ஜெயமோகனின் பொய்கள் – பி.கே. சிவகுமார்
“ஜெயமோகனின் என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு ஆதாரங்களுடன் பதில்கள்”
எச்சரிக்கை:
இது திரைச்சொட்டுகளும் கடந்த கால நிகழ்வுகளும் தொகுக்கப்பட்ட ஒரு நீண்ட பதில் கட்டுரை. நீங்கள் இலக்கியத்தை மட்டுமே உண்டு, உய்த்து, சுவாசிக்கிற, வம்பை விரும்பாத அல்லது ஜெயமோகன் இலக்கியம் என்கிற பெயரில் பேசுகிற வம்புகளை விரும்புகிற உன்னத ஜீவி என்றால், இந்தக் கட்டுரையைப் படித்து நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். அமைப்பு பலமும், ஆள் பலமும், சமூகம் கொடுத்துள்ள எழுத்தாளர் அந்தஸ்து புகழ் பலமும் கொண்ட ஜெயமோகனும் அவர் பின்னே நிற்கிறார்கள் என ஜெயமோகன் சொல்லிக் கொள்கிறவர்களும் ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் மீது எத்தகைய பொய்களையும் அவதூறுகளையும் பரப்புகிறார்கள் என்பதை என்னை உதாரணமாகக் கொண்டு நீங்கள் அறிய விரும்பினால் இதை மேற்கொண்டு வாசிக்கலாம்.
இந்தப் பதிலை எழுதி முடித்துப் பிரசுரிப்பதற்கு முன், திண்ணை.காம்
ஆசிரியர் கோபால் ராஜாராம் ஜெயமோகனுக்கு எழுதிய மறுப்புக் கடிதம் திண்ணை.காமில் பிரசுரமாகி
இருப்பதைப் பார்த்தேன். அது மட்டுமே கூட ஜெயமோகனின் என்னைப் பற்றிய பொய்களை அம்பலப்படுத்தப்
போதும். ஆனாலும் இதை இப்படியே விட்டால் ஜெயமோகன் மேலும் என்னைப் பற்றிய பொய்ப்புனைவுகளை
எதிர்காலத்திலும் தொடரும் வாய்ப்பு உள்ளதால், கோபால் ராஜாராமின் மறுப்பையும் இந்தப்
பதிலில் இணைத்து, தேவையான இடங்களில் சுட்டி, இந்தப் பதிலைப் பிரசுரிக்க முடிவு செய்தேன்.
பின்புலம்:
ஜுன் 7, 2023 தேதியிட்டு ஜெயமோகன் இணையதளத்தில் (jeyamohan.in), https://www.jeyamohan.in/184068/ என்ற முகவரியில் ”அம்ம நாம் அஞ்சுமாறே” என்ற தலைப்பில் வெளியான கேள்வி-பதிலில் ஜெயமோகன் என்னைப் பற்றிப் பல பொய்களையும் அவதூறுகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் இணையதளத்தில் எழுதுவதை சில நேரம் நீக்கி விடுகிறார் அல்லது சர்ச்சைக்குரிய இடங்களை எடிட் செய்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு ஜெயமோகன் மீது பரவலாக இணையத்தில் வைக்கப்படுகிறது. அந்தக் காரணத்தாலும், படிக்கிறவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் மேற்குறிப்பிட்ட ஜெயமோகன் பதிவில் வெளிவந்த என்னைப் பற்றிய கேள்வியையும் அதற்கான ஜெயமோகன் பதிலையும் இங்கேயும் கொடுக்கிறேன்.
பின்வரும் திரைச்சொட்டுகளில் என்னைப் பற்றி வரும் பகுதிகளை முழுமையாகத் தொகுத்து அளிப்பதே நோக்கம். பிறரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய சில வரிகள் தவிர்க்க இயலாமல் திரைச்சொட்டின் பகுதியாக இடம் பெற்று இருக்கின்றன. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயமோகன் சொல்கிற அந்தப் பிறரை அவமதிப்பதோ, அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளை ஆதரிப்பதோ இத்திரைச் சொட்டுகளின் நோக்கம் அல்ல.
ஜெயமோகனுக்குத் திண்ணை.காம். ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்களின்
மறுப்பு:
திண்ணை.காம், அதன் ஆசிரியர்கள் கோபால்
ராஜாரம், துகாராம் ஆகியோர் பெயர்களைப் பயன்படுத்தி, ஜெயமோகன் என்னைக் குறித்து எழுதிய அவதூறுகளில் உண்மையில்லை என்பதை அவருக்கே உரிய நாசூக்குடனும் நாகரீகத்துடனும்
ஜெயமோகனுக்குச்சொல்கிறார்
கோபால் ராஜாராம். சொன்னதுடன் இல்லாமல் ஜெயமோகன் அவற்றைச்
சரி செய்ய வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். அதன் சுட்டி: https://puthu.thinnai.com/
” ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை,
எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள்” என்ற தலைப்பிலான கோபால் ராஜாராமின் முழுக் கட்டுரையையும்
இங்கே கொடுக்கிறேன்.
*******
ஜெயமோகன் தன்
வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட
பத்திகள் என் கவனத்திற்கு வந்தது.
‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு
அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக
அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும்.
ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில்
அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர். அவருடைய தந்தை பி.குப்புசாமி ஜெயகாந்தனின் நண்பர்
என்பதனால் குப்புசாமியை சிலமுறை சந்தித்துள்ளேன். எனக்கு குப்புசாமி மேல் மதிப்பு அதிகம்.
திண்ணை ஆசிரியர்
பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் – நேரில் பார்க்காமலேயே.
திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள்
வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர். அமெரிக்கா சென்றபோது ஒருமுறை
ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.’
இதில் உள்ள
சில தகவல் பிழைகள் :
- 1. பி
கே சிவகுமாரை நானோ அல்லது துகாராமோ ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்விக்கவில்லை.
- 2. திண்ணையின்
சார்பில் எனி இந்தியன் புத்தக விற்பனை மையம் மற்றும் பதிப்பகம் தொடங்கப் படவில்லை.
திண்ணை பொறுப்பாளர்களான நானும் துகாராம் கோபால்ராவும் அல்லாமல் பி கே சிவகுமாரும்,
பாரி பூபாலனும் எனி இந்தியன் பதிப்பகத்தின் பங்குதாரர்கள்.
- 3. பி
கே சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் எனி இந்தியன் இணைய வழி புத்தக விற்பனை மையம் தொடங்கப்
பட்டது. புத்தக வெளியீடு மற்றும் வார்த்தை இதழ் வெளியீடு அதன் தொடர்ச்சியே.
- 4. எனி
இந்தியன் பதிப்பகத்தின் வெளியீட்டு நூல்களுக்கு பதிப்பகத்தின் சார்பில் நான் பதிப்புரை
எழுதியிருக்கிறேன். முன்னுரை, அணிந்துரை, பின்னுரை முதலியன ஆசிரியரின் பொறுப்பு. அதனால்
அதற்கான பரிந்துரை நான் செய்திருக்க வாய்ப்பே இல்லை.
ஜெயமோகன் இந்த
தகவல் பிழைகளை சரி செய்வார் என்று நம்புகிறேன்.
*******
உள்ளே
நுழைவதற்கு முன்:
ஜெயமோகனின் பொய்கள் என்ற இந்தத் தலைப்பை வைக்கும்போது எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தனின் ”அம்மாவின் பொய்கள்” கவிதை நினைவுக்கு வந்தது. அம்மாவின் பொய்கள் மாதிரி ஆபத்தில்லாத பொய்களோ, பாசத்தினால் பிறக்கிற பொய்களோ அல்ல ஜெயமோகன் பொய்கள். பலநேரங்களில் அவை பொய்கள் என்ற எல்லையைக் கடந்து அவதூறு என்ற நிலையையும் எட்டுகின்றன. அவருக்கு எதிரான கருத்துகள் சொல்வோரையும், அவர்களின் நல்ல குணாதசியங்களையும் நற்செய்கைகளையும் ஜெயமோகன்போல திட்டமிட்டுச் சிறுமைப்படுத்துகிற இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் பார்த்ததில்லை.
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும், புரிதலுக்கும், பெருந்தன்மைக்கும், மன்னிக்கும் குணத்துக்கும் உதவுவதில் கலைகளுக்கு – இந்த இடத்தில் இலக்கியத்துக்கு – முக்கிய இடம் உண்டு என நம்புகிறவன் நான். அதனாலேயே, ஜெயமோகனுக்கான இந்த பதிலில் – பொய்க்குப் பதில் பொய், அவதூறுக்குப் பதில் அவதூறு என்று இல்லாமல் தரவுகள் அடிப்படையில் பொறுப்புணர்வுடன் பதில் சொல்ல முயல்கிறேன்.
உணர்ச்சிகரமான ஆள் என ஜெயமோகனால் சொல்லப்படுகிற நான் மிக நிதானமாகவே, ஜெயமோகனுடன் எனக்கிருந்த கடந்தகால தொடர்பு, அவர் எழுத்துகளால் நான் அடைந்த வாசக பலன் ஆகியவற்றை மனதில் கொண்டு, கசப்புகள் தவிர்த்த பதிலை எழுத முயல்கிறேன். கிண்டலும் கேலியும் நகைச்சுவையின் ஒரு பகுதிதானே. தன்னளவு நகைச்சுவையை ரசிப்பவர் இல்லை என ஜெயமோகன் சொல்லிக் கொள்வார், அதனால் என் பதிலில் அங்கங்கே தெரியும் பகடியையும் கிண்டலையும் கூட ரசிப்பார் என நம்புவோம்.
நான் ஆதாரமாகக் கொடுத்திருக்கும் மின்னஞ்சல்களின் திரைச்சொட்டுகள் (ஸ்க்ரீன்ஷாட்ஸ்) சில இடங்களில் முழு மின்னஞ்சலும், சில இடங்களில் தேவையான பகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான மின்னஞ்சல்களையும் தருவதில் எனக்கு ஏதும் பிரச்னையில்லை. இதையும்கூட ஜெமோவின் மீது எழுத்தாளர் என்பதால் இன்னமும் மிச்சம் இருக்கிற கொஞ்சம் நல்லெண்ணத்தாலேயே முன்யோசனையுடன் செய்கிறேன். நான் தராமல் விட்ட பகுதிகளில் ஜெமோ பிறரைப் பற்றிப் பேசியிருக்கக் கூடும். அவற்றை நான் வெளியிடுவதால் ஜெயமோகனுக்கு உறவுச் சிக்கல்கள் வரலாம் என்பதால். மேலும், அவற்றை நான் வெளியிட்டால், திட்டமிட்டு ஜெமோவுக்கும் பிறருக்கும் நான் சிண்டு முடிவதாக ஜெமோ புதிய கதை கட்டுவார். அதனால் அவற்றை இப்போது வெளியிடவில்லை. என் திரைச்சொட்டுகளின் நம்பகத்தன்மை மீது ஜெயமோகனுக்கோ, ஜெயமோகனிடம் சென்று என்னைப் பற்றிக் கேட்கிற அருண்குமார்களுக்கோ சந்தேகம் இருந்தால் எழுப்பட்டும். அப்போது முழுமையாக அம்மின்னஞ்சல்களை வெளியிடுகிறேன்.
அப்புறம் ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதி அடுத்தவர் குறித்துக் கருத்து கேட்கிற அருண்குமார் போன்ற வம்பிலே ஆர்வமே இல்லாத சீலர்களுக்கு:
ஜெயமொகன் சொல்கிற வம்பு என்பதன் சரியான உதாரணம் உங்களைப் போன்றோரின் கேள்விகள் தான். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் எனில், அதில் உங்களுக்கு ஆர்வமோ கேள்வியோ அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகமோ இருக்கிறதோ எனில் தங்களைப் போன்றவர்கள் முதலில் கருத்துச் சொன்னவரை நேரடியாகக் கேட்க வேண்டும். உங்களுக்குப் பதில் வரவில்லை என்றோலோ அல்லது பதிலில் திருப்தியில்லை என்றோலோ எல்லாரைப் பற்றியும் எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிற ஜெயமோகனிடம் கேட்கலாம். இதுதான் சரியான வழி.
இந்த மாதிரி கேள்விகளுக்கு வம்பையே விரும்பாத, வேறு வழியில்லாமல் இத்தகைய கேள்விகளுக்கு இறுதியாகப் பலமுறை பதில் சொல்லி வருகிற ஜெயமோகன் என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்லாமல் கடக்கலாம். ஆனால் இலக்கியச் சேவை ஆற்றுகிற துடிப்பிலோ அல்லது எதிர்க்கருத்துச் சொன்னவனை அடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்று சந்தோஷத்தில் துள்ளுவதற்கு முன்னரோ, கொஞ்சமும் நேர்மை இருந்தால் - இந்தக் கேள்வியைத் தொடர்புடையவரிடம் கேட்டாயா எனக் கேட்க வேண்டும். கேள்வி கேட்பவர் சொல்வதைச் சரி பார்க்க வேண்டும். அப்புறம் தொடர்புடையவர் அப்படிச் சொன்னதன் வரிவடிவத்தை கேட்டு அதைக் கேள்வியின் பகுதியாகவோ பதிலின் பகுதியாகவோ பிரசுரிக்க வேண்டும்.
இவையெல்லாம் தான் ஒரு நேர்மையான மனிதர் கடைபிடிக்கக் கூடிய இதழியல் அல்லது பத்திரிகைத் துறை அடிப்படையாக இருக்கும். இதையெல்லாம் ஜெயமோகன் மற்றவர்கள் தனக்குச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார். ஆனால் அவர் மற்றவர்களுக்குச் செய்யமாட்டார். ஆனாலும், இவ்விஷயத்திலும், நான் அவர் என்னைப் பற்றி எழுதியிருப்பதை முதலில் பகிர்ந்து பதில் சொல்வதன் மூலமும், ஜெயமோகன் பொய்களுக்குத் தரவுகள் தருவதன் மூலமும், அவரை விட மேலான நாகரீகத்தைப் பயில முயல்கிறேன்.
குற்றச்சாட்டுகளும் பழிகளும் சொல்லும்போது தரவுகள் மிகவும் முக்கியம். ஜெயமோகனிடம் இவ்விஷயத்தில் ஒரு பொறுப்பற்ற தனமும், தான் நினைத்ததை எந்தவித உறுதிப்படுத்தலும் செய்து கொள்ளாமல் சொல்லலாம் என்கிற அலட்சியமும், அடிப்படையான நேர்மையின்மையும் இருந்து வருகின்றன. இதை பிறரின் அனுபவங்களை விட ஜெயமோகனுடனான என் அனுபவங்களை வைத்தே ஆதாரத்துடன் சொல்ல முயல்கிறேன்.
இந்த இடத்தில் ஜெயகாந்தனைக் குறித்து சின்னக்குத்தூசி (அரசியலில் எதிரெதிர் துருவங்கள்) எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஜெயகாந்தனிடம் ஒருவர் சென்று இன்னொருவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டாராம். ஜெயகாந்தன், “கொஞ்சம் பொறுங்கள். அவரே இங்கே இன்னும் சில நிமிடத்தில் வருவார். அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றாராம்.
அந்த ஜெயகாந்தன் எங்கே? இந்த ஜெயமோகன் எங்கே? என்று இதைப் படிக்கிற அருண்குமார் ஜெயமோகனைக் கேட்பாரா?
இப்படியெல்லாமான அடிப்படை நேர்மையை, நாகரிகத்தை ஜெயமோகனிடம் கேள்வி கேட்பவர்களோ கேள்விக்குப் பதிலளிக்கிற ஜெயமோகனோ பின்பற்றுவதில்லை. ஆதலால், இவர்களே இத்தகைய கேள்வி பதில்களைப் பிறரைப் பற்றி வம்பு பேசுவதற்கான வாய்ப்பாகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. ஆனால் இவர்கள்தான் அடுத்தவர்களை வம்பு பேசுவதாகப் பரப்புகிறார்கள்.
ஒன்று:
அருண்குமாரின்
கேள்வி “பி.கே. சிவகுமார் உங்களுக்கு மிக நெருக்கமாக இருந்தாரா” என்கிறது. ஜெயமோகன் அதை வசதியாக இப்போது ஏன் நெருக்கம் கொள்கிறார் எனத் திரிக்கிறார். கேள்வி கேட்டவருக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறம்கூட பதில் சொன்ன ஜெயமோகனுக்கு இல்லை.
எந்த வலைத்தளத்தில் நான் ஜெயமோகனைப் பற்றி சமீபத்தில் எழுதினேன் என யோசித்தேன். நான் வலைத்தளங்களில் சில ஆண்டுகளாக எழுதுவதே இல்லை. அதனால் அருண்குமாரின் கேள்வியின் மூலம் என்ன என்று தெரியாமல் கடைசியாக இதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். தமிழ்க் கலைச்சொல்லாக்கத்துக்குப் பங்களித்தவரான ஜெயமோகன் பேஸ்புக் என்கிற சமூக ஊடகத்தை கேள்வி கேட்டவர் வலைத்தளம் என்றதும் என்ன சொன்னேன் எனச் சரி பார்க்காமல் பதில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். சமூக ஊடகம் என்ற கலைச்சொல் இருக்க வலைத்தளம் என ஒருவர் பொதுமைப்படுத்திக் கேட்டிருக்கிறார். எவ்வளவு கலைச்சொற்கள் வந்து என்ன பிரயோசனம். ஆசான் ஜெயமோகனின் அத்யந்த சீடர்கள் கூட பின்பற்றுவதில்லை போலிருக்கிறதே.
சரி, அந்த பேஸ்புக் பதிவில் என்ன சொன்னேன். போகன் சங்கருக்குப் பதிலாக நான் எழுதிய பதிவு அது. மார்ச் 4, 2023 அன்று பேஸ்புக்கில் போகன் சங்கருக்கு நான் எழுதிய பதிலில் சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டோ திரித்தோ எழுப்பப்பட்ட கேள்வி என்று நினைக்கிறேன். (என்னால் இப்படித் தவறாகப் புரிந்து கொண்டோ என்று சந்தேகத்தின் பலனையும் ஒருவருக்குக் கொடுத்தே எழுத முடிகிறது. அதுதான் இலக்கியம் எனக்குக் கொடுத்திருக்கிற நற்பண்பு). இந்தப் பதிவு எழுதப்பட்ட நாள் முதல் என் பேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இல்லாதவர் கூட வாசிக்கும் வசதியிலேயே இருக்கிறது.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மூலமும் தரவுகளும் தராமல் ஒருவரைப் பற்றிய அதிரடித் தீர்ப்புகளைப் பரப்புவதன் மூலம் ஜெயமோகன் ஒரு கொடிய சர்வாதிகாரியைவிட மோசமாக, சமூகம் தனக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
நான் எழுதிய பேஸ்புக் பதிவின் முழுவடிவத்தை இங்கேயும் கொடுக்கிறேன். (அந்தப் பதிவின் சுட்டி இங்கே: https://www.facebook.com/574012146/posts/pfbid034JPYzFFDKCoD3Miqy2NwZPDFoj4TFzxe5GMRzd7ELSzkRGo7GQeh7vxJEwPNxo8dl/?d=w&mibextid=qC1gEa):
*******
மார்ச்
4, 2023ல் பி.கே. சிவகுமார் பேஸ்புக்கில் எழுதியது:
ஜெயமோகன் கருத்துகளும் நானும்:
ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிராகக் கருத்து சொல்றத தவிர நான் கருத்து சொல்வதில்லை என போகன் இன்று எழுதியிருந்தார். (மேலும் விவரங்களுக்கு என் முந்தைய பதிவு காண்க)
I like to self-reflect. அதனால் - ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிரா நான் சமீப காலங்களில் எத்தனை கருத்துகள் சொல்லியிருக்கேன் என்பதை நினைவுகூரும் பதிவா இதை வைத்துக் கொள்ளலாம்.
இடையில் அக்டோடர் 17, 2022 முதல் 110க்கும் மேற்பட்ட நாட்கள் - பிப்ரவரி 2023 முதல் வாரம் வரை நான் சமூக ஊடகத்திலேயே இல்லை. அதனால் அந்தக் காலத்தில் ஜெமோ கருத்துக்கு எதிரா எந்தக் கருத்தும் சொல்லியிருக்க முடியாதுதானே. இதுவே போகன் சங்கரின் அவதானிப்பின் போதாமையைக் குறிக்க உதவும்.
அதற்கு முன்னும் பின்னும் நான் சொன்ன கருத்துகளாக என் நினைவில் நிற்பவை:
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய போது விஷ்ணுபுரம் விருது செத்து விட்டது என போகன் சங்கர் பதிவில் எழுதிய பின்னூட்டம். அதை எழுதுவதற்கும் ஜெமோவே என் முன்னோடி. இயல் விருது ஜெமோ தகுதியற்றவர் என நினைக்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டபோது, இயல் விருது செத்துவிட்டது என ஜெமோ எழுதினார். அதை அவருக்கே நான் திருப்பிச் சொன்னேன் - சாருவுக்கு ஜெமோ விருது கொடுத்தபோது. ஜெமோவிடம் நான் கற்றுக் கொண்டவை அதிகம். அதனால் சீடன் குருவிடம் தான் முதலில் கூர்பார்ப்பான் என்கிற உவமையை முன்னரே எழுதியிருக்கிறேன். அப்படிக் கூர்பார்த்து வளர்ந்த சீடர்தான் ஜெமோவும். இதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை.
போகன் ஜெமோவைச் செய்யாத பகடியா? தனக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என போகன் நினைக்கிறாரா?
இன்றுவரை என்னிடம் ஜெமோவின் செல்போன் எண்ணும் மின்னஞ்சலும் இருவருக்கும் பொதுவான நெருக்கமான நண்பர்களும் உண்டு. அவருடைய 60 ஆம் ஆண்டு மணிவிழாவின் போது, அவருக்குச் சிறப்புகள் சேரும்போது என, தனிப்பட நான் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவதுண்டு. ஜெமோ சொல்வதை எல்லாம் எதிர்க்கிறேன் எனில் இதைச் செய்ய வேண்டாமே.
ஜெமோவை எனக்கு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தெரியும். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தபோதே, ஆர் பி ராஜநாயஹம் பிரச்னையில், ராஜநாயஹம் தளைய சிங்கம் கதை விஷயமாகச் சொன்னதே சரி எனப் பொதுவில் (அப்போது திண்ணை.காம் உரையாடல்தளம்) சொல்லியிருக்கிறேன். ஜெயமோகன் கருத்துகள் சிலவற்றில் அவரிடம் நேரிடையாக முரண்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் அவற்றைத் தவறாக எடுத்துக் கொண்டதில்லை.
சமீபத்தில் கூட, அஜிதனின் மைத்ரி நாவல் குறித்த என் எண்ணங்களை மிகவும் பாராட்டாகவே பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறேன். அவற்றைத் தனியாகவும் ஜெமோவுக்கு அனுப்பி அஜிதனிடம் சேர்க்க வேண்டிக் கொண்டதுண்டு - அஜிதன் மின்னஞ்சல் என்னிடம் இல்லாததால்.
அப்புறம் லஷ்மி சரவணகுமார் பாராட்டு விழாவில் - தான் இப்போது கடுமையான விமர்சனத்தை விட்டு விட்டதாகவும், பாராட்டிச் சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவதாகவும், பேசுவதாகவும் என்ற பொருளில் ஜெமோ பேசிய காணொளி பார்த்தேன். ஜெமோவிடம் நிறைய தொடர்பில் இருந்த காலங்களில் இருந்து இதுதான் என் நிலைப்பாடு. ஆனால் ஜெமோ அப்போது இதற்கு நேரெதிர் நிலைப்பாடு கொண்டிருந்தார். அஞ்சலிக் குறிப்புகளில் கூட, கடுமையான விமர்சனம் இருந்தால் வைக்க வேண்டும் என நியாயப்படுத்துவார். கமலாதாஸுக்கு அவர் அப்படி எழுதிய அஞ்சலிக் குறிப்பு நிறைய கண்டனங்கள் கொணர்ந்தது என நினைவு. அப்படிப்பட்ட ஜெமோ இப்படி நெகிழ்ந்துபோனதை வளர்ச்சி என்றோ, கருத்து மாற்றம் என்றோ பதிவு செய்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. இந்த நேரத்தில் கே.என். செந்தில் இதைப்பற்றி எழுதிய பதிவில் விளையாட்டாக, “ அஞ்சலிக் குறிப்பிலும் காட்டமான விமர்சனம் இருந்தால் முன்வைக்கலாம் என்றவரின் பரிணாம வளர்ச்சி” என்ற பொருளில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.
இதைத்தவிர - செலக்டிவ் அறம் கொண்டவர் என்ற தீபு ஹரியின் கேள்விக்கு ஜெயமோகனா எனக் கேட்டிருந்தேன். ஜெயமோகன் நியாயங்கள் சமீப காலங்களாக பெரும்பாலும் அத்தகையவை என்பது என் எண்ணம். மேலும் அவருக்கு எதிரான கருத்துகளை அவர் இடக்கையால் ஒதுக்குவதும், அவை இலக்கிய நுண்ணுணர்வு இல்லாதவர்களால் சொல்லப்படுகின்றன என்ற ஒற்றை லேபிளால் அடக்குவதும் எனக்கு ஏற்புடையவை அல்ல. ஆனாலும் இவை குறித்து எங்கும் விரிவாக எழுதியது இல்லை.
இணையத்திலேயே மாமல்லன், சுரேஷ் வெங்கடாத்திரி என ஜெமோ கருத்துகள் மீது தொடர்ந்து விமர்சனம் வைப்பவர் உண்டு. அது அவர்கள் உரிமை. அந்த மாதிரி கூட நான் ஜெமோ குறித்துத் தொடர் விமர்சனம் எழுதியதில்லை.
ஜெமோ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர் கருத்துகள் சமூகத்தில் சலனங்கள் ஏற்படுத்தத் தான் செய்யும். அதற்கு எதிர்வினைகள் வருவதும் இயல்பு. எதிர்க்கருத்துகள் சொன்னாலேயே, ஜெமோவுக்கு எதிர் என நிறுவப் பார்ப்பது சரியில்லை.
சொல்லப்போனால், இணையத்தில் ஜெமோவை அவர் எதிரிகளை விட அதிகம் கலாய்ப்பதும், வாருவதும் (அவை ரசிக்கத்தக்க விதத்திலும் உள்ளன) போகன் சங்கர் தான். போகனுக்கு ஜெமோவைப் பிடிக்காது என யாரும் நினைப்பதில்லை.
இந்தக் கோணங்கி விவகாரத்திலேயே - ஜெமோவின் கட்டுரைகளில் இருக்கிற வாசகங்கள் சிலவற்றைக் கட்டுடைத்து என்னால் விரிவாக எழுத முடியும். நெருங்கிய நண்பர்களின் உள்வட்ட உரையாடல்களில் என் விரிவான காரணங்களைச் சிலநேரம் பகிர்ந்து கொள்வதுண்டு. அவற்றைக் காபி பேஸ்ட் செய்து, கொஞ்சம் சேர்த்து இணையத்தில் இட்டாலே, அவை ஜெமோ கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளாக அமையும். அதையே நான் செய்வதில்லை. காரணம் - அடுத்தவரிடம் குறை கண்டு பேர் வாங்குகிற பிசினஸில் எனக்கு ஆர்வமில்லை. அதேநேரம் ஓரிரு வரிகளில் நம் எண்ணத்தைத் தொடர்புடைய பதிவுகளில் சொல்வதும் தவறில்லை. இதையெல்லாம் ஜெமோவுக்கு எதிரான அஜெண்டா என எடுத்துக் கொண்டால், ஒன்றும் சொல்வதற்கில்லை.
சாரு விஷயத்திலேயே - சாரு ஆபிதின் எழுத்துகளை எடுத்துத் தன் பெயரில் போட்டுக் கொண்டது, சாரு மீது முன்னர் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஜெமோ அறியாமல் இருக்க முடியாது. அவற்றைப் பொருட்படுத்தாமல் சாருவுக்கு விஷ்ணுபுரம் விருதைக் கொடுக்க ஜெமோவால் முடிந்தது. ஆனால் ஜெமோவை விமர்சிக்கிற முன்னாள் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் (நான் செந்தூரம் ஜெகதீசை இவ்விஷயத்தில் ஆதரிக்கவில்லை) என்றதும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி ஜெமோவால் தயக்கமின்றி எழுத முடிகிறது.
பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் எனில் விருது கொடுப்பதற்கு முன் யோசிப்பார்கள். கொடுத்த விருதைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால் ஜெமோ சாருவின் பழைய தவறுகளைக் கண்டிக்கக் கூட செய்யாமல் விருது கொடுத்தவர். கேட்டால் எல்லாவற்றையும் கண்டித்துக் கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனின் வேலை அல்ல என பதில் வரும்.
அப்போ - சாருவுக்கு அமைதியாக இருந்த மாதிரி - கோணங்கி விஷயத்திலும் ஜெமோ அமைதியாக இருந்து இருக்கலாமே. அது கன்சிஸ்டன்சியாகவும் இருந்து இருக்குமே.
இப்படி ஜெமோவின் ஆளுக்கேற்ற நியாயத்துக்கு உதாரணம் உண்டு. அதையும் இவ்வளவு நாள் எழுதாமல் தான் இருந்தேன். இப்போது இதை எழுத வைத்த பெருமை போகன் சங்கரையே சாரும்.
கோணங்கி விஷயத்தில் ஜெமோ கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் ஜெமோவுக்கு இல்லை. ஆனால் கருத்துச் சொன்னால் அதற்கு வரும் எதிர்வினைகளுக்குச் சார்பு கற்பிப்பது அபாயகரமானது. எதிர்வினைகளுக்குப் பிடித்தால் பதில் சொல்லலாம். அல்லது அலட்சியப்படுத்தலாம்.
மற்றபடி - அவர் எழுதும் புனைவுகளில், தனிமனித சந்திப்புகளிலும் நான் பார்த்த, பார்க்கிற ஜெமோ வேறு. அந்த ஜெமோ மிகவும் பெருந்தன்மையும், மன்னிக்கும் குணமும், எதிர்த்தரப்புடன் உரையாட விழையும் பண்பும், கடுமையான கேள்விகளையும் பொறுமையுடன் எதிர்கொள்ளும் குணமும் நிறைந்தவர். அதே ஜெமோ - எழுத்தில் அவர் குறித்து வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் காட்டும் பதட்டமும், விமர்சனம் செய்வோர் மீது கொள்ளும் சந்தேகமும், வைக்கும் குற்றச்சாட்டும் - என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை.
ஜெமோ நிச்சயம் என் ஆசான்களில் ஒருவர். அவரிடம் கற்றுக் கொண்டதை அவரிடமே கேள்வியாகக் கேட்பதால் நான் அவருக்கு எதிரியாக ஆகிவிடுவேன் என்றால் - அதற்காக முடியும்போது சுருக்கமாகவேனும் என் கருத்துச் சொல்லாமலா இருக்க முடியும்.
இப்போது போகனோ ஜெமோவோ என் கருத்துகள் உள்நோக்கம் கொண்டவை என நினைக்கிறார்கள் எனில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பொதுவாகவே, நான் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனுமே எழுதி வருகிறேன். என் கருத்துகளில் வசையை அனுமதிப்பதில்லை என்பது படிப்பவர்க்குப் புரியும்.
இந்த விளக்கங்களை எழுதுவதால் போகன் மீது எனக்கு இருக்கிற மரியாதை கொஞ்சமும் குறையவும் போவதில்லை.
நன்றி.
- பி.கே. சிவகுமார்
*******
மேலே உள்ள என் பதிவைப் பார்த்தாலேயே தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் புரியும். “ஜெமோவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தபோது” என்றும், ”நிறைய தொடர்பில் இருந்தபோதும்” என வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறேன். நெருங்கிய நட்பில் இருந்தபோது என்றோ நிறைய நட்பில் இருந்தபோது என்றோ எழுதவில்லை. ஆனாலும் என்னையும் ஜெமோவையும் நண்பர்கள் என்றழைத்த பிறரின் மின்னஞ்சல்களையும், ஜெயமோகன் எனக்கு எழுதிய தனிப்பட்ட மின்னஞ்சல்களில் சிலவற்றையும் பின்னர் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதேபோல ஜெயமோகனுக்கும் எனக்கும் நெருக்கமான பொதுவான நண்பர்கள் உண்டு எனக் குறிப்பிட்டு இருக்கிறேன். சுகா, பாட்டையா எனப் பலரை இப்படிச் சொல்ல முடியும். ஆமாம், பாட்டையா பாரதி மணி நெடுங்காலம் ஜெமோவின் பிரியத்துக்கு உரியவராக இருந்தார். ஜெமோ குறித்த விவகாரம் ஒன்றில் அவர் அப்பாவியாக தனக்குக் கிடைத்த செய்தியைப் பகிரப் போக, ஜெயமோகன் அவரைப் போட்டுத் தாக்கித் தூக்கிக் கடாசினார். அப்படி ஜெமோவிடம் அடிபட்ட பெருந்தலைகள் பல உண்டு. அதனாலேயே நான் ஜெயமோகன் இப்படி என்னைப் பற்றி எழுதாவிட்டால்தான் ஆச்சரியம் என எடுத்துக் கொள்கிறேன். ஆனாலும், என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.
இந்த விஷயத்தில் இன்னொரு முக்கியமான உத்தியை ஜெயமோகனும் அவர் ஆதரவாளர்களும் பயன்படுத்துவதை கவனிக்க வேண்டும். ஜெயமோகன் கருத்துகளை விமர்சித்து எழுதினால் அவர் கருத்துகளுக்கு எதிராக எழுதுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை என்கிற முத்திரை முதலில் வரும். அப்படியெல்லாம் இல்லை, அவர் சரியான கருத்துகள் சொல்லும்போது, நல்ல படைப்புகள் தரும்போது பாராட்டியும் வந்திருக்கிறேன். அவருடன் தொடர்பில் இருந்த காலத்தில் இருந்தே இதைச் செய்திருக்கிறேன் என்று சொன்னால், ஜெயமோகனுடன் நெருக்கம் காட்டிக் கொள்ள முயல்கிறேன் என்ற பெயர் வரும். இப்படியாக, பிடிக்காதவர் எனில் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அடி என்கிற தர்க்கத்தைத் தாண்டி ஜெயமோகனும் அவர் ஆதரவாளர்களும் செய்வது வேறு என்ன?
ஜெயமோகனிடம் நெருக்கம் எனச் சொல்லி நான் என்ன ஆதாயம் அடைந்தேன், அடைகிறேன் என்பதை ஜெயமோகன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவரிடம் பண உதவி பெற்றேனா, சினிமா சான்ஸ் கேட்டேனா, அல்லது பிரபலம் யாரையாவது அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தேனா? ஜெயமோகனைத் தெரிவதற்கு முன்னரே, என் பாட்டனார் வழியாக மு.வ. உள்ளிட்டோரையும், என் தந்தையார் வழியாக ஜெயகாந்தன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் அறிமுகமும் எனக்கு இருந்தே வந்தது. இதையெல்லாம் பெருமையாகவோ சலுகையாகவோ இலக்கிய இடம் கேட்டோ நானாக எங்கும் பயன்படுத்திக் கொண்டதில்லை. ஜெயமோகனே அவர் பதிவிலும் என் தந்தையாரைக் குறித்துச் சொல்லியிருப்பதால் சொல்கிறேன். எனக்கு இலக்கியவாதியாக ஆகிற பெரிய ஆசைகளும் ஆரம்பம் முதலே இல்லை. ஆரம்பம் முதலே எழுதுவதைவிட வாசிப்பதே பிடித்த விஷயம் என்று சொல்லி வருபவன் நான்.
பள்ளிக்கூடம் முதல் எனக்குத் தமிழிலும் இலக்கியத்திலும் இருக்கிற ஆர்வத்தை என்னை அறிந்தவர்கள், பழகியவர்கள் அறிவார்கள். அதனால், ஜெயமோகன் என்னை இலக்கியத்துக்கும் வாசிப்புக்கும்கூட அறிமுகப்படுத்தவில்லை. என் வாசிப்பை மேம்படுத்தினார். புதிய வாசல்களைக், கோணங்களைக் காட்டினார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக பலமுறை அவரைப் பாராட்டி பல இடங்களில் எழுதியே வருகிறேன்.
ஜெயமோகன் எனக்குச் செய்த உதவி – நான் அவரை மதித்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என் கட்டுரைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியதுதான். அதற்கு நான் நன்றியுடையவன். அதைக் கூட திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் அவர் செய்ததாக எழுதியிருக்கும் பொய்க்குப் பின்னர் வருவோம். கோபால் ராஜாராமும் அப்படி ஜெயமோகனைத் தான் கேட்கவில்லை என்று எழுதியிருக்கும் கட்டுரையின் சுட்டியையும் விரிவையும் முன்னேரே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
மற்றபடி – ஜெயமோகனால் நான் அடைந்த பெரிய ஆதாயம் எது என்றால், நண்பர் சுகாவின் நட்பைச் சொல்லலாம். சுகாவின் நட்பு ஜெயமோகனால் கிடைத்தது என்பதை நான் முன்னரே இணையத்தில் பதிவு செய்து இருக்கிறேன். இதற்குக் கூட ஜெயமோகனுக்கு கிரிடிட் கொடுக்க வேண்டியதில்லை. அப்படிச் சொல்வது என்னுடைய பெருந்தன்மையால்தான். பலர் நமக்குப் பலரை அறிமுகம் செய்கிறார்கள். அவர்களில் சிலரே சில காரணங்களால் நமக்கு நெருக்கமாகிறார்கள். சுகாவும் நானும் நெருக்கமானது ஒத்த ரசனைகளால் என்று சொல்லமுடியும். அதுதான் உண்மையும் கூட.
இதோ நண்பர் இயக்குநரும் எழுத்தாளருமான சுகாவே எனக்கு எழுதிய செப்டம்பர் 5, 2010ல் எழுதிய மின்னஞ்சலில் அதையே சொல்கிறார் பாருங்கள்.
என்னது, ஜெயமோகன் என்னை “அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.” என்று சொல்கிறார். ஆனால் சுகா சென்னையில் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஜெயமோகனை நான் சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறாரே என்ற கேள்வி ஜெயமோகனை ஆழ்ந்து படிக்கிற அருண்குமார்களுக்கு இப்போது எழ வேண்டும். ஜெயமோகனின் அந்தப் பொய்யையும் பின்னர் கவனிப்போம். ஆதாரமாக இதை இப்போதே வைத்துக் கொள்ளுங்கள்.
மாறாக – ஜெயமோகனுக்கே நான் உதவிகள் செய்து வந்திருக்கிறேன் என்கிற உண்மையை எழுத எனக்குச் சில நிமிடங்களே தேவைப்படும். அப்படி நான் எழுதினால் அது பொய்யாகவும் இருக்காது. இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கிற ஆதாரங்கள் பொதுவில் பலர் அறியாதவை. இப்போதே முதன்முறையாக்ப் பொதுவில் வைக்கிறேன். இதையெல்லாம் எழுதுகிற விருப்பமும் இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது எழுத வைக்கிற அருண்குமார்களுக்கும் ஜெயமோகனுக்கும் நன்றி.
உதாரணமாக, அவர் முதலில் ஆரம்பித்து நடத்திய மாத இதழ் (மருதம் என நினைவு) சில இதழ்களில் நின்று போனது. அதற்கு நான் செய்த நிதியுதவியைத் திருப்பித் தந்து விடுகிறேன் என ஜெயமோகன் எனக்கு எழுதிய மின்னஞ்சலில் எனக்கு முதலில் அவர் மீது மதிப்பு வந்தது. இதை ஜெயமோகன் குறித்து நல்லவிதமாகவே குறிப்பிடுகிறேன். அதன் பின்னர் ”அவர் நடத்திய சொல் புதிது இதழில் இருந்து அவர் பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டி ஆதரித்து இருக்கிறேன். அவருடைய 2015 அமெரிக்கப் பயணத்தின்போது நியூ ஜெர்ஸியில் அவர் கூட்டம் நடக்க நான் செய்தவை குறித்தும் பின்னர் தரவுகளுடன் பார்ப்போம்.
அமெரிக்காவிற்கு எந்த எழுத்தாளர் வந்தாலும் இயன்றால் சந்திப்பதும், அவர்கள் வருகைக்கு ஏதும் உதவி தேவையென்றால் இயன்றால் செய்வதும், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி செய்யச் சொல்லி நம்பகமான நண்பர்களிடம் இருந்து வருகிற வேண்டுகோள்களுக்கு இயலும்போதெல்லாம் செவிசாய்ப்பதும் என்றே நான் இருந்து வருகிறேன். அவை குறித்தெல்லாம் எங்கும் நான் வெளிப்படையாக எழுதிக் கொள்வதில்லை. உதவி பெற்றவர்கள் அவர்களாகக் கூறினால் உண்டு. அதனால் கடவுள் புண்ணியத்தால், ஜெயமோகனிடம் இல்லை, எந்த எழுத்தாளரிடமும் நெருக்கம் எனக் காட்டிக் கொண்டு எதையும் நிறைவேற்றிக் கொள்கிற தேவையும் எனக்கு இல்லை.
ஜெயமோகனுக்கு இப்போது இருக்கிற சீடர் குழாம் அமைவதற்கு முன்னர், அவருடன் நண்பர்களும் நானும் எண்ணும் எழுத்தும் இணைய மடலாடற் குழுமத்தில் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. அந்த நினைவுகளின் நன்றியுணர்வின் பொருட்டே ஜெயமோகனைப் போல் பொய்கள் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்கிற எழுத்தும் எண்ணமும் குழுமத்தின் நிறுவனரே நான் தான். என்னையே அறியாதவர் அந்தக் குழுமத்தில் சேர்ந்ததும் அதில் என்னுடன் கேலி, கிண்டல், கோபம், வாதம், பிரதிவாதம் என உரையாடியதற்கு எல்லாம் சுகா, பாவண்ணன், கோபால் ராஜாராம், துகாராம், வழக்குரைஞர் கே.எம். விஜயன், என் இணைய நண்பர்கள், இன்னும் பல எழுத்தாளர் நண்பர்கள் என அக்குழுமத்தில் உறுப்பினராக இருந்த பல பார்வையாளர்கள் உண்டு. ஆனாலும், ஜெயமோகனைக் குறித்து எழுதும்போது மிகவும் ஜாக்கிரதையாக நட்பு என்கிற பதத்தை அவர் இத்தகைய அபவாதங்களைச் சொல்லக் கூடியவர் என்பதாலேயே உபயோகிப்பதில்லை. ஆனாலும், ஜெயமோகனால் என் மீது அபவாதம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இரண்டு:
ஜெயமோகன் தான் எவ்வளவு பெரிய எழுத்தாளர் எனத் தன்னைப் பற்றி நினைத்தும் எழுதியும் கொள்பவர். அவர் கருத்தின்படி இலக்கியச் செயல்பாட்டைத் தனிநபர் வம்பாகப் பார்க்கிற நான் அவருடைய கால் தூசிக்குக் கூட சமம் ஆகக் கூடாது. மேலும், ஜெயமோகன் கருத்தின்படி, நான் அவருக்கு நெருக்கமும் கிடையாது. ஆனாலும் அருண்குமார் என்பவர் என்னைப் பற்றிக் கேட்டதும், ஜெயமோகனால் 4 பத்திகள் என்னைப் பற்றிப் பல பொய்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஜெயமோகன் அடைகிற உணர்ச்சிகரத்துக்கும் பதட்டத்துக்கும் இதுவே மிகச் சிறந்த உதாரணம். நெருக்கம் இல்லாதவர்களைப் பற்றியே நிறைய பேசுகிறீர்களே ஜெயமோகன்?
டிசம்பர் 9, 2007-ல் எழுத்தும் எண்ணமும் இணையக் குழுமத்தில் நான் ஜெயமோகனுக்கு எழுதிய மடல் ஒன்றைப் பாருங்கள்: ஜெயமோகன் எப்படிக் கேள்வி கேட்டு வளர்ந்தார் என்று சொல்லிவிட்டு , அப்படிக் கேள்விகள் கேட்கிற சலுகையை நான் சு.ரா., கோ. ராஜாராம் ஆகியோரிடம் பெற்றிருந்தேன் என்பதையும் தெரிவித்து, ஜெயமோகனைக் கேள்விகள் கேட்டால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவேனோ என்ற ஐயத்தையும் எழுதியிருக்கிறேன். அதேநேரத்தில், அந்தக் கேள்விகள், எதையும் நிரூபிக்க அல்ல என்னை வளர்த்துக் கொள்ள என்று சொல்லியிருக்கிறேன். மாற்றுக் கருத்துகள் வரும்போது சிலநேரம் ஜெயமோகன் விரும்புவதில்லையோ என்ற யோசனையில் நான் எழுதிய மடல் இது.
மேற்கண்ட மின்மடலுக்கு எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் ஜெயமோகன் எழுதிய பதில். என் மடல் சென்ற அதே நாள் ஜெயமோகன் எழுதிய பதில் இது: அவரிடம் எதையும் எப்படியும் கேட்கலாம் என்றும் சிலநேரம் அவர் குரல் கடுமையாக ஆகிவிடுவதுண்டு என்றும், அவர் எதும் கடுமையாக என்னைச் சொல்லியிருந்தால் மன்னிப்பு கேட்டும் (அதற்கெல்லாம் அவசியமில்லை என நான் பதில் எழுதினேன்.) ஜெயமோகன் எழுதிய பதில்.
ஜெயமோகன் இப்படி எழுத்தில் சொல்லியதை நம்பி அவர் கருத்துகளை கேள்விகேட்கப் போய்தான் இப்போது இணைய வம்பர் என்றும், என்னுடைய தனிப்பட்ட குணங்கள் மேல் மதிப்பில்லை என்றும், அவர் பெயரை ஏதோ தவறாக நான் பயன்படுத்துவதாகவும் ஜெயமோகன் என்னை அவதூறு செய்கிறார். அருண்குமார்கள் போன்ற மேய்ப்பரைத் தேடுகிற ஆடுகளுக்கு இது எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்கிறேன்.
ஜெயமோகனின் பொய்:
ஜெயமோகன் எழுதுகிறார்: “பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர்.”
என் பதில்:
திண்ணை ஆசிரியர் குழு யாரையும் யாருக்கும் அறிமுகம் செய்து வைப்பது இல்லை. கோபால் ராஜாராமோ துகாராமோ என்னை ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை என்று கோபால் ராஜாராம் எழுதியிருக்கும் பதிவின் சுட்டியையும் விரிவையும் முன்னரே கொடுத்திருக்கிறேன். பின், ஜெயமோகன் எனக்கு எப்படி அறிமுகமானார்?
ஜெயமோகன் இணையத்தில் வந்த புதிதில் போரம்ஹப் என்கிற உரையாடல்தளத்தில் எழுதிக் கொண்டிருந்தார். மட்டுறுத்துதல் (மாடரேஷன்) இல்லாத அத்தளத்தில் ஜெயமோகன் எழுத்துகளைக் குறித்துக் குறைகள் கேள்விகள் கேட்டு உரையாடல்கள் நிகழும் – அவற்றில் பங்கெடுக்காமல்
படித்து வந்திருக்கிறேன். நியூ ஜெர்ஸியில் இருக்கும் நண்பர் PG என்கிற பத்மநாபன் கணேசனுக்கு இது தெரியும். உதாரணமாக, அவர் எழுத்தில் இருக்கிற ஒற்றுப் பிழைகள், சங்க சித்திரங்கள் நூலில் இருக்கும் பிழைகள் என விவாதங்கள் நிகழும். அப்போதிருந்தே அங்கே நான் ஜெயமோகன் எழுத்துகளை வாசித்தது உண்டு. பின்னர் திண்ணை இணையதளம் 1999ன் இறுதியில் தொடங்கப்பட்டதையும் நான் அறியவில்லை. ஜெயகாந்தனின் 2000ஆம் வருடத்தய ஜூன் மாத அமெரிக்க வருகை ராஜாராம், துகாராம் ஆகியோரை அறிமுகப்படுத்தியது. கனெக்டிகட்டில் ராஜாராம் வீட்டுக்கு எழுத்தாளர்கள் வரும்போது அவர் வைக்கிற இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொள்ள அதற்குப் பின்னரே ஆரம்பித்தேன். அப்படி, சு.ரா., சலபதி, கண்ணன் உள்ளிட்ட பலரைச் சந்தித்து இருக்கிறேன். ஜெயமோகன் முதன்முறையாக 2009ல் தான் அமெரிக்கா வந்தார். அதனால், ராஜாராம் வீட்டில் வைத்துச் சந்தித்தன் மூலம் அறிமுகம் என்கிற பொய்யையும் ஜெயமோகன் சொல்ல முடியாது. திண்ணை இணையதளத்திலும், திண்ணை நடத்திய உரையாடல் களத்தில் ஜெயமோகன் எழுதுவதை 2000 ஜூனுக்குப் பின்னர் வாசிக்க ஆரம்பித்தேன். உரையாடல் தளங்களில் நானும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தேன். ஜெயமோகன் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும் உண்டு. உரையாடல் தளம் பலரும் பேசிக் கொள்ள உதவும் ஒரு தளம். திண்ணை ஆசிரியர் குழு அங்கே யாரையும் எந்த எழுத்தாளருக்கும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அப்படித்தான் ஜெயமோகன் எனக்கு அறிமுகம். ஆக இது ஜெயமோகனின் முதல் பொய்.
இதே நேரம் இடையில் யாஹூ இணைய மடலாடற் குழுக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. கவனம் பெற்றன. அப்படி 2003 வாக்கில் மரத்தடி என்னும் யாஹூ இணையக் குழுமத்தில் சேர்ந்தேன். ராயர் காபி கிளப் (எழுத்தாளர் இரா. முருகன் நடத்தியது), தமிழ்-உலகம் என்கிற இணையக் குழுமங்களிலும் அப்போது உறுப்பினராக இருந்தேன். சேர்ந்த கொஞ்ச காலத்தில் அறியப்பட்ட இலக்கிய எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கிற “எழுத்தாளரைக் கேளுங்கள்” என்கிற நிகழ்ச்சி நடத்தலாம் என்கிற என் யோசனையை ஏற்று, எழுத்தாளர் பெயர்களைச் சொல்லி அழைத்து வாருங்கள் எனச் சொன்னபோது, நான் பரிந்துரைத்த ஜெயமோகன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. என் அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஜெயமோகன் மரத்தடி குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மின்மடல் கேள்விகளுக்கு மின்மடல் மூலம் பதிலளித்தார். அப்போது மரத்தடி யாஹூ குழுமம் மூலம் அறிமுகமான நண்பர் ஹரன் பிரசன்னா, ஜெயமோகனின் தீவிர வாசகர். ஆனால் ஜெயமோகனுடன் அவருக்கு அப்போது தொடர்பு இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு என் வழியாக ஜெயமோகன் சம்மதம் சொன்னதும், கேள்விகளை ஒருங்கிணைத்து ஜெயமோகனிடம் இருந்து பதில்களைப் பெற்றுப் பகிர்கிற வேலையைச் செய்ய அவர் ஆசைப்பட்டுக் கேட்டார். அதன்படியே நடந்தது. இந்தக் கேள்வி பதில்கள் பின்னர் புத்தகமாகவும் வந்தன. இன்றுவரை ஜெயமோகன் தளத்திலேயே நான் அப்போது கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் உள்ளன. அவற்றின் சில சுட்டிகள்: https://www.jeyamohan.in/109/ https://www.jeyamohan.in/110/ https://www.jeyamohan.in/112/ https://www.jeyamohan.in/97/
இவற்றில் இருந்து ஜெயமோகன் இந்தக் காலகட்டத்திலேயே என் இலக்கிய வேண்டுகோள்களை ஏற்றுச் சம்மதிக்கிற அளவுக்கான தொடர்பிலும் இருந்தார் என்பது புலனாகிறது அல்லவா?
என்னுடன் ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொதுவெளி உரையாடல்கள் மட்டுமே என ஜெயமோகன் சொல்லியிருக்கிற பொய்க்கு மாற்றான பல ஆதாரங்களில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
நவம்பர் 27, 2007ல் ஜெயமோகன் எனக்குத் தனிப்பட எழுதிய பின்வரும் மின்னஞ்சல் அவர் கணினி தொழில்நுட்பப் பிரச்னை குறித்து உதவி கேட்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஜெயமோகன் தளம் உருவாகி அவர் தனக்குப் பின்னால் ஆள் பலத்தைச் சேர்த்துக் கொள்ளாத காலம் அது. அப்போதெல்லாம் எந்தப் பிரச்னை என்றாலும் என்னைப் போன்றவர்கள்தான் நினைவுக்கு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அணுக்கமாக இருந்ததாக ஜெயமோகன் சொல்லிக் கொள்கிற கோ ராஜாராம், துகாராம் ஆகியோரிடம் இதை அவர் கேட்டிருக்கலாமே? அதிகம் தெரியாத என்னிடம் ஏன் கேட்டார் என அருண்குமார்கள் ஜெயமோகனைக் கேட்பார்களா?
ஜெயமோகன் ஜனவரி 27, 2008ல் எனக்கு எழுதிய மடல் கீழே. என் மிஸ்டு காலைப் பார்த்துவிட்டுப் பொறுப்பாக தன் விடுமுறை விஜய விவரங்களையும் பகிர்ந்து கொண்டு, தகவல் தெரியப்படுத்துகிறார். என்னுடன் பொதுவெளி உரையாடல்கள் மட்டுமே என்கிற பொய்க்கு மாற்றாக ஜெயமோகன் என்னுடன் தொலைபேசியிலும் உரையாடுகிறவராக இருந்திருக்கிறார் என்ற உண்மையை அவரின் இம்மடல் காட்டுகிறது.
நான் நடத்திய எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல்கள் ஜெயமோகனுக்கு படைப்பூக்கம் தந்தன. அவரின் பல கட்டுரைகள் அக்குழும உரையாடல்கள் வழி பிறந்தவை. ஓர் உதாரணமாக, ஜெயமோகன் எழுதி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட தொப்பித் திலகம் போன்ற பகடி கட்டுரைகள் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதப்பட்டவைதான். அப்படி அந்தக் கட்டுரை சர்ச்சை ஆகி, ஜெயமோகன் மீதான அக்கறையில் சுகாவுக்கு நான் எழுதிய மடல் ஒன்றுக்கு ஜெயமோகன் எழுதிய பதில் கீழே. மார்ச் 11, 2008 அன்று ஜெயமோகன் அக்கட்டுரைக்காகத் தாக்கப்பட்டபோது, பிப்ரவரி 16, 2008ல் ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்கிறது என்ற புகாரை எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் விகடனுக்கு அனுப்பிய பிறகு (அதில் நானும் கையெழுத்திட்டேன்), பாதுகாப்புக்காக ஜெயமோகன் சிலகாலம் வீட்டுக்கு வெளியே இருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பது பொதுவில் யாருக்கும் தெரியாது. அந்தச் சூழ்நிலையிலும் ஜெயமோகன் யாரைச் சந்திக்கப் போகிறேன் என்று எனக்கு எழுதியிருப்பதைப் பாருங்கள். நெருங்கிய தொடர்போ, நட்போ இல்லாதவர்கள் எல்லாரிடமும் ஜெயமோகன் இப்படித்தான் சொல்லிக் கொள்வாரா என்ற கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். பிரச்னை தீவிரமானால் திரைத்துரையை விட்டே விலகி விடுவதான தன்னுடைய தனிப்பட்ட முடிவையும் பகிர்ந்து கோண்டிருக்கிறாரே எனக் கேட்கிறீர்களா, ஆமாம், இந்த அளவுக்குத்தான் ஜெயமோகனுக்கு நெருக்கமாக இருந்தேன். ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்தி எந்த தனிப்பட்ட ஆதாயமும் அடைந்ததில்லை. அவருடன் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் வந்த போதும், அவர் மீது எப்போதும் அவர் ஒரு கரிசனமும் நல்லெண்ணமுமே மிஞ்சும். “எவ்வளவு பட்டாலும் உங்களுக்குப் புத்தி வராது” எனச் சில நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட முறையில் என்னைக் கிண்டல் செய்வதும் உண்டு.
இன்னொரு ஆதாரமாக, விகடனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஜெயமோகன் தளத்திலேயே https://www.jeyamohan.in/456/ என்கிற சுட்டியில் இப்போது இருக்கிறது. அருண்குமார்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தச் சுட்டி இதை எழுதுகிற இந்த நேரம் வேலை செய்கிறது. பின்னர் வேலை செய்யவில்லையெனில், ஜெயமோகன் அவர்களை அணுகிக் கேட்கவும். எதற்கும் இருக்கட்டும் என திரைச்சொட்டும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லாததை எழுதினேன் என்ற குற்றச்சாட்டு வருமெனில்.
ஜெயமோகன்
நவம்பர் 5, 2008-ல் எனக்கு அனுப்பிய மடல் திண்ணை தளத்தில் இருந்து ஒரு கட்டுரையை எடுத்துத் தரச் சொன்னது. அதை எடுத்துத் தந்து அவர் எனக்கு நன்றி மடலும் அனுப்பினார். ஓர் உதாரணமாக ஜெயமோகனின் முதல் மடலை மட்டும் கொடுக்கிறேன். திண்ணை நடத்துகிற கோ. ராஜாராம், துகாராம் மூலம் நான் அறிமுகமாகி இருந்தால், ஜெயமோகன் இதை ஏன் அவர்களிடமே கேட்கவில்லை. அவர்களிடம் கொள்ளாத உரிமையில் என்னிடம் கேட்கிறார் என்று அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் அருண்குமார்கள் யோசிப்பார்களா?. ஜெயமோகன் என்கிற எழுத்தாளர் என் மீது வைத்த நம்பிக்கையாலும் மதிப்பாலும் இப்படி அவர் சிறு உதவிகளையும் நம்பிக் கேட்டால் அதைச் சிரமேற்கொண்டு செய்து கொடுக்கிறவனாக நான் இருந்தேன் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஜூன் 5, 2009ல் நண்பர் சுகா எனக்கு எழுதிய மடல் கீழே. இலக்கியச் செயற்பாட்டைத் தனிநபர் வம்பாக மட்டுமே நான் எடுத்துக் கொள்வதாக இப்போது எழுதும் ஜெயமோகன், நான் ஜூன் 20009 வார்த்தை இதழ் தலையங்கத்தை வெகு சிறப்பாக எழுதியிருந்ததாக சுகாவிடம் சொன்னது.
எழுத்தும்
எண்ணமும் இணையக் குழுமத்தில் தமிழில் பதிப்புத்துறை, புத்தக விற்பனை குறித்த உரையாடல் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஜெயமோகன் எழுதிய மடலில் குறிப்பிட்டது. பதிப்புத்துறை, புத்தக விற்பனை குறித்த என் கனவுகள், திட்டங்கள் குறித்துத் தனக்கு முழு உடன்பாடு என்கிறார் ஜெயமோகன். ஆனால், நான் கனவு வேகத்தில் இருப்பதாகவும் சொல்கிறார். ஆக என்னை அதிகமும் தெரியாது என இப்போது சொல்லிக் கொள்கிற ஜெயமோகனுக்கு 2007ல் என் கனவுகள், திட்டங்கள் தெரிந்திருந்ததும், அவற்றில் அவர் முழு உடன்பாடு கொண்டு, என்னை மேம்படுத்த மேலும் கருத்துகள் சொன்னதும் பொய்யா என அருண்குமார்கள் ஜெயமோகனைக் கேட்பார்களா?
ஜூன் 1, 2008ல் இதே ஜெயமோகன் என்னுடைய ”ஆட்டியூட் வெரி குட்” என எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் எழுதிய மடல் கீழே. அவரின் ஒரு கட்டுரையைத் தமிழில் எவரும் வெளியிட மாட்டார்கள் என்பதற்கு நான் எழுதிய பதிலுக்கு ஜெயமோகன் கொடுத்த சர்டிபிகேட் இது. இதே ஜெயமோகன் தான் இப்போது அவர் கருத்துகளுக்கு எதிர்க் கருத்து சொல்லும்போது வம்பர் என்கிறார் என்பதும் ஆச்சரியமில்லை.
ஜெயமோகன் என்னைக் கிண்டல்/கேலி செய்கிற அளவுக்கு இருந்திருக்கிறார்
என்பதற்கு ஓர் உதாரணமும் தந்துவிடுவோமே. ஜனவரி 27, 2008ல் எழுத்தும் எண்ணமும் குழுமத்தில்
ஜெயமோகன் எழுதிய மடல் கீழே: சிவகுமார் வெள்ளைக்காரிகளை சப்ளை செய்கிறாரா சினிமாவுக்கு
என ஜெயமோகன் என்னிடம் ஜாலியாகக் கேட்டிருக்கிறார். இப்படி என்னிடம் பேசுகிற உரிமை அவருக்கு
இருந்தது.
ஆக, இணையத்தில் மூலம் தெரியவந்த பலரில் நானும் ஒருவர், ஹலோ
சொல்லும் அளவே என்னை அறிமுகம், அமெரிக்கா செல்லும்போது ஒரே முறைதான் என்னைப் பார்த்திருக்கிறேன்
என ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்வதெல்லாம் பொய் என்பதற்கு இவை சாட்சி.
ஜெயமோகனின் அடுத்த பொய்:
” திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் – நேரில் பார்க்காமலேயே.”
என் பதில்:
திண்ணை ஆசிரியர் எனக்கு மட்டுமல்ல யாருக்கும் முன்னுரை எழுதித் தரும்படி எந்த எழுத்தாளரையும் கேட்டுக் கொண்டதில்லை. கோபால் ராஜாராமும் இதை இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். இது ஜெயமோகனின் பொய்க்கு முதல் ஆதாரம்.
ஜெயமோகன் சொல்கிற இந்த என்னுடைய கட்டுரைத் தொகுதி “அட்லாண்டிக்குக்கு அப்பால்” ஜனவரி 2005-ல் வெளிவந்தது. அதில் ஜெயமோகன் என் எழுத்துகள் குறித்தும், என்னைப் பற்றியும் எழுதியிருக்கிற முன்னுரையை எடுத்துப் போட்டாலோ, இப்போது ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்வதற்கு எவ்வளவு நேர்மாறாக இருக்கிறது எனத் தெரியவரும். அவரின் அந்த முன்னுரையை அப்படியே எடுத்து இணையத்தில் இடுகிற எதிர்கால திட்டமும் இருக்கிறது. முதல் பதிப்பில் 1200 பிரதிகள் பதிப்பிக்கப்பட்ட அந்த நூல் இப்போது விற்பனையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. நான் சமீபத்தில் நண்பர்களுக்காகத் தேடியபோது கிடைக்கவில்லை.
அந்த நூலின் என்னுரை பகுதியில் நான் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்.
“1997க்கு அப்புறம் என் ரசனை, அறிவு, வாசிப்பு ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளில் ஜெயமோகன் எழுத்துகளுக்கு முக்கிய இடம் உண்டு. “அவரைப் போல எழுத முடியவில்லையே” என்று நான் ஏக்கப்படுகிற சில எழுத்தாளர்களில் ஜெயமோகனும் ஒருவர். அவருடைய வாசிப்பின் விரிவு நான் பொறாமைப்படுவது. என் முதல் புத்தகத்துக்கு முன்னுரை அளிக்க முன்வந்ததற்கு அவருக்கு நன்றிகள். கொற்றவை என்கிற தன்னுடைய புத்தகத்தை எழுதுவதில் மும்முரமாக இருந்த அவர், நான் கேட்டதும் “எனக்கு முன்னுரை எழுதித் தருவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்புறம் காலம் முழுக்க உங்களை ஜெயமோகள் ஆள் என்று சொல்வார்களே! பரவாயில்லையா? என்று அக்கறையுடன் எதிர்க்கேள்வி கேட்டார். “இப்போதே அப்படித்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று சொன்னேன்.”
இதற்கான ஆதாரமான திரைச்சொட்டை நான் கைவசம் இருந்தும் இந்தப் பதிலின் நீளம் கருதி இப்போதைக்குப் பகிர்ந்து கொள்ளவில்லை. என் கட்டுரைத் தொகுதியைப் படித்தோர் இதற்கு சாட்சி.
இப்போதும் ஜெயமோகன் என்மீது அடுக்கடுக்காகப் பொய்களைக் கட்டவிழ்த்துவிடும்போதும், அவரிடம் கற்றுக் கொண்டதாக நான் 2005ல் சொன்னவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அவரைப் போல எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதோ தீர்ந்து போயிற்று. அவரைப் போல ஆதாரமில்லாமல் எதையெல்லாம் எழுதக் கூடாது என்றே சொல்ல இருக்கிறது.
திண்ணை ஆசிரியர் கேட்க ஜெயமோகன் முன்னுரை எழுதியதாகச் சொன்ன பொய்க்கு இரண்டாவது ஆதாரம் இது. கொற்றவை என்கிற தன்னுடைய நாவலை எழுதுகிற மும்முரமான நேரத்திலும் என் வேண்டுகோளுக்கு இணங்கி, நாவலை எழுதுகிற நேரத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி, ஏறக்குறைய 6 பக்கங்கள் விரிவான முன்னுரை எழுதித் தருகிற அளவுக்கு ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு இருந்திருக்கிறது என்பது புரிகிறதா அருண்குமார்களே.
ஜெயமோகனின் பொய்:
“திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள் வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர்.”
என் பதில்:
ஒருவரைப் பிடிக்கவில்லையெனில் அவரைச் சிறுமைப்படுத்த அவர் ஒன்றுமேயில்லை, இன்னொருவர்தான் காரணம், இவர் அந்த இன்னொருவருடன் இருந்த உபரி என்கிற பொய்யைத் தூக்கி வீசுவது ஜெயமோகனுக்குக் கைவந்த கலை. அப்படித்தான் இங்கேயும் எனி இந்தியன் பதிப்பகம் தொடங்கியது திண்ணை.காம் என எழுதுகிறார்.
எனி இந்தியன் ஆன்லைன் புத்தகக் கடை யோசனையே என்னால் முன்மொழியப்பட்டது. கோபால் ராஜாராமும் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள மறுப்புரையில் இதையே சொல்லியிருக்கிறார்.
அதை நான் நண்பர்கள் திண்ணை கோ.ராஜாராம், துகாராம், மற்றும் துகாராமின் நண்பர் பாரி பூபாலன் ஆகியோருடன் விவாதித்து அவர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. அரபு நாட்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை குடும்ப உறுப்பினர் உடல்நலம் காரணமாக விட்டுவிட்டு இந்தியா வந்திருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவை எனி இண்டியனில் சேரச் சொல்லி நான் கேட்டு அவர் சேர்ந்தார். ஜெயமோகன்