Friday, April 16, 2004

தமிழ் மாநாடு

தமிழ் மாநாடு

- பி.கே. சிவகுமார்

சுளையாய்த் தமிழ் சுவைக்கச்
சுற்றுப்புறக் கூட்டம் சேர்த்தார்
அலையாய்த் திரண்டு வந்தார்
அறிஞரும் அரங்கு சிறக்க

இந்தி வொழிக வென்று
இனப்பற்றைக் காட்டி வைத்தார்
செம்மொழி யாக்கச் சொல்லி
சேர்ந்து போராடுவோ மென்றார்

இத்தனை காலம் தமிழ்
இழிபட்டது போது மென்றார்
வாங்குகின்ற மூச்சை நிறுத்தி
வைத்திருந்த தண்ணீர் குடித்துப்பின்
புறநூனூறாய்ப் புறப்பட்டுப் போவோம்
துயர்பட்டு உரமாகிப்பின் தமிழன்
தூக்கத்தை விழிக்க வைப்போமென்றார்

தூங்குகின்ற கூட்டம் கண்டு
தூக்கி நிமிர்த்த இடையிடையே
சோக்குகள் சொல்லிச் சிரித்தார்
அரசியல் அபிமானம் ஆங்காங்கே
தெளித்துக் களித்தார் தேவைக்கேற்ப
கண்ணதாசன் கவித்திற மென்று
சினிமாப்பாட்டு பாடிச் சென்றார்

முடித்தி றங்கியபின் தனக்குள்ளே
அசத்தி விட்டோமென அகமகிழ்ந்தார்
எத்தனை காலம் செய்தி
எதில் வருமெனத் தெளிந்தார்
மற்றவர் பேசும்போது தன்னை
மறந்து றங்கிப் போனாரே.

(2003 கோடையில் எழுதப்பட்டது.)

No comments: