Friday, February 14, 2014

ஜெயமோகனின் வெண்முரசு - வர்ணனைகள் உவமைகள் - 2


இதன் தொகுப்பு ஒன்றைப் பின்வரும் சுட்டியில் படிக்கலாம். http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post.html


ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த வர்ணனைகளும் உவமைகளும் தொகுப்பு: 2

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது. (Chapter: 18)

அவன் கண்களை நோக்கிய அவரது கண்கள் நெடுநாட்களாக துயிலின்றி இருந்தமையால் பழுத்த அரசிலை போல தெரிந்தன. (Chapter: 18)

“மூத்தவரே, பெரும்பாவங்களுக்கு முன் நம் அகம் கூசவில்லை என்றால் எதற்காக நாம் வாழவேண்டும்?  (Chapter: 18)

விசித்திரவீரியன் வேதனையைத் தொட்டுவைத்த புள்ளிகள் போன்ற கண்களுடன் ஏதும் பேசாமல் படுத்திருந்தான்  (Chapter: 18)

“என் அன்னையின் வீரியம் என் உள்ளமாகியது. அவள்முன் திகைத்து நின்ற தந்தையின் பலவீனம் என் உடலாகியது.  (Chapter: 18)

அவர்களின் இரு கைகளுக்கு அடியிலும் விரியும் மீன்சிறகுகள் உண்டு என்றனர் சூதர்கள். (Chapter: 18)

அன்னையைக் கண்ட குழந்தைகள் போல இலைகளை விலக்கிச்சென்று அதை அடைந்தனர். (Chapter: 18)

இளஞ்சூரியன் கடலில் மறைவதுபோல அவள் கங்கைநீருக்கு அப்பால் சென்று மறைந்தாள். (Chapter: 18)

ஆண்களின் தனிமையைப்போல பெண்களை கனிவுகொள்ளச்செய்வது ஏதுமில்லை. கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் பிறிதில்லை. (Chapter: 18)

நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே.  (Chapter: 18)

நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன? (Chapter: 18)

*******

இரு சிறு கைகளையும் விரித்து இடையை நெளித்து நாகக்குழவி போல நெளிந்து தவழ்ந்து அன்னையின் மடியில் ஏறமுயன்றான். (Chapter: 19)
ஒவ்வொருநாளும் அவள் நெய்யிழந்த வேள்விநெருப்பு என தளர்ந்து வெளுத்தாள். (Chapter: 19)

கருமுதிர்ந்தபோது அவள் வயிறு குலைதாளா வாழைபோல சரிந்தது.  (Chapter: 19)

அவள் உடலில் இருந்து மழைக்கால ஓடைபோல குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் அல்லியிதழ்கள் போல வெளுத்தன. பேசவும் சொல்லற்றவளாக சுவரில் கையூன்றி அவள் நடந்தபோது உடலின் மூட்டுகளெல்லாம் ஒலியெழுப்பின. ரதம் ஊர்ந்துசென்ற பாம்பு போல மெல்ல நெளிந்தபடி படுக்கையிலேயே கிடந்தாள். ஈற்றுவலி வந்தபோது முதியவள் நினைவிழந்தாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருக்க, மழைக்கால சூரியன் போல மெல்ல வெளிவந்த சந்தனுவை அவள் பார்க்கவேயில்லை.  (Chapter: 19)

சுனந்தையின் சித்தம் புயல்காற்றில் படபடத்துப் பறந்துசெல்லும் கொடிபோல அவள் உடலில் இருந்து விலகிவிட்டிருந்தது. (Chapter: 19)
தேன்சிட்டுபோல சிறகடித்து காற்றிலேயே மிதந்துநிற்கிறாள் என அவளது தூய இளமையை அவர் அன்று உணர்ந்தார். (Chapter: 19)

நண்டின் கொடுக்குகள் போல எழுந்த பெருங்கரங்களுடன் பால்ஹிகன் வந்து முன்னால் நிற்பான். விலங்கின் விழிகள் போல அறிமுகம் மறுக்கும் பார்வையுடன் என்ன என்று கேட்பான். (Chapter: 19)

அவன் நிழல்பட்ட செடிபோல வெளிறிச்சூம்பிய உடல்கொண்டவன் ஆனான். (Chapter: 19)

பால்ஹிகன் மீது ஏறிச்செல்லும் தேவாபியைக் காணும்போது மரம் மீது பரவிய ஒட்டுண்ணிக்கொடி என நினைத்தான். (Chapter: 19)
“இன்னொருவன் மேலேறி நடப்பவன் சிரிக்கப்படவேண்டியவனே என்றுணர்ந்தேன். (Chapter: 19)

தீயெரியும் கலம்போன்ற உடலுடன் வந்த பால்ஹிகன் அனைத்துச் சடங்குகளையும் அந்தணர் சொல்லியபடி செய்தான். (Chapter: 19)

கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான். (Chapter: 19)


*******

வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே? (Chapter: 20)

பின்னர் மீண்டும் அவளது காமத்தின் பொன்னிற இதழ்களுக்குள் விழுந்து எரியத்தொடங்கினார். (Chapter: 20)

இந்த கங்கை என் பிறவிப்பெரும் துயரத்தின் பெருக்கு. சொல்லற்று விழிக்கும் பலகோடிக் கண்களின் வெளி. என் மூதாதையர் கரைந்திருக்கும் நிலைக்காத நினைவு. என் உலகைச் சூழ்ந்திருக்கும் கருங்கடலின் கரம். (Chapter: 20)

அறங்கள் அனைத்தையும் அறிந்தவரும், அறத்தினால் வேலிகட்டப்பட்ட தனிமையில் வாழ்பவருமாகிய பீஷ்மரை வணங்குவோம்! தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன. (Chapter: 20)

நதிகளெல்லாம் நிற்காதொழுகும் தன்மை கொண்டவை. கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை, கரைகளை நதிகளே உருவாக்கிக் கொள்கின்றன. (Chapter: 20)

இழந்தவற்றை மறக்க எவராலும் இயல்வதில்லை. பேரிழப்புகள் நிகரெனப் பிறிதிலாதவை.  (Chapter: 20)

பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.” (Chapter: 20)

*******

“பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள். (Chapter: 21)

சிக்கிக்கொண்ட பலா அரக்கை அறுத்துக்கிளம்பும் ஈபோல அக்கணத்தை தாண்டமுடிந்ததைப்பற்றி அவளே வியந்துகொண்டாள். (Chapter: 21)

அவள் தன்னுடையதாக ஏற்றுக்கொண்ட நகரம் ஒவ்வொரு கட்டிடமாக உதிர்ந்து பின்சென்றது. பின்னால் அவை உடைந்து குவிவதை அவள் உணர்ந்தாள். அவள் பயணம்செய்து பழகிய சாலை ரதத்துக்குப்பின்னால் அறுந்து அந்தரத்தில் ஆடியது. அவள் வாழ்ந்த அரண்மனை அடியற்ற ஆழத்தில் விழுந்து மறைந்தபடியே இருந்தது. (Chapter: 21)

உலைந்த மாலையில் இருந்து மலரிதழ்கள் உதிர்வதுபோல அவளுடையவை என அவள் நினைத்திருந்த ஒவ்வொரு நினைவாக விலகின.  (Chapter: 21)

மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள். (Chapter: 21)

விறகை எரித்து அழிக்க முடியா தீயூழ் கொண்ட நெருப்பைப்போல அவள் சிந்தை அவள் மேல் நின்றெரிந்தது. (Chapter: 21)

தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பவள் இலைநுனியில் கனக்கும் நீர்த்துளிபோல ததும்பித் ததும்பி ஒருகணத்தில் உடைந்தழத் தொடங்கினாள். (Chapter: 21)

கண்களை மூடினாலும் தெரியும் வெயிலொளி போல அவளுக்குள் அம்பை தெரிந்துகொண்டிருந்தாள். (Chapter: 21)

நீர் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவை அடைகிறது என்பது எவ்வளவு மேலோட்டமான உண்மை. பூமியிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நீருக்கு உகந்த வடிவத்தை அல்லவா வந்து அடைந்திருக்கின்றன? அன்று தன் வயிற்றில் கைவைத்து அவள் அடைந்த தன்னிலையே அவளாக அதன் பின் என்றுமிருந்தது. (Chapter: 21)

ஒவ்வொன்றையும் நோக்கி கைநீட்டும் வேட்கையே அம்பை. எதையும் தானாக ஆக்கிக்கொள்ளும் தூய்மை அவள். அவளுடைய சினம் கடைசிக்கணம் வரை எரிப்பதாக இருந்தது. (Chapter: 21)

தீப்பட்டு எரிந்த சருமத்தில் தைலம் வழிவதுபோலிருந்தது. (Chapter: 21)

புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது. புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.. (Chapter: 21)

*******

அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன. (Chapter: 22)

பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். (Chapter: 22)

நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. (Chapter: 22)

*******

அவன் பட்டுத்துணியாலான தூளித்தொட்டிலில் சுள்ளிக்கட்டுபோல தூங்கிக்கொண்டிருந்தான்.  (Chapter: 23)

“மிருகங்களில் அரசும் அரசனும் இல்லையல்லவா?” என்றார் ஸ்தானகர். விசித்திரவீரியன் கண்களை திறக்காமலேயே உரக்கச்சிரித்து “ஆனால் தாய் இருக்கும். அனைத்து வல்லமைகளும் கொண்ட காளி” என்றான். (Chapter: 23)

"... புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை." (Chapter: 23)

தன் சொற்களாலேயே வசியம் செய்யப்பட்டவனைப்போல விசித்திரவீரியன் பேசிக்கொண்டிருந்தான். (Chapter: 23)

“இந்த தீபச்சுடர் அந்த திரைச்சீலையில் ஏறிக்கொண்டால் அதை வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்?” என்று அகத்தியர் சொன்னபோது தெளிந்தார். (Chapter: 23)

“ஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா?” என்றார் அகத்தியர்.  (Chapter: 23)

மூலாதாரத்தில்தான் வாழ்க்கையை அழகாக்கும் மூன்று தேவதைகள் வாழ்கிறார்கள். காதல்கொள்ளச் செய்யும் பிரேமை, ஒவ்வொன்றையும் அழகாக்கும் சைதன்யை, ஒவ்வொன்றையும் அன்றே அக்கணமே என்று காட்டும் ஷிப்ரை.” (Chapter: 23)

"... துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்’”என்றார். (Chapter: 23)

*******

தேவி, நான் என் மனதில் காதல்கொண்டிருந்தேனென்றால் ஒரே ஒரு மணிநகை போதுமானதாகும். அதில் குபேரபுரியை நான் கண்டுகொள்வேன்” என்றாள். (Chapter: 24)

இடைநாழியின் மரத்தாலான தரையில் தன் காலடிகள் ஒலிப்பதை அம்பிகை அந்தக் கட்டடத்தின் இதயத்துடிப்பு போல கேட்டாள். பெரிய மரத்தூண்கள் பூமியைத்தாங்கி நிற்கும் பாதாள சர்ப்பங்களாக தோன்றின. மானுட வாழ்க்கையெல்லாம் தலைக்குமேலே நிகழ்ந்து கொண்டிருக்க அவள்மட்டும் புதையுண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டாள். இதோ ஒவ்வொரு காலடியாக வைத்து ஒருபோதும் விரும்பாத ஒன்றைநோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இருண்ட பெரும்பள்ளம் நோக்கி தன் இயல்பினாலேயே ஓடிச்செல்லும் நீரோடையைப்போல.. (Chapter: 24)

ஆனால் அலைகுளத்தின் அடிப்பாறைபோல அந்தமுகம் கலைந்து கலைந்து தன்னை காட்டிக்கொண்டே இருந்தது.. (Chapter: 24)

அவன் நீர்மேல் படகுபோல மெதுவாக ஆடியபடி நின்று சிவந்த பெரிய கண்களால் அவளைப்பார்த்தான். சீனத்து வெண்குடுவை போன்ற வெளிறிய சிறுமுகத்தில் கன்ன எலும்புகளும் கண்குழியின் விளிம்புகளும் மூக்கும் புடைத்து நிற்க, கீழே வெளுத்த உதடுகள் உலர்ந்து தோலுரிந்து தெரிந்தன.. (Chapter: 24)

துரத்தப்பட்ட முயல் சுவர்களில் முட்டிக்கொண்டது போல சீறித்திரும்புகிறீர்கள். (Chapter: 24)

தான் என்ன செய்தோமென்பதை செய்தபின்னரே அவள் அறிந்தாள். இருகைகளையும் விரித்து அவனை அள்ளி அணைத்து தன் விம்மும் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். ஒரு கைக்குழந்தையாக அவனை ஆக்கி தன் கருவறைக்குள் செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதுபோல. அவன் தலையை இறுக்கியபோது அவள் முலைகள் வலித்தன. அவன் மூச்சடங்கி அவளுடன் இணைந்துகொண்டான்.. (Chapter: 24)

“மஞ்சத்தைப் பகிர பல்லாயிரம் பெண்கள் கிடைப்பார்கள். நகைச்சுவையைப் பகிர பெண்ணை பிரம்மனிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும் என்று என் அமைச்சர் சொல்வார்…” என்றான். (Chapter: 24)

“அவரிடம் சொல்லுங்கள் பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை என.” (Chapter: 24)

“இளவயதிலிருந்தே இந்த மனநிலை என்னிடமிருக்கிறது. சிறுநாய்க்குட்டிகள் கண்திறந்த மறுநாளே மனிதர்களை நம்பி பின்னால் செல்வதைப்போல நான் உலகை நம்புகிறேன். இவ்வுலகிலுள்ள அத்தனைபேரும் என்னைவிட வலிமையானவர்கள். வலிமையானவர்கள் ஒருபோதும் பலவீனர்களை துன்புறுத்துவதில்லை…எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறுமுலையையாவது வைத்திருக்கிறார்கள்” என்றான். (Chapter: 24)

இளமையில் எப்போதுமே அவளுடன் அம்பை இருந்தாள். அது குலதெய்வத்தை கூடவே வைத்துக்கொள்வதுபோல என்று சேடி பிரதமை சொல்வதுண்டு.. (Chapter: 24)

குயவன் போல கையாலேயே அவனை வனைந்துவிட முடியும் என்பதைப்போல. (Chapter: 24)

“எல்லா பெண்களும் எளிய ஆண்களிடம் அருள்கொண்டவர்கள் அல்ல” என்று அவள் பேச்சை மாற்றுவதற்காகச் சொன்னாள். சிரிப்பு மறைந்த கண்களுடன் “ஆம், எளியோரிலும் தீயூழ்கொண்டவர்களுண்டு” என்று விசித்திரவீரியன் சொன்னான். “என் தந்தை அவர்களில் ஒருவர். எளியோருக்குள் இச்சை மட்டும் வேகம் கொண்டிருந்தால் அது பெரிய சுமை. ஓர் எளியோன் வலியோனின் இச்சைகொண்ட கண்களுடன் தன்னைப்பார்க்கையில் பெண்களின் அகத்தில் ஒரு விஷநாகம் சீறி எழுகிறது. பாவம் சந்தனு மன்னர். வாழ்நாளெல்லாம் புலிக்குட்டிகள் தட்டி விளையாடும் முயல்போல பெண்களிடம் துன்புற்றார்.” மீண்டும் உரக்கச்சிரித்து “பெண்கள் அவருக்கு எச்சம் வைத்த கடன்களை எல்லாம் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றான். (Chapter: 24)

கண்மூடினால் காலத்தின் இருளில் எத்தனை கண்களை பார்க்கமுடிகிறது!” என்று விசித்திரவீரியன் சொன்னான். “இருண்ட மரத்தில் வௌவால்களை அண்ணாந்து பார்ப்பதுபோல. எத்தனை அன்னையர். எத்தனை பாட்டியர் முப்பாட்டியர்….” அம்பிகை “அத்தனை அரசகுலத்திலும் அதுதானே நிகழ்ந்திருக்கும்?” என்றாள்.. (Chapter: 24)

இரவெல்லாம் அவள் பேசிக்கொண்டிருந்தாள். அருவி பொழிவதுபோல தன்னுள்ளிருந்து வெளிவரும் அவையெல்லாம் தன்னால் தன்னுள் ஆயிரம் முறை சொல்லப்பட்டவை என்று உணர்ந்தாள். அவையெல்லாம் பேசப்பட்டபின்பு அவள் சொல்லிக்கொண்டிருந்தவை அவளே அறியாமல் அவளுக்குள் இருந்தவை என்று அறிந்தாள். ஒளிபடாத இருளுக்குள் இருந்து வெட்கிக்கூசிய முகத்துடன் அவை ஒவ்வொன்றாக வெளிவந்து நின்றன. தயங்கி விழி தூக்கி புன்னகைசெய்து பின் தன்னை வெளிக்காட்டின. அவன் கண்களையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவள் ஒரு கணம் ஏதோ உணர்ந்து நிறுத்திக்கொண்டாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “எப்படி இதையெல்லாம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? சிதைநெருப்பு மட்டுமே அறியவேண்டியவை அல்லவா இவை?” விசித்திரவீரியன் சிரித்து மல்லாந்து படுத்து தலைமேல் கை நீட்டி “சரிதான், நான் உன் சிதை” என்றான். “சீ என்ன பேச்சு இது?” என அவள் அவன் வாயில் மெல்ல அடித்தாள்.. (Chapter: 24)

“சூதர்மொழியில் சொல்வதென்றால் இவ்வளவு கூரிய கண்களுடன் வாழ்வது வேல்முனையுடன் திருவிழாவுக்குச் செல்வதுபோல” என்றான். (Chapter: 24)

பின் அவன் கண்களைப்பார்த்து புன்னகையுடன் “பீஷ்மரின் கண்களும் கூட அவ்வாறுதான்” என்றாள். “ஆனால் புறக்கணிப்பின் திரைக்கு அப்பால் வேட்கை.” விசித்திரவீரியன் “இப்போது மட்டும் அவரைப்பற்றி சொல்லலாமா?” என்றான். “இப்போது நான் உன்னிடம் எதைப்பற்றியும் சொல்வேன், என் நெஞ்சின் துடியல்லவா நீ?” என்று சொல்லி சிரித்துக்கொண்டு அவன் முகத்தில் தன் முகம் சேர்த்துக்கொண்டாள்.. (Chapter: 24)

*******

விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.” சத்யவதி திகைத்தவள்போல நோக்கினாள். “புரவிகளின் கடிவாளத்தை எப்போதும் கையில் வைத்திருக்கிறவன்தான் சாரதி எனப்படுவான்” என்றான் விசித்திரவீரியன். “எனக்கு விரைவின் விதிகளை நீங்கள் கற்பிக்கவேண்டியதில்லை.” (Chapter: 25)

“அன்னையே, பெண் என்பவள் ஒரு வயல் என்றாலும்கூட அதை பண்படுத்தவேண்டியிருக்கிறதல்லவா?” விசித்திரவீரியன் கேட்டான். (Chapter: 25)

என் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி போன்றது என்றார் அவர்” என்றான் விசித்திரவீரியன். (Chapter: 25)

விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள். அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”(Chapter: 25)

“அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான். ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார். (Chapter: 25)

உயரமற்ற மரங்கள் கொண்ட குறுங்காட்டுக்குள் மான்கூட்டங்கள் நெருப்புக்கதிர்கள் போல சிவந்து தெரிந்து துள்ளி ஓடின. (Chapter: 25)

சித்ராங்கதன் இளமை ஒளிரும் முகத்துடன் சிரித்து “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான்.  (Chapter: 25)

*******

விசித்திரவீரியன் அவள் முகத்தை நோக்கி “உனக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.” (Chapter: 26)

ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன் முன் நின்றிருந்தாள். (Chapter: 26)

“நிமிர்ந்து தருக்கி நிற்கும் மனிதனைப்போல பொருளற்றவன் வேறில்லை” என்றாள். (Chapter: 26)

விசித்திரவீரியன் “சிலசமயம் குழந்தைகளும் பேருண்மைகளை சொல்லிவிடுகின்றன” என்றான். “நான் அதை வேறுவகையில் நினைத்துக்கொண்டேன். நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை.” (Chapter: 26)

மலர்வனத்தில் சிக்கிய ஒற்றை வண்ணத்துப்பூச்சி போல அவள் ஒன்றிலும் அமராமல் படபடத்துப் பறந்துகொண்டிருந்தாள்.. (Chapter: 26)

பசுக்களை மேய்த்து அதைமட்டும் கொண்டே வாழ்பவர்கள் முற்பிறவியின் பாவங்களைக் கழுவுகிறார்கள். (Chapter: 26)

“இல்லை. வளையைவிட்டு வெளியே வரும் குழிமுயல் போலிருக்கிறாய். கன்னியாக வந்து பூங்காவில் உலவுகிறாய். ஆனால் உன் காதுகள் எச்சரிக்கையாக உள்ளன. சிறிய ஆபத்து என்றாலும் ஓடிச்சென்று உன் குழந்தைமைக்குள் பதுங்கிக்கொள்கிறாய்.” (Chapter: 26)

*******

தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார்.  (Chapter: 27)

மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன். (Chapter: 27)

“எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே…" (Chapter: 27)

மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர்.  (Chapter: 27)

ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். (Chapter: 27)

ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார்.  (Chapter: 27)

வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக!  (Chapter: 27)

*******

அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது.  (Chapter: 28)
நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை. (Chapter: 28)

“மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. (Chapter: 28)

மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.. (Chapter: 28)

"... ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…” (Chapter: 28)

மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்? (Chapter: 28)

சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். (Chapter: 28)

“ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”. (Chapter: 28)

சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.. (Chapter: 28)

“தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார்? நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.” (Chapter: 28)
சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.. (Chapter: 28)

“என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள். (Chapter: 28)

உடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.. (Chapter: 28)

*******

அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. (Chapter: 29)

வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. (Chapter: 29)

“நான் என் அன்னயையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது. வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.” குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்றது.. (Chapter: 29)

“தாய் ஒரு நிலம்…என்னில் விழுந்ததை முளைக்கவைப்பதே என் கடன். அது வாழ்வதற்காக நான் என்னில் இறப்பவற்றை எல்லாம் உண்பேன். என் அனல் அனைத்தையும் அளிப்பேன்” என்றாள். “தாய்மையை எந்தப் பாவமும் சென்று சேராது என்கின்றன நூல்கள்” என்று சொன்ன அவளை நோக்கிச் சீறியபடி கங்கையில் ஒரு கைப்பிடி அள்ளி மேலே தூக்கி “என் தவமும் ஞானமும் உண்மை என்றால் நீ இப்போதே மீண்டும் யமுனையில் மீனாக மாறு” என்று தீச்சொல் விடுத்தேன். ஆனால் அவள் புன்னகையுடன் அங்கேயே என்னை நோக்கியபடி நின்றிருந்தாள். மீண்டும் மும்முறை வேதமோதியபடி அவளை தீச்சொல்லால் சுட்டேன். அவள்முகத்தின் கனிந்த புன்னகை விலகவில்லை.. (Chapter: 29)

ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே.. (Chapter: 29)

என் தந்தை ‘நாம் நூல்களில் வேதம் கற்றோம். அவன் கங்கையில் கற்றான். நூல்களின் ஏடுகளுக்கு முடிவுண்டு. கங்கையின் ஏடுகளுக்கு முடிவேயில்லை” என்றார். “முனிவர்களே, மலர்களில் தேன்அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல. (Chapter: 29)

*******

குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது.  (Chapter: 30)

அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது. (Chapter: 30)

கருநிற அரக்குபூசப்பட்ட உடல் கொண்ட கனத்த நாவாய் போல மெல்ல திரும்புபவள்.. (Chapter: 30)

ஒரே ஒரு நெய்யகலில் செம்முத்துபோன்ற சுடர் அசையாமல் நிற்க வெண்பட்டுப்படுக்கையில் மழைநீர்சொட்டி கலைந்த வண்ணக்கோலம்போல அம்பிகை கிடப்பதைப்பார்த்தாள். (Chapter: 30)

விசித்திரவீரியனை எவரும் மறக்கமுடியாதென்று அவளுக்குத் தெரியும். விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி என அவனை அவள் எப்போதும் நினைத்திருந்தாள். நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். அகம் பதறாமல் அவனிடம் பேசமுடிந்ததில்லை அவளால். ஆனால் அவள் அவனை அறியவே இல்லையோ என்று அப்போது தோன்றியது. அவனை முதன்முதலாக அறிந்தவள் இவள்தானா? இவள்மட்டும்தான் இனி இவ்வுலகில் அவனை நினைத்திருக்கப்போகிறாளா? மலைச்சரிவில் பிளந்து சரிந்து சென்ற பாறையின் எஞ்சிய குழித்தடம்போல இவள் மட்டும்தான் இனி காலகாலமாக அவனை சொல்லிக்கொண்டிருப்பாளா? (Chapter: 30)

அவளுக்குத் தோன்றியது, அவள் அப்படி எந்த ஆணிடமும் உணர்ந்ததில்லை என. அவள் உள்ளறைகள் வரை வந்து எந்தக்காற்றும் திரைச்சீலைகளை அசைத்ததில்லை. தீபத்தை நடனமிடச் செய்ததில்லை. அவளுக்குள் விசித்திரவீரியனின் புன்னகைக்கும் முகம் என்றும் இருந்தது. மூடப்பட்ட கோயில் கருவறைக்குள் இருளில் இருக்கும் தெய்வம் போல. ஆனால் விசித்திரவீரியனுக்காகக் கூட அவள் தன்னிலை இழக்கவில்லை. (Chapter: 30)

மெல்லிய பொறாமை எழுந்தது. பேரிழப்பு என்பது பெரும் இன்பத்தின் மறுபக்கம் அல்லவா? வைரத்தை வைக்கும் நீலப்பட்டுமெத்தை அல்லவா அது? இந்தப்பெண் அறிந்திருக்கிறாள். இந்த வைரத்தை ரகசியமாக தனக்குள் வைத்திருப்பாள். வாழ்நாளெல்லாம் அந்தரங்கமாக எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள். பார்க்கப்பார்க்கப் பெருகுவது வைரம். (Chapter: 30)

இவளிடம் எப்படி வியாசனின் வருகையைப்பற்றிச் சொல்வது என்ற எண்ணம் எழுந்தது. அவளுக்குள் அழகிய சிறு தடாகமொன்றிருக்கிறது. அதை அவள் கலக்கி சேறாக்கவேண்டும். அதில் மலர்ந்திருக்கும் ஒற்றைத்தாமரையை மூழ்கடிக்கவேண்டும். (Chapter: 30)

எப்போதும் இருளைப்பார்த்துக்கொண்டுதான் மதுவை அருந்துவாள், அவ்விருளின் துளி ஒன்றை தன்னுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்துபரவும் ஒளிக்குமேல் இருளைப்பரப்புவதே அதன் பணி என்பதுபோல. (Chapter: 30)

நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக்கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது. (Chapter: 30)

“நீங்கள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தீர்கள் பேரரசி. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்… அவன் உடலைக்காண யமுனைக்கு சென்றுகொண்டே இருந்தீர்கள்…”  ”ஆம்” என்றாள் சத்யவதி. “பிறகெப்போதும் நான் அவனைக் காணவில்லை.” (Chapter: 30)

கந்தர்வர்கள் மிகமிக அந்தரங்கமாகவே வந்துசெல்கிறார்கள். அவர்கள் வந்து சென்ற மனம் மேகங்கள் சென்ற வானம்போல துல்லியமாக எஞ்சும்…” என்றாள் சியாமை.. (Chapter: 30)

“நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?” (Chapter: 30)

சியாமை அவளைப்பார்த்தபடி இரு கண்களும் இரு அம்புநுனிகள் போல குறிவைத்து நாணேறி தொடுத்துநிற்க பேசாமலிருந்தாள்.. (Chapter: 30)

*******

தோளில்புரளும் சடைக்கற்றைகளும் திரிகளாக இறங்கிய தாடியும், வெண்சாம்பல் பூசப்பட்ட மெலிந்து வற்றிய கரிய உடலும் கொண்ட வியாசர் சிதையில் இருந்து பாதியில் எழுந்துவந்தவர் போலிருந்தார். (Chapter: 31)

“சுவர்ணவனத்தில் நான் ஒருநாள் காலையில் செல்லும்போது சிறிய மரத்துக்குமேல் ஒரு பறவைக்குடும்பத்தைக் கண்டேன். பூவின் மகரந்தத் தொகைபோல ஒரு சிறிய குஞ்சு. அதன் இருபுறமும் அன்னையும் தந்தையும் அமர்ந்து அதை அலகுகளால் மாறி மாறி நீவிக்கொண்டிருந்தன. வேள்வியை இருபக்கமிருந்தும் நெய்யூற்றி வளர்க்கும் முனிவர்கள் போல பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து அன்பெனும் ஒளியை எழுப்பி வனத்தையே உயிர்பெறச்செய்தனர். அதைக்கண்டு என் மனம் முத்துச்சிப்பி நெகிழ்வதுபோல விரிந்தது. அதில் காதல் விழுந்து முத்தாகியது…” (Chapter: 31)

என் மனதிலெழுந்த பெருங்காதலுடன் நான் சென்றபோது அத்தனை பெண்களும் பேரழகிகளாகத் தெரிந்தனர். (Chapter: 31)

வியாசர் முகம் புன்னகையில் மேலும் விரிந்தது. “என் அழகின்மை அரண்மனைக்கு உகந்ததா அன்னையே?” என்றார். சத்யவதி அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி “அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது கிருஷ்ணா” என்றாள்.  (Chapter: 31)

*******

நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். (Chapter: 32)

நெல்மணி பொறுக்கும் சிறுகுருவி போல அவளிடம் ஒரு பதற்றம் இருந்தது. (Chapter: 32)

“உண்மையிலேயே ஓர் ஆணை எந்தப்பெண் அடையமுடியும் அம்பாலிகை? அவனை அவள் உண்மையிலேயே காணத்தொடங்கும்போது வயதாகிவிட்டிருக்குமே?” (Chapter: 32)

அம்பாலிகை, யாராக இருந்தாலும் நாம் நம்முடைய பிரியங்களைத்தான் பார்க்கிறோம். எல்லா உறவுகளும் மாயத்தோற்றங்கள்தான்… பிறகென்ன? (Chapter: 32)

பிறைநிலவு ஆடியில் தெரிவதுபோல இரு தந்தங்கள்தான் முதலில் தெரிந்தன. இரவு மேலும் இருண்டு திரண்டு நடந்துவருவது போல அந்தயானை முன்னால் வந்து என்னைப்பார்த்து துதிக்கையைத் தூக்கி மாபெரும் சங்கொலி எழுப்பியது. பின்பு அந்த நதியில் இறங்கி அதில் பரவியிருந்த விண்மீன்களைக் கலக்கி அலையெழுப்பியபடி என்னை நோக்கி வந்தது. (Chapter: 32)

வலிமை என்றால் அதற்கு கண்கள் இருக்கலாகாது. இது அது என்று பார்க்கமுடிந்தால் வலிமை குறைய ஆரம்பிக்கும். மூர்க்கம் என்பதும் வலிமை என்பதும் ஒன்றின் இருபெயர்கள்தான். (Chapter: 32)

அவர் மலையை அள்ளிக்கொண்ட பனித்துளி போல பிரம்மத்தை தன் சிந்தையில் வாங்கிக்கொண்டார். (Chapter: 32)

அன்னையின் பாலை அதிகம் உண்கின்ற குழந்தைகள் வளர்வதேயில்லை இளவரசி. (Chapter: 32)

“குழந்தைக்குள் கன்னியும் கன்னிக்குள் அன்னையும் குடியேறும் கணம் எதுவென்று தேவர்களும் அறிவதில்லை தேவி” என்றாள். (Chapter: 32)

*******

பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டும்தான். விஷப்பாம்பின் தீண்டலுக்கு நிகர் அது. (Chapter: 33)

சரஸ்வதியின் அருள் உடையவர்கள் நல்லூழ் கொண்டவர்கள், அவர்களுக்கு பட்டினியும் சுதந்திரமும் அருளப்பட்டிருக்கிறது. (Chapter: 33)

“இந்த முனிவர்கள் கருவை நுனியில் ஏந்தி அலைகிறார்களா என்ன?” என்றாள் கிருபை. (Chapter: 33)

சூதர்களின் கதைகளில் எல்லா அரசர்களும் தவமிருந்துதான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். சூதர்களுக்கு கூழாங்கல்லை விட்டெறிந்தாலே குழந்தை பிறந்துவிடுகிறது” என்றாள் கிருபை.. (Chapter: 33)

“ஆட்டுக்குட்டிகளை ஏற்றிய ரதம் போல வருகிறாளே…சமநிலை தவறி விழுந்துவிடமாட்டாளா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள் கிருபை. (Chapter: 33)
நீரில் அவளுடைய சிறிய உடல் பரல்மீன் போல நீந்துவதைக் கண்டாள் சிவை. (Chapter: 33)

மூத்தவள் கருநிலவுடன் புணர்ந்தாளாம். இவள் பிறைநிலவுடன் புணர்ந்திருக்கிறாள்” என்றாள் சிவை. கிருபை சிரித்து “சந்திரவம்சம் பெருகட்டும்” என்றாள். பின்பு “அந்த முனிவர் முழுநிலவை கொண்டுசென்று ஏதாவது குரங்குக்கோ கழுதைக்கோ கொடுத்துவிடப்போகிறார்…ஏற்கனவே ஒருவன் மீனுக்குக் கொடுத்ததன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.” “யார் மீனுக்குக் கொடுத்தது?” என்றாள் சிவை. “சேதிநாட்டு மன்னன் உபரிசிரவசு காட்டுக்கு வேட்டைக்குப்போனபோது மீனுக்குக் கொடுத்த விந்துதான் சத்யவதியாகப் பிறந்ததாம்.” (Chapter: 33)

சிவை “துளைவிழுந்த மூங்கில்தான் பாடும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். (Chapter: 33)

*******

விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் கிடந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார். (Chapter: 34)

காடெங்கும் பச்சைப்பசுங்கிளிகள் இலைக்கூட்டங்கள் போல நிறைந்திருப்பதனால் அந்தக்காடே பகலெல்லாம் வேள்விக்கொடி ஏறிய சாலை போலிருக்கும் என்றார் சூதர். (Chapter: 34)

மழைநீர் வழிகண்டுபிடித்து ஒழுகிச்செல்வது போல பசுக்கள் இரு மலைகளுக்கு நடுவே சென்றன. அங்கே வெண்ணிறச்சரடு போல ஒரு சிறு நீரோடை நூற்றுக்கணக்கான பாறைகளில் விழுந்து விழுந்து நுரைத்து பளிங்கு மரம் கீழிருந்து எழுந்தது போல கீழே இறங்கிச்சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை அறுத்து உருவாக்கிய இடைவெளி பெரும் கோடைவாயில் எனத் திறந்து, பலகாதம் ஆழத்துக்குச் சுருண்டு கீழே சென்று, பச்சைப்படுங்காட்டில் முடிந்தது. காட்டுக்குமேல் வெண்பட்டாக மேகம் பரவியிருந்தது. (Chapter: 34)
வியாசர் “பாண்டியநாட்டைப்பற்றி நான் ஓரளவு அறிந்திருக்கிறேன்” என்றார். “கொற்கையின் முத்துக்களின் அழகை பாடியிருக்கிறேன்.” சாத்தன் புன்னகைத்து “அவை என் முன்னோரின் விழிகள். கடலுள் புதைந்த எங்கள் தொல்பழங்காலத்தைக் கண்டு பிரமித்து முத்தாக ஆனவை அவை. அவற்றின் ஒளியில் இருக்கின்றன என் மூதாதையர் வாழ்ந்த ஆழ்நகரங்கள். ஆறுகள், மலைகள், தெய்வங்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அழியாப்பெருங்கனவையே நாங்கள் உலகெங்கும் விற்றுக்கொண்டிருக்கிறோம்.” (Chapter: 34)

மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள் என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.. அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான். (Chapter: 34)

“ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன.” (Chapter: 34)

“கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” என்றார். (Chapter: 34)

“உமது அகம் வழிகாட்டி அழைத்துச்செல்லும் வழியில் செல்க. ஆம், நீர்வழிப்படும் புணை போல” என்று சாத்தன் சிரித்தார். (Chapter: 34)

சுகன் ஆடையற்ற உடலுடன் இறகு ஒன்று காற்றில் மிதந்திறங்குவதுபோல வந்து, வானத்தால் உள்ளங்கையில் வைத்து மெதுவாக மண்ணில் இறக்கப்பட்டான். (Chapter: 34)

“தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன். (Chapter: 34)

*******
Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.

 

No comments: