Wednesday, May 21, 2014

ஃபேஸ்புக் கரைச்சல்கள்

(Storing here what I shared on my Facebook Wall.)

பாவத்தை
நதியில் கரைக்கலாம்
வரலாற்றை
எதில் கரைப்பது?

(May 18, 2014)
*****

தனியாக இருப்பதும்
தனிமையில் இருப்பதும்
ஒன்றல்ல என்பவர்கள்
தனியைத் தனிமையாகச்
சமாளித்துக் கொள்கிறார்களென
சம்சயம்

(May 11, 2014)
*****

எல்லா அம்மாக்களும்
ஒன்றல்ல
மருமகள்களிடம் கேட்டுப் பாருங்கள்!

(May 11, 2014)
*****

பயன்படுத்தி நாளாகிவிட்டது
தூசி படர்ந்திருக்கிறது
பெரும்பாலுமதன் கைப்பிடியில்
ஈரத்துண்டு உலர்கிறது
சிலநேரங்களில் அவரவர்
கழற்றிமாட்டிய துணிமணிகள்
ஆனாலுமிந்த டிரெட்மில்லைத்
தூக்கியெறிய மனமில்லை
என் காலடித்தடங்களை
வைத்திருக்கிறதே.

(May 11, 2014)
*****

ஒவ்வொரு காலையிலும்
பிளஷ்-அவுட் செய்யப்படுகின்றன
நேற்றைய தினங்கள்.
நினைவில் நிற்கவேண்டுமானால்
தேவையாயிருக்கிறது
வயிற்றுக்கடுப்போ அஜீரணமோ.

(May 11, 2014)
*****

எது கலையென
அறியப்படும் தருணம்
கலைஞன் மரிக்கிறான்
நுட்பாளன் பிறக்கிறான்

(May 11, 2014)
*****

 

No comments: