Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, January 14, 2018

பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு



ஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 - 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது.

தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் தொகுப்பைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, கிருத்திகா பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.


பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியைக் கவிஞர் சல்மா வெளியிட்டு, தேர்ந்த இலக்கிய வாசகரும், இலக்கிய ஆர்வலரும்,  நண்பருமான அ. வெற்றிவேல் பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.



பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பிரதியைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, அமெரிக்க வாழ் தமிழ் அன்பரும், வாஷிங்டன் டி.சி. வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (ஃபெட்னா) முன்னாள் தகவல்-தொடர்பு இயக்குநருமான மயிலாடுதுறை பரமசிவம் சிவகுமார் (எம்.பி. சிவா) பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.

பிரக்ஞை பதிப்பகத்தின் உரிமையாளர் விலாசினி ரமணியுடன் தமிழின் பல நிகழ்காலக் கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்களுக்கு நன்றி.)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுதி உள்ளிட்ட பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள், புத்தகக் கடை எண்கள், 661, 662, 663, 664, 699 மற்றும் 700 புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் https://www.commonfolks.in/ ஆன்லைனில் கிடைக்கும்.

பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுப்பை ஆன்லைனில் வாங்குவதற்கான நேரிடையான சுட்டி https://www.commonfolks.in/books/d/ullurugum-panichchaalai

உள்ளுருகும் பனிச்சாலை - ஒரு குறிப்பு

தமிழ் இணைய இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயர் பி.கே. சிவகுமார். 2000-களின் ஆரம்பத்தில் இணைய பத்திரிகைகள், குழுமங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகர்களின் கவனம் ஈர்த்தவர். சென்னையில் பிறந்த பி.கே. சிவகுமாரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறார்.

நண்பர்களுடன் இணைந்து - தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் விற்கத் தொடங்கப்பட்ட முன்னோடி இணையதளமான எனி இந்தியன்.காம் தளத்தையும், எனி இந்தியன் பதிப்பகத்தையும், வார்த்தை மாத இதழையும் நடத்தியவர். வார்த்தை இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து, அவர் எழுதிய தலையங்கங்கள் கவனம் பெற்றவை.

2006-ல் ஜெயகாந்தன் அணிந்துரையோடும், ஜெயமோகன் முன்னுரையோடும் இவர் எழுதிய இணையக் கட்டுரைகளின் தொகுப்பு, “அட்லாண்டிக்குக்கு அப்பால்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. தன் கருத்துகளை உறுதியாக முன்வைக்கத் தயங்காத தன்மை, தன் ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் திறந்த மனம், கோஷங்களையும் வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவு, பழம் இலக்கியங்கள் புத்திலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான ரசனை சமநிலை, பாசாங்கு அற்ற தெளிவான நடை ஆகியன சிவகுமார் எழுத்தின் சிறப்பம்சங்களாகச் சுட்டப்படுகின்றன. கோபால் ராஜாராம், ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணதாசன் உள்ளிட்டப் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.

பதினான்கு ஆண்டுகளாக பி.கே. சிவகுமார் எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு - உள்ளுருகும் பனிச்சாலை.

”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்றும் ”சிவகுமாரின் கவிதைளில் வேறு பல தமிழ்க் கவிதைகளில் காணாத ஒரு பதிவு குழந்தைகள் பற்றியது. குழந்தைகளின் மனோபாவங்களை, சந்தோஷங்களை, அச்சங்களை தமிழ்க் கவிதைகளில் வெகு அரிதாகவே நாம் காண்கிறோம்.குழந்தைகளின் உலகில், அவர்களை அங்கிகரித்து, , நுழைவதும் அவர்களை வியப்பதும் இயல்பான கவிதைக் கணங்களாக சிவகுமாரிடம் ஆக்கம் கொள்கின்றது.” என்றும் ”சிவகுமாரின் கவிதைக் குரல் ஒரு தனித்த குரல். புதுக் கவிதையின் வீரியமான மரபுகளை சுவீகரித்துக் கொண்டு, தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் இயல்புகளை கவிநயங்களாக்கி, இயல்புக்கு மாறானவற்றை அவற்றின் விமர்சனத்தோடு, ஆனால் கவிதைத் தன்மை மாறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் எழுதி வந்த கவிதைகளை தேர்வு செய்து காத்திரமான தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆங்காங்கே படித்தவை என்றாலும், தொகுப்பாக படிக்கும் போது ஒரு நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது. வெற்று ஓசைகளையும், கூறியது கூறலையும் தவிர்த்து சொல் புதிது , பொருள் புதிது என்று வாசகர்கள் உணரும் வகையில் பதிவு செய்திருக்கிறார். வரவேற்போம்.” என்றும் தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்.

கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) “உள் உருகுதல்” என்ற தலைப்பில் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். ”முதல் வரிதான் எப்போதும் எழுத்தில் நுழைய அனுமதி தரத் தயங்குவது. தொகுப்புக் கவிதைகளின் முதல் வாசிப்பு முடிந்த கையோடு இதை எழுதியிருக்க வேண்டும். நிறைய முறைகள் வாசித்தாகிவிட்டது. ஒவ்வொரு வாசிப்புக்குப் பிந்தியும் ஒவ்வொரு முதல் வரி தோன்றினால், நான் என்ன செய்வேன்?” என்று ஆரம்பிக்கிற கல்யாண்ஜி, சிவகுமார் கவிதைகளின் வரிகளை வைத்தே ஒரு கவித்துவமான அணிந்துரையை எழுதியிருக்கிறார். ”குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. தந்தையிடம் சைக்கிள்,’பதறாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறது. அந்தப் பெண் ஞானக்கூத்தனின் ’சைக்கிள் கமலம்’ ஆக இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ ஆக இருக்கலாம்” என்று சிவகுமாரின் கவிதையை ஞானக்கூத்தனுடனும் எஸ். ராமகிருஷ்ணனுடனும் இணைத்து அன்புடன் அழகு பார்க்கிறது கல்யாண்ஜியின் ரசனை. ”இன்று நான் சிரிக்கிறேன். நானும் ‘மனம் லேசாகிற நாட்களில்’ சிரிப்பவன் தான்.” என்று முடிகிற அந்த அணிந்துரை, இளைய தலைமுறைக்கு மூத்த தலைமுறை அளிக்கும் ஆசிர்வாதம் என வாசகர் உணரமுடியும்.

நன்றி!

Wednesday, May 21, 2014

ஃபேஸ்புக் கரைச்சல்கள்

(Storing here what I shared on my Facebook Wall.)

பாவத்தை
நதியில் கரைக்கலாம்
வரலாற்றை
எதில் கரைப்பது?

(May 18, 2014)
*****

தனியாக இருப்பதும்
தனிமையில் இருப்பதும்
ஒன்றல்ல என்பவர்கள்
தனியைத் தனிமையாகச்
சமாளித்துக் கொள்கிறார்களென
சம்சயம்

(May 11, 2014)
*****

எல்லா அம்மாக்களும்
ஒன்றல்ல
மருமகள்களிடம் கேட்டுப் பாருங்கள்!

(May 11, 2014)
*****

பயன்படுத்தி நாளாகிவிட்டது
தூசி படர்ந்திருக்கிறது
பெரும்பாலுமதன் கைப்பிடியில்
ஈரத்துண்டு உலர்கிறது
சிலநேரங்களில் அவரவர்
கழற்றிமாட்டிய துணிமணிகள்
ஆனாலுமிந்த டிரெட்மில்லைத்
தூக்கியெறிய மனமில்லை
என் காலடித்தடங்களை
வைத்திருக்கிறதே.

(May 11, 2014)
*****

ஒவ்வொரு காலையிலும்
பிளஷ்-அவுட் செய்யப்படுகின்றன
நேற்றைய தினங்கள்.
நினைவில் நிற்கவேண்டுமானால்
தேவையாயிருக்கிறது
வயிற்றுக்கடுப்போ அஜீரணமோ.

(May 11, 2014)
*****

எது கலையென
அறியப்படும் தருணம்
கலைஞன் மரிக்கிறான்
நுட்பாளன் பிறக்கிறான்

(May 11, 2014)
*****

 

மலைகள் இதழ் 43ல் வெளிவந்த கவிதைகள்


நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 43வது இதழில் வெளியான கவிதைகள் இவை. நன்றி சிபிச்செல்வன்.

*****

வானத்தைக் கூண்டுக்குள்
வரவழைக்கத் தெரிந்த கணம்
விடுதலையானது பறவை.

*****

அசைவத்தின் பிரச்னை
உண்பதல்ல
உண்பதற்காக வளர்ப்பது.
இல்லாமலானது
ஜீவகாருண்யமல்ல
வேட்டையின் அறம்.

*****

பனிப்புதையலில் இரைதேடும்
பறவையின் இலக்கு
பனியின் ரகசியங்கள்

*****

அந்தரங்கத் தருணங்களை
அதன்பொருட்டான வார்த்தைகளை
சண்டைகளில் மீட்டெடுத்து
சந்தியில் உலர்த்துகையில்
காய்ந்துபோவது காதலென்று
இவர்களுக்கேன் தெரிவதில்லை?

*****

இலையுதிர்வின் சோகத்தை
மரம் அறியக்கூடும்
பறவை அறியும்
இலையுதிர்த்துப் பருவம் வாழும்
சுயநலம் மரத்துக்குண்டு
இலையில்லாமல் போனால்
இடம்பெயர்வது பறவைதானே.

*****

என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது,
நான்கு சுவர்களுக்குள்
பாதுகாப்பாய் பறக்கிறது
வெயில் மழை பனிப்பொழிவு
பிரச்னைகள் அதற்கில்லை
பதப்படுத்தப்பட்ட விதைகள்
 பறவைக்கான பிரத்யேக உணவு
பாதாம் பிஸ்தா இட்லி தோசை
பிட்ஸா பாஸ்தாவென உண்கிறது
தானாய்க் கற்றுக் கொண்டு பேசுகிறது
பெயர்ச்சொல்லி எங்களையழைக்கிறது
தோள்களில் அமர்ந்தபடி சிறகுகள் கோதுகிறது
தடவிக்கொடுக்க கண் கிறங்குகிறது
ஆளில்லாமல் போனால் தவிக்கிறது
ஆள் நுழையக்கண்டு ஆனந்தக்கூச்சலிடுகிறது
குழந்தையாய் எங்களிடம் உரிமையெடுக்கிறது
சொல்வதைப் பலநேரம் கேட்பதில்லை
என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது
வாழ்கிறது என்றெழுத
ஏனோ தயக்கமாய் இருக்கிறது.

*****
 

கொஞ்சம் கவிதைகள்

எல்லாருக்கும்
தேவையாயிருக்கிறது
ஒரு சித்தாந்தம்
ஒரு தத்துவம்
ஒரு தலைவன்
அல்லது
சிலவரி கவிதை
தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ள அல்ல‌
வேறுபடுத்திக் கொள்ள

*****

இலக்கியத்தைக் கொண்டாடினோம்
இலக்கியவாதிகளைக் கொண்டாடினோம்
இலக்கியமுகாம்களைக் கொண்டாடுகிறோம்

*****

நம்பிக்கை

கிளையொடிந்த‌ செடிபோல‌
நம்பிக்கை தோற்றாலென்ன‌
வேர்கிளைத்த வாழ்விருக்க‌

நம்பிக்கை நம்மை விடலாம்
நாமதை விட்டோமில்லையென‌
வாழ்ந்திருந்து பார்ப்பதற்கே
தோல்விகள் தேவையன்றோ?

விழுந்தோம்தான்
புண்ணாற்றித் தாய்ம‌டியில்
விழுதுக‌ளாய் எழுவோம்
அதுவ‌ரை கொண்டாடு
உம் வெற்றியை
எம் கைத்த‌ட்ட‌லில்.

Thursday, January 16, 2014

மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள்

நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 40ஆவது இதழில் என்னுடைய கவிதைகள் பிரசுரமாகி இருந்தன. மலைகள்.காம் இதழுக்கு நன்றி. அவற்றை இங்கேயும் சேமித்து வைக்கிறேன்.

அடைகாக்கும் கோழி
யொன்றைப் பார்த்தேன்
முட்டைகளை நம்பியிருந்தது
கோழி வளர்ப்பவரிடம்
பேசிப் பார்த்தேன்
கோழியை நம்பியிருந்தார்
முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை.

***** *****

கனவுக் காதலி:

வெயில் பிடிக்குமாவென்றேன்
வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமாவென்றேன்
ஈரம் பிடிக்குமென்றாள்

நிலவு பிடிக்குமாவென்றேன்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமாவென்றேன்
கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் பிடிக்குமாவென்றேன்
சிறகுகள் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமாவென்றேன்
தன்வயப்படுதல் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமாவென்றேன்
குரல்கள் பிடிக்குமென்றாள்

கனவு பிடிக்குமாவென்றேன்
கண்டடைதல் பிடிக்குமென்றாள்

கவிதைகள் பிடிக்குமாவென்றேன்
கவிஞர்களைப் பிடிக்குமென்றாள்

கடவுள் பிடிக்குமாவென்றேன்
பிரார்த்தனை பிடிக்குமென்றாள்

காதல் பிடிக்குமாவென்றேன்
கலவி பிடிக்குமென்றாள்.

Friday, January 18, 2008

சிறுகவிதை

(இது ஹைக்கூவா பொய்க்கூவா என்ற இலக்கணங்கள் தெரியாது. ஆனால் கவிதையாக இருக்கிற சாத்தியக்கூறுகள் உண்டு.)

குறிகளில் அடங்கும்
வாழ்க்கை
கணினிக்கும்.

Friday, December 28, 2007

கவிதை

டயர்களில் தேய்கிறது வாழ்க்கை
டோல் பூத்துகளில்
அரிதாகச் சந்திக்கிற அழகிகளின்
கையுறைத் தீண்டலில்
ஜனிக்கும்வரை.

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)

Monday, December 24, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

எழுதத் தொடங்குகிறான்
இருண்மையை
வெறுப்பின் மையெடுத்து

வெளிச்சம் போதவில்லை
சன்னலைத் திறந்து வைக்கிறான்
சன்னல் திறந்திருப்பதில் பிரச்னையில்லை
எந்த வெளிச்சமும் போக்காத
இருண்மையைத்தான் எழுதப் போகிறான்

உள்ளறைகளின்
நாற்றம் தாங்கவில்லை
வார்த்தைகளுக்கு
வாசனை தடவுகிறான்
வார்த்தைகளுக்கு வாசனை தடவுவதில் பிரச்னையில்லை
எந்த மருந்தடித்தாலும் குமட்டுகிற
இருண்மையைத்தான் எழுதப் போகிறான்

காமத்தை
காதலை
நட்பை
விரக்தியை
நம்பிக்கையை
சோகத்தை
இன்பத்தை
குரூரத்தை
பகைமையை
பொறாமையை
சுயநலத்தை
வாழ்க்கையை

பாதங்களாலும் அலகாலும்
சீய்த்துச் சீய்த்துக்
கோழி வரைகிற மலஓவியம்போல
கவிதை விரிகிறது
காலத்தின் இருள்வெளியில்

சிறுநீர் விரவும் மண்தரை மாதிரி
பரவுகிறது இருள்
அறையெங்கும் மெதுவாக

பிணத்தின் மாலைகளிலிருந்து
வீசுகிற மணம்போல
இருள்துளிகளிலிருந்து
வெளியேறி நிறைக்கின்றன
விதவிதமாய்ப் பூக்கள்
மௌனமாய் அறையை

பூக்களால் உயிர்பெறும் பிணம்போல
ஒளிபெற்று மணக்கிறது
இருண்மையின் கவிதை

பி.கு: சிறில் அலெக்ஸ் நடத்தும் நச் கவிதைப் போட்டிக்காக

இன்னொரு கவிதை முயற்சி

உயிர் வந்து ஒளிர்ந்தது
தொலைகாட்சித் திரை
பிரிந்து சென்ற காதலி
திரும்பிவந்தது போல

உயிர் பெற்றோடி
கரைந்தனர் குழந்தைகள்
முலைக்காம்புகள் கண்ட குட்டிகள்
தாய்ப்பன்றி வயிற்றுள் இறங்குவதுபோல

யாருமற்று நின்ற அறை
எதிரொலித்தது சத்தத்தை
கூடலைப் பார்த்தேங்கி
குரலெழுப்புகிற சுவர்களைப் போல

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)

ஒரு கவிதை முயற்சி

சோப்பு போட்டபின்
தண்ணீர் ஊற்றிக் குளிக்க மறந்த
பனிவெண்மையில்
நிர்வாணம் காட்டும்
இறகுகள் உதிர்ந்த மரம்
குளிரில் உடல் விறைத்து

சருகுகள் கொணர்ந்து அமரும்
இடம்தேடியலையும் பறவை
ஸ்பரிசம் தந்த கதகதப்பில்
சிறகுகள் முளைத்து மரம்
சிரிக்கும் கொஞ்சமாய் அசைந்து

(எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதியது.)