Saturday, May 29, 2010

தினம் சில வரிகள் - 29

நான் வேலையில் மூழ்கிப் போயிருக்கும்போது எதையும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ப்து உட்பட.

மலச்சிக்கலின்போது உணர்கிறேன்.முந்தையநாள் அப்புத்தகத்தைப் படித்திருக்கக் கூடாதென்றோ அத்திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டாமென்றோ.

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதைப் பார்க்கும்போது மீண்டும் மாணவனாகும் ஆசை வருகிறது.

பொய் சொல்வதில் உள்ள த்ரில் போய்விட்டது. எல்லாரும் சொல்வதைச் சுலபமாக நம்புகிறார்கள்.

டெஸ்டர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உள்ள நேச-வெறுப்பு உறவுமுறையைப் பார்க்கும்போது விமர்சக-எழுத்தாள உறவு நினைவுக்கு வருகிறது

கல்ப் ஆயில் ஸ்பில்லுக்கு யார் காரணமென்று பலதையும் படித்துக் குழம்பிப் போன நண்பர் கேட்டார். ஆயில்தான் காரணமென்றேன்.

நடைப்பயிற்சிக்குப் பின்னான ஆசுவாசத்தில் நம் சுவாசத்தின் வயது தெரிகிறது.

துணுக்கெழுத்துக்கும் டிவிட்டெழுத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து 100 டிவிட்டுகள் எழுத வேண்டும்.

தயிரை எப்படிச் சிறப்பாகத் தாளிப்பது என்பது குறித்து ஒரு கட்டுரை தமிழில் இதுவரை எழுதப்படவே இல்லை என்பது வருத்தம் தருகிறது.

அரசியல் எழுதவேண்டாமென கொஞ்சநாளாக இருக்கிறேன். நானெழுதாத அரசியல் போரடிக்கத்தான் செய்கிறது.

இன்றிரவு எழுத வேண்டும். இன்பம் சொட்டும் இவ்வாழ்வின் ஆனந்த வரிகளை, நெரூதாவுக்கு நன்றி சொல்லி.

பேசவராமல் போகிற தருணங்களை எழுதிவிடலாமென்றும், எழுதவராத தருணங்களைப் பேசிவிடலாமென்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

சிறுநீர் கழிக்க எழ மனம் வராமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரளும் அவஸ்தையெனும் உவமைக்கு எதை ஒப்பிடவெனும் ’கிரியேடிவ் தாட்’டில் உள்ளேன்.