Friday, June 18, 2004

வலைப்பதிவுகளை எப்படி மதிப்பிடுவது? - திருத்திய வடிவம்

-1-

படைப்புகளுக்கு மதிப்பெண்கள் இடுவது பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. முக்கியமாக, கதை, கவிதை, கட்டுரை, சினிமா போன்ற கலை சம்பந்தமான படைப்புகளுக்கு மதிப்பெண்கள் இடுவது சரியில்லை என்றே நம்புகிறேன். ஏனென்றால், எந்தக் கலை சார்ந்த படைப்பும் அதனளவில் தனித்துவமானது. ஒரே கருவைக் கொண்ட பல புனைவுகள் கூட ஒவ்வொன்றும் வித்தியாசப்பட்டு ஒரிஜனல் தன்மையுடன் இருப்பது இதனால்தான். எனவே, அவற்றின் தனித்துவத்துக்காக அவற்றைப் பாராட்டலாம், விமர்சிக்கலாம். மதிப்பெண்கள் என்று கொடுக்கும்போது அந்த மதிப்பெண்கள் ஒப்பீட்டு அளவிலேயே இருப்பது நல்லது. தனித்துவமான கலை படைப்புகளை மற்ற கலை படைப்புகளுடன் ஒப்பிடுவது சரியாகாது என்று நான் நம்புவதால், கலை சார்ந்த படைப்புகளுக்கு மதிப்பெண்கள் இடுவது சரியாகாது என்பது என் எண்ணம்.

மதிப்பெண்கள் என்று வந்தால், ஒரு குறிப்பிட்ட மாணவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதனளவில் மட்டும் ஒப்பிட்டு அதற்கு மதிப்பெண்கள் தருவது சரியில்லை என்றே நம்புகிறேன். மதிப்பெண்கள் ஒப்பீட்டு அளவில் இருந்தாலேயே அது அந்த மாணவருக்கோ விஷயத்துக்கோ உதவும். இந்த இடத்தில் ஒப்பீட்டு மதிப்பெண் என்று Percentileஐக் குறிப்பிடுகிறேன். ஒரு மாணவரை அல்லது விஷயத்தைத் தனிப்பட்ட முறையில் கணித்து மதிப்பிட்டு உனக்கு இத்தனை சதவீதம் (Percentage) மதிப்பெண்கள் என்று சொல்வதை விடவும், அந்த மாணவரை அவரைப் போன்ற மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பின்னர் மொத்தமாகப் பார்க்கும்போது அவர் நிலை என்ன என்று சொல்வது அந்த மாணவருக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த ஒப்பீடுகள் பல்வேறு விதமாக இருக்கலாம். முதலில், ஒரு மாணவர் அவர் வகுப்பு மாணவர்களிடையே ஒப்பிடும்போது எந்த இடத்தில் இருக்கிறார், பின்னர் அந்தப் பள்ளி மாணவர்களிடையே ஒப்பிடும்போது எந்த இடத்தில் இருக்கிறார், கல்வி மாவட்ட அளவில் எந்த இடத்தில் இருக்கிறார், மாநில அளவில் எந்த இடத்தில் இருக்கிறார் என்று நிறைய விதமாக ஒப்பிடுவது பல்வேறு வகையான புள்ளி விவரங்களூக்கும், பின்னர் அதைக் கொண்டு அந்த மாணவரின் கல்வியை மட்டுமில்லாது கல்வியையே மேம்படுத்துவதற்கும் உதவும். இங்கே அமெரிக்காவில் இரண்டாம் வகுப்பிலிருந்து இதைச் செய்கிறார்கள். இதைப் பற்றி இன்னொரு சமயம் பேசுவோம்.

*** *** ****

-2-

நண்பரும் எழுத்தாளருமான திருமதி. ஜெயந்தி சங்கர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது, நேரமும் முயற்சியும் எடுத்து அவரால் படிக்க முடிந்த எல்லா தமிழ் வலைப்பதிவுகளுக்கும் மதிப்பெண்கள் இட்டிருந்தார். ஜெயந்தியின் நேரத்துக்கும் பொறுமைக்கும் மற்றவர்களின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்துக்கும் அவருக்கு தமிழ் வலைப்பதிவாளர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஜெயந்தி மதிப்பெண்களை அவர் முக்கியம் என்று நினைத்த பல உள்பிரிவுகளுக்கு வழங்கியிருக்கிறார். உதாரணமாக, தொடர்ச்சியாக வலைபதியும் தன்மை, உள்ளடக்கம், வலைப்பதிவின் அமைப்பு என்று பல பிரிவுகளாகப் பிரித்து வழங்கியிருக்கிறார். எந்தப் பிரிவுகளில் எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குகிறோம் என்பதை மதிப்பெண்கள் வழங்குபவர் என்கிற முறையில் அவர் தீர்மானிக்கிறார் என்பதால், அவர் மதிப்பெண்களுடன் உடன்படாத கருத்துடைய நண்பர்கள் சிலர் கூட அவர் முயற்சியைப் பாராட்டும்விதமாக அவர் கொடுத்த மதிப்பெண்களை ஆக்கபூர்வமாகவும் உற்சாகமூட்டும் விதமாகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டார்கள் என்பது மிகவும் நல்ல விஷயம்.

ஜெயந்தி கொடுத்த மதிப்பெண்களைப் படித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகள். வலைப்பதிவுகளுக்கு மதிப்பெண்கள் தரலாமா? அவற்றிலும் கதை, கட்டுரை, கவிதை போன்று கலை சார்ந்த படைப்புகள் வருகின்றனவே என்பவை. அவை குறித்து நாலைந்து நாள்களாக யோசித்தேன்.

வலைப்பதிவு ஒருவரின் டயரி போல செயல்படுகிறது. வலைப்பதிவில் கலை சார்ந்த படைப்புகள் வரக்கூடும். ஆனால் வலைப்பதிவுகளில் வருபவை எல்லாமே கலாபூர்வமான படைப்புகள் இல்லை. வலைப்பதிவில் நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், அறிவியல், கட்டளைகள், செய்திகள் என்று பலவும் வருவது இதற்கு உதாரணம். எனவே, தனிப்பட்ட ஒருவரின் டயரி போன்றது என்பதோடு ஒவ்வொரு வலைப்பதிவும் அதனளவில் ஒரு ஊடகமாகவே செயல்படுகிறது. விவரித்துச் சொன்னால், ஒரு செய்தித்தாள் போலவோ இதழ் போலவோ செயல்படுகிறது. அந்த விதத்தில் வலைப்பதிவு பன்முகத்தன்மை கொண்டது. அதில் கலை சார்ந்த படைப்புகளும் வருவதாலேயே அவற்றிற்கு மதிப்பெண்கள் தரக்கூடாது என்று சொல்வது சரியில்லை என்று தோன்றியது. செய்தித்தாள்களையும் இதழ்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு ரேட்டிங் கொடுக்கிற முறை இருக்கிறது. எனவே, வலைப்பதிவுகளுக்கும் அப்படி கொடுத்தால் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

மேலும் என்னதான் எனக்கு மதிப்பெண்கள் தருவதில் நம்பிக்கை இல்லையென்றாலும், வலைப்பதிவு அனைவர்க்கும் ஓர் எழுத்து பயிற்சிக் கூடமாகவும் உதவுகிறது. புதிதாக எழுதுபவர்களுக்கு இது ஒரு இன்பார்மல் வொர்க்ஷாப் மாதிரி. எழுதுபவர்களுடைய வலைப்பதிவு குறித்த மதிப்பீடுகள் வருவது எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ பொதுவாக மற்றவர்களுக்கு உதவக் கூடும் என்றும் உணர்ந்தேன். இதேமாதிரி யோசித்தால் இன்னும் சில காரணங்களும் புலப்படக் கூடும்.

சரி, வலைப்பதிவுகளுக்கு மதிப்பெண்கள் இடுவது சரி, அவற்றை எப்படி இடலாம்? நான் முதல் அத்தியாயத்தில் சொன்ன மாதிரி, தனித்தனியே வலைப்பதிவுகளுக்கு மதிப்பெண்கள் இடாமல் அவற்றை பிற ஒத்த வலைப்பதிவுகளுடன் ஒப்பிட்டு Percentile முறையில் மதிப்பெண்கள் இடுவதுதான் சரியாக இருக்கும் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

*** *** ****

-3-

வருடந்தோறும் வலைப்பதிவுகளை மதிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகிற வலைப்பதிவுகளுக்குப் பரிசுகள் சிலரால் வழங்கப்படுகின்றன என்று படித்தேன். அந்நிகழ்ச்சிகளில் எவற்றின் அடிப்படையில் வலைப்பதிவுகள் மதிப்பிடப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. எவற்றின் அடிப்படையில் வலைப்பதிவுகளை ஒப்பிட்டு மதிப்பிடுவது என்பது எனக்குள் எழுந்த கேள்வி. ஜெயந்தி அவர் முக்கியம் என்று நினைத்த காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறார். அவர் முயற்சி பாராட்டத்தக்கது. அவர் முயற்சிதான் என்னை அதுபற்றி மேற்கொண்டு இந்த அளவுக்கு யோசிக்கத் தூண்டியது என்ற அளவில் இதன் ஆரம்பம் அவரே. ஆனால், அவர் கொடுத்த மதிப்பெண்கள் ஒப்பீட்டு அளவில் இல்லாமல் ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டது என்று நம்புகிறேன். மேலும் ஒவ்வொரு காரணியையும் நிர்ணயிக்கிற விஷயங்கள் எவை என்று அவர் சொல்லவில்லை. உதாரணமாக, Regularity (தொடர்ச்சியாக வலைபதியும் தன்மை) என்ற ஒரு காரணியை எடுத்துக் கொண்டால் எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் அந்தக் காரணிக்கு வழங்கப்படுகின்றன என்று அவர் அறிந்திருப்பார். ஆனால் அதை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, இப்படி காரணிகளை நிர்ணயிக்கிற விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதுடன், அந்தக் காரணிகளை எப்படி மதிப்பிடுவது என்பதற்கு அறிவியல்பூர்வமான அல்லது தர்க்கபூர்வமான ஒரு வழியையும் கொடுப்பது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. உதாரணமாக, ஒருவர் தினமும் ஒரு வலைப்பதிவு எழுதுவது எதிர்பார்ப்பு. அப்படி எழுதுபவர் நூறு நாட்களில் நூறு வலைப்பதிவு எழுதியிருந்தால் அந்தக் காரணியில் அதிகபட்ச முழு மதிப்பெண்கள் பெறுவார். நான் சொல்கிற ஒப்பீட்டு அளவு முறையில் நோக்குவோமேயானால், வலைப்பதிபவர்களில் ஒருவர் அதிகபட்சமாக நூறு நாள்களில் 75 பதிவுகள்தான் எழுதியிருக்கிறார். மற்றவர்கள் 75ஐ விடக் குறைவான பதிவுகள் எழுதியிருக்கிறார்கள் என்றால் 75 பதிவுகள் எழுதியவர் என் மதிப்பீட்டில் அந்தக் காரணிக்கு அதிகபட்ச முழு மதிப்பெண்கள் பெறுகிறார். எனவே, காரணிகளை நிர்ணயிக்கிற விதத்தையும் அவற்றை மதிப்பிட முடிந்த இடங்களில் முடிந்த அளவில் வழிமுறையும் வைப்பது என்பது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

சரி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணிகள் இருக்கும். எனவே, முடிந்தமட்டில் பொதுவான காரணிகளை வலைப்பதிவுக்கு Value Add செய்ய உதவுகிற காரணிகளைத் தேடி எடுத்து அவற்றின் அடிப்படையில் மதிப்பிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது. உதாரணமாக, வலைப்பதிவின் வடிவமைப்புக்கும் வெளிப்புற அழகுக்கும் மதிப்பெண்கள் இடுவது சரியான காரணி இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், கணிப்பொறி நுட்பம் தெரியாமல் சிறப்பாக வலைப்பதிபவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் வலைப்பதிவு செய்பவர்களுக்கு உதவியாக மதி போன்ற நண்பர்களே ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவை வடிவமைத்திருக்கிறார்கள். பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் வலைப்பதிவுகளை தமிழோவியம் இணையதளம் வடிவமைத்துக் கொடுத்திருக்கக் கூடும். எனவே, வடிவமைப்பு என்னைப் பொறுத்தவரை மதிப்பிடத் தகுந்த முக்கியமான விஷயம் இல்லை. பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை விட படிக்கும்போது எத்தகைய அனுபவம் தருகிறது என்பது முக்கியமானது.

இப்படியே, எத்தனை பேர் கமெண்ட் தருகிறார்கள் என்பதும் முக்கியமில்லை. ஏனென்றால், பல நேரங்களில் பலர் நல்ல விஷயங்களைக் கூட மவுனமாக வாசித்துவிட்டுப் போய் விடுகிறோம். அல்லது நண்பர்களோ பிடித்தவர்களோ அவர்களால் நமக்குக் காரியம் ஆகக் கூடும் என்று நினைப்பவர்களோ எழுதும்போது கமெண்ட் பெட்டியில் தவறாமல் கருத்து எழுதுபவர்களும் இருக்கக் கூடும். ஒரு விஷயத்துக்கு எதிர்வினையோ கருத்தோ இருக்கிறதா இல்லையா யென்பது அவ்விஷயத்தின் மதிப்பீட்டை நிர்ணயிக்கிற விஷயம் இல்லை. எனவே, இதை ஒரு காரணியாகக் கொள்ள முடியாது.

கீழ்கண்ட காரணிகள் நான் முக்கியம் என்று நினைப்பவை. இதற்கு மாற்றாக நினைப்பவர்கள், அவர்கள் நினைக்கிற காரணிகளையும் அதற்கான நியாயத்தையும் முன்வைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய காரணிகளையும் அவை ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்களையும் முன்வைக்கும்போது, வலைப்பதிவுகளை மதிப்பிட உதவுகிற பல காரணிகள் கிடைக்கும். பின்னர், பரிணாம வளர்ச்சியின் படி அவற்றைத் தரம் பிரித்துப் பார்க்கவோ, ஒன்றிணைக்கவோ, தள்ளவோ செயது ஒரு ஸ்டாண்டர்டை அடைய முடியும். எனவே, நான் சொல்வதுதான் சரியென்று நான் சொல்லவில்லை. முடிந்தவரை நான் சொல்வதற்குக் காரணங்கள் தர முயல்கிறேன். இவை முடிவான காரணிகள் இல்லை. காலப்போக்கில் காரணிகளையும் அவற்றை எப்படி மதிப்பிடுவது என்கிற முறைகளையும் மாற்றிக் கொள்ளலாம். ஜெயந்தியின் ஆரம்பம் என்னை இதற்கு கொண்டு வந்திருக்கிறது. என் முயற்சிகள், இதைவிட மேம்பட்ட முறைகளைக் காலம் கண்டறிய உதவும்.

ஒவ்வொரு காரணிக்கும் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள். குறைந்தபட்சமாக 0 மதிப்பெண்கள். குறைந்தபட்ச கூடுதல் தொகை 0.125. உதாரணமாக, அதிகபட்ச மதிப்பெண்ணாக ஒருவர் 10 பெறலாம். அதை வைத்து ரிலேடிவ்வாக மதிப்பிடும்போது ஒருவர் 7.125 பெறலாம்.
எல்லா காரணிகளின் மதிப்பீடுகளும் Percentileல் ரிலேடிவ்வாகவே செய்யப்படும்.

தொடர்ச்சியாக எழுதும் தன்மை:

இது ஒரு காரணி. ஓர் எழுத்தாளரை அவர் எவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதை வைத்து கணிக்கக் கூடாது. ஆனால், வலைப்பதிவு டயரி போன்றது என்பதால் தொடர்ச்சியாக எழுதும் தன்மை இங்கே முக்கியமான காரணியாகிறது. இதைக் கணிக்க, குறைந்தபட்சம் கடந்த இரண்டு மாதங்களில் ஒருவர் எவ்வளவு பதிவுகள் எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அதிகபட்சமான பதிவுகள் எழுதியிருப்பவர் அதிக மதிப்பெண்களும், மற்றவர்கள் ரிலேடிவ்வாக அவர்கள் எழுதியதற்கு ஏற்றவாறும் பெறுவார்கள். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் வைத்திருந்தால் அவரின் ஒரு வலைப்பதிவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எதில் அதிக அளவு எழுதியிருக்கிறாரோ அந்த வலைப்பதிவு கணக்கில் கொள்ளப்பட்டு, பிற காரணிகளூம் அந்த வலைப்பதிவின் அடிப்படையிலேயே அளக்கப்படும். மேலும் ஒருவர் தொடர்ச்சியாக எழுதினால் மட்டுமே பிற காரணிகளை அளப்பதற்கான போதுமான பதிவுகள் நமக்கு கிடைக்கும். அந்த விதத்தில் பிற காரணிகளைச் சரியாக மதிப்பிடவும் இந்தக் காரணி உதவுகிறது. அதனாலேயே முதலில் இதற்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்று நினைத்துப் பின்னர் அதிகபட்சமாக இதற்கும் 10 மதிப்பெண்கள் என்று முடிவு செய்தேன்.

அழகியல்தன்மை:

சொல்கிற விஷயத்தை எளிமையாகச் சொல்வது. சொல்கிற விஷயத்தைத் தெளிவாகச் சொல்வது. சொல்கிற விஷயத்தை ஆர்வமூட்டும் நடையுடன் சொல்வது மற்றும் எழுத்தாளர் பயன்படுத்தும் பிரத்யேக உத்திகள். சொல்கிற விஷயத்தை கலைப்பாங்குடன் சொல்வது. மொழியாளுமை (தனித்தமிழில் எழுதுவது இல்லை!), ஆகியவை அழகியல்தன்மையை நிர்ணயிக்கின்றன. இதில் எளிமைக்கு மொத்தம் 2 மதிப்பெண்கள். தெளிவுக்கு மொத்தம் 2 மதிப்பெண்கள். ஆர்வமூட்டும் நடை மற்றும் எழுத்தாளர் பயன்படுத்தும் பிரத்யேக உத்திக்கு மொத்தம் 2 மதிப்பெண்கள், சொல்கிற விஷயத்தைக் கலைப்பாங்குடன் சொல்வதற்கு 2 மதிப்பெண்கள். மொழியாளுமைக்கு 2 மதிப்பெண்கள் ஆக மொத்தம் 10 மதிப்பெண்கள். உதாரணமாக ஒருவர் எளிமையில் 1.5, தெளிவில் 1.5, ஆர்வமூட்டும் நடையில் 1.5, கலைப்பாங்கில் 1.5, மொழியாளுமையில் 1.5 பெற்றால், அவர் அழகியல்தன்மையில் மொத்தம் 7.5 பெறுகிறார் என்று பொருள்.

உள்ளடக்கம்:

சொல்கிற பொருளுக்கு 3 மதிப்பெண்கள். சும்மா ஜல்லியடித்தல், கலாசுதல், கட்டளைகள் ஆகியவை இல்லாமல் கனமான பொருள்களாக இருப்பது. உதாரணமாக, நதிநீர்ப் பிரச்னை பற்றி அறிவியல் பூர்வமாக எழுதுவது அல்லது இலக்கியநயம் மிகுந்த ஒரு படைப்பைத் தருவது. விரிவும் ஆழமும் கொண்ட தன்மைக்கு 3 மதிப்பெண்கள். மேம்போக்காக எழுதாமல் எழுதுவதை ஆழமாகவும் விரிவாகவும் விரித்துப் பொருள் கொள்கிற தன்மையுடன் எழுதுவது. அதன் மூலம் வாசகரின் சிந்தனையை அந்தப் பொருள் குறித்து மேலும் தூண்டுவது. உதாரணமாக, ஒரு கதையோ கவிதையோ அது சொல்கிற பொருளுக்கு அப்பால் பல பொருள்களை விரித்தும் இணைத்தும் காட்டுவது. அல்லது, ஒரு சமூகப் பிரச்னை பற்றி எழுதும்போது, அதற்கான தோற்றம், காரணங்கள், தீர்க்கும் முறைகள் என்று ஆழமாகவும் விரிவாகவும் எழுதுவது. பன்முகத்தன்மைக்கு 4 மதிப்பெண்கள். இதன் பொருள் வலைப்பதிவு ஒன்றைப் பற்றி மட்டுமே பேசாமல் பல விஷயங்களையும் பேச வேண்டும். உதாரணமாக, ஒரு வலைப்பதிவு அரசியல் மட்டும் பேசினால் அது பன்முகத்தன்மை இல்லை. பல பொருள்களையும் (Subject Matters) பல வடிவங்களில் (கதை, கட்டுரை, கவிதை என்று) பேசுவது பன்முகத்தன்மையாகும். ஆகமொத்தம் உள்ளடக்கத்துக்கு மொத்தம் 10 மதிப்பெண்கள்.

இந்த மூன்று காரணிகளின் உட்காரணிகளை (எளிமை, தெளிவு, சொல்கிற பொருள் முதலியன) ஆகியவற்றைத் தனித்தனி காரணிகளாகவே கொண்டு ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 10 மதிப்பெண்கள் அளித்தால் என்ன என்று யோசித்தேன். ஆனால், அது எனக்கு ஏனோ உசிதமாகப்படவில்லை. எனவே, வலைப்பதிவுகளை இந்த மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியதால், அவற்றுக்குக் கீழேயே உட்காரணிகளும் இருக்க வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

நான் ஏதேனும் பிற முக்கிய காரணிகளை விட்டிருக்கலாம். அதேபோல் உட்காரணிகளையும் விட்டிருக்கலாம். அவற்றைப் போகப் போகச் சரி செய்து கொள்கிறேன். எந்த ஒரு அமைப்பின் (System) வளர்ச்சிக்கும், வழிமுறையின் (Procedure) வளர்ச்சிக்கும் இந்த மாதிரியான Iterative Approach தான் உதவும். முதன்முறையே சரியாகச் செய்ய வேண்டும் என்று காத்திருந்தால், அலை ஓய்ந்த பின்னே குளிக்கப் போவது போல என்பதால், எனக்கு இப்போதைக்குச் சரி என்று தோன்றியவற்றைச் சொல்லியிருக்கிறேன்.

இதேபோல பிற நண்பர்களும் அவர்களுக்குச் சரி என்று தோன்றுகிற காரணிகள், உட்காரணிகள், வலைப்பதிவை எப்படி மதிப்பிடலாம் என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்தால் நல்லது. ஆளுக்கொரு 100 புத்தகம் பட்டியலோ அல்லது பிடித்த நாவல்கள் பட்டியலோ போடுவது நல்லதுதானே. அவற்றைக் கொண்டு எல்லாவற்றையும் படிக்கவும் அறியவும் முடியும் பின்னர் ஒரு ஸ்டாண்டர்ட் நூல்கள் பட்டியல் போட முடியும் என்பதுபோல, வலைப்பதிவுகளை மதிப்பிட வெவ்வேறு வகையான வழிமுறைகள் வருவதையும் நான் வரவேற்கிறேன்.

ஆக மேற்கண்ட காரணிகளைக் கொண்டு மதிப்பிடும்போது ஒரு வலைப்பதிவு பெறுகிற அதிகபட்ச மதிப்பெண் 30 ஆக இருக்கும். இந்த மதிப்பீடுகள் ரிலேடிவ்வாக மற்ற வலைபதிவுகளுடன் ஒப்பிட்டபின் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒரு முக்கிய காரணியில் உட்காரணிகளுக்கான மதிப்பெண்கள் வேறாக இருக்கவும் கூடும். உதாரணமாக, எளிமையாக எழுதுவதில் 2 மதிப்பெண்களை பெறுகிற ஒருவர், தெளிவாக எழுதுவதில் 1 மதிப்பெண் பெறக்கூடும். சொல்கிற பொருளுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் பெறுகிற ஒருவர் பன்முகத்தன்மைக்கு 1 மதிப்பெண் மட்டுமே பெறக்கூடும்.

*** *** ***

-4-

வழிமுறைகள்:

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். இவை நான் சொல்கிற வழிமுறைகள். கட்டளைகள் இல்லை. ஒவ்வொரு வழிமுறைக்கும் முடிந்தவரை காரணங்கள் சொல்லியிருக்கிறேன். இதனுடன் உடன்படாதவர்கள் இருக்கலாம். நானே நாளைக்கோ மறுநாளோ இவற்றை திருத்தியோ மேம்படுத்தியோ அமைக்கலாம். இவையெல்லாம் ஓர் ஆரம்பமே. எனவே, யாரையும் புண்படுத்துகிற நோக்கமோ, ஒதுக்குகிற நோக்கமோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

1. மதிப்பிடத் தேர்ந்தெடுக்கப்படுகிற வலைப்பதிவாளர்கள் குறைந்தபட்சம் 2 மாதங்களாகவாவது அந்த வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதாவது, வலைப்பதிவு ஆரம்பித்து இரண்டு மாதமாவது ஆகியிருக்க வேண்டும். கொஞ்சம் நாள்கள் போனபின்னர், இந்த வழிமுறையை காலத்தின் அடிப்படையில் வைக்காமல், ஒருவர் குறைந்தபட்சம் 30 வலைப்பதிவுகள் அல்லது 50 வலைப்பதிவுகள் எழுதியிருக்க வேண்டும் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஏனென்றால், இப்போதைய வழிமுறையின்படி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன் வலைப்பதிய ஆரம்பித்துவிட்டு, இதுவரை 10 பதிவுகளே எழுதியிருந்தாலும் மதிப்பீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார். ஒருவரின் வலைப்பதிவை மதிப்பிட அவர் குறைந்தபட்சம் 30 பதிவுகளாவது எழுதியிருக்க வேண்டும். ஆனால், வலைப்பதிவுகள் வளர்ந்து வருகிற இச்சூழலில் இதை இப்போது சொல்லாமல் இன்னும் 6 மாதங்கள் அல்லது 1 வருடம் கழித்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். எனவே, இப்போதைக்கு குறைந்தபட்சம் 2 மாதங்களாவது வலைப்பதிந்து கொண்டிருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்கிறேன்.

2. கூட்டு வலைப்பதிவுகளும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எழுதுகிற தனி வலைப்பதிவுகளும் மதிப்பிட எடுத்துக் கொள்ளப்பட மாட்டா. உதாரணமாக, இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒரு வலைப்பதிவில் எழுதினால் அது கூட்டு வலைப்பதிவாகவே கருதப்படும். கூட்டு வலைப்பதிவுகளை மதிப்பிட ஒரு முறை தனியாக வர வேண்டும். நண்பர்கள் யாரேனும் அதைச் செய்ய வேண்டும். கூட்டு வலைப்பதிவை மதிப்பிடுகிற காரணிகள் தனி வலைப்பதிவை மதிப்பிடுகிற காரணிகளைவிட வித்தியாசமானவையாக இருக்கலாம் என்பதால் இது.

3. எழுதுபவர் வலைப்பதிவுக்கென்றும் பிரத்யேகமாக எழுத வேண்டும். உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால், நான் வலைப்பதிவில் எழுதுவதை இணைய இதழ்களுக்கும் அனுப்புகிறேன். ஆனால், பலவற்றைப் பிரத்யேகமாக வலைப்பதிவுக்கென்றும் எழுதுகிறேன். எனவே, வலைப்பதிவில் இருக்கிற ஒரு சில விஷயங்களாவது பிரத்யேகமாக வலைப்பதிவுக்கென்று எழுதப்பட்டிருக்க வேண்டும். சிலர் குழுமங்களில் எழுதி விவாதிக்கிற விஷயங்களைச் சேமிக்கிற கிடங்காக வலைப்பதிவை வைத்திருக்கிறார்கள். தவறில்லை. ஆனால், இப்படிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் வலைப்பதிவுகள் மதிப்பீட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டா.

4. ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவு வைத்திருப்பவர்களின் ஒரு வலைப்பதிவு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அந்த வலைப்பதிவு எதுவென்று சம்பந்தப்பட்டவர் சொல்லலாம். அல்லது, அவர் சொல்லாத போது, எந்த வலைப்பதிவில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகமான பதிவுகள் வந்திருக்கிறதோ அது மதிப்பிட எடுத்துக் கொள்ளப்படும்.

5. மின்மடல் இதழ்கள் வலைப்பதிவுகளில் வைக்கப்பட்டிருந்தால் அவை கணக்கில் கொள்ளப்பட மாட்டா. காரணம் அவை வலைப்பதிவுகள் இல்லை. மின்மடல் இதழ்கள் என்பதால்.

6. பிற இணைய இதழ்களில் இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்தும், புத்தகங்களில் இருந்தும் விஷயங்களைப் பெரும்பாலும் (75%க்கு மேல்) அப்படியே எடுத்துப் போடுகிற வலைபப்திவுகளும் கணக்கில் கொள்ளப்பட மாட்டா.

*** *** ***

-5-

மேற்கண்ட காரணிகள், வழிமுறைகள் இவற்றைக் கொண்டு தமிழில் இருக்கிற எல்லா வலைப்பதிவுகளையும் மதிப்பிட வேண்டும். இதைச் தனியாகவோ, ஆளாகவோ செய்வது கடினமாக இருக்கும். ஆனால் இதற்கென்று ஒரு நிரலை (Program) சுலபமாக எழுத முடியும். உதாரணமாக, இந்த நிரல் இருக்குமானால், ஒருவர் அதன் மூலம் தமிழில் உள்ள எல்லா வலைப்பதிவுகளுக்கும் மேற்கண்ட காரணிகளின்படி அவர் மதிப்பீடை அளிக்க முடியும். அப்படியே வலைப்பதிவாளர்கள் ஒவ்வொருவரும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் எவ்வளவு மதிப்பெண்கள் போடுகிறார்கள் என்று பார்த்து, பின்னர் அவற்றின் சராசரியை எடுத்து அதை வலைப்பதிவுகளை மதிப்பிடலாம். இதன் மூலம் நமக்கு ஒரு Overall Index கிடைக்கக் கூடும். இந்த இடத்தில் Index என்பதை பங்கு சந்தையில் பயன்படுத்தப்படும் Index என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். (Stock Market Indexக்குத் தமிழில் என்ன? பங்கு சந்தை தகுதரம் என்று சொல்லலாமா?). இதைச் செய்கிற நிரல் எழுதுகிற நேரமும் உபகரணங்களூம் எனக்கு இல்லை. ஆனால், யாரேனும் என்னுடைய இந்த முறையைப் பயன்படுத்தி நிரல் எழுத விரும்பினால், வழிநடத்தவும் உதவவும் தயார்.

இதையே மேற்கொண்டு, வலைப்பதிவுகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கும்போது - உதாரணமாக, பொழுதுபோக்கு, அரசியல், இலக்கியம், அறிவியல் என்று வலைப்புக்களைப் பிரிக்கும்போது - அந்தந்தப் பிரிவுகளுக்கான Indexஐத் தயாரித்துக் கொள்ளவும் முடியும். உதாரணமாக, என்னுடைய வலைப்பதிவை இலக்கியம் மற்றும் சமூகம் என்கிற இரு பிரிவுகளில் வைக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். இதேபோல பிற வலைப்பதிவுகளையும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சார்ந்ததாக வகைப்படுத்த முடியும். உதாரணமாக, டொரண்டோ வெங்கட் அவர்களின் வலைப்பதிவை அறிவியல், இலக்கியம் என்ற பிரிவுகளில் வகைப்படுத்தலாம் என்று வைத்துக் கொள்வோம். இப்படி செய்யும்போது அந்தந்தப் பிரிவுகளில் இருக்கிற வலைப்பதிவுகள் எடுக்கிற சராசரி மதிப்பெண்ணோடு ஒருவரின் வலைப்பதிவு மதிப்பெண்ணையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். உதாரணமாக, என்னுடைய சராசரி என்ன, இலக்கியம் சார்ந்த வலைப்பதிவுகளின் சராசரி என்ன அல்லது சமூகம் சார்ந்த வலைப்பதிவுகளின் சராசரி என்ன என்று என்னால் பார்த்துக் கொள்ள முடியும். எனவே, அப்போது ஒருவரின் வலைப்பதிவின் மதிப்பெண் என்ன, அவர் வலைப்பதிவு பிரிவின் சராசரி என்ன, மொத்த வலைப்பதிவுகளின் சராசரி என்ன என்று சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இத்தகைய Index ஒன்றைத் தயாரிக்க நாள் ஆகும். எனவே, நானே ஒரு Index தயாரித்துள்ளேன். Dow Jones Index மாதிரி இந்த Indexல் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வலைப்பதிவுகள் இருக்கும். Dow Jones Index அமெரிக்கப் பங்கு சந்தையின் முதல் Index. இது அறிவியல்பூர்வமான Index இல்லை. Wall Street Journal ஆசிரியர் குழு முப்பது நிறுவனங்களின் பங்குகளைத் தேர்ந்தெடுத்து இதைத் தயாரித்தது. நிறுவனங்களுக்கு தனித்தனியே Weightage கொடுக்கப்படுகிற இந்த indexல் இருந்து நிறுவனங்களை வெளியேற்றவும் புதிய நிறுவனங்களை சேர்க்கவும் (ஆனால் எப்போதும் மொத்தம் 30 நிறுவனங்கள் மட்டுமே) Wall Street Journal ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு. இப்படிப்பட்ட முழுமையான அறிவியல்பூர்வமற்ற இந்த indexதான் பின்னர் Standard & Poor 500, Nasdaq என்று பல அறிவியல்பூர்வமான அதிக அளவுக்கு முழுமையான Indexகளுக்கு வழிவகுத்தது. 30 நிறுவனங்களை மட்டுமே கொண்ட Dow Jones Index, 500 நிறுவனங்களைக் கொண்ட S&P Indexவுடன் பெரும்பாலான நேரங்களில் ஒத்துப்போவது அதன் சிறப்பு. எனவே, நான் என்னுடைய தேர்வின் அடிப்படையில் இந்த 30 வலைப்பதிவுகள் கொண்ட Indexஐத் தயாரித்துள்ளேன். இது அறிவியல்பூர்வமானது இல்லை. ஆனால், பின்னாளில் பல அறிவியல்பூர்வமான முழுமையான வலைப்பதிவு index வர இது உதவக்கூடும். அதுவரை என்னுடைய இந்த Indexஐ வைத்துப் பிற வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை ஒப்பிட்டுக் கொள்ளவும் மதிப்பிட்டுக் கொள்ளவும் இது உதவும்.

என்னுடைய இந்த வலைப்பதிவாளர்கள் Indexஐ PK Sivakumar Tamil Blog Index என்று யாரேனும் அழைப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை. இதில் குறிப்பிட்டு இருக்கிற 30 வலைப்பதிவுகளை நடத்துபவர்களும் நான் மேற்சொன்ன காரணிகளின் அடிப்படையில் அவர்கள் வலைப்பதிவைத் தவிர மீதி 29 வலைப்பதிவுகளுக்கும் மதிப்பெண்கள் போட்டு எனக்கு அனுப்பினால், இந்த 30 வலைப்பதிவுகளும் அந்தக் காரணிகளில் எடுக்கிற மதிப்பெண்களின் சராசரியை இந்த Indexன் சராசரியாக வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த 30 பேரும் அவர் வலைப்பதிவு தவிர மீதி 29 வலைப்பதிவுகளுக்கு தொடர்ச்சியான தன்மை, அழகியல் தன்மை, உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு நான் மேலே விளக்கியுள்ள வகையில் மதிப்பெண்கள் போட்டு அனுப்ப வேண்டுகிறேன். ஒரே ஒரு நிபந்தனை. மதிப்பெண் போடுபவர்கள் தங்களின் வலைப்பதிவுக்கு மதிப்பெண்கள் போட முடியாது. அதை விட்டுவிட வேண்டும். இந்த 30 வலைப்பதிவாளர்களும் தங்களின் மதிப்பெண் பட்டியலை எனக்கு இன்னும் 15 நாள்களுக்குள் அனுப்பி வைத்தால், அவற்றின் சராசரியை எடுத்து Indexன் சராசரியாக வெளியிடுகிறேன். இது அதிகபட்ச அளவில் சரியான மதிப்பீடாகவும் இருக்கும். அவர்களால் இயலாது என்றால், என்னுடைய மதிப்பீடுகளை மட்டும் வெளியிடுகிறேன். இது அவ்வளவு சரியான மதிப்பீடாக இல்லாமல் போனாலும், Something is better than nothing என்ற அளவில் உதவும்.

முக்கியமாய் ஒன்று: வருடத்துக்கு ஒருமுறை நான் இந்தப் பட்டியலில் இருக்கிற வலைப்பதிவுகளில் சிலவற்றை நீக்கி, அவற்றுக்குப் பதில் சிலவற்றை சேர்ப்பதாக உத்தேசம். ஆனால், எப்போதும் பட்டியலில் 30 வலைப்பதிவுகள் மட்டுமே இருக்கும்.

*** *** ***

-6-

பி.கே. சிவகுமார் தமிழ் வலைப்பதிவு இன்டெக்ஸ் (PK Sivakumar Tamil Blog Index)

இந்தப் பட்டியலின் வரிசை தரத்தின் அடிப்படையிலானதோ, மதிப்பீட்டின் அடிப்படையிலானதோ இல்லை. ரேண்டமாகவே வலைப்பதிவுகளின் வரிசை அமைந்திருக்கின்றன. முடிந்தவரை அகர வரிசைப்படியே இந்தப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றைத் தேர்ந்தெடுத்தது மட்டும் என் ரசனை மற்றும் தேர்வின் அடிப்படையில். இதனுடம் மாறுபடுகிற நண்பர்கள் இருக்கக் கூடும். அவர்கள் தங்கள் பட்டியல் மற்றும் தங்களின் காரணிகளை இப்படி விவரமாக எழுதுவது புதிய பட்டியல்கள் தோன்றவும், இந்த மதிப்பீட்டுச் செய்முறையை மேலும் தரமாக்கவும் உதவும். இந்தப் பட்டியலில் இடம் பெறாத வலைப்பதிவுகள் சரியில்லை என்று இதற்கு பொருளில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு வைத்திருப்பவர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அவர்களின் எந்தப் பதிவு என்று பிராக்கெட்டில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் பதிவுக்கு பதில் அவர்களின் வேறு பதிவு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் எனக்குத் தெரியப்படுத்தவும். மாற்றி விடுகிறேன்.

1. அருணா ஸ்ரீனிவாசன்
2. அருண் வைத்யநாதன்
3. பத்ரி சேஷாத்ரி
4. சந்திரவதனா (மனவோசை பதிவு)
5. சித்ரன்
6. சந்திரலேகா (உயிர்ப்பு பதிவு)
7. எம்.கே. குமார்
8. இட்லிவடை
9. ஜோதி ராமலிங்கம்
10. நா.கண்ணன் (K's world பதிவு)
11. காசி ஆறுமுகம்
12. குருவிகள்
13. ரஜினி ராம்கி (சில்லுண்டியின் சிந்தனைகள் பதிவு)
14. மதி கந்தசாமி (எண்ணங்கள் பதிவு.)
15. மீனாக்ஷிசங்கர் (எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் பதிவு)
16. மெய்யப்பன் (எனது பார்வை பதிவு)
17. பவித்ரா ஸ்ரீனிவாசன் (Shangri-La பதிவு)
18. ரமணீதரன் பதிவு (பெயரிலி பதிவு)
19. பா.ராகவன்
20. ரவி ஸ்ரீனிவாஸ் (கண்ணோட்டம் பதிவு)
21. பி.கே.சிவகுமார்
22. சுந்தரவடிவேல்
23. வெங்கட்ரமணன் (டொரண்டோ வெங்கட்)
24. சோடா பாட்டில் பாலா
25. என் மூக்கு சுந்தர்ராஜன்
26. செல்வராஜ் (என் எண்ணக் கிறுக்கல்கள்)
27. தமிழ் டுபுக்கு
28. நாமக்கல் ராஜா
29. ஆச்சி மகன்
30. ஜான் பாஸ்கோ

இந்தப் பட்டியலில் என் பெயரும் இருப்பது தகுதியினாலேயே என்ற நம்பிக்கையால் அது தற்புகழ்ச்சி இல்லை என்பதைப் பெரும்பாலோர் ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும், இது என் ரசனை மற்றும் தேர்வின் அடிப்படையிலானது என்பதால் என் பெயர் இருக்கிறது என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு அப்படி நினைக்கிற உரிமை உண்டு. ஒரு ஐந்து ஆறு வலைப்பதிவுகளை இந்தப் பட்டியலில் இப்போதைக்கு சேர்க்கலாமா வேண்டாமா என்று யோசித்துப் அடுத்த முறை பட்டியலை மறுபரிசீலனை செய்யும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். உதாரணமாக, எஸ்.இராமகிருஷ்ணன், தேசிகன் போன்றவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்து இரண்டு மாதங்களாகவில்லை என்பதால் வழிமுறையின்படி விடுபட்டுப் போயின.

மீண்டும் சொல்கிறேன். இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமானதோ, நான் மேற்சொன்ன மதிப்பீட்டு முறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டதோ இல்லை. இந்தப் பட்டியலுக்கு முதலில் நான் சொன்ன மதிப்பீட்டு முறையைச் செயல்படுத்திப் பார்ப்பதன் மூலம், ஒரு ஸ்டாண்டர்ட் உருவாக்க முடியும் என்பதே இப்பட்டியலின் நோக்கம். எதிர்காலங்களில் எல்லா வலைப்பதிவுகளையும் மற்றும் துறை சார்ந்த வலைப்பதிவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடுகள் வர இவை உதவும் என்பதை மீண்டும் சொல்லி, இப்பட்டியலில் இல்லாத வலைப்பதிவுகள் மீதான எதிர்மறை விமர்சனம் இல்லை இது என்றும் வலியுறுத்துகிறேன்.

என்னுடைய இந்த முறையையோ இதை அடிப்படையாக வைத்து இதைவிட மேம்பட்ட முறையையோ செயல்படுத்த விரும்புகிற நன்பர்கள் இந்த மூலக் கட்டுரைக்கான acknowledgement கொடுத்த பின் செய்யுமாறு வேண்டுகிறேன். என்னுடைய இந்தக் கட்டுரை பிறக்கக் காரணமாக இருந்த திருமதி.ஜெயந்தி சங்கருக்கு மீண்டும் நன்றி.

கடைசியாக, இந்த மாதிரி மதிப்பெண்களை - ஒப்பிட்ட பின் Percentile விதமாகக் கூட - வழங்குவது எந்த அளவுக்கு உதவும் என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அடிப்படையில் இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை குறைவு. ஆனாலும், வாழ்க்கை நம்பிக்கை இல்லாத விஷங்களைக் கூட சில சமயங்களில் சிந்திக்கச் சொல்கிறது. அப்படிச் சிந்தித்து, இதைச் செய்ய வேண்டுமென்றால், எப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்ததன் விளைவு இந்தக் கட்டுரை. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு பயன்படுகிறதோ இல்லையோ, நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பயன்படலாம் என்று நினைத்ததால் பகிர்ந்து கொண்டேன். இவையெல்லாம் எந்த அளவுக்கு உதவக்கூடும் என்று என்னைப் போலவே கேள்விகள் உடையவர்கள், இந்தக் கட்டுரையை ஒதுக்கிவிடலாம்.

பின்குறிப்பு: செய்யப்பட்ட திருத்தங்கள்:

1. கூடியமட்டும் எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன
2. என் வலைப்பதிவுக்கு திருமதி. ஜெயந்தி மதிப்பெண்கள் இட்டிருக்கிறார் என்று செல்வி.பவித்ரா எடுத்துக் காட்டியதால் அதுகுறித்து நான் எழுதிய வரிகள் நீக்கப்பட்டன.
3. தொடர்ச்சியாக எழுதும் தன்மைக்கு 10 மதிப்பெண்கள் ஏன் என்ற விளக்கம் தரப்பட்டது.
4. வலைப்பதிவுகளை எப்படிப் பல பிரிவுகள் (துறைகள்) சார்ந்த பதிவாகப் பிரித்து அவற்றின் சராசரியை எடுப்பது என்பது குறித்து உதாரணங்கள் தரப்பட்டன.
5. 30 பதிவுகள் Indexல் ஹரன் பிரசன்னாவுக்குப் பதிலாக சந்திரலேகா சேர்க்கப்பட்டார்.
6. மீனாக்ஷிசங்கரின் எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் பதிவு, 30 பதிவுகள் Indexல், அவருடைய Musings பதிவுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டது.
7. 2 மாதங்களாகவாவது வலை பதிவு வைத்திருக்க வேண்டும் என்கிற வழிமுறை காலப்போக்கில் எத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறார் என்று மாறும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது.

1 comment:

சுந்தரவடிவேல் said...

சிவகுமார்,
இந்த மதிப்பீட்டு விசயம் எனக்கென்னவோ தேவையில்லாத ஒன்றாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு வலைப்பூவும் தன்னளவில் தனித்துவமானவை, இவற்றை ஒவ்வொருவரும் பார்க்கும் விதமும் தனித்துவமானவை. பிறகு எதற்காக அத்தனையையும் ஒரு அளவுகோலுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறீர்கள்? வர்த்தக மயமாக்கலால் எந்திரத்தனம் எப்படி வாழ்வில் புகுந்திருக்கிறதோ அதே மாதிரி, இந்த வகைப்பாடு/தகுதரத்தால் தனித்துவம் குத்தப் படும் என்பது என் எண்ணம். மேலும், நீங்கள் என்னதான் இதை சீரியஸா எடுக்காதீங்க அப்படின்னெல்லாம் சொன்னாலும் இது வலைப்பதிவாளர்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வைத் தோற்றுவிக்கும். பிரிவினையை உண்டாக்கும். ஆங்கில/பிறமொழி வலைப்பதிவாளர்களிடையே இப்படியாக ஏதேனும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது, தேடவில்லை, இருக்காது என்றே நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் அவர்களைப் போலிருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். இத்தகைய மதிப்பீட்டின் மூலம் நீங்கள் யாருக்கு எதைச் சொல்ல வருகிறீர்கள்? தரக் கட்டுப்பாடு உங்கள் குறிக்கோளென்றால் அதை அப்போதைக்கப்போது மறுமொழிகளின் மூலம் நீங்கள் கட்டிக் காக்கலாம், சுட்டிக் காட்டலாம். ஜெயந்தி சங்கரின் மதிப்பீடு ஜாலியாக எடுத்துக் கொள்ளப் பட்டது என்றதோடு இதை விட்டு விடலாம். சீரியஸாக இதை ஒரு வேலையாகச் செய்ய நினைப்பது ஆப்பிளையும் ஆரஞ்சுப் பழத்தையும் ஒப்பிடுவதைப் போன்ற கால/சக்தி விரயம் என்பது என் அபிப்பிராயம். எனவே நீங்கள் கொடுத்த பட்டியலில் இருக்கும் வலைப்பூக்களை நான் மதிப்பீடு செய்ய இயலாது.