுத்தி, காலத்துக்கேற்றவாறு ஓரளவுக்கு மாற்றியமைத்து, அதன் குறிப்பிடத்தக்க நவீனக் கொள்கை மாறுதல்களுக்கு அடித்தளமிட்டவர் மாறன் என்று நான் நம்புகிறேன். மாலன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆலோசனைகளாலும் உலகளாவியப் பார்வையாலும் வாசிப்பு அனுபவத்தால் பெற்றிருக்கிற பரந்தபட்ட மனோபாவத்தாலும் அவர் விரும்புகிற கட்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்ய இயலும்.

உதாரணமாக, அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவுதான் பொடாவை எதிர்த்து ஆரம்பம் முதலே எழுதி வந்தாலும், திமுக, மதிமுக போன்ற கட்சிகள் பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆதரித்தன. பின்னர், அந்தச் சட்டத்தாலேயே வை.கோபால்சாமி பாதிக்கப்பட்ட பின்னரே, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. எழுத்தாளர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டால் இத்தகைய தவறுகளைக் கட்சிகள் களைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு மாலன் போன்றவர்கள் உதவ முடியும்.

மற்றபடிக்கு, சன் டிவியில் கருணாநிதி பொறுமையாகவும் நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வென்றதும் அதையே தொடர்வார் என்று எதிர்பார்ப்போம். அமங்கலமான வார்த்தை கூடாது என்றும், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை பிடித்திருப்பதாக என்றும் கருணாநிதி பேசியது மகிழ்ச்சி அளித்தது. அவர் கட்சியின் சில பேச்சாளர்களும் அதைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாகத் தங்கள் கட்சி திகழ உதவ வேண்டும்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பதில் சொல்கிற நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும். பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராயர் காப்பி கிளப் யாஹீ குழுமத்தில் சில மாதங்களுக்கு முன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிற இடங்களில் நடப்பது பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்த ஞாபகம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிற ஆலோசனையையே கூட மாலன் கொடுத்திருக்கலாம். திரு. கருணாநிதியைப் பின்பற்றி ஜெயலலிதா மற்றும் பிற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படிப் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முன்வர வேண்டும்.

No comments: