Thursday, January 16, 2014

மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள்

நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 40ஆவது இதழில் என்னுடைய கவிதைகள் பிரசுரமாகி இருந்தன. மலைகள்.காம் இதழுக்கு நன்றி. அவற்றை இங்கேயும் சேமித்து வைக்கிறேன்.

அடைகாக்கும் கோழி
யொன்றைப் பார்த்தேன்
முட்டைகளை நம்பியிருந்தது
கோழி வளர்ப்பவரிடம்
பேசிப் பார்த்தேன்
கோழியை நம்பியிருந்தார்
முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை.

***** *****

கனவுக் காதலி:

வெயில் பிடிக்குமாவென்றேன்
வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமாவென்றேன்
ஈரம் பிடிக்குமென்றாள்

நிலவு பிடிக்குமாவென்றேன்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமாவென்றேன்
கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் பிடிக்குமாவென்றேன்
சிறகுகள் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமாவென்றேன்
தன்வயப்படுதல் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமாவென்றேன்
குரல்கள் பிடிக்குமென்றாள்

கனவு பிடிக்குமாவென்றேன்
கண்டடைதல் பிடிக்குமென்றாள்

கவிதைகள் பிடிக்குமாவென்றேன்
கவிஞர்களைப் பிடிக்குமென்றாள்

கடவுள் பிடிக்குமாவென்றேன்
பிரார்த்தனை பிடிக்குமென்றாள்

காதல் பிடிக்குமாவென்றேன்
கலவி பிடிக்குமென்றாள்.

No comments: