Thursday, September 09, 2004

சண்டைக்குப் பின்னான மௌனங்கள்

சண்டைகளுக்குப் பின்வரும்
மௌனங்களில் வீசும் குருதிவாடை
குமட்டல் தருகிறது

முகம் திருப்பிக் கொள்வதில்
வெளிப்படுகிற ஆக்ரோஷ மொழிகள்
எந்தத் தீயையும் அணைப்பதில்லை

பரஸ்பர குற்றச்சாட்டுகள் அடங்கியபின்
சுடரும் அமானுஷ்யம் சொல்கிறது
சொல்லப்படாத தீர்ப்புகளை

கோபத்திலோ விரக்தியிலோ
அலுப்பிலோ சலிப்பிலோ
சமாதானத்துக் குதவுமென்றோ
தன்னுள் நிகழ்வுகளை மீட்டி
சரி தவறு உணரக் கூடுமென்றோ
பேசினால் சண்டை வளருமென்றோ
காயங்களுக்கு மருந்திடவோ
வலி மறக்க அவகாசம் வேண்டுமென்றோ
பேசாமல் இருந்து பார்க்கிற பாவனைகளில்
முகங்களோடு மனங்களும் இறுகுகின்றன
ரணங்களும் ஆழமாகின்றன

வார்த்தைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற உலகத்தில்
மௌனம் எப்படித் தீர்வாக முடியும்
சண்டைகளுடன் விடிகிற உலகத்தில்
மௌனம் எப்படிச் சமாதானம் கொணர முடியும்

ஏதேனும் பேசலாம்
நேரிடையாகப் பேச இயலாதென்றால்
குழந்தைகளின் ஊடே மறைமுகமாக
அல்லது சுவரைப் பார்த்து
அல்லது தனக்குத் தானே சொல்லிக் கொள்வதுபோல

சண்டைகளில் கூட
பேசிக் கொண்டிருக்கும்வரை
அன்பிருக்கிறது என்ற தெம்பு வருகிறது
பேசுவதற் கொன்றுமில்லை யென்றால்
ஆத்திரத்தை யெல்லாம் ஒன்று திரட்டி
ஜன்னலையோ கதவையோ அறைந்து திற
புழுக்கம் தருகிற மௌனத்தை உடைத்து
புறஉலகின் ஓசைகளேனும் உள்ளே வரட்டும்
சமாதானத்தின் தூதுவர்களாய்

3 comments:

Srikanth Meenakshi said...

அருமையான கவிதை. நதி மோலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது; கவிதை மூலமும் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன் :-)

கவிதையை நிறைவு செய்த விதம் அழகான ஒன்று.

நன்றி.

rajkumar said...

"புற் உலகின்ஓசைகள் சமாதான தூதுவனாக" அருமையாக இருக்கிறது சிவக்குமார்.

Arun Vaidyanathan said...

Very good one...
I hope you will start writing regularly from here onwards :)