Thursday, January 16, 2014

வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்

(இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.)

ஜெயமோகன் எழுதும் வெண்முரசு அத்தியாயம் 16 படித்தபின் உணர்ச்சிப் பெருக்கும் சில இடங்களில் உடைந்துவிடுவேனோ என்ற அச்சமும் உண்டானது. இந்த அத்தியாயத்தை இதுவரை 5 முறை படித்து விட்டேன். இனிமேல் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.

பீஷ்மருக்காக வருந்துகிறேனா, அம்பைக்காக வருந்துகிறேனா என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்புறம் நண்பர் பாஸ்டன் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சட்டென்று தோன்றியது. கைகூடாமல் போன எல்லாக் காதல்களுக்காகவும் அந்த அத்தியாயம் என்னைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் அழ வைக்கிறது. காவிய சோகம் கொண்ட வரிகள் அவை. ஒவ்வொருவ‌ரும் ஈகோவினாலும், வாழ்வின் நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளாலும் நிறைவேறாம‌ல் போன‌ த‌ம் காத‌லை இவ்வுரையாட‌லில் க‌ண்டுகொள்ள‌ இய‌லும். ப‌ல‌ காத‌ல‌ர்க‌ளால் இத்த‌கைய‌ உரையாட‌லை நிக‌ழ்த்திவிட்டுப் பிரிந்து போவ‌து சாத்திய‌மாகி இருக்காது. அவ‌ர்க‌ளுக்கெல்லாம் அவ‌ர்க‌ள் சார்பாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ உரையாட‌ல் மாதிரி இருக்கிற‌து இந்த‌ அத்தியாய‌ம்.

"இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” " என்றும் "குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்…" என்றும் அம்பை பீஷ்மரை நோக்கிச் சொல்கிற வரிகளில் எனக்கு மகாத்மா காந்தி தெரிந்தார். காந்தியின் புலனடக்கமும் அப்படிப்பட்டதுதானே. அதை நன்கறிந்து எழுதியிருப்பவர் ஜெயமோகன். பீஷ்மரின் பாத்திரத்தை வடிப்பதற்கு ஜெமோவிற்கு மகாத்மா காந்தி உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. புராணங்களில் இருந்து தம்மை வடிவமைத்துக் கொள்கிற மகாத்மாக்களை வரலாறு உருவாக்குகிறது. நிஜ வாழ்வின் மகாத்மாவிலிருந்து புராண நாயகர்களை மீட்டுருவாக்கம் செய்கிற ரசவித்தையை எழுத்தாளர்கள் செய்ய முடியும்.

கடைசியில், அம்பை சிகண்டியாகி, பீஷ்மர் மீது எய்யப்போகும் அம்புகளை, காதலின் கணைகள் என்ற கனிவுடன் ஏற்றுக் கொள்ளப் போகும் பீஷ்மரை ஜெமோ சமைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த பீஷ்மரைக் காணக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

No comments: